
வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி
மித்திரன்
மித்திரன் என்ற ஸூர்ய தேவனை விசுவாமித்ர ரிஷி பாடியது.[இந்த ரிக்குக்கள் தைத்திரீய ஸம்ஹிதை 3-வது காண்டம், 4-வது ப்ரச்சத்தின் கடைசியிலுள்ளன. இலே சான திரிபுகளுடன், ரிக்வேதம், 3-வது அஷ்டகம் 4-வது அத்தியாயத்திலே காணப்படுகின்றன. ]
1. மித்திர தேவனிடமிருந்து பெறும் ஞானக் கேள்வி தொழில் செய்பவரைத் தாங்குவது; இன்பங்களை வென்று தருவது; உண்மை யுடையது; ஒளிப் புதுமைகள் வாய்ந்தது. அதனை வாழ்த்துகிறோம்.
2. மித்திரன் அறிவிலே மேம்பட்டு மாந்தரை நடத்துகின்றான். மித்திரன் மண்ணையும் வானையும் தாங்குவோன். மித்திரன் உயிர்களை இமை கொட்டாமல் பார்த்து நிற்கின்றான். அந்த உண்மைக் கடவுளுக்கு நெய்யொளி கொண்ட உணவு படைப்போம்.
3. மித்திரா, விரதத்தாலே நின்னை உணர்வான் யாவன், அம் மனிதன் இன்பங்களை நன்கு நுகர்க. உன்னாலே காக்கப்படுவோன் (வளர்க்கப்படுவோன்) அழிவு பெறுவதில்லை; தோல்வி யடைவதில்லை; அருகே யிருந்தும் தொலையிலிருந்தும் அவனைப் பாவம் வந்து சார்வதில்லை.
விளக்கம்
காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுக்கள் உதய ஸூர்யனை நோக்கி ஒதப்படுகின்றன. ஸூர்யன், பரமாத்மாவினுடைய ஞானவொளி; இந்த தேவன் நான்கு அமிசங்களுடையவன்:- மித்திரன், வருணன், அர்யமான், பகன். இவருள்ளே, மித்திரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன்; வருணன் அதன் அனந்த நிலை (எல்லையற்ற தன்மை) யாவான் ; அர்ய மான் வலிமைத் தேவன்; பகன் அவ்வொளியின் இன்ப வுணர்ச்சியாக நிற்பவன்.
முழுமுதற் கடவுளுக்கு ‘ஒளியே விழி, ஒளியையே சூரியன்’ என்று போற்றுகிறோம். பூலோகத்திலே ஒளியாகத் தோன்றும் சக்திதான் சுவர்க்க லோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது. அதன் அன்பு வடிவத்தை, அதாவது, தெய்வீக அன்பையே மித்திரனென்று வாழ்த்துகிறோம்.
1. ‘ஞானக்கேள்வி’ தேவர்களிடமிருந்து மனிதன் அறிவுச் செவியினாலே பெற்றுக்கொள்வது, அன் பினிடமிருந்து இவ்விதமான கேள்வி பெறுவோர் செய்யும் தொழில்களை யெல்லாம் நழுவுதல் இல்லாத படி அன்பு தாங்கிக் கொள்ளுகிறது.
2. அன்பில்லாவிடில் மனித வாழ்க்கை நடை பெறாது; வானமும் இயலாது. அன்புதான் இவ்வுலக முழுவதையும் சிதறாதபடி ஆதரிப்பது; அன்பு ஒரு க்ஷணம் கண் மூடிவிடுமானால், உலகமும் உயிர்களும் அழிந்து போய்விடும். தேவர்களுக்கு மனிதன் உடைமை முழுவதையும் அர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதுவே தேவர்களின் உணவு; ‘நெய் யொளி கொண்ட தேவநதிகள்’ என்றும், ‘நெய்யொளி கொண்ட ஸரஸ்வதி’ என்றும், ‘நெய்யொளி கொண்ட அறிவு’ என்றும்,வேதம் பிற இடங்களில் வழங்கு வதால், ‘நெய்யொளி’ என்பது ஞானத்தெளிவு தான் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் தேவர்களுக்குக் கொடுக்கும் ஞானத் தெளிவுடன் கலந்து கொடுக்க வேண்டு மென்று விசுவாமித்ரர் சொல்லுகிறார்.
3. ‘விரத’ மென்பது விதி. அன்பின் விதிகளை நன்கு வழக்கப்படுத்தினால், அன்பு நம்மை வளர்க்கும்; நம்மைக் காக்கும். பிறகு, அழிதலும் தோல்வியும் யாவமும் நமக் கில்லை.
மதுச்சந்தர் (தேனிசை) என்ற ரிஷி வாயு இந்திரன் மித்திரன் வருணன் என்ற தேவர்களைப் பாடியது.
உயிர் (வாயுதேவன்)
(1) காற்றே,வா, காட்சி யுடையாய், இங்கு நின் பொருட்டுத் தேன்கள் புனைந்து வைத்திருக்கின்றோம்.
அவற்றை அருந்து; கூவுதலைக் கேள்.
(2) உயிரே, மந்திரங்களால் நின்னைத் துதி செய் கின்றனர்.
(யாவர்?) பண் பாடுவோர், தேன் பிழிந்தோர், பகலறிந்தோர்.
(3) உயிரே, நிறைவுதரும் நினது இன்ப ஓடை வேள்வி தருவோனை நோக்கிப் பாய்கின்றது.
(அஃது) தேன் பருகுமாறு விரிவுகொண்டது. உயிரும், அறிவுச்சுடரும் (வாயு, இந்திரன்).
(4) இந்திரா, காற்றே, இங்கு சாறுகள் பிழிந்திருப்பது, காணீர். இங்கே இனிமைகள் கொண்டு வருக. தேன்கள் நும்மை விரும்புகின்றன.
(5) வளத்தின் கருப்பொருளிடை யூர் காற்றே, இந்திரா! சாறுகளின் சுவையறிவீர்; விரைவுடன் இங்கு வருக.
(6) காற்றே, இந்திரா! ஸோமம் பிழிவோன் செம்மையாகச் செய்யும் வேள்வியின் கண்ணே, நேர்மை யறிவுடன், வீரரே, விரைந்து வருக.
அன்பும் விரிவும் (மித்திர வருணர்)
(7) தூய பகுத்தறிவு கொண்ட மித்திரனை அழைக்கிறேன்; பகைவரை மாய்க்கும் வருணனை அழைக்கிறேன். அவர் தெளிவுடன் ஒளிரும் அறிவைச் சமைப்போர்.
(8) நேர்மையை வளர்ப்போர், நேர்மை பற்றுவோர், அந்த மித்திர வருணர் நேர்மையினாலே பெரிய வேள்வித் திறம் அடைகின்றனர்.
(9) மித்திர வருணர் கவிகள்; பல பிறப்புடை யோர்; விரிந்த மனையுடையோர்; அவர் நம்மைத் திறமையுடைய தொழிலில் நாட்டுக.



