

முடியாத தொடர் கதை
கலைஞர் மு. கருணாநிதி
மலர்ந்த பூவாடையென…
தெளிந்த புனலோடையென…
சித்திரப் பட்டாடையென…
முத்தமிழ்ப் பாலாடையென…
வித்தாரத் தமிழுலகறிந்த வியத்தகு எழுத்தரசராம் கலைஞரின் இதமான கருத்தோடை – இனிதான கனிச்சாறு – இந்நூல்.
ஒரு சமுதாயத்தை மாற்றமுறச் செய்யவும், உன்னத மானவொரு நிலைக்கு ஏற்றமுறச் செய்யவும் செறிவார்ந்த சிந்தனைகளின் மலர்ச்சியாம் எழுத்தோவியங்களால் முடியும் என்பதை அழுத்தமுறச் சாதித்துக் காட்டிய ஆற்றலுக்குரியவர் கலைஞர். இஃது ஒரு முப்பதாண்டுகளுக்கும் முன்பாகவே விமர்சன வீதியிலே- விவேக அரங்குகளிலே விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டு விட்ட முடிவாகும்; எழுதி வைத்துவிட்ட தீர்ப்பாகும்.
அத்தகைய கலைஞரின் எழுத்தாற்றலுக்கு சொல் வண்ணம் பூசுவதென்பது கிளிச்சிறகு பொன்னுக்குப் பசுமையைத் தடவுவதாகவே ஆகும்.
படித்தவர்கள் நீங்கள் ! – பகுத்தறிவுப் பாசறை யின் நூல்களை.
-படிக்கப் போகின்றவர்கள் நீங்கள் !- பயன் தரும் பண்பார்ந்த பலப்பல நூல்களை.
அந்தப் பட்டியலில் இந்நூலுமொன்றாய் இணைய விழைகிறோம்.
புரையோடிக் கிடக்கும் சமூகத்தைப் பொறுப்போடு கீறிக் கிளறி, கருத்துக் களிம்பிடும் இந்நூலைப் பதிப்பிக்கும் பேற்றினை வழங்கிய கொஞ்சு தமிழ்ப்புலச் செல்வராம் எங்களது நெஞ்சுகந்த நன்றி என்றும் கலைஞருக்கு உரித்தாகும்.
பதிப்பாசிரியர்



