தேன் பாகு
கி.வா.ஜகந்நாதன்

முனிவரும் அரசனும்

ஓர் அடர்ந்த காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்தார். அவருக்கு உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக அந்தக்காட்டில் தீ வளர்த்து நெய் சொரிந்து யாகம் செய்யலானார். எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடையவராக அவர் இருந்ததால், காட்டில் உள்ளவிலங்குகள் அவருக்கு வேண்டிய பண்டங்களைக் கொண்டுவந்து கொடுத்தன.

யானைகள் யாகத்துக்கு வேண்டிய மரக் கொம்புகளைக் கொண்டு வந்து கொடுத்தன. அவற்றைச் சமித்து என்று சொல்வார்கள். குரங்குகள் மரங்களிலுள்ள மலர்களையும் பழங்களையும் கொண்டு வந்து கொடுத்தன.காட்டில் இருந்த பசுமாடுகள் அவருக்கு நிறையப்பாலை வழங்கின. அந்தப் பாலைத் தயிராக்கி வெண்ணெய் எடுத்து நெய்யாக்கி யாகத்துக்குப் பயன்படுத்தினார். அவருடன் சில சீடர்கள் இருந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து வந்தார்கள்.

அந்த முனிவர் உலக நன்மைக்காக வேள்வி புரிவதை அறிந்த பலர் அங்கே வந்து அவரை வணங்கிவிட்டுப் போவார்கள். தங்களால் ஆன அரிசி முதலியவற்றைக் கொடுப்பார்கள். அங்கங்கே உள்ள அரசர்களும் வந்து அவருடைய யாகத்தைத் தரிசித்து அரிசி, பருப்பு முதலியவற்றை நிறைய அளிப்பார்கள். ஒரு மாசம் முடிந்தவுடன் முனிவர் வந்திருந்தவர் எல்லோருக்கும் சாப்பாடு போடுவார். ஏழைகள் பலர் வந்து வயிறாரச் சாப்பிட்டுப் போவார்கள்.

ஒரு நாள் ஓர் அரசன் அங்கே வந்தான். அவன் பொல்லாத குணமுடையவன், தன்நாட்டுக் குடிமக்களுக்கு அதிகமாக வரி போட்டுத் துன் புறுத்துகிறவன். அவன் முனிவருடைய ஆசிரமத்துக்கு வந்து அங்கே நடைபெறும் யாகத்தையும் பலரும் வந்து அவருக்கு உதவி புரிவதையும் பார்த்தான். அவரைக் கண்டு அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று நாமும் இப்படி யாகம் செய்தால் நம்மிடத்திலும் பலர் வருவார்கள். வந்து பணிவார்கள் என்று எண்ணினான்.

முனிவர் இருந்த காட்டுக்கு அடுத்த காட்டில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு யாகம் செய்யலானான்.தன்னுடைய அரண்மனைச் சேவகர்களை அழைத்து வந்து யாகத்துக்கு வேண்டிய வேலைகளைச் செய்யச் சொன்னான். ஊரிலிருந்து நெய்யை வருவித்து யாகம் செய்தான். அப்போது யானைகள் அங்கே வந்தன. அவற்றை அடித்து ஓட்டினான். குரங்குகள், வந்தன. அவற்றைக் கல்லால் எறிந்து ஓட்டச் செய்தான். அந்த யாகத்துக்கு அவனுடைய பணியாட்கள் வந்தார்களேயன்றி வேறுயாரும் வரவில்லை.

பாதி யாகம் நடந்து கொண்டிருந்த போது சில யானைகள் துதிக்கை நிரம்ப நீரை முகந்து கொண்டுவந்து யாகத்தில் விசிறின. அக்கினி அவிந்து போயிற்று. அரசனால் துரத்தப்பட்ட யானைகள் அவை. அப்படியே அவன் வேலையாட்கள் துரத்திய குரங்குகள் அங்கே இலைகளையும் முள்ளையும் பறித்துப் போட்டன. முனிவர் செய்த யாகத்திற்கு விலங்குகள் உதவி செய்தன. ஆனால் இந்த அரசன் செய்த யாகத்திற்கோ அவை தடைகளை உண்டாக்கின. அரசன் இந்த நிலையை அறிந்து கோபம் கொண் டான். யாகத்தை நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டான். உண்மையான பக்தியுடனும் நம்பிக்கையுடனும் எல்லாப் பிராணிகளிடத்தும் அன்புடனும் செய்தால்தான் யாகம் பலிக்கும் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வந்தது.

“நாம் அரசனாக இருந்து என்ன டயன்? பணம் படைத்ததனால் ஒரு பயனும் இல்லை குணம் படைத்து யாருக்கும் அன்பாக இருந்து தவம் செய்தால்தான் உண்மையான மதிப்பு ஏற்படும். அப்போது யாகம் செய்தால் அது நிறைவடையும்” என்ற நல்ல புத்தி அவனுக்கு உண்டாயிற்று.

பிறகு அவன் யாகம் செய்வதை விட்டு விட்டு அடுத்த காட்டில் உள்ள முனிவரிடம் போனான், அவர் காலில் விழுந்து பணிந்தான். “முனிவர் பிரானே, தங்கள் பெருமையை உணராமல் அவமதித்தேன்.நானும் யாகம் பண்ணி புகழ் பெறலாம் என்று எண்ணினேன், ஆனால் உண்மையான அன்பும் சிரத்தையும் இல்லாமல் பொறாமையால் யாகம் செய்யப் புறப்பட்டேன். விலங்குகளும் எனக்குத் துன்பத்தை உண்டாக்கின. தாங்கள் செய்யும் யாகத்தில் நான் காணும் காட்சிகளுக்கு நேர் விரோதமாக, நான் செய்யப் புகுந்த யாகத் தில் கண்டேன். அப்போது நான் செய்யத் தொடங்கியது நியாயமான யாகம் அன்று, என்ற புத்தி எனக்கு வந்தது. நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும்.” என்று சொன்னான்.

“நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லையே; நான் செய்த யாகத்தை நீ தடுக்கவில்லையே!” என்று முனிவர் சொன்னார்.

அதன் பிறகு அந்த அரசனும் அவருக்கு வேண்டிய அரிசி முதலியவற்றை வழங்கி வரலானான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *