ஆறு செல்வங்கள் 
கி. ஆ. பெ. விசுவநாதம்

ஆறு செல்வங்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம்

மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, “இணரூழ்த்தும் நாறா மலர்” களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும் மணமுமுள்ள தேன் விருந்தளிக்கும் மலர்களையே நாடிச்சென்று தாம் பெறும் தேனின்பத்தைப் பிறரும் பிறவும் பெற விழைவனபோலத் தேனைப் பதமுறச் செய்து உதவும் பண்பு வாய்ந்தவை.

நல்லறிஞரும் தேனியனையர்; தாம் தேர்ந்து பயின்ற நன்னூற் பொருள்களை வகைப்படுத்திச் சின்னூலுணர்ந் தாரும் கற்றுப் பயன்பெறும் வகையில் நூல் வடிவாக்கித் தருபவர். முத்தமிழ்க் காவலர்

கி. ஆ. பெ. விசுவநாதரும் அத்தகைய அறிஞர் குழுவைச் சார்ந்தவர். அவர் தரும் நூல்கள் அறிவின் களஞ்சியம் எனலாம்; தெவிட்டாத தேன்பிலிற்றும் தேனடை எனினும் இழுக்காது.

செல்வத்தின் வகையைச் சிறக்க விளக்கும் இச் சிறுநூல், கி. ஆ. பெ. வி. யின் கலை நலங்கனிந்து விளங்குவது; பலவகைக் கருத்துக்களைச் சில பக்கங்களில் தெள்ளிதின் விளக்குவது; உருவிற் குறியதாயினும், உறு பயனளிப்பதில் ‘தானே உவமை தனக்கு.’ பயன்பெற விழையும் பண்புடையார் படித்துச் சுவைத்துப் பயனடைக!

விசுவநாதரின் வியன் தமிழ்த் தொண்டும் விரிவுடை மனமும் வளர்க! வாழ்க!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *