
தமிழின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன்
யார் குற்றம்?
தமிழ் நூல்களில் புலவர்கள் பாராட்டிய மன்னர்களும் செல்வர்களும் பலர். அவர்களுக்குள்ளே முடியுடை மன்னர்கள் புலவர்களை ஆதரித்ததும், தம்பால் வந்த இரவலர்களுக்கு வேண்டிய அளவு பொருள் அளித்துப் பாதுகாத்ததும் அருமையான செயல்கள் அல்ல. அவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் நிரம்பின செல்வம் இருந்தது. ஆனால் சில சிற்றரசர்களும் செல்வர்களும் தங்களை நாடி வந்தவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் அளித்து வந்தனர். பறவை, செடி ஆகியவற்றினிடங் கூட அவர்களுடைய கருணை சென்றது. அப்படி வாழ்ந்த வள்ளல்களுக்குள் சிறந்தவர்களென்று ஏழு பேரைப் புலவர்கள் சேர்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். பாரத நாடு முழுவதும் வாழ்ந்த வள்ளல்களாகப் பதினான்கு பேரை முதலெழு வள்ளல்கள் என்றும், இடையெழு வள்ளல்கள் என்றும் சொல்லும் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. தமிழ் நாட்டில் வாழ்ந்த வள்ளல்களைக் கடையெழு வள்ளல்கள் என்று அந்த முறையிலே சொல்வார்கள்.
பல புலவர்கள் இந்த ஏழு வள்ளல்களை ஒருங்கு சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஏழுபேர் களில் நள்ளி என்பவன் ஒருவன். அவன் கண் டீரம் என்னும் மலையைச் சார்ந்த இடத்தில் இருந்து வாழ்ந்த சிற்றரசன்.தோட்டி என்ற மலை அவனுக்கு உரியதாக இருந்தது. புலவர்களுக்குக் கணக்கில்லாமல் ஈயும் கொடையாளன் அவன். இசைபாடும் பாணர்களுக்குப் பலவகையில் உபசாரம் செய்து அவர்களுடைய இன்னிசையிலே மூழ்கித் திளைப்பவன். அவ்வாறு பலகாலும் இசைவிருந்தை நுகர்ந்த தனால் அவனுக்கு இசையின் நுணுக்கங்களெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தன.
ஒரு சமயம் நள்ளியைத் தேடிக் கொண்டு புகழ் பெற்ற பாணன் ஒருவன் வந்தான். அவன் இனிமையாக யாழ் வாசிப்பதில் வல்லவன். அவனுடைய இசையைக் கேட்டு மகிழாத மன்னரோ, செல்வரோ தமிழ்நாட்டில் இல்லை யென்றே சொல்லிவிடலாம். அவன் நள்ளியை மாத்திரம் நெடுநாட்களாகப் பார்த்ததில்லை. வேறு பாணர் பலர் நள்ளியிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வருவர். அவர்களை இந்தப் பாணன் சந்திக்கும் போது அவர்கள் நள்ளியின் இயல்பைப் பாராட்டிக் கூறுவார்கள். “நாங்களும் எவ்வளவோ இடங்களில் பாடுகிறோம். பரிசு பெறுகிறோம். தமிழ் நாட்டில் இசையை விரும்பிக் கேட்கும் வள்ளல்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் நள்ளியின் திறமே வேறு. அவரும் மற்றவர்களைப் போலத்தானே பரிசு கொடுக்கிறார் என்று நீங்கள் கேட்கலாம். பரிசை நாம் பெறுவது பெரிதன்று. நம்முடைய ஆற்றலைத் தெரிந்து பாராட்டிக் கொடுக்கும் பரிசு ஆயிரமடங்கு உயர்ந்தது. இசைப் புலமையுடையவர்கள் சில சமயங்களில் மிகவும் அற்புதமாக பாடுவார்கள். அந்தச் சமயமறிந்து பாராட்டினால் அந்தப் பாராட்டை விடச் சிறந்த பரிசு வேறு இல்லை. எத்தனை நுட்பமான வகையிலே நம்முடைய இசைத்திறனைக் காட்டினாலும் அந்த நுட்பத்தை உணர்ந்து ‘இந்த இடம் அற்புதம்’ என்று பாராட்டும் கலைஞர் நள்ளி. ஆகவேதான் அவரைக் காட்டிலும் நிலையிலும் பொருளிலும் சிறந்தவர்கள் தமிழ் நாட்டிலே இருந்தாலும், அவரையே அடிக்கடி நாடிச் செல்கிறோம்” என்று அவர்கள் தங்கள் அநுபவத் தைச் சொல்வார்கள்.
இத்தகைய பேச்சைக் கேட்கக் கேட்க முன்னே சொன்ன பாணனுக்கு நள்ளியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. தன்னுடைய மாணாக்கர் கூட்டத்தோடும் சுற்றத்தோடும் நள்ளியை நாடிச் சென்றான்.
இவன் போன சமயம் நள்ளி வேறு எங்கோ புறப்படும் நிலையில் இருந்தான். வந்தவர்களைப் போங்கள் என்று சொல்லும் வழக்கம் அவனிடம் இல்லை. ஆதலின், நீங்கள் இங்கேயே இருங்கள். உங்கள் வீடாகவே இந்த இடத்தைக் கருதி வேண்டியவற்றைப் பெற்று இன்புறலாம். இன்றியமையாத கடமை ஒன்றை நிறைவேற்ற நான் போக வேண்டியிருக்கிறது. விரைவில் வந்து விடுகிறேன். என்றும் வராத நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை உடனிருந்து உபசரிக்கும் நிலை எனக்கு இப்போது இல்லாமைக்கு வருந்துகிறேன். ஆனாலும் நீங்கள் ஒரு குறைவும் இல்லாமல் இங்கே தங்கலாம்” என்று அன்புடன் சொன்னான். அமைச்சரிடமும் பிற அதிகாரிகளிடமும் அவர்களைத் தக்கவண்ணம் உபசரிக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான். அவன் மீண்டு வருவதற்கு ஒரு வாரமாகி விட்டது.
பாணன் நள்ளியின் அரண்மனையில் தங்கியிருந்தான். ஒவ்வொரு வேளையும் விருந்துதான். புதிய ஆடைகளை அவனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் அரண்மனை அதிகாரிகள் அளித்தார்கள். அவற்றை அணிந்து மனம் விரும்பிய மட்டும் இனிய உணவை உண்டு ஒரு நாளைக்கு ஒரு நாள் உடம்பு பொலிவு பெற, அவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள்.
நள்ளி வந்தான். ”உங்களை இங்கு இருப்பவர்கள் சரியாகக் கவனித்துக் கொண்டார்களா?” என்று கேட்டான்.
“எங்கள் வாழ்நாளில் பெறாத உபசாரங்களை இங்கே ஒரு வாரமாகப் பெற்று வாழ்கிறோம். முன்பு எங்களைப் பார்த்தவர்கள் இப்போது எங்களைப் பார்த்தால் அடையாளமே கண்டுபிடிக்க மாட்டார்கள்” என்றான் பாணன்.
“உங்கள் பெருந்தன்மையால் நீங்கள் அப்படித் தான் சொல்வீர்கள். நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் உங்களை வரவேற்று உபசரிப்பார்கள். பேரரசர்களிடம் உபசாரங்களைப் பெற்றிருப்பீர்கள். அந்த உபசாரங்களை விடவா இங்கே சிறப்பாக நடக்க முடியும்?” என்று நள்ளி கூறினான்.
“உங்கள் யாழிசையை அமைதியாக இருந்து நெடு நேரம் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்குரிய வேளை வரவேண்டும். இங்கே என்னை நாடிச் சில அன்பர்கள் வருகிறார்கள். மிகவும் அவசியமான சில ஆலோசனைகள் நடத்த வேண்டும். அதனால் ஊருக்கு வந்தும் உங்கள் இசை உடனே கேட்கமுடியவில்லை. கேட்டோம் என்று பெயர் பண்ணுவதற்காகச் சிறிது நேரம் கேட்டு விட்டுப் போவது எனக்கு விருப்பம் அன்று.
“வேறு அவசியமான வேலை உங்களுக்கு ஒன்றும் இராதென்று எண்ணுகிறேன். இங்கே தங்குவதிலும் உங்களுக்குத் தடை இருக்க நியாயமில்லை. உபசார வகையில் ஏதேனும் குறையிருந்தாலும் பொருட்படுத்தாமல் இங்கே இன்னும் சில நாட்களேனும் தங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்றும் சொன்னான்.
“தங்களுடைய திருவுள்ளப்படியே தங்களுக்கு எப்போது எங்கள் இசையைக் கேட்க முடியுமோ அப்போது கேட்கலாம். எங்களுக்கு இங்கே கிடைக்கும் உபசாரம் ‘இது தான் சொர்க்க போகமோ’ என்று நினைக்கும் படியாக இருக்கிறது. இவ்வளவு நாட்களாக இங்கே வராமற் போனோமே என்று ஒவ்வொரு கணமும் நினைக்கிறோம்” என்று பாணன் விடை பகர்ந்தான்.
மேலும் ஒரு வாரம் பாணனுடைய பாட்டைக் கேட்கும் செவ்வி நள்ளிக்குக் கிடைக்கவில்லை. பாட்டைக் கேட்க வேண்டுமென்ற ஆசை நாளுக்கு நாள் அவனுக்கு மிகுந்து வந்தது. கடைசியில் ஒரு நாள் மாலை பாணனும் அவனைச் சார்ந்தவர்களும் தங்கள் யாழை வாசித்தும் பாடியும் காட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. வேறு ஊர்களிலிருந்து நள்ளியைக் காண்பதற்குச் சிலர் வந்திருந்தார்கள். புலவர்கள் சிலரும் வந்தார்கள். வன்பரணர் என்ற புலவர் பெருமானும் வந்திருந்தார். இத்தனை பேரும் இருக்கும் போது பாணனைப் பாடச் சொன்னால், அந்த இசையை யாவரும் அநுபவிக்கலாம், பாணனுக்கும் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என்ற எண்ணத்தால் அன்று இசையரங்கு நிகழும்படி திட்டம் செய்தான்.
வந்திருந்த பாணன் நள்ளியின் முன் இது காறும் யாழை வாசிக்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் தனியே இருந்து யாழை வாசித்துக் கொண்டிருந்தான். இசையில் வல்லவர்கள் நாள் தவறாமல் இசைப் பயிற்சியை விடாமல் செய்து வந்தால் தான் இசைத் திறமை அவர்களிடம் நிலைத்து நிற்கும். அன்று காலை பாணன் நெடுநேரம் யாழை வாசித்துக் கொண்டிருந்தான். கலைஞர்கள் தம் கலையினால் விளையும் இன்பத்தில் தாமே ஆழ்ந்து தம்மை மறந்து விடுவார்கள். இந்தப் பாணன் அன்று காலையில் யாழை வாசித்தான். ஒவ்வொரு நேரத்துக்கும் இன்ன இன்ன பண் உரியதென்ற வரையறை உண்டு, காலைநேரத்துக்கு உரியது மிருதப் பண். மாலை நேரத்தில் பாடுவதற்குரியது செவ்வழிப் பண். பாணன் மருதப் பண்ணை மிக விரிவாகப் பாடினான். அவன் இந்த உலகத்தையே மறந்து மருதப்பண்ணின் இசைக் கூறுகள் அலையலையாகப் பரவிமோத அந்தக் கடலில் வேறு ஒன்றையும் காணாத நிலையில் ஈடுபட்டிருந்தான். யாழ் வாசிப்பதை நிறுத்தின பிறகும் மருதப்பண் அவன் காதிலும் கருத்திலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனுடைய ஆரோகண அவரோகண கதியிலே அவன் இன்னும் மூழ்கியிருந்தான்.
மாலையில் நள்ளி தன் அவைக்களத்தில் வீற்றிருந்தான். அவனுக்கு அருகில் வன்பரணர் அமர்ந்திருந்தார். இருபக்கங்களிலும் வேறு சில புலவர்களும் நண்பர்களும் அதிகாரிகளும் அயலூர்க்காரர்களும் இருந்தார்கள். எதிரே பாணனும் அவனைச் சார்ந்தாரும் தங்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் உட்கார்ந்திருந்தனர். பாணர்தலைவன் முன்னே அமர்ந்திருந்தான்.
இசையரங்கு தொடங்கியது. யாழுக்குச் சுருதி சேர்த்தார்கள். முதலில் பாணர் தலைவனே வாசிக்கத் தொடங்கினான். காலையில் மருதப்பண்ணிலே தோய்ந்து நின்ற அவன் உள்ளம் இன்னும் அந்த நிலையினின்றும் மாறாமலே இருந்தது. இப்போது மாலை; முறைப்படி செவ்வழிப் பண்ணை வாசிக்க வேண்டும். ஆனால் பாணன் உள்ளமும் காதும் இன்னும் மருதப்பண்ணிலே லயித்திருந்தன. ஆதலின் அவன் பாடத் தொடங்கிய போது அவனையே அறியாமல் அவன் விரல்கள் மருதப் பண்ணின் சுரங்களை எழுப்பின. எழுப்பின பிறகு அதன் இன்னிசை ஒலி மீட்டும் அவனைக் காலையிலே யாழ் வாசிக்கிறோம் என்ற பிரமையை உண்டாக்கியது; காலையில் வாசித்ததன் தொடர்ச்சியாக வாசிப்பதாகவே அவன் எண்ணிக் கொண்டு விட்டான். அப்படிச் சொல்வதை விட, இப்போது மாலை என்ற நினைப்பே அவன் உள்ளத்திலே தோன்றவில்லை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
ஆரம்பத்தில், ‘மாலைநேரத்தில் இவர் மருதப் பண்ணைப் பாடுகிறாரே’ என்று இசையிலக்கணம் தெரிந்தவர்கள் மயங்கினார்கள். நள்ளியும் அப்படியே எண்ணினான். சிறிது நேரம் கழித்து யாவரும் அந்தப் பண்ணின் இனிமையில் ஆழ்ந்து போனார்கள்.
பாணன் வாசித்துக் கொண்டே போனான். அவனுடைய மருதப்பண் இசையிலே காலை நேரத்தின் அமைதி பரவியது
தாமரை மலர் மலரும்போது வண்டுகள் மெல்லென்ற ஒலியோடு அதில் புகுவது போன்ற நினைப்பு உண்டாயிற்று. எங்கும் புது விழிப்பும் கலகலப்பும் முளைவிடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. கீழ் ஸ்தாயியிலிருந்து மெல்ல மெல்ல மேலே ஏறினான். கூட்டில் இருந்த பறவை ஜிவ்வென்று மேலே போகிற மாதிரி இருந்தது. ஆடாமல் அசையாமல் பாணன் பாடினான். அனைவரும் கேட்டார்கள். பாட்டு ஒரு வகையாக முடிவு பெற்றது. மருதப்பண்ணென்னும் இசைக்கடலின் மறுகரை இன்னும் தெரியவில்லை. சிறிது நேரம் கேட்பவர்களுடைய மனம் மருதப்பண்ணோடே சஞ்சாரம் பண்ணிக் கொண்டிருந்தது. இனி அடுத்த பாட்டு ஆரம்பமாக வேண்டும்.
அதற்குள் நள்ளி மருதப் பண்ணிலே ஆழ்ந்து கிடந்த மயக்கத்திலிருந்து விழித்து எழுந்தான். “அருமையிலும் அருமை! மருதப் பண் காலை நேரத்தையே இப்போது இங்கே கொண்டு வந்து விட்டது. பாணனார் இது மாலை என்பதை மறந்து மருதத்தை வாசித்தார். நாமும் மாலையை மறந்து காலை என்ற உணர்ச்சியோடு இந்தப் பண்ணைக் கேட்டு இன்புற்றோம். இதுவரையிலும் பலர் பாடி இந்தப் பண்ணைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தனிச் சிறப்புடையதாக இருந்தது” என்று பாராட்டினான். அந்தப் பாராட்டினூடே, அவனுக்கு இசையைப் பற்றிய செய்திகளும் தெரியும் என்பதைக் காட்டிக் கொண்டான்.
அவன் பேசியபொழுது அவன் கூறிய பாராட்டுரைகளைக் கேட்டு மகிழவில்லை பாணன்.
“காலை நேரத்தில் பாடவேண்டிய பண்ணை இப்போது பாட லாமா?” என்று சுட்டிக் காட்டுவது போலவே தோன்றியது. தன்னுடைய பிழையை அப்பொழுது தான் உணர்ந்தான். முறைப்படி மாலைக்குரிய செவ் வழிப் பண்ணைப் பாடியிருக்க வேண்டும். காலையிலே பாடிய மருதப் பண் அவனை ஆட்கொண்டு முழுக்கி விட்டது. அதனால் இவ்வளவு பெரிய பிழையைச் செய்து விட்டான்.
நள்ளியின் பேச்சு, பாணனுக்கு உண்மையை உணர்த்தியது. அவன் முகம் வாடியது; உடம்பு வேர்த்தது. நள்ளி குறை கூறும் முறையில் ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும் அவன் மருதம் காலைப் பண் என்பதை உணர்ந்து பேசினான். சிறந்த புலமையும் மானமும் உடைய பாணனுக்கு அந்தக் குறிப்பே போதுமானதாக இருந்தது.
பாணன் சித்திரப் பொம்மைபோல இருந்தான். அவனுடைய மனம் ஏதோ பெரிய பிழையைச் செய்துவிட்டது போலத் துன்புற்றது. அவன் அகத்திலே தோன்றிய வேதனை முகத்திலே தெரிந்தது.
புலவர் வன்பரணர் அவன் முகத்தைக் கவனித்தார். நள்ளியின் பேச்சினால் தான் செய்த பிழையை உணர்ந்து செயலற்ற நிலையில் அவன் இருப்பதை உணர்ந்தார். கலைஞன் தவறு செய்தால் அதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதைத் தெரிந்து கொள்ள இப்போது முடிய வில்லை. என்ன காரணம் என்ற ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருப்பது இப்போதுள்ள நிலையைப் பின்னும் நயமற்றதாக்கி விடும். ஆகவே இந்தக் குழப்பமான நிலையை மாற்றவேண்டும் என்று எண்ணினார் வன்பரணர்.
“வள்ளற் பெருமானே!” என்று வன்பரணர் பேசத் தொடங்கினார். எல்லோர் முகங்களும் அவரை நோக்கித் திரும்பின.
“பாணர் தலைவர் இப்போது மருதம் வாசித்ததற்கு ஏதாவது தக்க காரணம் இருக்கும். ஆனாலும் காலமல்லாத காலத்தில் இந்தப் பண்ணை வாசித்தது. அவருடைய புலமைக் குறையென்று தோற்ற வில்லை. அதற்கு மூலகாரணம் தங்களுடைய வள்ளன்மைதான்” என்றார் புலவர்.
புலவர் என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோரும் கூர்ந்து கவனித்தனர்.
“கலைஞர்களைப் போற்றிப் பாராட்டி உணவூட்டி ஊக்கமளிப்பதே தங்களுடைய வாழ்க்கையின் முதற் கடமையாகக் கொண்டிருக்கிறீர்கள். நாங்க ளெல்லாம் வறுமையோடு உறவாடுகிறவர்கள். நாலு பேரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணுவோம். சும்மா பார்க்கலாமா? கற்ற வித்தையைக் காட்டிப் பரிசு பெறவேண்டும். ஆதலால் எப்போதும் மேலும் மேலும் பயிற்சி செய்துகொண்டே இருப்போம்.”
புலவர் என்ன சமாதானம் சொல்லப் போகிறார் என்று இன்னும் ஒருவருக்கும் புலப்படவில்லை. அவர்களுடைய ஆவல் அதிகமாகிக் கொண்டே வந்தது.
இங்கே நாங்கள் வந்துவிட்டால் வேளைக்கு வேளை உணவு. அதைச் சாப்பிட்டால் உடனே இளைப்பாற வேண்டியிருக்கிறது.
இளைப்பாறி எழுந்தால் மறுபடியும் ஏதாவது சிற்றுண்டி வந்துவிடுகிறது. இப்படி விருந்துண்பதும் இளைப்பாறுவதுமாக இங்கே நாட்களைக் கழித்தால் நாங்கள் கற்ற வித்தையும் இளைப்பாறப் போய் விடுகிறது. யாழ் வாசித்துக் கொண்டே இருக்கும் எங்களவர்களைத் தாங்கள் விருந்து போட்டுச் சும்மா தூங்கப் பண்ணுகிறீர்கள். தங்களுடைய வள்ளன்மை இன்ப மயக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் என்றைக்காவது யாழை எடுத்து வாசித்தால் நேரமே தெரிவதில்லை; இன்ன நேரத்துக்கு இன்ன பண் என்ற முறையும் மறந்து போகிறது. மாலைக் காலத்தில் மருதம் வாசிக்கிறோம்; காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணை இசைக்கிறோம். இவ்வளவுக்கும் காரணம் தாங்கள் எங்களுக்குச் செய்யும் உபசாரந்தான். இது தவறாக இருந்தால், அதற்குக் காரணமாகிய தங்கள் வள்ளன்மையும் தவறாக முடியும்.”
புலவர் சொல்லி முடித்தவுடன் எல்லோரும் மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தார்கள். நள்ளியின் வள்ளன்மையைப் புகழ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு, அப்போது அங்கே இருந்த, களை இழந்த நிலையை அவர் மாற்றினாரே என்று தமக்குள் வியந்தார்கள்.
” நான் தவறென்று சொல்லவில்லையே! காலைப் பண்ணை இப்போது பாடினாரென்பதைப் பின்னாலேதான் உணர முடிந்தது. பாட்டு முடிகிற வரையில் நம்மையே மறந்து கேட்டோமே” என்று நள்ளி புலவரை நோக்கிச் சொன்னான்.
பாணனுக்குச் சற்றே உணர்வு வந்தது. குனிந்த தலை நிமிர்ந்தது. அந்தச் சமயம் பார்த்து, “இப்போது பாணனார் மாலைக்குரிய பண்ணைப் பாடப் போகிறார். மாலைப் பொழுதும் மாலைப் பண்ணும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து இன்புறலாம்” என்று நள்ளி நயமாகச் சொன்னான்.
பாணன் புது முறுக்குடன் யாழை மீட்டிச் செவ்வழிப் பண்ணை இசைக்கத் தொடங்கினான்.
புலவர் நள்ளியிடம் சொன்னதை அவர் பாட் டாகவே பிறகு இயற்றிச் சொன்னார். அந்தப் பாட்டு வருமாறு:
நள்ளி வாழியோ நள்ளி ! நன்னென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவுளமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே.
இதன் பொருள்: நள்ளியே, நீ வாழ்வாயாக! செறிந்த மாலையில் மருதப் பண்ணை வாசித்துக் காலையில் யாழில் செவ்வழிப் பண்ணை இசைத்து எம்மைச் சார்ந்தவர்கள் வரலாற்று முறையை மறந்துவிட்டார்கள்; அது நீ அவர்களை உபசரித்து விருந்துண்ணச் செய்து பாதுகாக்கும் கடமையை மேற்கொண்ட வள்ளன்மையால் வந்த விளைவு.
(கைவழி -யாழ். பண்ணி-பாடி. மரபு. வரவு – வரன்முறை; புரவு-காப்பாற்றுதல். வண்மை – கொடைத்தன்மை.)



