

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
‘செந்தமிழ்ச்செல்வி’ ௩, ச-ம் சிலம்புகளில் ‘கண்ணகி கற்பு மாண்பு’ என்னும் பெயருடன் வெளிப் போந்த கட்டுரையைப் பிற்பகுதியாகவும், புதுவதாக எழுதிய கண்ணகி வரலாற்றை முற்பகுதியாகவும் கொண்டுள்ளது இவ்வுரை நூல். கண்ணகி வரலாறு என்பது சிலப்பதிகாரத்தின் கதைச்சுருக்கமே. இஃது இயற்கை வருணனைப் பகுதிகளிலும், துதி முதலியவற்றிலுமிருந்து எடுத்த, அறிவை விளக்குவனவும் இன்பம் பயப்பனவாகிய இனிய செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் ஏற்ற இடங்களில் கொண்டுள்ளது; இதன் கதைப்போக்கில், தமிழ் நாட்டின் பெருமையை அறிவுறுத்தித் தமிழ் மக்களுக்கு ஊக்கத்தையெழுப்பக் கூடிய பாகங்கள் எஞ்சாமல் தழுவப்பட்டுள்ளன; நடை மிக்க கடினமாயிராதபடி சந்தி பிரித்து; வடசொற்கள் ஒன்றிரண்டு அருகிவர, இனிய தமிழ்ச் சொற்களால் எழுதப் பெற்றுள்ளது. பிற்பகுதியானது காப்பியத் தலைவர்களின் பண்புகளை ஆராய்ச்சி செய்யும் முறையினைக் காட்டி, தமிழ் பயில்வார்க்கு உதவி புரியக்கூடியது. சுருங்கச் சொல்லின், உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் எத்திறத்து மாணவரும் கற்றுப்பயனெய்துமாறு இந்நூல் எழுதப்பெற்றுளது என்பது தேற்றம்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.



