

உயிரின் அழைப்பு
கு. ப. சேது அம்மாள்
மறுமலர்ச்சி இலக்கியத்தில் மணிக்கொடி யுகம் ஒரு முக்யமான காலமாகும். அக்காலத்தில்தான் பல மணியான இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பலர் இலக்கியப் பணியில் ஈடுபடத் தொடங்கியதும் அந்தக் காலத்தில் தான்.
சிறு கதை மன்னர் என்று அழைக்கப்படும், கு.ப.ரா. (கு. ப. ராஜகோபாலன்) புதுமைப்பித்தன், (சோ.விருத்தாசலம்) நா. பிச்சமூர்த்தி, சிட்டி, (பெ. கோ. சுந்தர ராஜன்) ஆகியோருடன் பல பெண்மணிகளும் மணிக்கொடி தோற்றுவித்த மணிகள் தாம், சகோதரர் கு.ப.ரா.வைப் பின்பற்றி கு. ப.சேது அம்மாளும் அந்தக் காலத்தில்தான் இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.
உள்ளத்தை உருக்கும் கதைகளை கு. ப.சேது அம்மாள் அவர்கள் எழுதி வந்தார். அவர்களைப் பின்பற்றியே பல பெண்மணிகள் இலக்கியப் பணியில் ஈடுபடலாயினர்.
சேது அம்மாள் அவர்களின் கதைகள் எல்லாமே உயிர்த்துடிப்பு உள்ளவை. படிப்பவர் மனதை உருக்கி விடக்கூடியவை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் தம் சொந்த சுகத்துக்கங்களையும் பாராமல் இடைவிடாது இவர் இலக்கியப்பணி செய்து வருகிறார்.
அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மறுமலர்ச்சி இலக்கியத்திற்குத் தொண்டு புரிய வேண்டும் என்பதே என் அவா. அவருடைய எழுத்தோவியங்கள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து வெளியிட ஆவலாக இருக்கிறேன்.
இதற்குத் தமிழ்ப் பெரு மக்கள் தங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பூரணமாகத் தருவார்கள் என்று நம்புகிறேன்.



