
கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்
ஆய்ச்சியர் குரவை
கோவலன் சிலம்பு விற்கப் புறப்படுவதற்கு முன்னரே விடியற்காலையில் தயிர் கடைவதற்கு மாதவி, தயிர்த்தாழி இருக்கும் இடத்திற்குச் சென்றாள் முதல் நாள் பிரையிட்ட பாலும் தோயாது திரைந்திருந்தது: உருகவைத்த வெண்ணெயும் உருகாதிருந்தது; அன்றியும், பசுக்கூட்டத்தில் காளைகள் கண்ணில் நீர் உகுத்து நின்றன; ஆட்டு மறிகள் துள்ளி விளையாடாமல் முடங்கிக் கிடந்தன ; பசுக்களெல்லாம் உடல் நடுங்கிக் கதறி நின்றன ; பசுக்களின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்ந்தன. இவற்றையெல்லாம் அவள் கண்டு, தன் மகள் ஐயையை நோக்கி, “நமக்கு எதோ ஒரு தீங்கு வருமென்று நினைக்கின்றேன் ; ஆயினும், நீ அஞ்சவேண்டா : முன்னர் ஆயர்பாடியில் தாதெரு மன்றத்தில் கண்ணபிரான் தன் தமையன் பலராமனோடு ஆடிய பால சரித நாடகங்கள் பல உண்டு : அவற்றுள் நம் நப்பின்னையோடு அவன் ஆடிய குரவைக்கூத்தை, மண்ணின் மாதர்க்கு அணிகலமாகிய கண்ணகி காண, நாம் ஆடக்கடவோம் ; இது இவ்வுற்பாதங்களுக்கு உபசாந்தியாகும்.” என்று கூறி, ஆய்ச்சியர் எழுவரைத் தேர்ந்தெடுத்து, வட்டமாய் முறைப்படி நிறுத்திக் குரவைக் கூத்தை விதிப்படி ஆடும்படி செய்தாள். அவர்களும் முதலில்,
” கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமே லவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ? தோழீ !”
என்றுமாயவனை முல்லைப்பண்ணாலே பாடினர். மாதரி அது கண்டு வியந்தாள். அப்பால் குரவையாடும் மகளிர்,
” கோவா மலையாரம் கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே ;
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக்குருந்தொசித்தான் என்பரால்.”
என உள் வரி வாழ்த்தாகவும்,
“மடத்தாழு நெஞ்சத்துக் கஞ்சணார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே !
நாராய ணாவென்னா நாவென்ன நாவே!”
எனப் படர்க்கைப் பரவலாகவும் பாடி, “நமது ஆவினம் பிணி நீங்க ! பாண்டியன் முரசம் பகைவரை வென்று முழங்க !” என வாழ்த்திக் குரவைக்கூத்தை ஆடி முடித்தனர்.



