திருக்குறள் கட்டுரைகள்
கி. ஆ. பெ. விசுவநாதம்

பதிப்புரை

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது.

தமிழரின் பாதுகாவலர் திரு. விசுவநாதம் அவர்கள். இதை நன்கு உணர்ந்து, ‘முத்தமிழ்க் காவலர்’ என அவருக்குப் பட்டம் வழங்கிப் பாராட்டிய திருச்சி தமிழ்ச் சங்கத்தார் தமிழ் மக்கள் அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். தமிழுக்குத் தீங்கு என்றால், தமிழ் மக்களுக்குத் துன்பம் என்றால், தமிழ்நாட்டின் பெருமைக்கு இழுக்கென்றால், கி.ஆ.பெ.வி.யின் உள்ளம் துள்ளி எழும். தீமை செய்வோர் எத்தனை உயர்ந்த பெரியவர்களாயினும், எத்தனை பெரிய தலைவர்களாயினும், அஞ்சாது, அவர்களின் தவறை எடுத்துக் காட்டுவார். இந்தப் பணியை எழுத்து, பேச்சு, நாடகம் என்ற பல துறைகளிலும் அவர்கள் செய்து வருகிறார்கள்.

அவர் இயற்றிய பல நாடகங்கள், நூற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டுள்ளன. இந்திய வானொலி நிலையத்தின் வாயிலாகக் கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து வெளிநாட்டு மக்களுக்கும் ஒலிபரப்பப்பட்டு, தமிழரின் பெருமையை உலகெங்கும் உணரச் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய பேச்சுக்கள் தமிழகத்திலும், மலேயா, இலங்கை போன்ற கடல் கடந்த நாடுகளிலும், பல ஆயிரக் கணக்கான மேடைகளில் ஒலித்துள்ளன. அவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக் கணக்கான தமிழர் இல்லங்களில் மகிழ்வூட்டிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அவர்கள், தமிழ்ச் செல்வம், எண்ண குவியல், தமிழ் மருந்துகள், வள்ளுவரும் குறளும், திகுறள் புதைபொருள், ஐந்து செல்வங்கள், மும்மணிகள், நான்மணிகள், அறிவுக்கு உணவு, வானொலியிலே ஆகிய பத்து நூல்கள் எழுதியுள்ளார்கள். திருக்குறள் கட்டுரைகள் பதினோராவது நூல். வள்ளுவர் உள்ளம் விரைவில் வெளிவர இருக்கிறது.

கி. ஆ. பெ. வி. யின் நூல்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்கும் வாய்ப்பைப் பாரி நிலையம் பெற்றிருக்கிறது. இதை நாங்கள் பெறுதற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். எங்கள் பால் அன்பு பூண்டு தமது நூல்கள் அனைத்தையும் எங்கள் நிலைய வாயிலாகத் தந்துதவுவதற்காக திரு. விசுவநாதன் அவர்களுக்கு எங்கள் வணக்கமும் நன்றியும் உரியன.

திரு. விசுவநாதன் அவர்களின் குடும்பம் பெருங்குடும்பம். அங்கு திருமணங்களும் பிற விழாக்களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அப்போது எல்லாம் அழைப்பிதழ்கள் வரும். ஒவ்வொரு அழைப்பிதழிலும் அடியில் ஒரு குறிப்பு இருக்கும். “சீர், மொய் பரிசு பணமுடிப்பு முதலியன விலக்கப்பட்டிருக்கின்றன” என்பதே அக் குறிப்பு. விசுவநாதன் அவர்கள் தமிழ்ப் பெருமக்களிடமிருந்து, பொன்பொருள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உயிர் என மதிப்பது ஒழுக்கம், கடமை, பணியாற்றல் முதலிய சிறந்த பண்புகளை. அவர்கள் உள்ளம் ஒவ்வொரு கணமும் நினைந்து எதிர்பார்ப்பது உறங்கிக் கிடக்கும் தமிழகம் விழித்தெழுகின்ற நன் நாளை. அவர்களுடன் சேர்ந்து ‘தமிழ் நாட்டின் பொற்காலம் மீண்டும் தோன்ற உழைப்போம்’ என்று உறுதி கொள்வோம். அவர்களின் பேச்சுக்களைக் கேட்டும் நூல்களைப் படித்தும் அவற்றின் வழி நடப்போமாக!

வாழ்க தமிழ்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *