எனது நண்பர்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம்

மாண்புமிகு உயர்நீதி மன்ற நீதிபதி பு. ரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள்
முன்னுரை

கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய “எனது நண்பர்கள்” புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். கி.ஆ.பெ. அவர்களுக்கு போற்றுதற்குரிய நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அதிர்ஷ்டசாலி. அவரைவிட நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். காரணம், நாவன்மையும், நாணயமும், எழுத்தாற்றலும், இன்பத் தமிழ்பால் மாறாத காதலும், அன்பும், பண்பும் நிலைத்த கி.ஆ.பெ. அவர்கள் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்; அவருடைய ஆசிபெற்று வாழ்கிறோம். பல நுணுக்கமான விஷயங்கள், பெரியவர்களுடைய எண்ண அலைகள், கி. ஆ. பெ. அவர்களுடைய விளக்கங்கள் , ஆகியவைகளை எனது நண்பர்கள்’ புத்தகத்திலே நிரம்பப் பார்க்கிறேன்.

“பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்கவேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?” என வினாக்களை அடுக்கிக்கொண்டே வந்து, “என் தாய் அழுக்கற்றவள், என் தாய் அழுக்கற்றவள்” எனச் சொல்லியவர் மறைமலை அடிகள். அவரைச் சைவர் அல்லர் என்று யாரும் சொல்ல முடியாது. இறையருள் பெற்றவரும், இறைவழிபாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரும் ஆவார் மறைமலை அடிகள். அவர் மறைந்ததும், கி.ஆ.பெ. அவர்கள் நெக்குருகிப் பாடிய பாவைப் பாருங்கள்:

“மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!” அவர் உடல் எரிவதைப் பார்த்து,
“பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு
சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ் மண்ணில்
……………..
தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்”

கி ஆ.பெ. அவர்கள், திரு.வி.க.வினுடைய நன் மதிப்பை எவ்வளவு பெற்றிருக்கிறார் என்பதை திரு.வி.க. அவர்கள் தன்னுடைய அந்திமகாலத்தில், கி.ஆ.பெ. அவர்களைப் பார்த்து,

“நாடு இருக்கிறது…மொழி இருக்கிறது…மக்கள் இருக்கிறார்கள்…நீங்களும் இருக்கிறீர்கள்…பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னதிலிருந்து, நன்கு புலப்படுகின்றது.

நம்மிலே பலருக்குத் தெரியாது. திருவள்ளுவர் திருநாள் என்று இப்போது நாம் கொண்டாடி வருகின்றோமே பொங்கல் நிகழ்ச்சிகளை ஒட்டி, இதைத் துவக்கி வைத்தவர் யாரென்று. பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இதை ஆரம்பித்து வைத்தார் என்பதை அழகுற எழுதியிருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பேராசிரியர் நமச்சிவாய முதலியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்வளவு பெரிய பகுத்தறிவுத் தத்துவத்தை இனிமையாகத் தமிழிலே சொல்லிச் சென்றார்கள் என்பதை கி. ஆ. பெ., அவர்கள் எடுத்துத் தந்திருக்கின்றார்கள். பேராசிரியர் நமச்சிவாயர் முதலியார் அவர்கள் அந்தச் சொற்பொழிவில்,

“தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை . தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன.”

எனக் கூறியிருக்கின்றார்கள்.

இந்தக் காலத்தில் நம்மைப் பார்க்க யாராவது வருகின்றார்கள் என்றால் ஏதோ காரணத்திற்காக வருகின்றார்கள் என்பது தான் பெரும்பாலும் ஏற்படுகின்ற நிகழ்ச்சி, பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள், கி.ஆ.பெ, அவர்களைத் தமிழுக்காகப் பார்த்தார்; தனக்காகப் பார்க்கவில்லை. கி. ஆ. பெ. அவர்கள் இல்லத்திற்குச் சென்ற பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை. கி.ஆ.பெ. வந்த காரணமென்ன என்று கேட்டபோது, தங்களைப் பார்க்க வந்தேனே தவிர, வேறு காரியம் எதுவுமில்லை என்று சொல்லிச் சென்றாராம். இப்படி அன்பொழுகும், தமிழார்வம் ஒழுகும் கதிரேசஞ் செட்டியார் தன் இல்லத்திற்கு வந்ததை கி.ஆ.பெ. அவர்கள்,

“என் வாழ் நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில, அவற்றில் பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி ஏன் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று”

என்று கூறியுள்ளார்.

தன்னுடைய நண்பர் டபிள்யு. பி.ஏ. செளந்திர பாண்டியன் நாடார் பற்றி எழுதுகின்றபோது, ஒரு மாபெரும் தத்துவத்தை நாடார் அவர்கள் சொல்லியதாக எளிமையாக விளக்கி இருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பொய் பேசுவதனை நாடார் அவர்கள் ஒருபோதும் மன்னித்ததே கிடையாது. இதற்குக் காரணம் கேட்ட போது,

“ஒருவனுக்குக் குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் நேரிடுவன. பொய்’ பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடைய அயோக்யத்தனத்தினாலேயே நேரிடுவது என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்”

என்று குறிப்பிட்டுள்ளார் கி.ஆ.பெ. அவர்கள். தாய்ச்சொல்லிற்காக திராட்சைரசத் தொழிற்சாலை அமைப்பதையே விட்டுவிட்டவர் நாடார் அவர்கள். இந்த நிகழ்ச்சியை அறிந்த கி.ஆ.பெ. அவர்கள் தன்னுடைய புத்தகத்தில்,

“ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன்பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது” என விளக்கியுள்ளார்.

“சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூறமுடியும்”

என்று கசிந்துருகி எழுதியிருக்கின்றார், கி.ஆ.பெ.

பேரறிஞர் அண்ணாவினைத் தன் நண்பராகப் பெற்றவர் இந்நூலாசிரியர். அண்ணாவினுடைய ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்

“இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும், தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்” என வெதும்பி எழுதியிருக்கிறார் கி. ஆ. பெ. அவர்கள்.

தமிழிசைக்குப் பெருமை சேர்த்த ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் கி.ஆ.பெ. வினுடைய உள்ளத்தைக் கவர்ந்த நண்பர்களில் ஒருவர். தந்தையும், தனயனும், தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிவந்த, வருகின்ற தொண்டினைப் பாராட்டி இந்நூலாசிரியர், தமிழிசை இயக்கத்திற்கு சென்னையில் ராஜா. சர். அண்ணாமலை செட்டியார் தமிழிசை மன்றம் நிறுவினார்; மதுரை நகரில் தமிழிசை மன்றம் கட்டி மகிழ்பவர் ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்கள் எனக் கூறியுள்ளார். இச்செயல்கள் கி.ஆ.பெ. அவர்களுக்கு சோழப் பரம்பரையின் சாதனையை நினைவூட்டி இருக்கின்றது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழிசைச் சங்கங்கள், ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெருங்கோயிலைப் போன்றும், ராஜேந்திர சோழனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப் பெற்ற பெருங்கோயிலைப் போன்றும் அமைந்திருக்கிறதென்று எழுதியிருக்கின்றார்கள்.

இடமஞ்சி, பல அருமையான விளக்கங்களை, நிகழ்ச்சிகளை என்னால் இந்த முன்னுரையில் எடுத்துக் கூற இயலவில்லை. உன்னுடைய நண்பர்களைச் சொல், பிறகு நான் உன்னை மதிப்பிடுகிறேன்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்களை இப்புத்தகத்தில் படித்தபிறகு, இந் நூலாசிரியர் எவ்வளவு பெரியபாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர் என்பது விளங்குகின்றது. சரித்திரப் புகழ்பெற்று, நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் தமிழகப் பெரியவர்கள் பலர், கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்கள். இப்பெரியவர்கள் வளர்த்த நட்பு எனும் அந்தப் பண்பை இக்காலத்தில் பலர் நன்றாகப் படித்துணர வேண்டும். உதட்டளவு பேசி, உதவாத, விஷயங்களுக்காக வாதிட்டு,நெஞ்சில் வஞ்சத்தை ஏந்திச் செல்லும், இனங் கண்டு கொள்ள முடியாத மனிதர்கள் உலவும் இவ்வேளைகளில், உற்ற நண்பர்கள் யார், எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், கருத்து. வேறுபாடு இருப்பினும், காழ்ப்புணர்ச்சியற்று எப்படி அன்பு செலுத்தினார்கள் என்பன போன்ற உயரிய, பண்புகள் இப்புத்தகத்தில் நிரம்ப அடங்கியுள்ளன.

இதைப் படிப்போர் பயனுறுவார்கள். படித்து, பலருக்கு எடுத்து விளக்கினால், சமுதாயம் பயனுறும். இத்தகைய சீரிய நூலை எழுதிய முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். வணங்குகிறேன்.

அன்புள்ள,
பு. ரா. கோகுலகிருஷ்ணன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *