வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

12. பெருங்குளத்து மாயக் கூத்தர்

கூத்தன் என்றதுமே நம் எண்ணத்தில் வருவது ஆனந்தக் கூத்தாடிய நடராஜ மூர்த்தம்தான். இலக்கிய வரலாறுகளிலே சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி, பாண்டரங்கம் முதலிய கூத்துகளைப் போலவே கண்ணனும், அல்லியம், மல்குடம் முதலிய ஆட்டங்களை ஆடினான் என்பது குறிக்கப்படுகிறது. இன்னும் முருகன், துர்க்கை, கொல்லிப் பாவை, இந்திராணி முதலியோர் ஆடிய கூத்துகளும் விவரிக்கப்படுகிறது. இத்தனைக்கும் மேலே மாயனாம் பரந்தாமனே ஒரு மாயக் கூத்தையும் ஆடி மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறான் என்கிறபோது, அந்த வரலாற்றை அறிய ஆவல் ஏற்படுவது சகஜம்தானே! அந்த வரலாறு இதுதான்.

தண் பொருநை என்னும் தாமிர பரணியின் வடகரையிலே குளந்தை என்று ஒரு சிற்றூர். அங்கே கோயில் கொண்டிருப்பவர் வேங்கடவாணர். அவரிடம் ஆறாத பக்தி கொண்டிருப்பவர் வேதசாரர் என்ற அந்தணர். அவரும் அவர் மனைவி குமுததுவதையும் இல்லறம் நடத்தி வந்தனர்.

அவர்களுக்கு கமலவதி என்று ஒரு மகள் பிறந்து வளர்ந்து வந்தாள். இந்த நிலையில் ஓர் அரக்கன் அங்கு வந்து வேதசாரரின் மனைவியைக் கவர்ந்து சென்று விடுகிறான். மனைவியை மீட்க வழியறியாது திகைக்கிறார். தான் வணங்கும் ஸ்ரீநிவாசனிடமே விண்ணப்பித்துக் கொள்வதைத் தவிர வேறு செய்ய அறியாது வாழ்கிறார். ஸ்ரீநிவாசனும், அவனது ராமாவதாரத்தில் தன், மனைவி சீதையை இராவணன் எடுத்துச் சென்று, அசோக வனத்தில் சிறை வைத்திருந்தபோது, பிரிவுத் துயரை அனுபவித்தவன்தானே?

ஆதலால் பக்தனாம் வேத சாரரின் துயர் துடைக்க வேண்டி, அரக்கன் மேல் படை கொண்டு சென்று அவனை வென்று, அவனனத் தன் காலின் கீழ் போட்டு மிதித்து மாயக் கூத்தாடுகின்றார். இதனாலேயே இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமன் சோரநாட்டிய சர்மன் – மாயக் கூத்தன் என்று பெயர் பெற் றிருக்கிறான். சோரனிடமிருந்து பக்தரது மனைவியை மீட்டுக் கூத்தாடிய பெருமகனே சோர நாட்டியன் எனப் படுகிறான். இவனைப் பற்றிய துதி ஒன்று இத்துணை விவரத்தையும் கூறுகிறது.

ஸ்ரீ வேதசார மகிஷியும் அபக்ருத்ய நித்யாம்ஸ்நாதுங்க தாம் திதி சுதேனகுகாப நீதாம். ஆனிய தூர்ண மதிசதுகருணா நிதி ஹிய ஹதம் சோர நாட்டியம்அனிஷம் கானம் பிரயத்யே.

என்பதுதான் துதி. இந்த சோர நாட்டியன் என்னும் மாயக் கூத்தன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் பெருங்குளம் என்னும் திருக் குளந்தை. அது வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டில் ஒரு திருப்பதி, அந்தத் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

பெருங்குளம் என்னும் திருக்குளந்தை, திருநெல்வேலிக்குக் கிழக்கே இருபத்தி ஐந்து மைல் தொலைவிலுள்ள சிறிய ஊர். இதற்கு ரயிலில் போவதானால் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இறங்கி கார் வைத்துக் கொண்டோ , பஸ் ஏறியோ, பத்துமைல் வடகிழக்காகப் போக வேணும். தூத்துக்குடியிலிருந்து இருபதுமைல் தெற்கே வந்தாலும் வரலாம். இந்த ஊரில் அதன் பெயருக்கேற்ப பெரிய ஏரி – குளம் ஒன்றிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து செல்லும் வழியே பல குளக்கரைகள் வழியாகத்தான் செல்கிறது.

ஒரு பக்கம் நீர் நிறைந்த ஏரிகளும், ஒரு பக்கம் பரந்த நெல்வயல்களுமாக கண்ணுக்கு இனிய காட்சி அளிக்கும். இத்தலம், ஆழ்வார் பாடிய நவதிருப்பதிகளுள் ஒன்று. அந்த நவதிருப்பதிகளில் தாமிரபரணியின் வடகரையிலிருப்பவை ஆறு. அதில் இது மேற்கே இருந்து நான்காவது திருப்பதி, இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பரந்தாமனாம் மாயக் கூத்தனை,

கூடச் சென்றேன் இனி என்கொடுக்கேன், கோல்வளை நெஞ்சத்தொடக்கமெல்லாம்பாடற்று ஒழிய, இழந்துவைகல் பல் வளையார் முன்பரிசணிந்தேன்மாடக் கொடி மதின் தென் குளந்தைவண் குடபால் நின்றமாயக் கூத்தன்ஆடல் பறவை உயர்ந்தவெல்போர் ஆழிவலவனை ஆதரித்தே

என்று பாடி மகிழ்ந்திருக்கிறார் நம்மாழ்வார். இம்மாயக் கூத்தனையும், இத்தலத்தையும் பற்றி இவர் பாடிய பாட்டு இந்த ஒரே பாட்டுத்தான்.

இவ்வூரையடைந்து, குளக்கரையையும் கடந்து, சந்நிதித் தெரு வழியாக மேற்கு நோக்கி நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் வாயிலில் ஒரு சிறு கோபுரம் உண்டு. அதனை அடுத்தே பந்தல் மண்டபம். அம் மண்டபத்திலேயே திருமஞ்சனக் குறடு, இந்த மண்டபத்தில் நுழையும் முன்பே, தென்பக்கம் திரும்பினால், ஒரு சிறு மண்டபம் பூட்டி வைக்கப் பட்டிருக்கும்.

அதைத் தான் கழுநீர்ப் பெருமான் சந்நிதி என்பர். மடைப் பள்ளியிலிருந்து வரும் கழுநீர் எல்லாம் அப்பக்கமாகத்தான் ஓடும். அங்கு ஒரு காவல் தெய்வம் இருந்திருக்க வேண்டும். அவனையே கழுநீர்த் துறையான் என்று அன்று மக்கள் அழைத்திருக்க வேண்டும்.

இன்று அம்மண்டபத்தில் இருப்பது ஒரு பீடம் மட்டுமே. கழுநீர்த் துறையான் கழுநீரோடு கழுநீராய் கரைந்து போய்விட்டான் போலும்! கோயில் வாயிலுக்கு வடபுறம், அவருக்குத் தனி சந்நிதி. அவரையும் வணங்கிவிட்டே கோயிலுக்குள் நுழையலாம். கொடி மடம் மகாமண்டபம் எல்லாம் கடந்தே அர்த்த மண்டபம் வர வேணும். அங்கிருந்தே மூலவராம் வேங்கட வாணனைத் தரிசிக்கலாம். வேங்கடவாணன் அந்த திருமலை வேங்கடவனைப் போல தனியாகவே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேலே வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.

இந்த வேங்கடவாணன் இருக்கும் கருவறையிலே வேதசாரரும், அவர் மனைவி குமுதவதையும் கூப்பிய கையராய் நிற்கிறார்கள். அத்துடன் பிரகஸ்பதியும் இருக்கிறார். ஸ்ரீதேவி பூதேவிக்கு அவர் இடம் கொடுக்க வில்லை. அர்த்த மண்டபத்தில் இருக்கும் உத்சவரே மாயக்கூத்தர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இரு மருங்கிலும் அலர்மேல் மங்கைத் தாயாரும், குளந்தை வல்லித் தாயாரும் இருக்கின்றனர்.

மூவரும், இவர் பக்கலில் கருடனும், அழகிய குறட்டொன்றிலே சர்வாலங்கார பூஜிதராய் நிற்கின்றனர். வேங்கட வாணனையும் மாயக் கூத்தரையும் வணங்கித் திரும்பும்போது இத்தலத்திற்குச் சிறப்பான கருடாழ்வார் இருவரைக் காணலாம். ஒருவர் புத்தம் புதிய மேனியர். மற்றொருவர் புராதனமானவர்.

அவர் கையிலே பாம்பொன்று ஏந்தி, பெருமாள் எழுந்தருளுவதற்கு ஏற்ற முறையில் கால் மடித்து சிறகை விரித்து நிற்கிறார். இன்னும் இத்தலத்தில் ஆழ்வார்கள் பலரும், உடையவரும், சேனைமுதலியார் என்னும் விஸ்வக்சேனரும் மற்றக் குறடுகளில் எழுந்தருளி யிருக்கிறார்கள். இன்னும் மணவாள மாமுனிகள் சந்நிதியும் தனியே இருக்கிறது.

இங்குள்ள மாயக் கூத்தருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி ரஸமான வரலாறு ஒன்று உண்டு. ஆழ்வார் திருநகரியில் நாயக்கர் மண்டபம் கட்டி முடிந்த காலத்தில் வைகாசி உத்சவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த உத்சவத்திற்கு நவதிருப்பதிப் பெருமாள்களும் எழுந்தருளுவது வழக்கம். பல வருஷங்களுக்கு முன் இந்த உத்சவத்தைக் காண சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அவர்கள் தாம் நமது முன்னாள் அறநிலைய அமைச்சர் திரு வேங்கடசாமி நாயுடு அவர்களின் முன்னோர் அக்குடும்பத்தலைவர் மற்றொருவருக்கும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளேயே ஒரு பிரார்த்தனை செய்து கொண்டார். நவதிருப்பதிப் பெருமாள்களில் ஆதி நாதரைத் தவிர மற்றவர்களில் எவர் முதல் முதல் நாயக்கர் மண்டபத்திற்கு வந்து சேர்கிறாரோ, அவருக்குத் தங்கக்கவசம் செய்து சாத்துவது என்று பிரார்த்தனை. அன்று முதல் முதல் எழுந்தருளியவர் மாயக் கூத்தர். அதனால் அவர் பிரார்த்தனைப்படி தங்கக் கவசம் செய்து அணிவித்திருக்கிறார்.

ஆம். பெரியவர் பெருமான்களிடையே ஓர் ஓட்டப் போட்டியையே வைத்திருக்கிறார். அந்தப் போட்டிப் பந்தயத்தில் முன்னோடி வந்து ஜெயித்தவர் மாயக் கூத்தராக இருந்திருக்கிறார். மாயக் கூத்தர் சோர நாட்டியம் மட்டும் ஆடவல்லவர் அல்ல. நன்கு ஓட்டப்பந்தயத்திலும் வெற்றி பெறக் கூடியவர் என்பதை அறிகிறோம்.

இக்கோயிலில் கல்வெட்டுகள் இல்லை என்றாலும், ஆழ்வார் திருநகரியில் எடுத்த கல்வெட்டுக்களில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது அக்கல்வெட்டுகள் மூலம், பெருங்குளத்தில் சில நிலங்கள் ஆழ்வார் திருநகரித் திருவிழாச் செலவினுக்கு நன்கொடையாக அளிக்கப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது. இக்கல்வெட்டுகளில், இவ்வூர், உத்தம பாண்டிய நல்லூர் என்ற பெருங்குளம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்கோயிலுக்குப் கீழ்புறம் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அங்கு கோயில் கொண்டிருப்பவர் வழுதீசர். இவர் திருக்குறள் அரங்கேறிய காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த உக்கிரப்பெருவழுதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது வரலாறு என்பதால் அவரது பழமையும் விளங்கும். இந்த வழுதீசர் கோயில் ஜீரணோத்தாரணப் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

மாயக்கூத்தர் கோயில் கோபுரம், கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய விமானம் எல்லாம் சிதைந்து இருக்கிறது. மண்டபங்களும் பழுதுற்ற நிலையிலே தான் இருக்கின்றன.

இவைகளையெல்லாம் புதுப்பிக்கும் பணியை உள்ளூர் அன்பரும் பிறரும் ஆரம்பித்திருக்கிறார்கள். மாயக்கூத்தர் பெயர் தாங்கிய மாயக்கூத்தர் அய்யங்கார் என்பவரே முன்னின்று காரியங்களை நடத்துகிறார். மாயக் கூத்தரே முன்னின்று நடத்தும் திருப்பணியில் பங்கு கொள்வது பெரும்பேறு. அந்தப் பேற்றைத் தமிழன் பர்கள் பலரும் பெறட்டும் என்றே இதனையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !