
நாயன்மார் திறம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
இறுவாய்
நாயன்மார், உண்மை – உறுதி – அஞ்சாமை – ஒழுக்கம் –
வீரம் முதலியவற்றைக் காத்துவந்த குறிப்புகள் பல படக்
கிடக்கின்றன. விரிவு பெரியபுராணத்திற் காண்க. நாயன்மார்
தாம்கொண்ட வீர வைராக்கியம் முற்றுப்பெறு மட்டும்
உயிரையும் பொருளாக மதியாது உழைத்துவந்ததை நேயர்கள்
கவனிப்பார்களாக. நாயன்மார் கண்ணைப் பிடுங்கியும், கழுத்தை
யறுத்தும், கையை யறைத்தும், தலையை யெரித்தும், வயிற்றைக்
இறியும், பிள்ளையை யறுத்தும், வேறு பல செயற்கருஞ் செயல்
களைச் செய்தும் தமது வீர வைராக்கியத்தைச் சாதித்தனர்.
வைராக்கியத்தைச் சாதிக்கும் பொருட்டு மண்ணை யிழக்கலாம்;:
பொன்னை யிழக்கலாம்; பெண்ணை யிழக்கலாம்; உடலையும்
ஒழிக்கலாம்; உயிரையும் ஒழிக்கலாம். பிற உயிர்க்குத் தீங்கு
செய்யாது தியாகத்துக்கு உட்படுவதே அறவொழுமக்கம். பிறர்க்குத்
தீங்கு சூழ்வித்து ஒருவர் வாழ விரும்புவது அற நெறி யாகாது.
வைராக்கிய நெறியை வளர்க்கும் அறிவாற்றல் பெறுவதற்கு
நாயன்மார் சரிதங்கள் உறுதுணை செய்யும்.
நாயன்மார் சரிதங்களை வாசிப்பதனாலும், அவர்தந்
திரு நாமங்களை ஓதுவதனாலும், அவரது திருவாக்குகளைப்
பாராயணஞ் செய்வதனாலும், அவரைப் பூசிப்பதனாலும்
உண்மை சிறந்து, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியன
அரும்பும். மனிதன் எதை நினைக்கிறானோ, எதைப்பற்றிப்
பேசுகிறானோ, அவன் அதனதன் வண்ணமாக மாறுகிறான்.
இவ்வுண்மை உணர்ந்த முன்னோர்கள், மக்கள் அறிவு உலகாயத
மதத்தில் தோயாதவாறு காக்கும் பொருட்டுச் சந்தியாவந்தனம்,
க்ஷேத்திர யாத்திரை, ஆன்மார்த்த பூசை, வேதமோதல், புராணங்
கேட்டல் முதலிய ஞான முறைகளைக் கோலினார்கள்.
இப்பொழுது நமது நாட்டுக் கல்வி அருகினமையால் நாத்திகம்
பெருகுகிறது. ஆதலால் இந்நாளில் “நாயன்மார் திறம்” நாட்டுக்கு
எல்லாவழியிலும் பயன்படுவதாக. நாயன்மார் திறத்தைப்
போற்றி, அவர்தங்குணங்களைப் பெறுவது, பழந்தமிழ் நாட்டை
மீண்டும் படைப்பதாகும்.
சகோதரிகளே! சகோதரர்களே! நாயன்மாரை மறவாது
போற்றுங்கள்; அவர்தம் பாடல்களை ஓதுங்கள்; நீங்கள் அவர்
ஆவீர்கள்; அவரைப்போலச் செயற்கருஞ் செயல்களைச்
செய்வீர்கள்.
“தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்
போற்றி
ஒல்லையவர் புராணகதை யுலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழா ரடி போற்றி”
– உமாபதி சிவாச்சாரியார்.



