
காக்கைகளும் கிளிகளும்
ந. பிச்சமூர்த்தி
2. காக்கைகளும் – கிளிகளும்
ஊரில் பலமான புயல் அடிக்கப் போவதாக ஜனங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பக்ஷிகள் மட்டும் பத்திரிகைகளின் உதவி இன்றியே விஷயத்தை எப்படியோ அறிந்துகொண்டு புயலுக்கு இரண்டு தினங்களுக்கு முந்தியே வேறு ஊருக்குக் கிளம்பிவிட்டன.
புது ஊருக்குச் சென்றதும், காகங்களெல்லாம் ஒரு புளியமரத்தில் வீடு கட்டிக் கொண்டன. கடைசியாகக் கிளிகள் வந்தன. கிளிகளுக்குக் கூடு கட்டத் தெரியாது. அந்த ஊரிலோ மாடி வீடுகள் இல்லை. இருந்திருந்தால் மாடிகளிலுள்ள புரைகளில் கிளிகள் சொந்தமாக வசித்திருக்கும். அப்படி இல்லாததால் முதல் கிளி கேட்டது:- நாம் எங்கே வசிப்போம்?
இரண்டாவது கிளி:- ஏன்? எல்லோரையும் போல் அந்தப் புளியமரத்தில் தோழர்கள் காக்காய், குருவி, மைனா முதலியவர்களோடு கூடி வாழ்வோம்.
மூன்றாவது கிளி:- அழகு அழகு செத்த மாட்டையும், எச்சில் சோறையும் தின்னும் கருப்புக் காக்காயோடு வாழவேண்டுமென்கிறாயா? நான் இந்த வாய்க் காலில் விழுந்து செத்தாலும் சாவேனேயன்றி அவர்களுடன் சவாஸம் செய்யவேமாட்டேன்.
முதல் கிளி:- ஆனால் சரி, அப்பொழுது போகும் வழி சொல்லு?
நான்காவது கிளி :- அதோ ஒரு மொட்டைத் தென்னைமரம் தெரிகிறதல்லவா? அதில் அதில் இரண்டு மூன்று பொந்துகள் இருக்கின்றன.
மூன்றாவது கிளி:- … சபாஷ்! சபாஷ்!!
இரண்டாவது கிளி:- தனி மரமாயிருந்தால் காற்றிலும், மழையிலும், வெய்யிலிலும் குளிரிலும் கூப்பிட்ட குரலுக்கு ஒத்தாசை செய்ய யாரும் வரமாட் டார்களே?
மூன்றாவது கிளி:- முட்டாளே! அதற்காக ஈன ஜாதிக்காரர்களுடன் போய் நாம் ஒட்டிக்கொள்ளுகிறதா? அவற்றின் கிட்டப்போனால் கூட நமது பச்சை வர்ணம் கலைந்துபோகும்.
இரண்டாவது கிளி:- ஆனால் சரி, சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்.
இப்படி கிளிகள் பேசிக்கொண்டு முடிவு கட்டி விட்டன. புளிய மரத்திலிருந்த காக்கை குருவிகளெல் லாம் “இதென்ன? அண்ணன் தம்பி மாதிரி எல்லோரும் இருப்பதை விட்டுவிட்டு என்னவோ சொல்லுகிறார்களே! எல்லோருக்கும்தான் இறக்கை இருக்கிறது. நாம் எல்லோரும் ஒரே இனத்தவரல்லவா? சேர்ந்து இருப்போம்” என்றன.
“முடியாது” என்றன கிளிகள்.
“ஹூம்! வெறும் அகம்பாவம்! விதியல்லவா ஆட்டுகிறது?” என்று இதர பக்ஷிகள் இரக்கப்பட்டன
இரண்டு நாட்கள் சென்றன. இரண்டொரு கிளிகள் மட்டும் ஏதோ திகிலடைந்து, முன் யோசனை யுடன் இதர பக்ஷிகளுடன் சேர்ந்து கொண்டன.
மூன்றாவது நாள் இரவு இடியும் மழையும் பிரமாதப்பட்டது. உலகம் பொடிப்பொடியாகி விடும் போல் இருந்தது.
மறுநாள் காலை புயல் நின்று போயிற்று. அநேக மரங்களும் வீடுகளும் விழுந்து விட்டன. காக்கை முதலிய பக்ஷிகள் இருந்த புளிய மரத்திற்கு ஒருவித சேதமும் வரவில்லை. உயர்ந்த மொட்டைத் தென்னை மரம் மட்டும் காணவில்லை. பொந்தில் இருந்த கிளிகளையும் காணவில்லை. தரை மீது இரண்டு பிடி சாம்பலிருந்தது.
காகங்கள் முதலிய பக்ஷிகளுடன் சேர்ந்து வசிக்க வந்த கிளிகள் பிடி சாம்பலைப் பார்த்து கண்ணீர் விட்டன. ரத்த பாசமல்லவா! காக்கைகளும் குருவிகளும் “ஐயோ பாவம்! தனி மரம்! தனி வீடு, தனி ஜாதி, தனி எல்லாவற்றிற்குமே எவ்வளவு உயரத்திலிருந்தாலும் இந்த கதிதானே! இந்தப் பாவிக்கிளிகள் அப்பொழுதே சொன்னதை கேட்காமல் போய் இப்படி இரவில் இடிக்கு இரையாயினவே!” என்று பெருமூச்செறிந்தன.



