விளையும் பயிர்
கி. வா. ஜகந்நாதன்

5. ராஜேன் பாபு

‘தூங்குமூஞ்சி’ என்று யாராவது உங்களைச் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சுறுசுறுப்பாக இருந்தால்தான் படிப்பு வரும்; வேலைகளை நன்றாகச் செய்யலாம். “ஒருவர் தூங்கு மூஞ்சியாக இருந்தார். ஆனால் அவர் படிப்பிலே புலி’ என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். அது எப்படி? தூங்குமூஞ்சிக்கும் படிப்புக்கும் வெகுதூரமாயிற்றே! என்று தான் சொல்லுவீர்கள். உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறார், நம்முடைய பாரத தேசமாகிய குடியரசுக்கு இப்போது தலைவராக இருப்பவர் ராஜேந்திரப் பிரசாத் என்பது உங்களுக்குத் தெரியுமே. இதே ராஜேன்பாபு சின்ன வயசில் தூக்கத்திலே அதிகப் பிரியம் உள்ளவராக இருந்தாராம்; ஆனால் படிப்பிலே எல்லோரையும் விடக் கெட்டிக்காரர். அவர் எம்.ஏ., எம்.எல். என்ற பட்டங்களை எல்லாம் வாங்கியிருக்கிறார். அவர் தூங்குமூஞ்சியாகவே இருந்து, எப்படிக் கெட்டிக்காரர் ஆனார்?’ என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசையாக இருக்கிறதல்லவா? இதோ சொல்லுகிறேன்.

ராஜேன் பாபு சின்னக் குழந்தையாக இருந்தபோது எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுகிறார்கள் என்பதே அவருக்குத் தெரியாது. அதற்குள் தூங்கிப் போய்விடுவார். அவருடைய தகப்பனார் பெரிய ஜமீன்தார். ராஜேன் பாபுவுக்கு இரண்டு அண்ணன்மார், இரண்டு தமக்கைகள். இவரே கடைக்குட்டி சூரியன் மலைவாயில் விழவேண்டியதுதான். ராஜேன் பாபுவின் கண் இமைகள் மூடிக்கொள்ளும். அதற்கப்புறம் ராத்திரி என்ன நடந்தாலும் அவருக்குத் தெரியாது.

அவர்கள் வீட்டில் ஒரு வேலைக்கார அம்மாள் இருந்தாள். வேலைக்காரி ஆனாலும் சொந்தக்காரியைப்போலவே குடும்பத்தில் இருந்துவந்தாள். அவளை எல்லோரும் சித்தி என்று அழைப்பார் கள். அந்தச் சித்தி, குழந்தை ராஜேன் பாபுவிடம் மிகவும் பிரியமாக இருப்பாள். அவர் தூங்கிப்போனாலும் எழுப்பிச் சாதம் போடுவாள். பாதித் தூக்கத்தோடே அவர் அவள் ஊட்டும் சாதத்தை ருசியே தெரியாமல் மடக்கு மடக்கென்று விழுங்குவார். நடுநடுவிலே தூங்கிவிழுவார். சித்தி, “இந்தா, அம்மாவுக்கு ஒரு பிடி அண்ணாவுக்கு ஒரு பிடி’ என்று சொல்லி ஊட்டுவாள்.

“என் கண்ணோ இல்லையோ! காகா ஓஷ் !இதோ மைனா பார்! மைனாவுக்கு ஒரு பிடி ;குயிலுக்கு ஒரு பிடி” என்று கொஞ்சிக் கொ ண் டே ஊட்டுவாள். காலையிலே எழுந் திருத்தால், சித்தி மைனாவையும் குயிலையும் ராத்திரி கூப்பிட்டாள் போல் இருக்கிறதே’ என்று தோன்றும்.

அஸ்தமித்தவுடனே தூங்கிவிடும் பழக்கம் ராஜேன்பாபுவை நெடுநாள் விடவே யில்லை.அவர்மேல்படிப் புப் படிக்கிறபோது கூட ஏழரை மணிக்கே தூங்கிவிடுவார். இந்த வேடிக்கையைக் கேளுங்கள். அவருக்கு முப்பது வயசு கடந்து கொண் டிருந்தது. சட்டக் காலேஜில் அவர் புரபஸர் வேலை பார் த் து வந்தார். அதோடு வக்கீலாகவும் உத்தியோகம் பார்த்தார். காலை நேரத்தில் வழக்குக் கட்டுகளைப் படிப்பார். கோர்ட்டுக்குப் போவார். மத்தியானத்துக்குமேல் சட்டக்காலேஜூ-க்குப் போய்ப் பாடம் சொல் லுவார். சட்டப்பரீட்சையில் உயர்ந்தது எம்.எல் பரீட்சை.அதிலும் தேறிப்பட்டம் பெறவேண்டும் என்று ராஜேன் பாபு எண்ணினார். இத்தனை வேலைகளையும் வைத்துக்கொண்டு எப்படிப் படிக்கிறது?

சாயங்காலம் பரீட்சைப் பாடத்தைப் படிக்க ஆரம்பிப்பார். ஏழு மணிக்கே தூக்கம் கண்ணைச் சுற்றும், ஏழரை மணிக்குத் தூங்கிவிடுகிறவர் அல்லவா? ஒன்பது மணி வரையில் படித்தே தீர்வது என்று உறுதி செய்துகொண்டார். ஒருநாள் படிக்க உட்கார்ந்தார். தூக்கம் வரும்போல இருந்தது. “சீ, சனியனே!” என்று சொல்லி, நின்றபடியே படித்தார். அப்போதும் தூக்கம் கண் இமைகளை இழுத்தது. நடந்துகொண்டே படித்தால் தூக்கம் வராது என்று நினைத்தார். மெதுவாக உலாத்தினபடியே படித்துக் கொண்டிருந்தார். தூக்கம் அவரை அணுகியது, கண் சுழன்றது. புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அதுகூட அவருக்குத் தெரியவில்லை. அடுத்தபடி அவரே தடாலென்று கீழே விழுந்துவிட்டார். தலையில் காயம் பட்டுவிட்டது. அதுமுதல் எப்போது தூக்கம் வருகிறதோ அப்போது படிப்பதை நிறுத்திவிடுவார். நல்ல புத்திசாலி ஆகையால் கொஞ்ச நேரம் படித்தாலும் அது ஆழமாக அவர் மனத்தில் பதிந்தது. அவர் பரீட்சையில் தேறிவிட்டார்.

சின்னக் குழந்தையாக இருந்தபோது ராஜேன் பாபுவுக்கு வீட்டிலேயே ஒருவர் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர் ஒரு மெளல்வி முஸ்லிம் வாத்தியார். “எனக்கு அது தெரியும்; இது தெரியும்” என்று அவர் சொல்லிக் கொள்வார். ராஜேன்பாபுவுடைய சிற்றப்பா அந்த மெளல்வி இப்படியெல்லாம் சொல்வதைப் பார்த்து அவரைக் கிண்டல் பண்ணுவார். ஒருநாள் சிற்றப்பா மெளல்வியை, “உங்களுக்குத் துப்பாக்கி சுடத் தெரியுமோ?” என்று கேட்டார். “துப்பாக்கியா பீரங்கி கூடச் சுடத் தெரியும்” என்றார் மெளல்வி. “சரி, இன்றைக்கு நாம் வேட்டையாடப் போகலாம் வாருங்கள்” என்று சிற்றப்பா அவரை வெளியில் அழைத்துச் சென்றார். ராஜேன் பாபுவும் அவர்களுடன் வேடிக்கை பார்க்கப் போனார். ஓரிடத்தில் ஒரு மரத்தில் ஒரு கழுகு உட்கார்ந்துகொண்டிருந்தது. சிற்றப்பா, “அதோ அந்தக் கழுகைக் குறிபார்த்துச் சுடுங்கள்” என்று சொல்லித் தம்முடைய துப்பாக்கியை மெளல்வியின் கையில் கொடுத்தார். மெளல்வி அதை வாங்கிக்கொண்டார். கனைத்தார். குறிபார்த்தார். துப்பாக்கியில் உள்ள குதிரையை அழுத்தினார்; அவ்வளவுதான், ‘டுமீல்’ என்ற துப்பாக்கி வெடியோடு தடாலென்ற ஓசை கேட்டது. கழுகு விழவில்லை. மெளல்வியே பின் பக்கமாக விழுந்துவிட்டார். கழுகு பறந்தோடிப் போயிற்று. துப்பாக்கி ரவை வெடித்ததால் பயந்து போய் மெளல்வி கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்து ராஜேன் பாபுவும் சிற்றப்பாவும் இடிஇடியென்று சிரித்தார்கள்.

ராஜேன் பாபுவினிடம் அம்மாவுக்கு அதிகப் பிரியம். பஜனைப் பாட்டுகளும் ராமாயணம் முதலிய கதைகளும் அம்மா சொல்வாள். அவற்றைக் கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

ராஜேன் பாபு பிகார் மாகாணக்காரர். அவர் கல்கத்தாவில் காலேஜ் படிப்புப் படித்தார். வங்காளிகள் படிப்பில் கெட்டிக்காரர்கள் என்றும், பிகாரிகளுக்கு அவ்வளவு புத்திக் கூர்மை இல்லையென்றும் காலேஜில் பேசிக்கொள்வார்கள். ராஜேன் பாபு முதல்முதலில் காலேஜில் வந்து சேரும்போது அங்கே ஆசிரியராக இருந்த ரசிக பாபு என்பவரைப் பார்த்தார். அந்த ஆசிரியர்,”என்ன பையா, பிகாரி வங்காளிப் பையன்களுக்குச் சமானமாகப் படிக்க முடியுமா? படித்துப் பேர் வாங்கவேண்டும்” என்று சொன்னார்.

ராஜேன் பாபுவினுடைய மனத்தில் அவர் சொன்னது நன்றாகப் பதிந்துவிட்டது. காலேஜில் நடந்த எல்லாப் பரீட்சைகளிலும் அவரே முதல் மார்க்கு வாங்கினார். அதனால் அவருக்குப் பல பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைத்தன.

எப்.ஏ. வகுப்பில் ராஜேன் பாபு படித்துக்கொண்டிருந்தார். ஒரு வெள்ளைக்காரர் புதிய பிரின்சிபாலாக வந்தார். எப்.ஏ. பரீட்சைக்கு மாணாக்கர்களை அனுப்புவதற்கு முன், ‘ஸெலக்ஷன்’ பரீட்சை நடந்தது. ஒரு நாள் புதிய பிரின்ஸிபால் ‘இன்னார் இன்னார் பரீட்சைக்குப் போகலாம்’ என்று தெரிவிக்க வந்தார். பையன்கள் ஆவலோடு அவர் படிக்கும் பேர்களைக் கேட்டார்கள். ஸெலக்ஷன் ஆனவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகப் படித்தார் பிரின்ஸிபால். ராஜேன் பாபு கடைசிவரையில் கவனித்தார். அவர் பெயர் வரவில்லை. ராஜேன் பாபு ஸெலக்ஷன் பரீட்சையில் நன்றாக எழுதியிருந்தார். அவர் பெயர் வராமல் இருப்பதாவது? அவர் எழுந்து நின்றார். “ஸார், என் பெயரை வாசிக்கவில்லையே!” என்றார். பிரின்ஸிபால் ஏளனச் சிரிப்போடு, ஸெலக்ஷனில் தேறினவர்களின் பெயர்களே இதில் இருக்கும்” என்றார். ராஜேன் பாபுவுக்கு ரோசம் தாங்கவில்லை. மற்றப் பையன்கள்கூட ஆச்சரி

யப்பட்டார்கள். “என் பெயர் இருக்கத்தான் வேண்டும்” என்று தைரியமாகச் சொன்னார் ராஜேந்திரர்.

பிரின்ஸிபால் கோபத்துடன், “நீ அடக்கமில்லாதவனாக இருக்கிறாய்” என்றார்.

“இல்லை; நான் நன்றாகப் பரீட்சை எழுதியிருக்கிறேன். என் பெயர் இல்லாமல் எப்படி இருக்கும்?”

“சண்டியாக இருக்கிறாயே; வாயாடுவதால் உனக்கு ஐந்து ரூபாய் அபராதம்” என்றார் பிரின்ஸிபால்.

மாணாக்கர் விடவில்லை. “இல்லை; நன்றாகப் பாருங்கள். என் பெயர் இல்லாமல் போக நியாயம் இல்லை” அழுத்தமாகச் சொன்னார்.

“என்னை எதிர்த்துப் பேசுகிறாய், பத்து ரூபாய் அபராதம்.”

“ஸார், ஸார். நன்றாகப் பாருங்கள். நான் நிச்சயமாகச் செலக்ஷடனில் தேறியிருப்பேன்”.

பிரின்ஸிபால் பின்னும் கோபம் அடைந்தார். “பதினைந்து ரூபாய்”, “இருபது ரூபாய்”, “இருபத்தைந்து ரூபாய்” என்று அபராதத்தை ஏற்றிக் கொண்டே போனார். ராஜேந்திரரோ விட்டபாடில்லை. இந்தச் சங்கடமான சமயத்தில், பிரின்ஸிபாலுடன் வந்திருந்த குமாஸ்தா, ராஜேந்திரருக்குக் கண்ணைக் காட்டினார். அப்போதுதான் அவர் பேசாமல் இருந்தார். பிரின்ஸிபால் கோபத்தோடு போனார்.

ராஜேந்திரர் பரீட்சைக்குப் போனார். பிரின்ஸிபால் அவரையும் பரீட்சைக்கு அனுப்பினார். அவர் அபராதமும் செலுத்தவில்லை. உண்மை என்னவென்றால் அவர் பெயரைச் சேர்க்க மறந்து போய் விட்டார்கள். அதைக் குமாஸ்தா கண்டுபிடித்துச் சரி செய்து விட்டார். பரீட்சையில் ராஜேன்பாபு முதல் மார்க்கு வாங்கினார்.

படிப்பிலே சூரப்புலி ராஜேந்திரர். சரித்திரத்தில் மாகாணத்திலே முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம், தத்துவ சாஸ்திரம் இரண்டிலும் நிறைய மார்க்குகள் வாங்கினார்.

இவ்வளவு படித்தாலும் அடக்கமான சுபாவம் உடையவர். ராஜேன் பாபு. ஆஹா ஊஹா என்று படாடோபம் செய்யமாட்டார். ‘நிறைகுடம் தளும்பாது’ என்று சொன்னால் நம்முடைய இந்தியக் குடியரசின் முதல் தலைவராகிய ராஜேன் பாபுவைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *