
வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
13. திருமோகூர்க் காளமேகர்
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்பர். பத்துக்கு மேலும் எடுத்த அவதாரங்கள் உண்டு. அதில் சிறப்பானது மோகின் அவதாரம். இந்த அவதாரத்தை இரண்டு தரம் எடுத்திருக்கிறார் அவர். ஒரு தடவை தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க மற்றொரு தடவை அமிர்தம் கடைய வந்த அசுரர்களை வஞ்சிக்க, இரண்டுமே சுவையான கதைகள் தாம். தாருகா வனத்து ரிஷிகள் கல்வி கேள்விகளில் வல்லவர்கள். வேதங்களை ஓதி ஓதி நிரம்ப அறிவைப் பெறுகிறார்கள். அவர்களது அறிவோடு வளர்கிறது ஆணவமும். தம்மைப் படைத்த தலைவனாம் இறைவனையே மறக்கிறார்கள். இறை உணர்வே இல்லாதவர்களாக வாழ்கிறார்கள் இவர்களது ஆணவத்தை அடக்கப் புறப்படுகிறார் இறைவன் பிக்ஷாடனக் கோலத்தில். இந்த அழகிய பிக்ஷாடனது கோலத்தைக் கண்ட ரிஷிபத்தினிகள் மயங்குகிறார்கள். நிறை அழிகிறார்கள். முனிவர்களது கர்வத்தை அடக்க இறைவன் தம் மைத்துனரான விஷ்ணுவையே அழைத்திருக்கிறார். அவரும் வருகிறார், நல்ல மோகினி வடிவிலே, இந்த மாய மோகினியை முனிவர்கள் பின் தொடருகிறார்கள். ஆணவம் அழிகிறது. அகந்தை ஒழிகிறது. இப்படி ஒரு வெற்றி இறைவனான சிவபெருமானுக்கு மோகினி வடிவில் வந்த தம் மைத்துனர் மூலமாக.
அடுத்த தடவை மோகினி வடிவம் எடுத்தது இதைவிடச் சுவையானது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து அருந்தினால் அமரர்கள் ஆகலாமெனத் தேவர்கள் நினைக்கிறார்கள், பாற்கடல் கடையத் தங்களால் மாத்திரம் இயலாதென்று, அசுரர்களையும் உடன் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அமுதத்தில் பங்கு கொடுக்க இசைந்திருக்கிறார்கள். சும்மாவே துன்புறுத்தும் அசுரர் அமிர்தத்தை வேறு சாப்பிட்டு விட்டார்கள் என்றால் கேட்பானேன்? ஆதலால் பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்த உடன் தேவர்கள் அசுரர்களுக்கு பங்கைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அசுரர்களோ விடுவதாக இல்லை. இந்த நிலையில் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட் டிருக்கிறார்கள். விஷ்ணு மோகனமான மோகினி வடிவத்தில் வந்திருக்கிறார். இருவருக்கும் அமுதத்தைத் தாமே பங்கிட்டுத் தருவதாகக் கூறியிருக்கிறார். அப்படியே அமுதத்தைப் பரிமாறவும் முனைந்திருக்கிறார். தேவர்கள் பக்கம் வரும் போதெல்லாம் தாராளமாய் வாரி வழங்கிவிட்டு, அசுரர்கள் பக்கம் போகும்போது ஆடிப் பாடி அவர்களை மயக்கியிருக்கிறாார் அமிர்தத்தைக் கொடாமலேயே. கடைசியில் அமிர்தம் காலியாகிவிடுகிறது ஒரு துளிகூட அசுரர்கள் பெறாமலேயே. இப்படி அசுரர்களை ஏமாந்த சோனாகிரிகளாக்க எடுத்திருக்கிறார் ஒரு தடவை மோகனாவதாரம். இந்த மோகனாவதாரம் எடுத்த தலம்தான் மோகனூர். அதுவே மோகூர் என்று குறுகியிருக்கிறது. அந்தத் திருமோகூருக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருமோகூர், மதுரைக்கு வடக்கே ஏழு எட்டு மைல் தொலைவில் இருக்கிறது. மதுரை-மேலூர் ரோட்டில் ஒத்தக் கடைவரை நல்ல சிமெண்ட் ரோட்டில் போய் அதன்பின் கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்றால் திருமோகூர் போய்ச்சேரலாம். கோயிலைச் சுற்றி நாலு புறமும் வயல்களும் தடாகங்களும். ‘தான் தாமரை தடம் அணிவயல் திருமோகூர்’ என்றுதானே நம்மாழ்வார் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்; கோயிலைச் சற்றி நீண்டுயர்ந்த மதில் அழகு செய்கிறது. கோயிலுக்கு வடக்கு மதிலுக்குப் பக்கத்திலே புஷ்கரணி அதில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். இதையெல்லாம் பார்த்துக் களித்த பின்னரே கோயிலுள் செல்லலாம்; கோயில் பெரிய கோயில், கிழக்கு வாயிலைத் தாண்டியதும் கம்பத்தடி மண்டபம், அங்குதான் இக்கோயிலைத் திருப்பணி செய்த சிவகெங்கைச் சீமை பாளையக்காரர்களான சின்ன மருது, பெரிய மருது இவர்களின் சிலைகள் இருக்கின்றன. பெரிய மருது கட்டிய கோபுரத்தைத்தான் காளையார் கோயிலில் பார்த்திருக்கிறோமே. அங்கேயே வடபுறம் க்ஷீராப்தி நாதர் சந்நிதி வேறே. அடுத்த வாயிலையும் கடந்து சென்றால் கருட மண்டபம் வந்து சேருவோம். அங்கு மூன்று நான்கு நல்ல சிலைவடிவங்கள் தூண்களில் இருக்கின்றன. சீதாப் பிராட்டியை அணைத்த வண்ணம் நிற்கும் ராமன் ஒரு தூணில், அதனை அடுத்து லக்ஷ்மணான் ஒரு தூணில், இவர்கள் தவிர மன்மதன் ரதி முதலியவர்கள் வடிவங்கள், இவர்களுக்கிடையில் ஒரு சிறு கோயிலில் பெரிய திருவடியான கருடாழ்வார் நிற்கிறார். இனி மகாமண்டபத்தைக் கடந்து அர்த்தமண்டபத்துக்குச் செல்லலாம். அங்கிருந்து பார்த்தால் காளமேகப் பெருமாள் என்னும் மூலவர், தேவியர் இருவரோடும் நின்றகோலத்தில் சேவை சாதிப்பார். கம்பீரமான வடிவம். இந்தக் காளமேகப் பெருமானையே கவி காளமேகம்,
பொன்னனைய அரக்கன் ஐந்நூற்றுவரைக்காவை, பொரு சிலையைக்கனைகடலைப் பொன்னன் ஈன்றநன்மகற்காப் கரர்களில்ஐவருக்காய், காதல் நப்பின்னைக்காய்நடவைக்காகமன்னுகிரால் வடிக்கலையால்வளையால், புள்ளால் வயங்குதோன்வலியால் வானரங்களாலும்முன்னுடல் கீறிச் சிரங்கொண்டுஅம்பில் வீழ்த்தி முதலொடும் கொண்டுஇருத்தசைத்த மோகூரானே
என்று அவன் பிரதாபங்களையெல்லாம் விரிவாகச் சாங்கோபாங்கமாகவே பாடியிருக்கிறார். இக்கோயிலிலேயே ‘இடங்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்’ என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்தபடி புஜங்க சயனராய்ப் பள்ளி கொண்டிருக்கும் கோலமும் இருக்கிறது. இத்தனையைக் கண்டாலும் நமக்கு, அந்த மோகினியான மோகன வடிவத்தையே காணும் ஆவல் மிஞ்சி நிற்கும். இந்த ஆவலைத் தீர்க்க அங்கு மூர்த்தியோ அல்லது சிற்ப வடிவமோ இல்லை. ஆனால் இந்த மோகன வடிவத்தைக் கண்டு தான் ஆகவேண்டும் என்றால் மாயூரம் பக்கத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுரர் கோயிலுக்கு ஒரு நடைகட்ட வேண்டியதுதான். அங்கு காம ரூபிணியாக இருக்கும் மோகினியைக் காணலாம். இங்கு தாயாருக்கு ஒரு சந்நிதி உண்டு. தாயாரின் திருநாமம் மோகனவல்லி. இந்த மோகனவல்லி அந்த மோகன வண்ணனுடன் போட்டிபோடக்கூடிய அழகு வாய்ந்தவளாக இல்லை. இக்கோயில் கருவறையின் மீது உள்ள விமானமும் கேதகி விமானம் என்னும் சிறப்பான விமானம். கோயிலுக்கு வெளியே பெரிய பாறையில் பன்னிரண்டு திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வார் செதுக்கப்பட்டிருக்கிறார். பெரிய சக்கரமும் அதன் நடுவில் சுதர்சன ஆழ்வாரும் உருவாகியிருக்கிறார்கள், சக்கரத்தாழ்வார் விரைவாகச் செல்லும் பாணியில் இருக்கிறார். இத்தலம் புராணப் பிரசித்தி மாத்திரம் உடைய தலம் அல்ல, மதுரைக் காஞ்சி என்ற பழைய சங்க இலக்கியம், மோகூர் அவையகம் விளங்கக் கோசர் வந்து பழையனுக்கு உதவி செய்ததைக் குறிக்கிறது. மௌரியர், வடுகரை முன்னேறவிட்டுத் தென்திசை மேல் படையெடுத்து வந்தபோது மோகூர் அவர்களுக்குப் பணியாமல் நின்றிருக்கிறது. மோகூருக்குத் துணையாகக் கோசர் ஆலம்பலத்தில் தோன்றிப் பகைவரைச் சிதைத்தனர் என்றும் கூறும். மோகூர்ப் பழையனைச் செயகுட்டுவன் வென்று அவன் காவல் மரமாகிய வேம்பைத் தடிந்தான் என்று பதிற்றுப் பத்து கூறும். இதனால் மௌரியர் காலத்துக்கு முன்னமேயே போகர் பழம் பெருமையுடன் சிறப்புற்றிருந்தது என்பது தெளிவாகும். கிரேக்க வானசாஸ்திரியான டாலமி, மோகூரைப் பற்றித்தம் பூகோளப் படத்தில் குறித்திருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேனே்? இக் கோயிலிலே இடைக்காலக் கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன. தென் பறம்பு நாட்டின் ஒரு பகுதியான மோகூர் விளங்கியிருக்கிறது. பறம்பு நாடு பாரியின் நாடு, மோகூரின் பழையன் என்பவனது பலத்த கோட்டை இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் இக்கோயில் கோட்டையாக உதவியிருக்கிறது. கோயில் குடி, திரும்பூர் என்றெல்லாம் வழங்கியிருக்கிறது. கர்நாடக யுத்தத்தின்போது முகமது அலிஹீரன் மோகூர் ஆலயத்தை முற்றுகையிட்டு ஆலயத்துள் புகுந்த பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்திருக்கிறான். கோயில் ஸ்தானீகர்களாக கள்ளர் குலமக்கள் ஹீரானின் படைகளை விரட்டி அவர்கள் கைப்பற்றிய பொருள், விக்கிரகங்களையெல்லாம் மீட்டிருக்கின்றனர். இவ்வளவு சரித்திரப் பிரசித்தியுடனும் விளங்குவது இக்கோயில்.
14. அழகர் கோயில் அழகன்
கோவையில் ஒரு பட்டி மண்டபம். “அழகை ஆராதணை பண்ணியவள் ஆண்டாள்; அறிவை ஆராதனை பண்ணியவர் மாணிக்கவாசகர். இருவரது ஆராதனையில் எவரது ஆராதனை சிறந்தது?” என்பது விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள், ஆண்டாள் பாசுரங்களையும், மாணிக்கவசாகரது திருவாசகப் பாடல்களையும் அலசி ஆராய்ந்து விவாதித்தனர், விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். பட்டி மண்டபத்தின் தலைமையை ஏற்றிருந்த நான் விவாதத்தில் தீர்ப்புக்கூறி முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது. அந்த வேலை எவ்வளவு சிரமமானது என்பதை அப்போது உணர்ந்தேன். நான் சொன்னேன், “அழகு சிறந்ததா? அறிவு சிறந்ததா? என்பது விவாதம் அல்ல. ஆராதனைக்கு உரியவைகளில் அறிவு சிறந்ததா, அழகு சிறந்ததா? என்பதுதான். அறிவுடைமை அழகுடைமையை விடச் சிறந்ததுதான். என்றாலும் அறிவு இறைவன் தன்மைகள் என்ன என்று விவகரித்து அதில் தெளிவு காண உதவுமே அன்றி ஆராதனைக்கு உரிய ஒன்றாக அமைதல் இயலாது. ஆனால் ஆராதனைக்கு உரியதாக இறைவனது அழகுதான் உதவுதல் கூடும்” என்று பீடிகை போட்டு, ஆண்டாள் தன் காதலனது அழகை எப்படி எப்படி அனுபவித்து ஆராதனை பண்ணுகிறாள் என்று பல பாசுரங்களை மேற்கோளாகக் காட்டினேன். திருவரங்கத்து அழகனைக் கண்ட காதலித்து நிற்கும் அவள் நிலையை விளக்கும் பாடல் இதுதான், தன் தோழியைப் பார்த்துப் பேசுகிறாள் ஆண்டாள்.
எழில் உடைய அம்மனையீர்!
என் அரங்கத்து இன்னமுதர்குழல் அழகர், வாய் அழகர்கண் அழகர், கொப்பூழில்எழுகமலப் பூ அழகர்எம்மானார் என்னுடையகழல் வளையைத் தாமும்கழல் வளையே ஆக்கினரே
என்று ஏங்குகிற பாடலில் ஆண்டாள் எப்படி அரங்கத்து அழகனின் குழல் அழகிலும், கண் அழகிலும், கொப்பூழ் அழகிலும் உள்ளம் பறிகொடத்து நின்றிருக்கிறாள் என்பதைப் பார்க்கிறோம். அன்று மிதிலை நகரில் உலா வந்த ராமனைக் கண்ட பெண்கள் எப்படி அவனது தோள், தடக்கை முதலிய அவயங்களைக் கண்டு மோகித்து, அங்க அவயவங்களில் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் திணறி நின்றார்கள் என்று கம்பன் வர்ணிக்கிறானோ, அதையும் மிஞ்சிய நிலையில் அழகனது அவயவங்கள் எல்லாவற்றையுமே ஆராதித்துக் காணும் பேறு பெற்றவள் ஆண்டாள். ஆதலால் அவளது அழகு ஆராதனையே சிறந்தது என்று கூறினேன் நான். இப்படித்தான் ஸ்ரீமந் நாராயணன் எல்லா ஆழ்வார்களாலும் ஆராதிக்கப்பட்டிருக்கிறான். ஆழ்வார்கள் கண்ட அழகர்களில் எல்லாம் சிறந்த அழகனாக இருப்பவனே திரு மாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயிலில் அழகன் என்ற பெயரோடு கோயில் கொன்டிருக்கிறான். அந்த அழகன் இருக்கும் அழகர் கோயிலுக்கே செல்கிறோம் இன்று.
அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைல் தொலையில் இருக்கிறது. இதனையே சோலைமலை என்றும் கூறுகின்றனர். சோலைமலை, திருமாலிருஞ்சோலை என்றெல்லாம் கூறினால் வண்டிக்காரர்களுக்கோ, பஸ்காரர்களுக்கோ தெரியாது. அழகர் கோயில் என்று சொன்னால் மாத்திரமே தெரியும்.
மதுரையிலிருந்து காரில் செல்லலாம். பஸ்ஸில் செல்லலாம். அப்படிச் சென்று சேர்ந்தால் முதலில் நம்மை ஒரு பெரிய சோலையிலே இறக்கி விடுவார்கள். சோலைக்கு மேற்கும் வடக்கும் நீண்டுயர்ந்த மலைச்சிகரம். ஆதலால் சோலைமலை என்று அந்தத்தலம் பெயர் பெற்றது பொருத்தம் என்றே தோன்றும். அத்துடன் அங்குள்ள சோலையும் மரங்கள் நிறைந்து நன்றாக இருண்டே இருக்கும். அதனால் அதனைத் திருமாலிருஞ்சோலை என்று பாராட்டுவதும் பொருத்தம்தான். இந்தச் சோலையின் நடுவிலேதான் கோயில், கோயிலின் பிரதான வாயில் எப்போதும் அடைத்தே வைக்கப்பட்டிருக்கும். அங்குதான் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்பன் இருக்கிறார். இந்தக் கருப்பண்னசாமிக்கு இங்கு உருவம் இல்லை. பதினெட்டாம் படிக்கருப்பன் முன்பு சத்தியம் செய்வது என்பது இன்னும் நடக்கிறது. அவனுடைய சந்நிதி முன்பு யாரும் பொய் சொல்லத் துணியமாட்டார்கள். இவனுடைய காவலின் கீழ்தான் அழகர் கோயில் அழகன் வாழ்கிறான்.
தினந்தோறும் கோயிலில் உள்ள பண்டாரத்தைப் பூட்டி, சாவியை இந்தப் பதினெட்டாம்படிக் கருப்பனிடம் கொண்டு வைத்து விடுவார்கள். மறுநாள் காலை வரும் பட்டர், சாவி எடுத்துக்கொண்டு செல்வார். இன்னும் அழகர், மதுரைக்கு, மீனாக்ஷி கல்யாணத்துக்காகப் புறப்படும்போது அவர் அணிந்துள்ள நகைளின் ஜாபிதாவை இக்காவல் தெய்வத்தின் முன்பு படித்துக் காட்டுவார்கள். அழகர் திரும்பும்போது, ஜாபிதா கருப்பண்ணர் முன் படித்துக் காட்டப்படும். இத்தனை அக்கறையுடன் கோயிலையும் கோயில் சொத்துக்களையும் பராமரிக்கும் தெய்வமாக இவர் விளங்குகிறார்.
கோயிலுள் செல்ல பதினெட்டாம்படி வாசலுக்கு வடபுறம் உள்ள மதிலின் ஒரு சுவர் திறந்திருக்கும். அதுதான் வண்டி வாசல். அந்த வாசல் வழியே நுழைந்து – கோயிலின் வெளிப்பிராகாரத்தை அடையலாம். அங்கு கோயில் முன்பு இருக்கும் பிரதான மண்டபமே கல்யாண மண்டபம். இங்குதான் நல்ல சிற்ப வடிவங்களை உடைய தூண்கள் இருக்கின்றன. இரணியன் உடல் கிழிக்கும் நரசிம்மர், வேணுகோபாலன், ரதி மன்மதன், கருடவாகன விஷ்ணு, திரிவிக்ரமர், லக்ஷ்மிவராகர் எல்லாம் நல்ல அழகான கற்சிலைகள். இவைகளைக் காண்பதற்கென்றே ஒரு நடை இக்கோயிலுக்குப் போகலாம்.
இனித்தான் கோயிலின் பிரதான வாயிலான தொண்டைமான் கோபுர வாசலைக் கடந்து உள் பிராகாரங்களுக்குச் செல்லவேணும். கோயில் மிகப் பெரிய கோயில். இரண்டு மூன்று பிராகாரங்களைக் கடந்து தான் கருவறை சேரவேண்டும். வழியில் இருப்பவை, சுந்தரபாண்டியன் மண்டபம், ஆரியன் மண்டபம், முனையதரையன் மண்டபம் முதலியன, கோயிலின் கருவறையில் மூலவராக நிற்பவர் ஸ்ரீ பரமசாமி. இவர் ஐம்படை தாங்கியவராய்க் கம்பீரமாக நிற்கிறார். ஸ்ரீதேவியும் பூதேவியும், இருபுறம் நிற்கிறார்கள். இவர் கையிலுள்ள சக்கரம் பிரயோக சக்கரம். இவர் முன்பு எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியே அழகர் என்னும் சுந்தரராஜர். ஏற்றிருக்கும் பெயருக்கு ஏற்ப மிகவும் சுந்தரமான வடிவம். அபரஞ்சித தங்கத்தால் ஆனவர்.
இவருக்கு அபிஷேகம் எல்லாம் நூபுர கங்கைத் தீர்த்தத்தால் தான். மற்ற நீரால் அபிஷேகம் செய்தால் அறுத்து விடுகிறாராம். இவரே சோலைமலைக்கரசர். இந்த உற்சவரைத் தவிர வேறு சில உற்சவ மூர்த்திகளும் உண்டு. அவர்கள் எல்லாம் ஸ்ரீ சுந்தரபாஹு, ஸ்ரீநிவாசர், நித்யோத்ஸவர் முதலியோர். இவர்கள் எல்லாம் வெள்ளியில் செய்யப்பட்டவர்கள். இந்தக் கருவறையை அடுத்த பிராகாரத்திலேயே வலம்புரி விநாயகர் இருக்கிறார். இந்தப் பிராகாரத்திலேயே சேனை முதலியார், விஷ்வக் சேனர் இருக்கிறார்கள், இங்குள்ள பைரவர் க்ஷேத்திர பாலகர் என்று அழைக்கப்படுகிறார், இவர் நிரம்பவும் வரப்பிரசித்தி உடையவர். கோயிலின் அர்த்த சாய பூசை முடிந்ததும் கோயில் கதவை பூட்டிச் சாவியை இந்த க்ஷேத்திர பாலகர் முன் வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் எடுத்துக் கோயிலைத் திறப்பார்கள்.
இக்கோயிலின் தாயார் சந்நிதி தென்பக்கம் இருக்கிறது. இவளே கல்யாண சுந்தரவல்லி. தனிக்கோயில் தாயார் என்றும் அழைப்பார்கள் மக்கள். கல்யாண சுந்தரவல்லி என்ற பெயர்க்கேற்ப அதிக சௌந்தர்யத்துடனேயே விளங்குகிறார். கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி. உற்சவமூர்த்தியான ஆண்டாள், மற்ற தலங்களைப் போல் அல்லாது உட்கார்ந்திருக்கும் பாவனையில் இருக்கிறது. சுந்தரராஜர் தமது திருக்கல்யாண தினத்தன்று ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள் என்னும் நான்கு தேவிமார்களுடன் எழுந்தருளுகிறார். ஸ்ரீ ஆண்டாள் ரங்கநாதரையும், அவருடைய அம்சமான சுந்தரராஜரையும் தம் கணவனாக வரித்துக் கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்நிதிகள் தவிர இக்கோயிலில் ஸ்ரீ சுதர்சன சக்கரர், யோக நரசிம்மர் முதலிய சந்நிதிகளும் விசேஷமானவை. இன்னும் இங்குள்ள ராக்காயி அம்மனும் ஸ்தல தீர்த்தங்களுடன் அதிதேவதையாக விளங்குகிறாள்.
இந்த ஸ்தலத்தில் கோயிலுக்கு அடுத்தபடியாக இரண்டு தீர்த்தங்கள். ஒன்று நூபுர கங்கை. மற்றொன்று சிலம்பாறு. கோயில் வடக்கு வாயில் வழியாக மலை ஏறி இரண்டு மைல் தூரம் சென்றால் நூபுரகங்கை என்னும் தீர்த்தத்தை அடையலாம். அதன் உற்பத்தி ஸ்தானம் தெரியவில்லை. யானைத் துதிக்கை போல் அமைந்திருக்கும் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்துக்கு வருவதைத்தான் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தத்தில் இரும்புச் சத்தும் தாமிரச் சத்தும் இருக்கின்றனவாம். அதனால் இதில் நீராடுபவர்களுக்குத் தீராத நோயெல்லாம் தீர்கிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கிப் பாயும்போது சிலம்பாறு என்று பெயர் பெறுகிறது. இந்தச் சிலம்பாறு ஆதியில் பிரமன் திரிவிக்கிரமரின் தூக்கிய திருவடியில் அபிஷேகம் செய்த நீர் என்று நம்பிக்கை.
இன்று இந்த ஆறு சுந்தரராஜனின் அடிகளை வருடிக்கொண்டு பாய்ந்து பெருகி வயல்களை வளப்படுத்துகிறது. இதன் சுவை இனிமையாக இருக்கிறது. ஆதலால் இதனைத் தேன் அருவி என்று அழைக்கிறார்கள் மக்கள். இந்த நூபுர கங்கை சிலம்பாறு இருந்த இடத்தில்தான் அந்தப் பழமுதிர்ச்சோலை மலை கிழவோனாக முருகன் அன்று கோயில் கொண்டிருந்தான். அதுவே ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலைமலை என்றும் அறிகிறோம். இல்லை, இது விவாதத்துக்கு உரிய விஷயம் என்று வாதிடுவோர் உண்டு. இத்தனை விவாதங் களுக்கிடையிலும் சமீப காலத்தில் அங்கு முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித் திருக்கிறார்கள் பக்தர்கள். எப்படியோ இந்த மலை ஆதி முதல் முருகனுக்கும், திருமாலுக்கும் உரிய மலையாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே கந்த புராணம் இதனை முத்திதரு பேரழகர் என்று சிறப்பிக்கிறது.
அழகர் மலை அழகான சுந்தரராஜன் நிரம்பச் செல்வம் படைத்தவன் அரவணையான் சொத்து எவ்வளவு என்று ஒருவாறு நாம் அறிவோம். அரங்கன் சொத்து அழகன் அங்க வடிக்கும் காணாது என்பது பழமொழி என்றால் அழகன் எவ்வளவு செல்வன் என்று ஊகிக்கலாம். சித்திரா பௌர்ணமியில் அவன் சர்வாலங்கார பூஷிதனாக மதுரைக்கு கோலாகலம் ஒன்றைப் பார்த்தாலே தெரியும்.
சுந்தரராஜன் நித்தியோத்சவப் பெருமாள். பிரதி தினமும் ஏதாவது உத்சவம் நடந்தகொண்டேயிருக்கும். இவற்றில் சிறப்பானது சித்திரா பௌர்ணமித் திருநாள் தான், மதுரையில் மீனாக்ஷி சுந்தரேசுவரருக்கு அன்று திருமணம் நடக்கிறது. அதைக் காணச் சீர்வரிசைகளுடன் புறப்படுகிறார் சுந்தரராஜர். அவர் வைகைக்கரை வந்து சேருமுன் அவரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கின்றனர், வழியில் உள்ள மண்டபங்களில் எல்லாம் தங்கிப் பக்தர்களது வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். சித்திரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி வண்டியூர் வைரை சென்று தேனூர் மண்டபத்தில் தங்கித் திரும்புகிறார். திரும்பும்போது நடக்கும் புஷ்பப் பல்லக்கு சேவை எல்லாம் பிரசித்தமானது. இந்த உலாவைப் பற்றி மக்கள் பேசிக்கொள்வதெல்லாம் விசித்திரமானது.
அதாவது சுந்தரராஜன் தன் தங்கை திருமணத்துக்குச் சீர்வரிசைகளுடன் வருவதாகவும் அப்படி வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் குறித்த காலத்தில் வந்து சேரமுடியவில்லை என்றும், ஆதலால் இவர் வருமுன்பே முகூர்த்தம் நடந்து விடுவதாகவும், அதனால் கோபங்கொண்டு மதுரை நகருக்கு வராமல் வைகை வழியாகவே வண்டியூர் செல்வதாகவும் சொல்வர். இக்கூற்றில் உண்மை இல்லை. மீனாக்ஷி திருமணத்துக்குச் சுந்தரராஜன் வந்திருந்து தங்கையைத் தாரைவார்த்துக் கொடுத்ததாகவே வரலாறு. இதற்குரிய சிற்ப வடிவமும் சோமசுந்தரர் கோயிலில் இருக்கிறது. அப்படியிருக்க மக்கள் இப்படிக் கயிறு திரிப்பது சரியல்லதான் என்றாலும் இப்படியெல்லாம் கடவுளர் வாழ்விலும் பிணக்குகள் எற்படுத்தி அனுபவிப்பதிலே ஓர் இன்பமே காண்கிறார்கள் பொதுமக்கள்.
பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் முதலிய அறுவரால் இந்த அழகர் சுந்தரராஜன் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறார். பெரியாழ்வாருடன் ஆண்டாள் இந்தச் சோலைமலைக்கு வந்திருக்கிறாள். அவள் சூடிக்கொடுத்த மாலையை அழகர் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
குலமலை கோலமலைகுளிர் மாமலை கொற்றமலைநீலமலை, நீண்டமலைதிருமாலிருஞ் சோலைமலை
என்று பெரியாழ்வார் பாடியிருக்கிறார்
திருமாலிருஞ் சோலைஎன்றேன், என்னத்திருமால் வந்து என் நெஞ்சுநிறையப் புகுந்தான்
என்று நம்மாழ்வார் பாடுகின்றார்.
ஆழ்வார்கள் காலத்துக்கும் முந்திய பழம் பெருமை உடையது இத்திருக்கோயில், சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் இங்குள்ள கண்ணன் பலராமன் கோயில் பேசப்படுகிறது. சங்க காலத்துக்குப் பிந்திய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் இம்மலை மேல் உள்ள திருமால், தீர்த்தங்கள் எல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இக்கோயிலை, மதுரையை ஆண்ட மலயத்துவஜன் கட்டினான் என்பது வரலாறு. பாண்டிய மன்னர் பலர் இக்கோயிலுக்குப் பலவகையான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயில் விமானத்துக்குப் பொன் வேய்ந்திருக்கிறான். பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான விசுவநாத நாயக்கர் எவ்வளவோ திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இப்படியாக விரிவடைந்து புகழ் பெற்று நிற்கும் அழகனைத்தான் மக்கள் கள்ளழகன் என்கின்றனர். அந்த வட்டாரத்துக் கள்ளர் குல மக்களுக்கு தலைவன் என்பதால் அப்பெயர் பெற்றான் என்பர். எனக்குத் தோன்றுகிறது இப்படிச் சொல்வது தவறு என்று. கோயிலுக்கு வருவோர் உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளும் கள்வனாக இருப்பதினால்தான் அவனைக் கள்ளழகன் என்று சொல்கிறார்கள் போலும்! நீங்களும் சென்று அவனால் களவாடப்பட்டு, உள்ளம் பறிகொடுத்துத் திரும்பினால் நான் ஒன்றும் அதிசயப்பட மாட்டேன்.



