பாரதி விளக்கம்
ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

கவிக்குயில் வாழ்த்து


1

புல்லடி மைப்பட்ட மாந்தர்க்கு – சுய
புத்தி வரச்செய் தெழுப்பினான்.
வெல்வலி யற்றுத் தளர்ந்தவர்க் – கொரு
வீரக் கனலினை மூட்டினான்.
பல்சமயச் சாதி வேற்றுமை – யாலே
பாழ்பட்ட பாரத நாட்டிற்கே
சொல்வலி வாற்சம தர்மத்தைத் – தூண்டிச்
சோகந் தவிர்த்தனன் பாரதி!

2

பண்டிதர் கொண்ட தமிழினை -நாட்டில்
பாமரரும் பெறச் செய்தனன்.
பெண்டி ரடிமையைத் தீர்த்தனன் – வெறும்
பேச்சினிற் காலத்தைப் போக்கிய
வண்டரை எள்ளி நகைத்தனன் – நாட்டை
வன்பணி செய்திட ஊக்கினான்
தொண்டிவன் செய்ததைச் சொல்லவோ – கவி
தோற்றின னிங்குப் புதுயுகம்!

3

தீரன், அறிவிற் சிறந்தவன் – புது
தீர்க்க தரிசி வரகவி ;
வீர சுதந்தர சக்தியே – இவன்
வேடம் புனைந்திங்குப் பாடிற்று !
பாரி லதிசயம் பாரதி – அவன்
பண்களை வேதமென் றோதுவாம்
வாரிதி சூழுல கெங்கிலும் – நீடு
வாழ்க கவிக்குயில் வாழ்கவே!

இந்த எளிய உள்ளன்புக் காணிக்கையை என் அன் பிற்குரிய கவிக்குயிலின் வீராவேச வாணிக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஓம் சக்தி !

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !