

திருக்குறளில் செயல்திறன்
கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும்.
முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன.
செயல் திறனே உருவான முத்தமிழ்க் காவலர் அவர்களின் ‘திருக்குறளில் செயல்திறன்’ திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்ப்பதுடன், செயலாண்மை ஊக்கத்தையும் அனைவருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை,
தமிழ் ஆர்வமுள்ளோருக்கு நல்ல அறிவு விருந்து, செயல் திறன் உடையோருக்கு மகிழ்வூட்டும் பாராட்டு; செயல் திறனை மறந்தோர்க்கு நினைவூட்டி இடித்துரை நல்கும் வழிகாட்டி— இந்நூல்.
இத்தகு தெளிவு நூல்களை இன்னும் பலவாகத் தொடர்ந்து ஆக்கித் தந்து நம்மை வாழ்விக்க வேண்டும், இன்னும் பல்லாண்டு நலமோடு வாழ்ந்து நமக்கு வழி காட்டி வரவேண்டும் என்று முத்தமிழ்க் காவலரை வேண்டுகிறோம்.
இதனை வெளியிடுவதற்கு வாய்ப்பளித்ததற்கு முத்தமிழ்க் காவலர் அவர்கட்கு எங்கள் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இந்நூலின் அச்சுப் பதிப்பிற்கு உதவிய ஆசிரியர் புலியூர்க் கேசிகனாருக்கும் எங்கள் நன்றி.



