
காக்கைகளும் கிளிகளும்
ந. பிச்சமூர்த்தி
7. பட்சிராஜா தேர்தல்
சிங்கம் காட்டு மிருகங்களுக்கெல்லாம் ராஜவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பட்சிகளுக்கெல்லாம் யார் ராஜாவாய் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. குயிலைத் தவிர எல்லாப் பட்சிகளும் கும்பலாய்க் கூடி பரஸ்பரம் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கொண்டன. கடைசியாகக் கிழக்கொக்கு ஒன்று எழுந்து பேசிற்று.
“ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. எள் தலைமயிர் உதிர்ந்து வழுக்கை விழுந்து போனதைப் பார்க்கும்பொழுது எல்லோருக்கும் ராஜாவாக இருக்க நான் தான் தகுதி” என்று ஒப்புக்கொள்ளுவார்கள்.
ஆனாலும், ஒரு ராஜா என்றால் பார்வைக்கு அழகாயும் கம்பீரமாயும் இருக்க வேண்டாமா? வழுக்கைத் தலையும் கோணல் உடலும் குச்சிக் காலுமாக நான் போய் சிம்மாசனத்தில் உட்கார்ந்தால் எல்லோரும் சிரிப்பார்கள். வாலை விரித்து அழகாய் ஆடுகிறதே அந்த மயில் நமக்கு ராஜரவாய் இருக்கட்டும். பார்த்தாலும் பொறுத்தமாய் இருக்கும்” என்றது.
“ராஜா பேசினால் இனிமையாய் இருக்க வேண்டாமா? என்னைப் போல் கரமுரவென்று குரலுடையவனுக்கா அந்தப் பதவியைக் கொடுக்கிறது?” என்று மயில் ஆட் சேபித்தது.
“ராஜா என்ன பாடவா போகிறார்?” என்று கொக்கு பதில் சொன்னதும் பக்ஷிகளெல்லாம் ஆட்சேபனையை பொருட்படுத்தாமல் மயிலே இருக்கட்டும் என்று தங்கள் இறகுகளை விரித்துக்கொண்டு ஆரவாரித்தன.
அது முதல் மயில் பக்ஷிகளின் ராஜாவாகி விட்டது
இந்தப் பட்டம் ஒரு வாரத்திற்கு கூட நிலைக்கவில்லை. ஒரு நாள் வானம் கருத்தது. மயில் தனது தோகையை விரித்து ஒய்யாரமாய் ஆடிக்கொண்டிருந்தது. வீர்ரென்று எங்கிருந்தோ ஒரு அம்பு வந்து அதன் மேல் பாய்ந்தது. பாவம் சுருண்டு விழுந்தது மயில். மறுநிமிஷமே யாரோ ஒரு வேடன் வந்து மயிலை எடுத்து கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான். குட்டைக்கரையில் நின்று ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டிருந்த கொக்கு இதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போய் மேலே கிளம்பி விட்டது. வேடனை தொடர்ந்து சென்றது. வேடன் மனைவி மயிலிறகை யெல்லாம் பிய்த்து வைத்து மயில் கரி செய்ய வேண்டியதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள்.
இதைப் பார்த்த கொக்குக்குத் தாங்கவில்லை. வீர்ரென்று திரும்பி காட்டுக்கு வந்தது. பட்சிகளெல்லாம் தங்கள் அரசனை வேடன் சுட்டு எடுத்துக் கொண்டு போன செய்தி கேட்டு கரா முரா எனக்கத்தி அலறிக் கொண்டிருந்தன. கொக்கைப் பார்த்ததும் இன்னும் இரைந்து ஒப்பாரி வைத்தன.
“இனி அழுவதில் பயனில்லை, நடந்தது நடந்து போய் விட்டது. மயிலை அரசனாகவே ஆக்கியிருக்கக் கூடாது. நாம் அரசனாக்கிய போதே அபசகுனம் மாதிரி எனக்கு வேண்டாம் அந்தப் பதவி என்று அவன் சொல்லலாமா?” போகட்டும். ராஜாவான பின்பு கவுரவமாகவும் அழுத்தலாகவும் நடந்து கொள்ள வேண் டாமா? மேகத்தைக் கண்டவுடன் அவனது பழைய கூத்தாடிக் குணம் போகவில்லை. குதிக்க ஆரம்பித்தான். வேடன் அதைக் கண்டு ஓடிவந்தானே, அப்போது வாய் திறந்து அந்த மயில் கத்தக் கூடாதோ! வேறு யாரையாவது ராஜாவாக்குவதைப் பற்றி யோசிப்போம்?” என்றது கொக்கு.
“போன தடவை குரலில் கத்தியோ இனிமையோயில்லாத பேர்வழியை அரசனாக்கினதால் தான் இந்தக் கதி வந்தது. இனிமேல் நல்ல குரலுடைய ஒருவனை ராஜாவாக்குங்கள். ஆபத்துக் காலத்தில் அவர் கத்துவாரல்லவா? அவரை நாமும் காப்பாற்ற முடியும்” என்றது காகம், ஆந்தை ஆமோதித்தது. கொக்கு வாய் பேசாதிருந்தது.
உடனே அங்கிருந்த பச்சைக்கிளி சபை முன் வந்து நின்றது.
“சபையோர்களே! நானே அரசனாகலாம் என்று தீர்மானிக்கிறேன். உங்களுக்கு அதில் ஆட்சேபனையிராது. என் குரலின் பெருமை ஜெகமெங்கும் தெரியும். ஆகவே, நான் ராஜாவாக லாயக்குதானே. என்னையே தேர்ந்தெடுங்கள்!” என்றது.
வேறுயாரும் போட்டி அபேட்சகர் இல்லை.
அன்று முதல் பச்சைக்கிளி அரசனாயிற்று. சிம்மாசனத்தில் உட்கார்ந்து “யார்ரா அவன்?” என்று கம்பீரமாக கிளி கூவுவதைக் கண்டு பட்சிகள் மகிழ்ச்சி கொண்டன.
ஆனால் கிளிக்கும் பட்டம் நிலைக்கவில்லை. கிளியின் அழகும் பேச்சும் காட்டில் போவோர் வருவோரை மயக்கிற்று. காட்டில் உலாவ வந்த ராஜ குமாரத்தி ஒருத்தி அந்தக் கிளியைப் பார்த்து ஆசைகொண்டு விட்டாள். உடனே அவளுடைய வேலையாள் ஒரு குச்சியில் பிலாப் பிசினைத் தடவி அந்தக் குச்சியால் கிளியைத் தொட்டான். கிளியின் உடம்பில் பிசின்பட்டதும் கிளி உடம்பைக் கோதிக் கொண்டது. பிசின் உடம்பு முழுதும் பரவிற்று. சமயம் பார்த்து வேலையாள் கிட்டநெருங்கி கிளியைப் பிடிக்கப் போனான். கிளி பறந்து போக முயன் றது. தனது இறக்கைகளை விரிக்க முடியாது போய் விட்டதென்றும் பிசின் ஒட்டிக் கொண்டு விட்டதென்றும் கண்டு அழுதது; வேலைக்காரன் மெதுவாய்க் கிளியைப் பிடித்தான். அதை எடுத்துக் கொண்டு ராஜ குமாரத்தி அரண்மனைக்குப் போய் விட்டான்.
இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கைக்கு ரொம்ப துக்கமாயிருந்தது. தானும் கூடவே பறந்து போயிற்று. ராஜகுமாரத்தி அழகிய தங்கக் கூட் டிலே கிளியை விட்டு அதற்குப் பாலும் பழமும் அளித் துக் கொண்டிருந்தாள். ஒருநாள் காக்கை கூட்டிலிருந்த கிளியைச் சந்தித்து, “அரசே! காட்டுக்குத் திரும்ப வர மாட்டீர்களா?” என்று கேட்டது.
“எங்கிருந்தாலென்ன? இதுவும் ஒரு அரண்மனை தானே. இங்கே ஆகாரம் வெகு சுலபமாகக் கிடைக்கிறது. ஆகவே, நான் இந்த இடத்தை விட்டு வரப் போவதில்லை” என்று கூறி விட்டது.
காக்கை மகா துக்கத்தோடு காட்டுக்குத் திரும்பி வந்து கிளி சொன்னதை இதர பட்சிகளுக்குக் கூறிற்று.
“அப்பவே நினைத்தேன். மகா சுயநலமி அந்தக் கிளி மகா கர்வி. இல்லாவிடில்,நானே அரசனாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு முந்திரிக் கொட்டை மாதிரி யார் முன்னே வருவார்கள். “யார்ரா அவன்?” என்றும் எல்லோரையும் கேட்ட போக்கிரி” என்றும் சொல்லலாமா?” என்று கூறிற்று காக்கை.
“நமது காட்டையும் சுயேச்சை வாழ்வையும் அற்ப பழத்துக்கும் பாலுக்காகவும் துறந்த துரோகி அந்தக் கிளி. அவனை அரசனாக்கியதே தப்பு” என்று கூறிற்று ஆந்தை.
“போகட்டும். கூத்தாடியாதலால் மயிலரசனை இழந்தோம். குரலினிமை பெற்றவனாயிருந்ததால் கிளியை யிழந்தோம். இனி நல்ல இறக்கையும், வேகமாகப் பறக்கக்கூடிய சக்தியும் உடையவனை ராஜாவாக்கிப் பார்ப்போம்” என்றது கிழக் கொக்கு.
உடனே எல்லாப் பட்சிகளும் யோசித்தன. எல்லாம் ஏககாலத்தில் சிட்டுக் குருவியைத் திரும்பிப் பார்த்தன.
சின்ன சிட்டுக் குருவி யாதொரு கவலையுமின்றி எதையோ பூமியில் கொத்திக்கொண்டு நின்றது.
உடனே எல்லாப் பட்சிகளும் “நீதான் ராஜா” என்று கோஷமிட்டன. இப்படி ஒரு பதவி வந்தது பற்றி சிட்டுக் குருவிக்கு கவலையேயில்லை. வழக்கம் போல அது விர் விர்ரென்று பறந்து கொண்டேயிருந்தது. பகல் வேலைகளில் ஒரு இடத்தில் ஒரு இமைப்பொழுதாவது தங்குவதில்லை. யாரையும் விசாரிப்பதேயில்லை. சிட்டுக்குருவியின் குரலும் யார் காதிலும் விழுவதுமில்லை.
“சிலநாள் பார்த்துவிட்டு இந்த ராஜா பிரயோசன மில்லை” யென்று பட்சிகள் தீர்மானித்து தேர்தலை ரத்து செய்து விட்டன.
“ஒரு ராஜா என்றால் அவனுக்கு உருவமே கூடாது. ஆனால், அவனுடைய குரல் எங்கும் வியாபித்திருக்க வேண்டும்” என்றது மணலோடு மணலாய் வர்ணம் தெரியாது உட்கார்ந்திருந்த தவிட்டுக் குருவி ஒன்று.
“அப்படியென்றால் நமக்கு ராஜா யார்? உருவமில்லாத பட்சி எப்படி உலகில் இருக்க முடியும்?’ என்று தத்துவம் பேச ஆரம்பித்தது மீன்கொத்தி.
“பின்னே என்ன செய்வோம்? உருவம் இருந்தால் கூட அதிகமாக நம்முடைய கண்ணுக்குப் படாமல் இருக்கும் பட்சி எதையேனும் ராஜாவாக்கி விடுவோமே” என்றது நாணத்தான் குருவி.
“அப்படியென்றால் ராஜா என்று ஒருவர் இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டாமா?” என்று குறுக்குக் கேள்வி கேட்டது கௌதாரி.
இப்படிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் பொழுதே எங்கோயிருந்து “அக்காவூ அக்காவூ” என்ற இனிய கூவல் காட்டில் மிதந்து வந்தது.
“ஆனால் குயில் கூட்டத்துக்கு வரவில்லையா?” என்று கேட்டது காடை.
“அது எப்பொழுதுமே வருவதில்லை. தூரத்திலிருந்து மட்டும் நம்மிடத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறதுண்டு” என்றது வாத்து.
“குயிலை யாருமே பார்த்ததில்லை போலிருக்கே குரலைத்தான் கேட்டிருக்கிறோம்” என்றது நாணத்தான்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எல்லாப் பக்ஷிகளும் மௌனமாய் யோசித்துப் பார்த்தன.
“உண்மைதான். உண்மை தான். எங்கும் வியாபிக்கும் குயிலின் குரலைக் கேட்டிருக்கிறோம். குயிலின் உருவத்தைப் பார்த்ததில்லை. அதையே ராஜாவாக்கி விடுவோம்” என்று இறைந்து சொல்லி சிறகை அடித்துக் கூவின பக்ஷிகள்.
எங்கோயிருந்து குயிலின் குரல் ராஜா பட்டத்தை ஏற்றுக் கொண்டது போல் ‘அக்காஓ அக்காஓ’ என்று கூவிற்று.
பட்சிகளுக்கெல்லாம் ராஜா இப்பொழுது குயில் தான்.



