
காக்கைகளும் கிளிகளும்
ந. பிச்சமூர்த்தி
1. கடுதாசும் தேனும்
கழுதை ஒன்று குருட்டுத்தனமாக ஒரு பூந்தோட்டத்துக்குள் புகுந்துவிட்டது. தோட்டக்காரன் பாதைகளை யெல்லாம் சுத்தம் செய்து காகிதங்களையும் குப்பைகளையும் குவித்து வைத்திருந்தான்.
‘ஆஹாஹா’ என்று மகிழ்ச்சியுடன் காகிதங்களைக் கழுதை தின்ன ஆரம்பித்தது. தின்பதை ரசித்துக்கொண்டே கழுதை ஒரு நிமிஷம் கண்ணை மூடிற்று. மறுபடியும் கண்ணைத் திறந்த பொழுது அழகிய வண்ணாத்திப் பூச்சி ஒன்று அருகிலிருந்த மலரின்மீது உட்கார்ந்திருந்ததைக் கண்டது.
‘அங்கே என்ன செய்கிறாய்?’
“மலரின் தேன் துளியைக் குடிக்கப் போகிறேன்.”
”முட்டாளே! காகிதம் கடல்போல இங்கே கிடக்கிறது. அதை விட்டுவிட்டுத் துளியைத் தேடிக் கொண்டு தடுமாறுகிறாயே” என்று கூறிவிட்டுக் காகிதத்தை மறுபடியும் தின்ன ஆரம்பித்தது கழுதை.
அந்தச் சமயம் வெளியே சென்றிருந்த தோட்டக்காரன் திரும்பி வந்தான். தடிக்கம்பைப் பார்த்துப் பயந்துகொண்டு வெளியே ஓடி வந்தது கழுதை.
“கழுதை இங்கேயா ஓடிவந்து ஒளிந்து கொண் டாய்?” என்று உப்புக் குறவன் உப்பு மூட்டையை அதன்மேல் ‘பொத்தென்று சுமத்தினான்.
அப்பொழுது வண்ணாத்திப் பூச்சி மிதப்புடன் வெளியே பறந்து வந்தது.
“பெரியவனே, ஏன் பாதியில் போகிறாய்?”
“நீயுந்தான் போகிறாய், ஏன்?’
“எனக்கு வயிறு நிரம்பிவிட்டது; பறக்கிறேன். நீ”
“எனக்கு நிரம்பவும் இல்லை. புசிப்பும் இல்லை. பொதியையும் போட்டுவிட்டான்” என்று அவமானத்தால் கழுதை காதை ஆட்டிற்று.



