

எனது நண்பர்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம்
இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள்.
இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது. அவர்கள் என்னுடன் பழகிய—தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளிற் சிலவே இதில், இடம் பெற்றுள்ளன.
என் வரலாறு ஒன்றை நானே எழுதி வெளியிட வேண்டுமெனச் சிலர் விரும்பினர். நான் விரும்பவில்லை. காரணம் மேலைநாடுகளில் ஒருவருடைய வரலாறு ஒரு நாட்டின் வரலாற்று நூலாகவும், தமிழகத்தில் அது தற்புகழ்ச்சி நூலாகவும் கருதப்படுவதினாலேயாம். என்றாலும், அவர்களுக்கும் இந்நூல் சிறிது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
நாவலர் ந.மு.வே. நாட்டாரய்யா, பெரியார் ஈ. வே. ரா., மதுரை சர். பி.டி. இராஜன் ஆகிய மூவரின் வரலாற்றுச் செய்திகளையும் தனி நூலாக வெளியிட எண்ணியுள்ளேன். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் ஓய்வும் கிடைக்க இறைவன் துணை புரிய வேண்டும்.
என் வாழ்நாளில் இப்பேரறிஞர்களோடு பழகிய பேற்றை ஒரு பெரும்பேறாகவே கருதி மகிழ்கிறேன். அவர்களின் பண்பும், பழக்க வழக்கங்களும் வழி காட்டுதலும், அறிவுரைகளும் எனக்குப் பயன்பட்டன. அவைகளை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். உங்களுக்கும் பயன்படுமா? என்று பாருங்கள். பயன்படுத்திக் கொண்டால் மகிழ்வேன்.
என் நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு வழங்கியதுபோலவே இந்நூலையும் அச்சிட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சென்னை பாரிநிலையத்தாருக்கும், ஜீவோதயம் அச்சகத்தாருக்கும், மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நடுவர் உயர் திரு. பு. ரா. கோகுலகிருஷ்ணன் எம்.ஏ.பி.எல்., அவர்கட்கும் என் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கி. ஆ. பெ. விசுவநாதம்



