

வத்ஸலையின் வாழ்க்கை
சாவி
1947-ம் வருஷம் ஜனவரி மாதம். கல்கி காரியாலயத்தில் என் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்.
”ஆசிரியர் கூப்பிடுகிறார்!” என்று ஆபீஸ் பையன் வந்து அழைத்தான்.
பேனாவை அப்படியே மேஜை மீது வைத்து விட்டு ஆசிரியர் இருந்த அறைக்குப் போனேன்.
ஒரு நிமிஷம் ஆசிரியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். “நவகாளிக்குப் போய் வருகிறீரா?” என்று சற்று தயக்கத்துடனேயே கேட்டார்.
நவகாளியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அப்போது என்ன நடந்து கொண்டிருந்ததென்று தெரியுமல்லவா? மனிதர்கள் அங்கே யமகிங்கராகளாய் மாறியிருந்தார்கள். வகுப்பு வெறி என்னும் பேய் பயங்கரத் தாண்டவம் புரிந்து கொண்டிருந்தது.
இருண்ட கீழ் வங்காளத்தில் காந்தி மகாத்மா அன்பென்னும் தீபத்தைக் கையிலேந்தி தன்னந்தனியாகக் கால் நடைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
இத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்குத் தான். ஆசிரியர் ”என்னைப் போய் வருகிறாயா?” என்று கேட்டார்.
காரியம் சிரமசாத்தியமாகத் தோன்றிய போதிலும் நான் சற்றும் யோசிக்காமல் ”போய் வருகிறேன்” என்று திடமாகப் பதில் கூறினேன்.
ஏனெனில், நவகாளிக்குப் போய்வருவதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை எனக்கு முன்பே ஆசிரியர் நன்கு யோசித்திருக்க வேண்டும். தம்முடைய தீர்ந்த யோசனைக்குப் பிறகே ஆசிரியர் அந்தக் காரியத்தை என்னிடம் சொல்லி யிருக்க வேண்டும். எனவே, நான் வேறு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? கட்டளையைச் சட்டென்று ஒப்புக் கொண்டேன்.
சில தினங்களில், பத்திரமாகவே நவகாளியைச் சுற்றிப் பார்த்து விட்டு காந்தி மகானிடம் விடை பெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தேன்.
காரியம் சற்று சிரமமாகத் தோன்றிய போதிலும் இதை நான் என்னுடைய வாழ்நாளில் கிடைத்தற்கரிய ஒரு பேரதிருஷ்டமென்றே எண்ணினேன். மற்ற யாருக்கும் கிட்டாத பாக்கியமாகவே கருதினேன்.
காந்தி மகாத்மாவின் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த நவகாவி யாத்திரையில் அடியேனும் கலந்து கொண்டேன் என்பதை இப்போது நினைத்தாலும் என் தோள்கள் பூரிக்கின்றன.
நவகாளியிலும், வழிப்பிரயாணத்தின் போதும் பல அதிசயங்களையும், பயங்கர சம்பவங்களையும் நேருக்கு நேர் கண்டேன். எத்தனையோ அதிசயங்களில், வயது சென்ற மாது ஒருவள் காந்தி மகான் காலில் விழுந்து கதறிய பரிதாப சம்பவமும் ஒன்று. அந்த வயோதிக மாது கூறிய உருக்கமான வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைதான் ” வத்ஸலையின் வாழ்க்கை.” இந்தக் கதையுடன் இன்னும் சில கதைகளும் இப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் சில கதைகள் கல்கி’ பத்திரிகையிலும், சில வேறு பத்திரிகைகளிலும் வெளியானவை.
சாவி



