

மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை
பாண்டிவள நாட்டிலுள்ள திருவாதவூரிலே ஆதி சைவமரபிற் றோன்றியவரும், திருப்பெருந்துறையில் சிவபெருமான் மக்களுருவில் வந்து ஆட்கொண்டருளப் பெற்றவரும், சைவசமயாசாரியர்களுள் காலத்தால் முற் பட்டு விளங்கியவரும், தமிழ் நாட்டின்கண் உரமுற்றுச் சைவவான்பயிர்க்குக் கேடு விளைத்த புத்த மதத்தைக் களைந்தவரும், ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெருமை பெற்றவரும், இறைவனே தம் பொருட்டு நரியைப் பரியாக்கியும், பரியை நரியாக்கியும், வைகையைப் பெருக் கெடுக்கச் செய்தும், பிட்டு வாணிச்சிக்குக் கூலியாளாக வந்து மண் சுமந்தும் அவ்வாற்றால் அரிமர்த்தன பாண் டியனுக்குத் தம் பெருமையை நன்கு அறிவுறுத்திய பேறுபெற்றவரும், உருகா உளத்தையும் உருக்கவல்ல தாய் அன்புச் சுவை ததும்பும் திருவாசகத்தையும், அகப் பொருட் சுவை நிரம்பித் துளும்பிக் கோவைகட்கெல் லாம் முற்பட்டதாய் விளங்குந் திருச்சிற்றம்பலக் கோவை யாரையும் அருளிச்செய்தவரும், தில்லைத் திருவருளில் இரண்டறக் கலந்தவருமாகிய மணிவாசகப் பெருமான் மாண்புமிக்க வரலாற்றனை மாந்துவது மக்கள் கடனே.
முன்னரே அறிஞர் பலர் அடிகளது வரலாற் றினை எழுதி வெளியிட்டிருப்பினும் சைவசமயாசாரியர் நால்வர் வரலாறு என்னுந் தொகுதியை நிரப்புதற்கு இந் நூலாசிரியராலேயே புதிய முறையில் ஆராய்ச்சிக்கருத் துக்களுடன் எழுதப்பட்டு வெளிவந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் வரலாறுகளை யடுத்து இந்நூலும் அம்முறையில் வெளிவரல் வேண்டுவது இன்றியமையாத தாயிற்று.
இந்நூலின்கண் மணிவாசகப்பெருமான் வரலாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வரலாற்றுப் பகுதி முடிந்ததும் அதனால் உணரக்கிடக்கும் ஆய்வுரை களை விளக்கி எழுதிச் சேர்த்திருப்பதும், அடிகள் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலே தேவார ஆசிரி யர்களுக்கு முற்பட்டு விளங்கினர் என்பதைப் பல எடுத்துக்காட்டுக்களால் சிக்கறுத்து விளக்கியிருப்பதும், அதனை விளக்குவதற்குப் போந்த பழைய செப்புப் பட்ட யத்தின் மூலத்தை நன்கு மொழிபெயர்த்து அதனை அம் மூலத்தோடு இறுதியிற் சேர்த்திருப்பதும், பொதுவாக அடிகளருளிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் தூல்களில் செறிந்து கிடக்கும் அருங்கருத்துக்களையும், சிறப்பாகத் திருவாசக நான்கு அகவல்களிலுள்ள அரும் பொருள்களையும் ஆய்ந்தெழுதிச் சேர்த்திருப்பதும் கற்ப வர்க்கு அளப்பிலின்பம் அளிப்பனவாகும்.
இதன் கண் சேர்த்திருக்கும் செப்புப்பட்டயத் தை எழுதியனுப்பியுதவிய திருவனந்தபுரம் திரு. T. K. சோசப் அவர்களுக்குப் பெரிதும் நன்றி செலுத்து கின்றோம்.
இத்தகைய அரிய பெரிய ஆராய்ச்சி நூல்களை மிகவும் பாடுபட்டு எழுதித் தமிழ்மக்கட்குப் பயன்படுத்திவரும் பேரறிஞர் உயர்சைவத் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் நோயற்ற வாழ்விலுங் குறைவற்ற செல் வத்திலும் ஓங்கி எல்லா நலங்களும் பெற்று நீடு வாழ்கவென எல்லாம் வல்ல மங்கைபங்கனை இடையறாது வழுத்து கின்றோம்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.



