
பாரதி விளக்கம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
கவிக்குயில் நினைப்பு
உன்னை நினைக் கையிலே – எங்கள்
உள்ளத்திலே வீர வெள்ளம் பெருகுது!
வன்னக் கவிக் குயிலே – முகம்
வாடித் தவிக்குந் தமிழுக்கு வான்மழை
என்ன இரங்கி வந்தாய்-இருள்
இன்னல் பிளந்தினி அச்ச மில்லையென்றெம்
அன்னை விடுதலைக்கே – பொங்கும்
ஆவேச மின்னெனத் தாவிவந் தாய்-வாழ்க ! (உன்னை)
கண்க ளிரண்டெனவே-வீரக்
காளைக ளோடிளங் காதல் மயிலெனப்
பெண்கள் தலைநிமிர- ஜய
பேரிகை கொட்டியிவ் வூரை யெழுப்பினை
புண்களை மாற்றிவிட்டாய் – பசும்
பொன்னு மணியுங் கனலும் பொலிதமிழ்ப்
பண்கள் பொழிந்ததெல்லாந் – தாய்ப்
பாலென நாடியிற் பாய்ந்து கலந்தன (உன்னை)
வெற்றி முரசடிப்போம்-ஜய
வீர சுதந்தரத் தாயின் மணிக்கொடி
சுற்றி நடமிடுவோம் – நம்மைத்
துண்டு செய் மாயத் துயர்களை இன்றுடன்
எற்றி யெறிந்திடுவோம் – மாந்தர்
எல்லாரும் ஓர்குல மென்று சமதர்மம்
பற்றிமுன் னேறிடுவோம்- சக்தி
பாரதிக் குன்கவி யார மணிகுவோம் (உன்னை)
–சுத்தானந்த பாரதி.



