
தமிழின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன்
வாழைப் பாட்டு
கும்பகோணத்துக்குத் திருக்குடந்தை என்ற பெயர் உண்டு; அது தமிழ்ப் பெயர். அந்த ஊருக்கு ஒரு முறை தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார் வந்தார். ஔவையாரைக் கலைமகளின் அவதாரம் என்று தமிழ் நாட்டினர் எண்ணி மதித்துப் பாராட்டி வந்தனர். அவரை எதிர் கொண்டு அழைத்துச் சென்று வேண்டிய உபசாரங்கள் செய்வதைப் பெரிய பாக்கியமாக யாவரும் நினைத்தனர்.
ஒளவையார் எங்கேயாவது போனால் அவரைத் தனியே செல்லும்படி யார் விடுவார்கள்? எப்போதும் அவருடனே தமிழ்ப் புலவர்களும் தமிழ் மாணாக்கர்களும் தமிழ்ச்சுவை தேர்ந்து இன்புறுகிறவர்களும் இருப்பார்கள். ஒளவையார் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் அவருடைய கல்வித் திறமையைக் காட்டும் என்ற நினைவால் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவருடைய நல்லுரையை வருவிக்கச் சிலர் விரும்புவார்கள். அவர் உள்ளம் கனிந்து ஏதேனும் கவிபாடும் போது அதைக் கேட்டு இன்புற வேண்டும் என்ற ஆர்வத்தோடு சிலர் அவரைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். திருக்குடந்தை அப்போதும் பெரிய நகரமாக இருந்தது. ஆதலால் அந்தநகரத்துக்கு ஔவையார் வந்த போது ஒரு சிறிய கூட்டம் எப்போதும் அவருடனே இருந்து வந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.
பல அன்பர்கள் ஔவையாரைத் தம்முடைய இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். யார் அன்போடு அழைத்தாலும் செல்லும் இயல்பையுடைய தமிழ் மூதாட்டியார் அவர்கள் செய்த உபசாரங்களை ஏற்று மகிழ்ந்தார். இவ்வாறு அவரை அழைத்து விருந்து வழங்கிக் கொண்டாடியவர்களில் மருத்தனார் என்பவர் ஒருவர். அவர் விருந்தினருக்கு உணவளித்து உபசரிப்பதில் வல்லவர். இல்லறத்தின் பயன் விருந்தினர்களுக்கு உணவு அருத்துவதே என்ற நோக்கமுடையவர். பெரிய செல்வராக இரா விட்டாலும் தமக்கு இருந்த ஓரளவு பொருளைக் கொண்டு பசித்தவர்களுக்கு உணவு அளித்து அதனால் வரும் உவகையைப் பெரிதென எண்ணி வாழ்ந்து வந்தார்.
ஒளவையார் மருத்தனார் வீட்டுக்குப் போனார். அந்த உபகாரி தெய்வத்தையே நேரில் கண்டவர் போல உடம்பு பூரிக்க ஆனந்தக் கண்ணீர் பெருக அப்பிராட்டியாரை வரவேற்றார். அவருடன் வந்த வர்களையும் அன்புமொழிகள் கூறி உபசரித்தார். அன்று ஒளவையாரும் அவருடன் வந்த அன்பர்களும் அங்கே விருந்துண்டார்கள்.
உணவு கொண்ட பிறகு சிறிது நேரம் ஒளவையார் அங்கே தங்கியிருந்தார். மருத்தனார் தம் வீட்டுப் புழைக் கடையில் வாழைத் தோட்டம் போட்டிருந்தார். ஒளவையார் அங்கே சென்று பார்த்தார். வாழை மரங்கள் பல, இலைகளே இல்லாமல் இருந்தன. பலவற்றில் தாறுகளை வெட்டியிருந்தனர்..
உடன் இருந்த அன்பர்கள் சிலர் மருத்தனாருடைய அன்னதானத்தைப் பாராட்டினர். “இந்த வாழைத் தோட்டந்தான் இவருக்குக் கற்பகக் காடாக உதவுகிறது. எந்தச் சமயத்தில் யார் வந்தாலும் இலையோ பூவோ காயோ இதிலிருந்து பறித்து வந்தவரை உபசரிக்கிறார். அதனால்தான் பல மரங்கள் மொட்டையாக இருக்கின்றன” என்று ஒருவர் சொன்னார். வாழைத் தோட்டத்தின் காட்சி அவர் கூறியதை மெய்ப்பித்தது.
சிறிதுநேரம் மருத்தனார் வீட்டில் இருந்து விட்டு ஒளவையார் விடை பெற்றுப் புறப்பட்டார். மருத்தனார் வாழ்ந்த தெருவுக்கு அடுத்த தெருவில் திருத்தங்கி என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரும் மருத்தனாரும் உறவினர்கள். ஆனால் இயல்பில் இரண்டு பேரும் நேர் விரோதமானவர்கள். திருத்தங்கி என்ற பெயரே அவருக்கு ஊர்க்காரர்கள் வைத்தது. அவருடைய தாய் தகப்பனார் வைத்த பெயர் இன்ன தென்பதே யாவருக்கும் மறந்து போய்விட்டது. யாருக்கும் இம்மியளவும் ஈயாத லோபியாக அவர் இருந்தார். அதனால் அவரிடம் செல்வம் தங்கியிருந் தது. அது பற்றியே திருத்தங்கி என்ற பெயரை மற்றவர்கள் அவர்களுக்கு இட்டு வழங்கினார்கள். அந்தப் பெயர் குறிப்பாகத் தம் லோபத்தன்மையைக் காட்டுகிற தென்பதை அவர் சிறிதும் எண்ணவில்லை. தம்மிடத்தில் எப்போதும் திருமகள் விலாசம் இருப்பதாக மக்கள் பாராட்டுகிறார்கள் என்றே எண்ணிக் கொண்டார். அறிவாளிகள், லோபி, கஞ்சன், அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்காதவன் என்றா வைவார்கள்? நயமாகத் திருத்தங்கி என்று வையாமல் வைதார்கள். அந்த நுட்பம் திருத்தங்கியாருக்குத் தெரியவில்லை.
தம்முடைய உறவினராகிய மருத்தனாரைக் கண் டால் அவருக்குப் பிடிக்காது. “பணத்தின் அருமை தெரியாமல் ஊராருக் கெல்லாம் பொங்கிக் கொட்டுகிறான்” என்று சொல்லி ஏளனம் செய்வார். ஆனால் மக்கள் மருத்தனாரைப் பாராட்டுவதைக் கேட்கும் போது மாத்திரம் அவருக்குப் பொறாமை உண் டாகும்.
திருத்தங்கியும் தம் வீட்டுக்குப் பின்புறத்தில் வாழைத் தோட்டம் போட்டிருந்தார். எப்படிப் பக் குவமாக அதற்கு நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்க்க வேண்டுமோ அப்படிச் செய்தார். அதில் ஒரு தூசியைக் கூடப் பிறருக்கு உதவுவதில்லை. மரங்கள் தளதள வென்று வளர்ந்து நீண்ட குலைகளைத் தாங்கி நிற்கின்றன. சிலவற்றைக் குலைகளிலே பழுக்கும்படி விடுவார். தக்க சமயம் அறிந்து அவற்றை வெட்டி விற்றுவிடுவார். ஒரு சீப்புப் பழத்தையாவது கடவுளுக்கு நிவேதனம் செய்து உண்ண மாட்டார். எல்லாவற்றையும் காசாக்க வேண்டும் என்பதே அவர் நோக்கம்.
அவருக்கும் ஔவையார் தம் ஊருக்கு வந்திருப்பது தெரிந்தது. மருத்தனார் வீட்டுக்குச் சென்றதையும் அங்கே விருந்துண்டதையும் கேள்வியுற்றார். “நாமும் அந்தப் பாட்டியை அழைத்து வரலாம்” என்று அவருக்கு ஓர் எண்ணம் உண்டாயிற்று. அந்த மூதாட்டியாருடன் பல பேர் வருவதைக் கேட்ட போது, அவ்வளவு பேரும் உணவுண்ண உட்கார்ந்தால் என்ன செய்வது என்ற அச்சம் எழுந்தது. ஆகவே, மருத்தனார் வீட்டில் உணவு கொண்டபிறகு அவரை வருவித்தால் அதற்கு அவசியம் இராது என்று நினைத்து, அப்படியே அந்தச் சமயத்தில் ஓர் ஆளை அனுப்பினார்.
வந்தவர் ஔவைப் பிராட்டியாரைத் திருத்தங்கியின் வீட்டுக்கு வர வேண்டு மென்று அழைத்தார். அப்போது உடனிருந்த சிலர், “அந்த லோபி வீட்டுக்கா!” என்று முணுமுணுத்தனர். அதை ஒளவையார் கவனித்தார். கூப்பிடுகிற இடத்துக்குப் போவதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது என்று அவர் வருவதாகச் சொல்லியனுப்பினார். மருத்தனாரிடம் விடை பெற்றுக் கொண்டவுடன் நேரே திருத்தங்கியின் வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்குள்ளே புகும்போது திருத்தங்கி எதிர்கொண்டு அழைத்தார். வீட்டைப் பார்த்தால் எங்கும் பளபள வென்று இருந்தது. கணத்துக்கு ஒரு முறை துடைத்து வைத்திருப்பார் என்று தோன்றியது. ஒளவையாரை ஓர் ஆசனத்தில் அமர வைத்தார் திருத்தங்கி, “உங்கள் வீடு புதுக்கருக்கு அழியாமல் இருக்கிறது” என்றார் ஔவையார்.
”ஆம், உழைத்து ஈட்டிய பொருளைக் கொண்டு வீடு கட்டுகிறோம். நாம் வாழ்வதற்காகக் கட்டுகிறோம். கண்ட பேரை இங்கே வரும்படி அழைத்து, அவர்கள் இதன் அருமை தெரியாமல் குப்பை போட ஆரம்பித்தால் வீடு எதற்காகும்? ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்று நீங்கள் அருளிய “திருவாக்கை நான் கடைப்பிடிக்கிறேன்” என்று திருத்தங்கி கூறினார்.
‘பிறருக்குக் கொடுக்காத லோபத்தனம் தம்மி டம் இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாரே இந்த மனிதர்!’ என்று கூட்டத்தில் இருந்த சிலர் நினைத்தனர்.
‘பாட்டியின் அமுதத் திருவாக்குக்கு லோபி தவறாக அல்லவா பொருள் கொண்டிருக்கிறான்? பொருள்தனைப் போற்றவேண்டும், போற்றி வாழவேண்டும். இவன் எங்கே வாழ்கிறான்?’ என்று சிலர் எண்ணினர்.
ஒளவையார் திருத்தங்கியின் பேச்சைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.
“நீங்கள் மருத்தன் வீட்டுக்குப் போனதாகச் சொன்னார்கள். வாழத் தெரியாத மனிதன் அவன். வீடு முழுவதும் எச்சிலுந் துப்புமாக இருக்கும். எப்போதும் சோம்பேறிகளுக்குச் சோறு போடுவதும் அவர்கள் படுத்துப் புரளுவதற்கு இடங் கொடுப்பதுமாக அவன் இருக்கிறான். வீட்டைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்களே! கண்ணால் காணச் சகிக்கிறதா? அவன் வீட்டு வாழைத் தோட்டத்தைப் பார்த்தீர்களா?”
“பார்த்தேன்.”
இங்கே நானும் வாழைத்தோட்டம் போட்டிருக்கிறேன். வாழையை எப்படி வளர்க்க வேண்டும் என்று அந்த முட்டாளுக்குத் தெரியாது. நான் கண்ணைப் போல் காத்து வருகிறேன். நீங்கள் வந்து பார்த்து எனக்கு ஆசிகூற வேண்டும்.” என்றார் திருத்தங்கி.
‘அதையும் பார்த்துவிடுவோம்’ என்று ஒளவையார் எழுந்தார். பின்புறத்துத் தோட்டத்துக்குத் தமிழ்ப் பாட்டியாரை அழைத்துச் சென்றார் லோபியர் சிகாமணி. தோட்டத்தை ஔவையாரும் பிறரும் பார்த்தார்கள். வாழை மரங்கள் நன்றாக வளர்ந்து குலை தள்ளிக் கண்ணைப் பறிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தன. மறுபடியும் கூடத்திலே வந்து அமர்ந்தார்கள்.
கூட்டத்திற் சிலர், “அட படுபாவி! இத்தனை வாழைப் பழங்கள் மரத்திலே பழுத்திருக்கும் போது இந்தப் பிராட்டியாருக்குச் சில பழங்களைக் கொண்டு வந்து கொடுக்க மனம் வரவில்லையே!” என்று தமக்குள் அந்தச் செல்வரை வைத்தனர்.
திருத்தங்கி ஔவையாரைப் பார்த்து மிகவும் பணிவோடு பேசத் தொடங்கினார். “இப்போது தாங்கள் பார்வையிட்ட வாழைத் தோட்டம் எவ்வளவு நன்றாக இருக்கிறது! ஏதோ நீங்கள் நல்ல மனசு வைத்து இங்கே எழுந்தருளி என் வாழைத் தோட்டத்தையும் பார்த்தீர்கள். இது என் பாக்கியம். தாங்கள் இங்கே வந்தீர்கள், என் தோட்டத்தைப் பார்த்தீர்கள் என்று நாளைக்கு நான் யாரிடமாவது சொன்னால் நம்பமாட்டார்கள். யாரையும் அழைப்பதில்லை; தோட்டத்தைக் காட்டுவதும் இல்லை. நீங்கள் இங்கே வந்ததற்கு ஓர் அடையாளம் வேண்டாமா? தங்கள் திருவாக்கால் அடியேனுக்கு ஆசிகூறி ஒரு பாட்டுப் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவர் முகத்தில் அசடு வழிந்தது.
‘ஆள் கெட்டிக்காரன் ஐயா! இவனுக்குப் பாட்டு வேறு வேண்டுமாம்!’ என்று சிலர் ஆத்திரப்பட்டனர்.
‘ஒளவையார் புன்னகை பூத்தவாறே, அப்படியா? பாட்டுத்தானே வேண்டும்? இதோ பாடு கிறேன்’ என்று சொல்லிப் பாட்டைச் சொல்ல ஆரம்பித்தார்.
உடன் இருந்தவர்களுக் கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. இது என்ன ! உண்மையாக இந்தத் தமிழ்ப் பெருமாட்டியார் இவனைப் பாடப்போகிறார்? என்று ஒருவரை ஒருவர் தம் பார்வையாலே கேட்டுக் கொண்டனர்.
ஒளவையார் உண்மையிலே ஒரு பாட்டைச் சொன்னார். அதில் அவருடைய சாதுரியம் நன்றாக விளங்கியது.
திருத்தங்கி வளர்க்கும் வாழையையும் மருத் தனார் வீட்டு வாழையையும் பற்றி அவர் பாடினார். எப்படிப் பாடினார்? அதுதான் ரசமான செய்தி.
‘இந்தத் திருத்தங்கியின் வாழை எங்கே? அந்த மருத்தனுடைய வாழை எங்கே? திருத்தங்கியின் வாழை வளர்ந்து பூத்துக் காய்த்துப் பழுத்துத் தேன் சொட்டச் சொட்ட நிற்கிறது. மருத்தனுடைய வாழையோ!- அதை என்னவென்று சொல்கிறது? வாழையாகவா தோற்றமளிக்கிறது? மரம் இருக்கிறதே ஒழிய, இலை இல்லை; பூவே இல்லை; காய் எங்கே இருக்கப் போகிறது? குருத்தைக் கூட அல்லவா மொட்டையாக்கி விட்டான்?’ இப்படி விரிவாக எண்ணும்படி பாட்டு வந்தது.
திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்.
என்று வெண்பா ஆரம்பமாயிற்று. அதைக் கேட்ட அந்த லோபி மனம் மகிழ்ந்தார். ‘பாட்டின் ஆரம்பத்திலேயே நம் புகழை வைத்துவிட்டார்’ என்று களித்தார். மேலே பாட்டு வளர்ந்தது.
மருத்தன் திருக்குடந்தை வாழை – குருத்தும்
இலையும் இலை பூவுமிலே காயுமிலை.
திருத்தங்கியின் காதில் இந்த அடிகள் விழுந்த போது அவருக்குப் பின்னும் ஆனந்தம் உண்டாயிற்று. ‘ஆகா! நன்றாகச் சொன்னார். அந்தப் பயலை அப்படித்தான் மட்டந் தட்டவேண்டும்’ என்று குதூகலித்தனர். உடன் இருந்தவர்கள் பாட்டு எப்படி முடியப்போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.
மருத்தன் திருக்குடந்தை வாழை – குருத்தும்
இலையும் இலை பூவும் இலை, காயும் இலை
என்றும் உலகில் வருவிருந்தோர் உண்டு.
உலகில் எங்கெங் கிருந்தோ மக்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் உண்டு உண்டு வாழை மரம் ஒரே மொட்டையாக இருக்கிறது. குருத்தைக் கூட அவசரத்துக்கு நறுக்கிப் போட்டு விடுகிறார் என்று பாட்டானது வாழை மரத்தைக் குறைத்துச் சொன்னாலும், மருத்தனாருடைய அன்னதானத்தை மறைமுகமாகச் சிறப்பித்துச் சொல்லியது. கேட்ட தமிழன்பர்கள் தமிழ் மூதாட்டியார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் திருத்தங்கியை இகழ்ந் திருப்பதை அறிந்து உள்ளே கிளுகிளுத்தார்கள்.
திருத்தங்கியோ, ”நல்ல பாட்டு? இந்த ஏழையையும் ஒரு பொருளாக எண்ணிப் பாடினீர்களே !” என்று சொல்லிக் கீழே விழுந்து வணங்கினான். அதற்குக் காசு பணம் செலவில்லை யல்லவா ?



