சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் 
கா. சுப்பிரமணியபிள்ளை

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம்

தோற்றுவாய்

உலகத்திலுள்ள பொருள்கள்
க. அறிவுள்ளன
உ. அறிவில்லாதன என இருவகைப்படும் –
அறிவுள்ளன இயக்குவன.
அறிவில்லா தன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப.

அறிவுள்ளன யாவும் தாமே பொருள்களை அறிவன வல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும்.

அக் கடவுளே சிவபெருமான்.
க. அறிவுள்ளன உயிர்கள்.
உ. அறிவில்லா தன உலகம்.

சிவம் (கடவுள்), உயிர், உலகம் என்னும் மூன்றும் ஆராய்தற்குரியன.

சிவம்

மெய்யறி வின்ப வடிவினனாகிய மாசற்ற முழுமுதற் பரம்பொருள் ஒருவர் ஆவர்.

ஐந்தொழில்

தமக்கென யாதொன்றும் வேண்டாதவர். அவர், உயிர்கள் பால் வைத்த பேரருளினாலே உயிர்களோடும் உலகத்தோடும் வேறுபாடு அறியாவண்ணம் எங்குங் கலந்து நின்று அவற்றை இயக்கி ஐந்தொழிலையுந் தமது சத்தியினாலே செய்தருளுகின்றார். இத் தன்மையால் இறைவன் அம்மையப்பர் (சிவமும் சத்தியும்) ஆவர்.

ஐந்தொழில் க. படைத்தல், உ. காத்தல், ங. அழித் தல், ச. மறைத்தல், ரு. அருளல் என்பன.
உயிர் என்றைக்குமுள்ள அறிவுடைப் பொருள். அது புதிதாகப் பிறிதொன்றினின்று உண்டாக்கப்படுவதில்லை. ஆதலால்,

க. படைத்தல், உயிர்க்கு உடம்பையும், மனமுதலிய உள்ளக் கருவிகளையும், அது தங்குதற்குரிய உலகப் பகுதியையும் அது நகர்தற்குரிய பொருள்களையும் தருவதே யாம்.

உ. காத்தல், உயிர் மேற்கூறியவைகளோடு பொருந்தி வேண்டிய காலம்வரை நிலவச் செய்தல்.

ங. அழித்தல், மேற்கூறியவற்றுள் ஒன்றோ பலவோ உயிரின் வேறாகப் பிரியும் வண்ணம் செய்தல்.

சு. மறைத்தல், நல்வினை தீவினைக்குரிய நுகர்ச்சிகளில் ஈடுபடச் செய்தல்.

ரு. அருளல், பிறவியறுத்து வீடளித்தல்.

உயிர்

சிவம் அறிவிக்க அறியுந் தன்மையுடையதாய்
அநாதியே பற்றிய அறியாமை கரீரணமாகத் தனது இயல்பு உணராது உலகப்பற்றின் வயமாய்ச் சார்ந்த தன் வண்ணமாக தன்மையால் இறைவ னருளால் திருத்தமுற்று நன்னெறி எய்துதற் குரியதாய் உள்ளது. தனக்குறும் நலத்தைத் தானே யறியாத வண்ணம் அதற்கு உலகப்பற்றினை விளைக்கும் தன்மை ஆணவம் , அசித்தாகிய உலகின் சார்பால் அறிவு மயங்குந் தன்மை மாயை. அவாவியதை நுகர்தற்குரிய முயற்சியை எழுப்பும் தன்மை கன்மம். இம் மும்மலப் பிணிப்பால் அவ்வுயிர்க் குப் பிறப்பு இறப்பு உண்டாம்… அஃது உலகத்தைப் பற்றி நின்ற போது உலகமயமா யிருப்பினும் சிவத்தைச் சார்ந்தபோது சிவமயமாய் நிற்கும். சிவத்தின்பாற் பற்று மிக மிக, தன்னியல்புக்கு வேறாகிய உலகின் பற்று தேய்ந்து தேய்ந்து மாய்ந்தொழியும். உலகப்பற்று முழுதும் அற்றுப் போகவே, உயிர் சிவத்தோடு இரண்டறக்கலந்த நிலை யெய்தி அதில் நின்றும் அகலாது பேரானந்தப் பெருவாழ்வு பெற் றுய்யும்.

உலகம்

தோன்றி ஒடுங்குவதற்குக் காரணமாயுள்ள மூலம் சுத்த மாயை, அசுத்தமாயை என இரு பகுப்புடையது.

சுத்தமாயை

சுத்தமாயை யென்பது மயக்கஞ் செய்யாததாய், நித்தமாய், வியாபகமாய், முதல்வன் நேரே ஐந்தொழில் நடத்துதற்குரிய சடமூலப் பொருளாம்.

சுத்தமாயை க. சிவதத்துவம் உ. சத்திதத்துவம் ங. சதாசிவதத்துவம் ச. ஈசுரதத்துவம் ரு. சுத்தவித்தை என்னும் ஐந்து மண்டிலங்களாக வடிவப்படும். அவை சுத்ததத்துவங்களென்னப்படும். அவை முறையே ஒன்றற் கொன்று சூக்கும துலங்களாக வுள்ளன.

சிவதத்துவம் சுத்தமாயை காரியப்படும் பொருட்டு
இறைவன் தனது ஞானசத்தி மாத்திரையானே அதனை நோக்கி நிற் கும்போது காரியப்பட்ட பாகம்,

அஃது இருவகைப்படும்.
க. அதன் நுண்பகுதி சிவமெனவும்
உ. தூலப்பகுதி நாதமெனவும் கூறப்படும்.

சிவமென்னும் நுண்பகுதி சிவசத்தியினது அருணோக் கிற்கு எதிர்நின்ற சிவதத்துவத்தின் நுண்ணிய பாகமாம்.

அதன் வெளித்தோற்றமாகிய தூலப்பகுதி நாததத்துவமாகும். அஃது உயிர்கள் சுட்டி அறிதற்கு ஏதுவாகிய ஆற்றற்கு மூலமாயுள்ளது.

சத்திதத்துவம்

முதல்வனது கிரியாசத்தி வெளிப்பட்டுப் பொதுவாக இயக்கு மிடத்
துக் காரியப்பட்ட சுத்தமாயை.

க. அதன் நுண்பகுதி சத்தி எனவும்
உ. தூலப்பகுதி விந்து எனவும் பெயர்பெறும்.

விந்துதத்துவம் உயிர்களது சுட்டி யறியும் ஆற்றல் நாததத்துவத்தினும் நன்கு தோற்றுவதற்கு இடனா யுள்ளது.

சதாசிவதத்துவம்

முதல்வனது ஞான சக்தியும், கிரியா சத்தியும் சிறப்புவகையால் இயக்கஞ் செய்தவிடத்துக் காரியப்பட்ட சுத்தமாயை.

சிவதத்துவமும், சத்திதத்துவமும் இறைவனது அருவத்திருமேனிக்கு இடமாம்.
சதாசிவதத்துவம் அவனது அருவுருவத் திருமேனிக்கு இடமாம்.

உயிர்களுக்குச் சுட்டியறியும் ஆற்றல் சதாசிவதத்துவத்தில் முன்னிரண்டு தத்துவங்களிற் பார்க்கிலும் விளக்க மடையும்.

ஈசுரதத்துவம்

முதல்வனது கிரியா சந்தி மிகுந்து சிறப்பாக இயக்குவதினாலே காரியப்பட்ட சுத்தமாயை.

இஃது இறைவன் உருவத்திருமேனி கொள்ளுவதற்கு இடம். இதில் உயிரினது சுட்டியறியும் ஆற்றல் சதாசிவ தத்துவத்தினும் வெளிப்படையாகத் தோன்றும். இஃது அசுத்தமாயையைக் காரியப்படுத்தும் அனந்ததேவருக்கு உரிய உடம்.

சுத்தவித்தை

ஈசுரதத்துவத்தினுந் தூலமாய்க் காரியப்பட்ட சுத்தமாயையின் பகுதி.
இஃது ஈசுரனது ஞானசத்தி சிறப்பாக வெளிப்பட்டுச் சுட்டியறியும் ஆற்றல் சிறந்து விளங்கு தற்குரிய வித்தைக் கேதுவாயிருப்பது. இஃது அருள் நூல் மூலத்திற்கும், மந்திரங்கட்கும், கீழ்உள்ள , உருத்திரன்;

மால், அயன், இந்திரன் முதலியோரை இயக்குவோராகிய உருத்திரன், மால்; அயன், இந்திரன் முதலியோருக்கும், நந்தி முதலிய கணங்கட்கும், வாமை முதலிய ஒன்பது சத்தி கட்கும் இடமாம்.

ஈசுரதத்துவம் இறைவனது நுண்ணிய உருவத்திரு மேனிக்கும், சுத்தவித்தை அவனது தூல உருவத்திரு மேனிக்கும் இடமாம்.

மேற்கூறிய ஐந்து சுத்ததத் துவங்களையும் திரு மூலமா
முனிவர் தமிழ் மண்டிலம் என்று கூறுவர்.

பஞ்சகலைகள்

க. நிவிர்த்தி
உ. பிரதிட்டை
ங. வித்தை
ச. சாந்தி
ரு. சாந்தியதீதை

உயிரை மலபந்தத்தினின்றும் நிவிர்த்தி செய்யும் சின
சத்தி நிவிர்த்தி, அச்சத்திக்கு இடமாகிய சுத்தமாயையின் பகுதி நிவிர்த்திகலை யெனப்படும்.

பந்தத்தினின்றும் நிவிர்த்தி பெற்ற உயிர்கள் மீள
நோக்காத வண்ணம் அவற்றை நிலைப்படுத்தும் சிவசத்திக்குப் பிர திட்டை பென்று பெயர். அச் சத்தி இயங்கும் சுத்தமாயை யின் பகுதி பிரதிட்டாகலை யெனப் பெயர் பெறும்.

அங்ஙனம் நிலை பெற்ற உயிர்கட்கு அனுபவஞானத்தைப் பயப்பிக்கும் சிவசத்தி வித்தை யெனப்படும். அதன் நிலைக் களம் வித்தியாகலை யெனப்படும்.

அங்கனம் அனுபவஞானம் பெற்ற உயிர்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகும் படி செய்யும் சிவசத்தி சாந்தி யெனப் பெயர் பெறும். அதன் இடம் சாந்திகலை.

அங்ஙனம் சாந்தமாய் நின்றவையும் ஒழியச்செய்யும்
சிவசத்தி சாந்தியதீதை யெனப் பெயர் பெறும். அதன் இடம் சாந்திய தீதகலை.

இத் தன்மையவாகிய நிவிர்த்தி முதலிய ஐந்து கலை களும் சுத்தவித்தை முதலாயுள்ள சுத்ததத்துவம் ஐந்தினை யுஞ் சார்ந்து நிற்கும்.

உயிர்கள் சுட்டியறிவதற்குக் காரணமாகிய எழுத் தோசை க. தூலவைகரி, உ. சூக்குமவைகரி, ங. மத்திமை, பைசநதி, ரு. சூக்குமையென ஐவகைப்படும்.
தூலவைகரி, பிறர் செவிக்குக் கேட்கும் சொல்வடி வானது.

சூக்குமவைகரி, தனக்குமாத்திரம் கேட்கும் சொல்லாக விளங்கு வது.

மத்திமை, எழுத்துக்கள் பிரிவுபடுதலில்லாமல் உயிரி
னுள்ளே சுட்டுணர்வு எழுதற்கு ஏதுவாய் வைகரிக்குக் காரணமாய் நிற்பது.

பைசந்தி, மத்திமையினும் நுட்பமாய் மயிலின் முட்டை நீரில் மயிலினுடைய பல நிறங்கள் அடங்கி நிற்பது போல எழுத்துக்கள் அடங்கி நிற்ப, உணர்வு பிறத்தற் கேதுவாய் உள்ளது.

சூக்குமை, பைசந்தியினுஞ் சூக்குமமாய் விகாரமின்றி
ஒளிவடிவமாய்ப் பைசந்தி முதலிய வாக்கு விகற்பங்களுக்குக் காரண மாய் உயிர் உணர்வு பிறத்தற்கு எதுவாயுள்ள நாததத்துவ மாத்திரையாயுள்ளது.

அதனை உள்ளபடி உயிரிற் கண்டவர்கள் சுத்த மாயா புவனத்தின்கண் உள்ள போக்குவரவும் இளைப்புமில்லாத பேரானந்தத்தை நுகர்வர்.

இதுகாறுங் கூறிய ஐந்து வாக்குக்களும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளையும் பற்றி நிற்கும். சுத்தமாயா புவனம் ஆணவமல மாத்திரமுடைய உயிர்களுக்கு உறைவிடம். அவர்கள் விஞ்ஞானாகல் ரெனப்படுவர்.

அசுத்தமாயை

அசுத்தமாயை மயக்கஞ்செய்வது. இது சுத்த வித்தைக்குக் கீழாய், நித்தமாய், அருவமாய், வினைக்குப் பற்றுக்கோடாய், கீழ்வந்த தத்துவங்களுக்குக் காரணமா யிருப்பது. இத் தத்துவம், அனந்ததேவருடைய சத்தி இயக்குவதனாலே காரியப்படும். இத் தத்துவத்தினின்றும் காலமும் நியதியும் கலையும் உண்டாகும்.

காலம், உயிர்களுடைய போக நுகர்ச்சியை வரையறைப் படுத்துவது.

நியதி, அவரவர் வினையின் பயனை அவரவரே நுகருமாறு நியமிப்பது. இதனை ஊழென்றும், தெய்வமென்றும், விதியென்றுங் கூறுவர்.

கலை, ஆணவமலத்தால் மறைப்புண்டு சூனியம்போல்
நின்ற உயிர்களுக்குப் போக நுகர்ச்சி உண்டாகும் பொருட்டு, அந்த ஆணவமல சத்தியைச் சிறிது நீக்கி உயிர்களது கிரியா சத்தியை விளக்குவது.

வித்தை கலையினின் முக தோன்றுவது. இஃது உயிரினது ஞானசத்தியை விளக்கி அதனைக் கீழ்ப்பட்ட புத்திதத்துவத் தோடு தொடர்பு படுத்துவது.

வித்தையால் உயிரினுடைய ஞானசத்தி விளங்கி விடயங்களை அறிதலும், அவற்றில் உயிர்க்கு இச்சையைத் தோற்று விக்குத் தத்துவம் அராக தத்துவமெனப்படும்.

இங்ஙனம் உயிரினுடைய தொழில், அறிவு, இச்சை களைப் பொதுவகையாக விளக்குவன கலை, வித்தை, அராக மென்னும் மூன்று தத்துவங்களுமாம். இவைகள் புத்தி குணங்களோடு சமபந்தித்தகாலையில் உயிரினது சத்திகள் சிறப்பாக விளங்கும்.

காலம், நியதி, கலை, வித்தை, அராகமென்னும் ஐந்துங் கூடப்பெற்றுப் பிரகிருதிமாயைப் போக நுகர்ச்சியைக் கருதி நின்ற உயிரைப் புருடனென்றும், அந் நிலையைப் புருடதத்துவமென்றுங் கூறுவர். இவ் வைந்து தத்துவங்களினுள்ள புவனங்களில் உறையும் உயிர்கள் ஆணவம், கன்மம் என்ற இருமலமுடைய பிரளயாகலர் ஆவர்.

புருடதத்துவமென்பது ஒரு சடதத்துவமன்று. அஃது உயிரினது நிலையைக் குறிப்பதே.

புருடனுக்குப் போக நுகர்ச்சி சிறப்பாக நிகழ்தற்கு ஏதுவாகிய தத்துவத்திற்கு மூலம் மூலப்பிரகிருதி யெனப்படும். அதனையே பிரகிருதிமாயை எனச் சிவாகமங்கள் கூறும். அது கலையில் நின்று தோன்றுவது.

இந்த மூலப்பிரகிருதியில் முக்குணங்களும் மயில் முட்டை நீரிற் பஞ்சவர்ணம் போலச் சூக்குமமாய் நிற்பன வாத லால் அத் தத்துவத்தினை அவ்வியத்த மென்பர்.

முக்குணங்களும் சமமாய் நிற்பதற்குரிய தத்துவ குணதத்துவ மெனப்படும்.

சீகண்டருத்திரர் மூலப்பிரகிருதியைக் கலக்கிக் குண தத்துவத்தைத் தோற்றுவிப்பர்.

மூலப்பிரகிருதி பஞ்சக்கிலேசம் விளைதற்குக் காரணமாகும்… அவை அவிச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என்பன,

குண தத்துவத்தில் சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற மூன்று குணங்களும் சமநிலையில் நிற்கும்.

புருடனுக்கு ஞானசத்தி சிறப்பு வகையாக விளங்கி விடயத் தோறுஞ் செல்லும் பொருட்டு வேண்டுங் கருவியாய் சாத்துவிகம் மிகுந்து ஏனைய இரண்டுகுணங்களுங் குறைந்து குணதத்துவத்தினின்றும் தோன்றுவது புத்திதத்துவம். இது விடயங்களை நிச்சயிப்பதற்கு எதுவாயுள்ளது.

விடயத்தை நிச்சயிப்பேன் யான் என்ற உணர்ச்சிக்குக்
கருவியாய் இராசதம் மிகுந்து புத்தியினின்று தோன்றுவது ஆங் காரதத்துவம் எனப்படும். இதில் மூன்று குணங்களும் மிகுந்துங் குறைந்தும் நிற்கும்.

பொருள்கள் யாதென ஆராயும் நினைவிற்கும் அவை
யாவையோ என்னும் ஐயத்திற்கும் இடமாயுள்ள மனத்தத்துவம் சாத்துவிக அகங்காரத்தினின்று மெழுவது.

முன் காணப்பட்டதை நினைவில் அழுத்தும் மனவிருத்தி சித்த மெனப்படும். அப் பொருளைப் பின் கண்டவழி அஃதே என்று உணர்தற்கு எதுவாவதும் சித்தமே.

ஞானேந்திரியம் ஐந்தும் சாத்துவிக அகங்காரத்தினின்று தோன்றும். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன.

இராசத அகங்காரத்தினின்றும் கன்மேந்திரிய மைந்தும் தோன்றும். இவை சொல்லுதல்,கொடுத்தல், நடத்தல், கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்திற்கும் வாயில்களாகிய உடற் பகுதிகள்.

தாமத அகங்காரத்தினின்றும் தன்மாத்திரை ஐந்தும்
தோன்றும். அவை சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் என்பன.

தன்மாத்திரை ஐந்தினின்றும் பூதங்களைந்தும் தோன்றும். அவை நிலம், நீர், தீ, காற்று, வெளி என்பன .

பூதங்கள் …… ரு
தன்மாத்திரை ……ரு
கன்மேந்திரியம் ……ரு
ஞானேந்திரியம் ……ரு
மனத்தத்துவம் ……க
ஆங்காரதத்துவம் ……க
புத்திதத்துவம் ……க
குணதத்துவம் …… க
மூலப்பிரகிருதி …… க

ஆகிய உரு-தத்துவங்களும் பிரகிருதிமாயா தத்துவங் கள். பிரகிருதிமாயையிலுள்ள புவனங்கள் மும்மல உயிர்களாகிய சகலருக்கு இருப்பிடமாம். இத் தத்துவங்களைத் தொழிற்படுத்துவோர் சீகண்டருத்திரர். அவர் பிரளயா கலருள் ஞானமெய்திச் சீவன் முத்தி பெற்ற உயிர்.

அயன், மால் இருவருஞ் சகலர்.

அசுத்தமாயா தத்துவங்கள் ஆறு :- அசுத்தமாயை காலம், நியதி, கலை, வித்தை , அராகம் என்பன. இவற்றைத் தொழிற்படுத்துவோர் அனந்ததேவர். அவர் விஞ்ஞானா கலருள் பக்குவம் பெற்ற உயிர். அவர் சுத்த வித்தையிலிருப்பர்.

சுத்ததத்துவங்கள் ஐந்து :- சிவதத்துவம், சத்திதத்துவம், சதாசிவதத்துவம், ஈசுர தத்துவம் சுத்தவித்தை ஆக முப்பத்தாறு தத்துவங்கள்.

சுத்ததத்துவங்களில் ஐந்தொழிலையும் இறைவன் தாமே செய்வர்.
அசுத்த தத்துவங்களில், ஐந்தொழிலையும் அனந்த தேவரை அதிட்டித்து நின்று செய்வர்.

பிரகிருத தத்துவங்களில், ஐந்தொழிலையும் சீகண்ட ருத்திரரை அதிட்டித்து நின்று செய்வர்.

இம் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கின்ற முழுமுதற் கடவுளே சிவபெருமான்.

தத்துவங்களில் உறைபவர்கள் உயிர்கள். தத்துவங்கள் யாவற்றையும் கடந்து சென்று சிவபெருமானை யடைந்து இரண்டறக்கலந்து நிற்றலே சிவசாயச்சியமாம். அதுவே பரமுத்தி எனப்படும்.

சுத்தமாயா புவனங்களிற் பெறும் இன்பவாழ்வு அபர முத்தியாம்.

அதற்குக் கீழ்ப்பட்ட. புவனங்களில் பெறும் இன்ப வாழ்வு பதமுத்தியாம்.

பதமுத்தியிற் சென்றோர் பிறவியில் மீளலாம். அபர பரமுத்தி யெய்தினோர் பிறவியைக் கடந்து நித்திய இன்ப மென்னும் பேரானந்தக்கடலுட்டிளைத்து என்றுஞ் சுகமுற்றிருப்பர்.

முற்றும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *