
விளையும் பயிர்
கி. வா. ஜகந்நாதன்
1. குழந்தை காந்தி
இந்தியா என்றால் உலகத்தில் அங்கங்கே உள்ள ஜனங்களுக்கு இரண்டு பொருள்கள் ஞாபகத்துக்கு வரும். இமயமலை இருக்கிறதே, அது ஒன்று. அதைப்போல உயர்ந்த மலை உலகத்திலே வேறு எங்கும் இல்லை. மற்றொன்று மகாத்மா காந்தியின் பெயர். ஒருகால் இமயமலை சில பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்தியைத் தெரியாத தேசமே இல்லை.
நம் இந்தியாப் படத்தில் இடப்பக்கத்தில் கிட்டத்தட்டப் பாதியில் காதுபோல ஒரு பாகம் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குக் கூர்ஜரம் என்று பெயர். அங்கே வாழ்பவர்களைக் குஜராத்திகள் என்று சொல்வார்கள். அவர்கள் தாய்மொழி குஜராத்தி. அந்தத் தேசத்தில் பிறந்தவர் காந்தி மகாத்மா. போர் பந்தர் என்ற ஊரில் 1869-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அவர் பிறந்தார். அவர் தகப்பனார் பெயர் கபாகாந்தி. அம்மா புத்லிபாய். காந்தி என்பது குடும்பப்பெயர். மகாத்மாகாந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது. அதையே மோ. க. காந்தி என்று அவர் கையெழுத்துப் போடுவார். அவர் தமிழிலும் மோ. க. காந்தி என்று கையெழுத்துப்போட்டுக் கொடுத்திருக்கிறார்.
காந்தியின் அம்மா மிகவும் நல்லவள், தெய்வபக்தி உள்ளவள். நம்முடைய புராணங்களிலே உள்ள பெரியவர்களின் கதைகளெல்லாம் அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் சூரியனைக் கண்ணால் கண்டபிறகே சாப்பிடுவது என்று ஒரு விரதம் உண்டு. புத்லிபாய் அந்த விரதத்தை அநுஷ்டித்தாள். அந்த மாதம் வானத்தில் எப்போதும் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கும். சூரியன் தன் முகத்தைச் சுலபத்தில் காட்டமாட்டான். காந்தியின் அம்மாவோ சூரியனைக் கண்டா ஒழிய சாப்பிடுவதில்லை. காந்தி அம்மாவிடம் “சாப்பிடாமல் இருக்கிறாயே;அம்மா! இன்னும் சூரியன் முகத்தைக் காட்டவில்லையே” என்று வருத்தத்தோடு சொல்வார். “கடவுளுக்கு நான் உணவு உட்கொள்ளவேண்டுமென்று திருவுள்ளம் இருந்தால் சூரிய தரிசனம் கிடைக்கும். அது கிடைக் காதவரையில், நான் சாப்பிடாமல் இருப்பதே கடவுளுடைய சித்தம் என்றுதான் நினைப்பேன்” என்பாள். என்ன பக்தி பார்த்தீர்களா? தம்முடைய தாய் பட்டினி நீங்கிச், சாப்பிட வேண்டும் என்று காந்திக்கு ஆவலாக இருக்கும். அடிக்கடி வானத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார். சூரியன் தோன்றினால் ஓட்ட ஒட்டமாக அம்மாவிடம் ஒடி, “அம்மா, அம்மா, அதோ சூரியன் பார் பார்த்துவிட்டுச் சாப்பிடு “கூறுவார்.
காந்தியின் தகப்பார் ராஜகோட் என்ற ஊருக்கு உத்தியோகமாகப் போனார். காந்தியும் அங்கே சென்றார். அங்கே ஒரு சின்னப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். அவருக்கு விஷமம் பண்ணவே தெரியாது.மற்றப் பையன்களோடு கூடிக் குதித்து விளையாடுவதுமில்லை.வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போவார். அங்கே பாடம் உண்டு அவர் உண்டு. பிறகு பள்ளிக்கூடம் விட்டால் ஒரே ஒட்டத்தில் வீடு வந்து சேர்வார். சில காலங் கழித்துச் சின்னப் பள்ளிக்கூடத்தை விட்டுப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் துரை வந்தார். அப்போது காந்தி ஆறாவது வகுப்பில் வாசித்துக்கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் துரை அந்த வகுப்புக்கு வந்து இங்கிலீஷில் பரீட்சை செய்ய ஆரம்பித்தார். காந்தி இங்கிலீஷில், சுமார்தான். இன்ஸ்பெக்டர் ஐந்து இங்கிலிஷ் வார்த்தைகளைச் சொல்லி அவற்றை எழுதச் சொன்னர் வாத்தியாரும் அங்கே இருந்தார். காந்தி ஒரு வார்த்தையைத் தப்பாக எழுதினார்.
வாத்தியார் கவனித்தார். அவரை எப்படித் திருத்துவது? பக்கத்திலிருந்த பையன் சரியாக எழுதியிருந்தான். வாத்தியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. தம் கால் பூட்ஸால் காந்தியின் காலை அழுத்தினார் கண்களால் பக்கத்துப் பையனைக் கவனிக்கும்படி ஜாடை காட்டினார் . காந்தி அவர் ஜாடையைப் புரிந்துகொள்ளவே இல்லை. பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்கலாம் என்ற விஷயமே அவர் மனசுக்குத் தோன்றவில்லை. வாத்தியாரிடம் மற்றவைகளையெல்லாம் கற்றுக்கொண்டார். ஆனால் காப்பி அடிக்கும் விதத்தை அவர் கற்றுக்கொள்ளவில்லை.
குஜராத்தி பாஷையில் சிரவண நாடகம் என்ற ஒரு புத்தகம் உண்டு. சிரவணன் என்ற சிறுவன் தன் தாய் தகப்பனிடம் மிகவும் அன்பாக நடந்த கதையைச் சொல்வது அது. அவனுடைய அம்மா அப்பா மிகவும் கிழவர்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கூடையில் வைத்துக் காவடி கட்டி, இரண்டு புறத்திலும் அந் த க் கூடைகளைக் கட்டி ச் சுமந்து கொண்டே போவானாம். ஒரு நாள் ஒரு காட்டில் அவன் தங்கினான். அம்மா அப்பாவுக்கு மிகவும் தாகமாக இருந்தது. பக்கத்தில் இருந்த குளத்தில் தண்ணீர் மொண்டு கொண்டு வரப் போனான். குறுகின வாயுள்ள பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளும் போது கொடக் கொடக் என்ற சத்தம் கேட்டது.
அப்போது அந்தக் காட்டில் வேட்டையாட வந்திருந்த தசரத மகாராஜாவின் காதில் இந்தச் சத்தம் விழுந்தது. ராமருடைய தகப்பனாராகிய தசரத மகாராஜாதான் அவர். அங்கே ஏதோ காட்டு மிருகம் தண்ணீர் குடிக்கிறதென்று எண்ணிக் கொண்டு, அந்தப் பக்கமாக ஓர் அம்பை விட்டார். அது சிரவணன் மேல் பாய்ந்தது. “ஐயோ!” என்று கத்திக்கொண்டு விழுந்தான். தசரதர் ஓடிப்போய்ப் பார்த்தார். சிரவணன் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறான் தசரதர் அழுதார். ஐயோ, தெரியாமல்
செய்துவிட்டேனே’ என்று கதறினார். உயிர் போகிற தறுவாயில் இருந்தான் சிரவணன். அப்போதுகூட அவன் தன் தாய்தந்தையை மறக்கவில்லை. “மகாராஜா!, என் அம்மா அப்பா தாகத்தோடு துன்புறுவார்கள், நீர் அவர்களிடம் வேகமாய்ப் போய்த் தண்ணீர் கொடும்” , என்று சொல்லி உயிர் விட்டான். தசரதர் அந்தக் கிழவர்களிடம் போய் நடந்ததைச் சொன்னார். அவர்கள் கதறு கதறென்று கதறினார்கள்.
அந்தச் சிரவணன் கதையைக் காந்தி வாசித்தார். சிரவணனுடைய தாய் தகப்பனாரின் துக்கம் அவர் உள்ளத்தைக் கனியச் செய்தது. சிரவணனைப்போல அம்மா அப்பாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டார்.
அவர் ஒரு சின்ன நாடகத்தைப் படித்துப்பார்த்து ஈடுபட்டார். மற்றொரு நாடகத்தைக் கண்ணால் பார்த்து அதில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். அவர் வாழ்வு முழுவதும் சத்தியத்தைக் கடைப் பிடித்து வாழ்வதற்கு அந்த நாடகமே தூண்டுகோலாக இருந்தது. நாடு, மனைவி, மக்கள், பதவி எல்லாம் இழந்தாலும் சத்தியத்தை விடாமல் காப்பாற்றின ஹரிச்சந்திரன் கதையைச் சொல்லும் அரிச்சந்திர நாடகந்தான் அது. அந்த நாடகத்தைக் காந்தி மிகவும் ஆவலோடு பார்த்தார். அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை எண்ணும்போது அவரை அறியாமலே கண்ணீர் வரும். பெரியவரான பிறகுகூட அந்த நாடகத்தைப் படிக்கும்போது அவர் கண்ணீர் விடுவாராம்.
காந்திக்குப் பள்ளிக்கூடத்தில் ஒரு தோழன் ஏற்பட்டான். அவருடைய அண்ணாவுக்கும் அவன் தோழன். முதலில் அண்ணாவுக்குச் சிநேகிதன் ஆகிப் பிறகு தம்பிக்கும் தோழன் ஆனான். அவன் பீடி சிகரெட்டுப் பிடிப்பான், மாமிசம் சாப்பிடுவான்; ஏமாற்றுவான்; திருடுவான். இன்னும் என்ன வேண்டும்? பலசாலி. மாமிசம் சாப்பிட்டால்தான் உடம்பு பலமடையும். எந்தக் காரியத்தையும் செய்யலாம். ‘ஙே’ என்று இருக்கிறாயே, நீயும் மாமிசம் தின்றால் குண்டுக் காளை மாதிரி கொழுத்துப் போவாய். வெள்ளைக்காரர்கள் பலசாலியாக இருக்கிறார்களே, ஏன் தெரியுமா? மாமிசத்தைக் கண்டால் ஹூஹூம் என்று ஓடுவதில்லை; வயிறு நிரம்பச் சாப்பிடுவார்கள். அதனால்தான்
அவர்கள் இந்தியாவையே ஆளுகிறார்கள். இந்த ஊரில் யார்தாம் மாமிசம் சாப்பிடவில்லை? நீ என்னவோ பெரிய மனிதர்களெல்லாம் சுத்த வைஷ்ணவர்கள் என்று நினைத்துக்கொண் டிருக்கிறாய்! எனக்குத் தெரியும், தம்பி, அவர்கள் ரகசியமெல்லாம். சாராயமும் மாமிசமும் அருந்தாத பெரிய மனுஷர் ஒருவரைக் காட்டு, பார்க்கலாம். நான் காதை அறுத்துக் கொள்கிறேன். எல்லோரும் மறைவாகச் செய்கிறார்கள். நாமும் அப்படிச் செய்யலாமே!’ என்று காந்திக்கு அவன் உபதேசம் செய்தான். காந்தி மாமிச வாசனையே காணாத குடும்பத்தில் பிறந்தவர். ஆதலால் அவருக்கு மாமிசம் என்றாலே இயற்கையாக ஓர் அருவருப்பு இருந்தது. ஆனால் அந்தத் தோழன் படிப்படியாக உருவேற்றி வந்தான். காந்தி அவன் பேச்சில் மயங்கினார்.
ஒரு நாள் வெகுதூரமான தனி இடத்துக்கு அவரைத் தோழன் அழைத்துச் சென்றான். மாமிச உணவை முதல் முதலாக அன்று காந்தி புசித்தார். அதை அவர் உண்பதற்குள் போதும் போதுமென் றாகிவிட்டது; அவ்வளவு அருவருப்பு! வாந்தியெடுக்க வந்தது. அன்று இரவு முழுதும் அவருக்குத் தூக்கமே இல்லை. அவர் வயிற்றுக்குள்ளே இருந்து ஆடு ஒன்று, அம்மே, அம்மே” என்று கத்துவதுபோல இருந்தது.
சில நாட்கள் இந்தக் கெட்ட பழக்கம் காந்தியிடம் இருந்தது. அவர் புலால் உண்பது தாய் தகப்பனாருக்குத் தெரியாது. வெளிப்படையாகத் தின்னத் தைரியம் இல்லை. சில சமயங்களில், பொய் வேறு சொல்லவேண்டி வந்தது. சிரவணனுடைய கதையும் அரிச்சந்திரனுடைய கதையும் அவர் மனசில் பதிந்திருந்தன அல்லவா? தாய் தகப்பனாருக்குத் தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்வதும், அதற்காகச் சில பொய் சொல்வதும் அவருக்குப் பிடிக்க வில்லை. மிகவும் வேதனை அடைந்தார். ஆகவே மாமிசம் உண்பதை விட்டுவிட்டார்.
காந்தியின் சொந்தக்காரர் ஒருவர் அவருக்குச் சிகரெட் குடிக் கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். சிகரெட் வாங்கப் பணம் வேண்டுமே சிகரெட்டுக்காகவென்று அப்பாவிடம் சொல்லிப் பணம் வாங்க முடியுமா? ஆகையால் திருட ஆரம்பித்தார். வீட்டு வேலைக்காரர்கள் பணத்தைத் திருடிச் சிகரெட் வாங்கிக் குடித்தார். அவருக்கு அவருடைய தமையனே கூட்டாளி. தமையனார் கையில் தங்கக் காப்புப் போட்டிருந்தார். அதில் சிறிது வெட்டி விற்று, அந்தப் பணத்துக்குச் சிகரெட் வாங்கிப் பிடித்தார்கள்; பழைய கடனையும் தீர்த்தார்கள். காந்தியின் மனசு அதைப் பொறுக்க வில்லை. நமக்கு வேண்டியதை யெல்லாம் வாங்கித் தந்து நம்மைக் காப்பாற்றுகிறார் அப்பா. அவருக்கு வஞ்சகம் செய்து, இந்தக் காப்பை வெட்டினோமே! என்ன கொடுமை!” என்று வருந்தினார். இதை அப்பாவிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தீர்மானித்தார். எப்படிச் சொல்வது? நேரிலே சொல்லத் தைரியம் வரவில்லை. ஒரு கடிதத்தில் தாம் செய்த பிழையை எழுதி, என்ன தண்டனை செய்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். “இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்” என்று உறுதியும் கூறியிருந்தார்.
அப்பா அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். படுக்கையில் படுத்தபடி இருந்தார். காந்தி கடிதத்தைக் கட்டிலின்மேல் வைத்து விட்டுக் கீழே உட்கார்ந்துகொண்டார். அப்பா என்ன செய் தாலும் சரி; ஏற்றுக்கொள்வதுதான் நம்பாவத்துக்குப் பரிகாரம்’ என்ற நினைப்போடு உட்கார்ந்திருந்தார். தந்தை எழுந்து உட்கார்ந்து கடிதத்தை எடுத்துப் படித்தார். அவர் முகம் சிவக்கவில்லை. கண்களில் தீப்பொறி பறக்கவில்லை. தலையில் அடித்துக்கொள்ளவில்லை. இரையவில்லை. ஆனால் அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் ஒழுகியது. அவர் உள்ளம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்க வேண்டும் என்பதைக் காந்தி சிந்தித்துப் பார்த்தார். அவருக்கு அழுகை வந்துவிட்டது. தந்தை கடிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேசாவிட்டாலும் அவர் கண்ணீர் காந்தியின் உள்ளத்தைச் சுட்டது; அவருடைய அழுக்கை அலம்பியது. அதுமுதல் திருட்டு, புகைபிடிப்பது முதலிய கெட்ட பழக்கங்கள் அவரிடமிருந்து ஓடியே போய்விட்டன.
காந்தி மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெற்றார். பிறகு பாவ நகரில் உள்ள காலேஜில் ஒரு வருஷம் படித்தார். அப்பால் சீமைக்குப் போய்ப் படித்தால் அவர் முன்னுக்கு வருவார் என்று வேண்டியவர்கள் சொன்னார்கள். காந்திக்கும் அது விருப்பமாகவே இருந்தது. அவருடைய தகப்பனார் அப்போது இறந்துவிட்டார். காந்தி சீமைக்குப் போவது அவர் தாய்க்குப் பிடிக்கவில்லை. அங்கே,போனால் கெட்ட பழக்கங்கள் வந்துவிடுமென்ற பயம் அவளுக்கு. மதுபானம், மாமிச உணவு, ஒழுக்கப் பிசகு எல்லாம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தால், சீமைக்குப் போகவேண்டாம் என்று சொன்னாள். ஆனால் உறவினர்கள் வற்புறுத்தினார்கள். காந்திக்கும் ஆசையாக இருந்தது. கடைசியில், “மதுவைத் தொடமாட்டேன்; மாமிசம் உண்ணுவதில்லை; கெட்ட நடத்தையில் ஈடுபடமாட்டேன்” என்று தாய்க்குச் சத்தியம் செய்துகொடுத்தார் காந்தி. அதன் பிறகு சீமைக்குப் போக உத்தரவு கொடுத்தாள் தாய்.
சீமைக்குப் போய்ப் படித்தார் காந்தி. தாயிடம் சத்தியம் செய்தபடி நடந்துகொண்டார். அது தவறும்படியான சந்தர்ப்பங்கள் வந்தன. ஆனாலும் காந்தி அப்போதும் மனம் தளராமல் சத்தியத்தைக் காப்பாற்றினார். லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்தார். இந்தியாவுக்கு வந்து சில காலம் பாரிஸ்டராக இருந்தார். பிறகு தென் ஆப்ரிக்கா சென்று பாரிஸ்டராக இருந்தார். அங்கே இந்தியர்கள் படும் துன்பத்தைப் போக்கப் போராடினார். அப்போதுதான் காந்தியின் உண்மையான பெருமை தெரிந்தது. தென் ஆப்ரிக்காவில் அவர் செய்த காரியங்களும், பிறகு இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் அடிமை வாழ்வைப் போக்கச் செய்த காரியங்களும் பாரதம், ராமாயணம் போலப் பெரிய பெரிய கதையாகச் சொல்ல வேண்டியவை.
இன்று பாரத நாடு சுதந்தர நாடாக இருப்பது காந்தி மகாத்மாவினால்தான். அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் பெருமை அடைகிறோம். 1948-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி ஒரு வெறியனுடைய துப்பாக்கிக்கு அவர் இரையானார். மரணத்துக்கு அஞ்சாமல் வாழ்ந்தவர் அவர். அவர் வாழ்ந்த நாட்டில் வாழ நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். அதைக் காட்டிலும் பெரிய சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.



