
பலவகை பூங்கொத்து
பம்மல் சம்பந்த முதலியார்
தாதா கதை
(கட்டுக் கதை)
ஒரே ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான். அவன் நிரம்பப் பணக்காரனுமல்ல, ஏழையுமல்ல, அவன் மிகவும் தெய்வபக்தியுடையவன், அவன் இறந்து போகுமுன் தனது இரண்டு குமாரர்களையும் அழைத்து தன் நிலங்கள் சொத்துக்களை எல்லாம் இருவர்க்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து “அவர்களுக்கு அடியிற்கண்ட படி புத்திமதி கூறினான். பிள்ளைகளே நீங்கள் இரண்டு பெயரும் புத்திசாலிகள். உங்களுக்கு நான் அதிகமாக சொல்ல வேண்டியதில்லை இதை ஒன்றை மாத்திரம் என் உபதேசமாகக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதாவது வேண்டியிருந்தால் ஸ்வாமியைக் கேளுங்கள் அவர் எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை உங்களுக்கு கொடுப்பார்.’ என்று சொல்லிவிட்டு இறைவன் பாதம் போய்ச் சேர்ந்தார்.
பிறகு அவ்விரண்டு பிள்ளைகளும் சுகமாக வாழ்ந்து வந்தார்கள். சில வருஷங்கள் கழித்து ஒரு வருஷம் மழையே இல்லாமல் போயிற்று. அப்பொழுது அவர்கள் இருவரும் தங்கள் தகப்பனார் கட்டளையின்படி அவ்வூர் ஸ்வாமி கோவிலுக்கு போய் மழை பொழிய வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டார்கள். ஸ்வாமி கருணை கூர்ந்து அவர்கள் வேண்டு கோளுக்கிணங்கி கொஞ்சம் மழைபொழியச் செய்தார். இருவர் நிலங்களிலும் வழக்கத்திற்கு பாதி நெல் விளைந்தது. மூத்தவன் இவ்வளவாகிலும் நெல் விளைந்ததே, ஸ்வாமியின் கிருபையால் என்று சந்தோஷப்பட்டான். இளையவன் நாம் பிரார்த்தித்தும் இவ்வளவுதானா விளைவது என்று வருத்தப் பட்டான்.
இவ்வாறு பல விஷயங்களிலும் தாங்கள் வேண்டியதைக் குறித்து இருவரும் கோயிலுக்குப் போய் ஸ்வாமியைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். தாங்கள் கேட்டதற்கு குறைவாக கிடைக்கும் போதெல்லாம் மூத்தவன் “இவ்வளவாவது ஸ்வாமி கொடுத்தாரே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். இளையவனோ நாம் கேட்பதவ்வளவையும் ஏன் ஸ்வாமி கொடுப்பதில்லை” என்று முணு முணுத்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச காலத்தில் மூத்தவன் சிறந்த தனவானான். இளையவனோ வறுமையால் பீடிக்கப் பட்டான். அவன் இதைக்கண்டு பொறாமை கொண்டவனாய், ஸ்வாமி சந்நிதிக்குப் போய் “ஸ்வாமி, நாங்களிருவரும் ஒரே மாதிரியாகத்தானே உங்களைப் பிரார்த்திக்கிறோம். என் அண்ணனுக்கு மாத்திரம் ஐஸ்வர்யம் விர்த்தியாகிறதே. எனக்கு ஏன் விர்த்தியாகவில்லை ? இதற்கு எனக்கு தயவுசெய்து பதில் சொல்லுங்கள்” என்று வேண்டினான்.
அன்றிரவு அவன் கனவில் தோன்றி “அப்பா! நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான் உன் அண்ணன் நான் அவனுக்கு எவ்வளவு கொஞ்சம் கொடுத்தாலும் இவ்வளவாவது கொடுக்கிறாரே என்று சந்தோஷப்படுகிறான் உனக்கு நான் எவ்வளவு கொடுத்தாலும் இவ்வளவுதானா கொடுப்பது என்று முணுமுணுக்கிறாய்! அதனால் அவனுக்கு ஐஸ்வர்யம் விர்த்தியாகிறது உனக்கு விர்த்தியாகவில்லை. இனிமேலாவது கிடைத்ததைப் பெற்று இவ்வளவாவது கிடைத்ததே என்று சந்தோஷமாயிரு” என்று புத்தி கூறினார். அவனும் அன்று முதல் சுவாமி கூறியது சரிதான் என்று ஒப்புக்கொண்டு அதன்படியே நடந்து வந்து தன் தமயனைப் போல் ஐஸ்வர்யமானான்.



