ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி

முரசு


ஜூன் 15ம் நாள் காலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிப் புறப்பட்ட ஆகாய விமானம் என்னையும் தோழர் முல்லை சத்தியத்தையும் தூக்கிக்கொண்டு பறந்தது. தேவையான, வழக்கமான வேகத்தில் விமானம் பறந்து சென்றாலுங்கூட காற்றையும் முகில்களையும் அளவுக்கு மீறிய வேகத்துடன் அது கிழித்துச் செல்வதாகவே நாங்கள் எண்ணினோம். உண்மையில் அந்தப் பறக்கும் இயந்திரத்தில் அவ்வளவு வேகமில்லை. எங்களின் மனோ வேகந்தான் அப்படியிருந்தது. என்றுமில்லாத புத்துணர்ச்சி. தோளிலே தினவு. உள்ளமெல்லாம் உவகைக் கூத்து. காரணம் என்ன?

கல்லக்குடியிலே களம். அதற்கு நான் படைத் தலைவன். அந்த இன்பச் சேதி கேட்டு என்னுடன் தொடர்ந்த சத்தி. இருவர் இதயமும் அந்நிலையை அடைய இதைவிட வேறு காரணம் என்ன தேவை. வீதிக்கு வீதி பல வீட்டுப் புலித் தமிழர் வில்லேந்தி வாழ்ந்தனர் என்று நமது புறநானூறு பேசுகிறது. மலர்தூவிய மஞ்சத்திலேயிருப்பார்களாம்; போர் முரசின் ஒலி கிளம்புமாம் – கடைசி முத்தமாயிருப்பினும் இருக்கும் எனக் களிப்புடன் கூறி – கண்ணீர் நிறைந்த காதலியரின் கன்னங்களிலே அன்பைப் புதித்துவிட்டு மழவர்கள் தோள் தட்டி ஓடுவார்களாம். எஞ்சியுள்ள தமிழரின் வீரக் கவிதைகள் அந்த தித்திப்பான செய்திகளை நமக்கு சொல்லித்தான் வைத்திருக்கின்றன. அவ் வழிவந்தோர் போர் தவிர புனிதமான முறை எதையும் கண்டு வழிக்குவர மறுக்கும் பொல்லாதவர்களை எதிர்த்து முரசு கொட்டுக என தலைவனிடமிகுந்து உத்திரவு கிடைத்துவிட்டது எனக் கேட்டு அந்த உத்திரவை முத்தமிட்டு களம் நோக்கி முரசு கொட்டச் செல்கிறார்கள் என்றால் ஏன் உவகை கிளம்பாது ! உற்சாகம் மோதாது! உல்லாசப் பண் எழும்பாது “சூடேறிச் சுழன்றோடும் ரத்த ஓட்டத்திலே – முறுக்கேறி நிற்கும் நரம்புகளிலே வீங்கிய மலைத் தோள்களிலே தம்பிமார்களின் ஆற்றல் நிறைந்த யுத்த முறைகளிலே தங்களுக்கு நம்பிக்கையில்லையா அண்ணா?” என்று கேட்டுப் பெற்ற “வரம்” அல்லவா அது! வரம் பெற்றோம். புதிய உரம் பெற்றோம் ! போர்முனை நோக்கிப் பறந்தோம்.

இறக்கைகள் ஆகாயக் கப்பலுக்கா, அல்லது எங்களுக்கா? – என்றே புரியவில்லை. அவ்வளவு மிகுதியான வேகத்தை உணர்ந்தோம். போராட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை திருச்சி மாவட்டத்திலேயுள்ள பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காக மாவட்ட முழுதும் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூன் 14ம் நாள் சென்னையிலே ஒரு கல்லூரியின் நிதிவிழா நாடகத்தில் நடிக்கவேண்டிய பொறுப்பு இருந்தது. திராவிட சமுதாயத்தின் விழிப்புக்கும் புதிய பாதை காணும் எழுச்சிக்கும் வித்திட்ட வைரமணி விளக்காம் தியாகராயப் பெரியாரின் பெயரால் அமைந்த தியாகராயர் கல்லூரியின் நிதிக்காகத்தான் நாடகம். “பரப்பிரம்மம் “நாடகம், ஏராளமான வசூல். தென்னாட்டின் நடிப்புத் துறையிலே புதிய காவியம் தீட்டிய செம்மல் சிவாஜி கணேசனும் மற்ற நண்பர்களும் நடித்தார்கள். இரவு நாடகத்தை முடித்துவிட்டு மறுநாள் திருச்சி சுற்றுப் பயணத்தைத் துவக்கவேண்டிய முக்கியத்துவம் கருதி ஆகாய வழியைத் தேர்ந்தேடுத்தோம்.

விமானத்தில் பிரயாணிகள் எதை எதை எண்ணிக் கொண்டிருந்தார்களோ தெரியாது; நானும் சத்தியும் மேலிருந்தபடியே பூமியை நோக்கினோம். பச்சைப் பட்டாடை உடுத்திய திராவிடத் திருமாதா தன் நதிக் கரங்களால் உழவர் பெருமக்களை சீராட்டிப் பாராட்டிக் கொண்டிருந்தாள். கம்பீரமான தோற்றம் கனிவு நிறைந்த கண்கள் – கருணை பொழியும் வதனம் எழிலாடும் எங்கள் தாய்க்கு அணிகலன்களாக இருந்தன என்றாலும் தாயின் முகத்திலே குறுமறுக்கள் கிளம்பியிருப்பதாகத் தெரிந்தன. கோயில்களின் உயர்ந்த கோபுரங்கள், எங்கள் தாய், அடிமைப்பட்டவள் என்பதை எண்ணினோம், கண்களிலே குளம்! அன்னையின் நிலை கண்டு ஆகாயத்திலிருந்தபடியே நாங்கள் இருவர் தான் அழுகிறோமா என்று திரும்பிப் பார்த்தோம்.

பக்கத்திலே ஒரு பாவையும் அகம் அழுவதை முகத்தால் காட்டிக்கொண்டிருந்தாள். விமானப் பிரயாணிகளை உபசரிக்கும் பொறுப்புவாய்ந்த அலுவலில் ஈடுபட்டிருக்கும் அந்த இளநங்கை ஏனிப்படி வாட்டமாயிருக்கிறாள் என்பது முதலில் புரியத்தானில்லை. பிரயாணம் செய்பவர்களுக்கு அலுப்பு தெரியாமல் அச்சம் தோன்றாமல் விபத்துகளைப் பற்றிய எண்ணம் வராமல் கண்ணியமான புன்னகை காட்டி பவ்யமாக பத்திரிகைகளை நீட்டி – பழரசம் தந்து, பணி சில புரிந்து பாதுகாத்திட வேண்டிய பதவியிலுள்ள அந்தப் பாவை ஏனிப்படி. துன்பக் கேணியில் தள்ளப்பட்டிருக்கிறாள் என்ற கேள்விக் கணைகள் என்னைவிட அதிகமாக என் நண்பர் சத்தியைத் துளைத்தெடுத்தன. “என்ன சார் விஷயம்” என்று அவருக்கே இயல்பான துடிப்பு நிறைந்த சொற்களால் என்னைக் கேட்டார். கேட்டார். கேட்டுக்கொண்டேயிருந்தார். பிறகு அவரே, காரணத்தை எனக்கு விளக்கிடும் அளவுக்குத் தெளிவும் பெற்றார். அவளது சிவந்த கரங்களிலே சில கடிதங்கள் இருந்தன, நான் கடிதமென்று சொல்கிறேன்; அதை அவள் பொற்சுரங்கமென்டாளோ; புதையல் எடுத்த தனமென்பாளோ நானறியேன். ஏனெனில். அவைகள் அவள் காதலனின் கடிதங்கள். எங்கேயோ தூரத்திலிருந்திருக்க வேண்டும் அந்தத் துடியிடையாளைத் துணைவியாகப் பெற்றிடத் துடித்தவன். அவன்தான் இப்போது அவளிடம் அந்தப் பழைய ஓலைகளின் மூலம் பேசிக் கொண்டிருக்கிறான்.

நினைவு எத்துணை இன்பமான வேதனை அளிக்கக்கூடியது. அதற்கு அவள்மட்டும் விதிவிலக்கா? அவள் கையிலே பழைய கடிதங்கள். நெஞ்சிலே புதிய புயல்கள்.

அதுபோலத்தான் எங்கள் நினைவிலே தமிழரின் பழைய வரலாறுகள். நிலைமையோ பூகம்பம் எரிமலை பிரளயம்! மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே! என்ற விதத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கும் காதலனின் கடிதத்தில்!

பொன்னும் முத்தும், பொதிகைச் சந்தனமும், எகிப்துக்கும், ஏதென்சுக்கும் ஏற்றிச்செல்லப்பட்டன. என்ற கதையைச் சொல்லும், கடிதமாகக்கூட ஆகும் பாக்யம் பெறாத தமிழர் முன்னாள் பெருமை.

“மலையிடைப் பிறவா மணியே என்கோ, யாழிடைப் பிறவா இசையே என்கோ,” என்ற கருத்திலே காதல் பண் பாடியிருப்பான் கடிதம் தீட்டிய அவள் காதலன்.

அக்பர் நுழையா அவனியே யென்கோ,
கனிஷ்கர் நுழையா தரணியே யென்கோ,
என்ற புகழ்ச் சிந்தை ஆயாசத்தோடு பாடினோம் நாங்கள்,
பிரிந்தோம் கூடுவோம் என்று பேசியிருக்கும் அந்தக் காதல் கடிதம்.

“கூடாதாரோடு கூடினோம் பிரிவோம்” என்று பெருமூச்சால் சொல்லிக்கொண்டோம் நாங்கள் – ஆம்; திராவிடம் தனித்திடவேண்டும் என்ற இயக்கத்தின் படை வீரர்களாகச் செல்லும் நாங்கள்.

ஆகா – நாங்கள் – என்று சொல்லிக்கொள்வதிலே இப்போது எவ்வளவு பெருமையிருக்கிறது. நாடு காத்திடும் அணிவகுப்பில் நாங்களும் பெயர் தந்தோம். நாங்களும் என்பது எத்தகைய உணர்ச்சியோடு சொல்லப்படுகிறது தெரியுமா? விளக்கமுடியாத உணர்ச்சி விடுதலை வீரர்களால் மட்டுமே அனுபவித்து உணர்ந்திடக்கூடிய உணர்ச்சி, சோக நிலையிலுங்கூட அந்தப் பெண்மணி புதன் அலுவலை கடமையை சரிவரத்தான் செய்தாள். அதுபோலவே நாங்களும் கடமையைச் செய்ய சிறகடிக்கும் புளுக்களாகப் பறந்துகொண்டிருந்தோம்.

மேகங்களை மிரண்டோடச் செய்தபடி பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென்று பயந்து விடாதீர்கள் விபத்து ஒன்றுமில்லை – திருச்சி எல்லையைத் தொட்டுவிட்டது. திருச்சியிலே மத்திய சிறைச்சாலையிருக்குமிடத்திற்கு அருகாமையிலே தான் விமான நிலையமும் இருக்கிறது. போராட்டத்திலே ஒரு வேளை கைது செய்யப்பட்டால், நாம் வரவேண்டிய இடம் அருகிலேதானிருக்கிறது என்று பேசிக்கொண்டே இறங்கினோம். இருவர் எங்களை இன்முகங் காட்டி எதிர்கொண்டழைத்தனர். திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன், திருச்சி செயலாளர் மணி – இருவரும்! அந்த இருவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது இன்றியமையாதது.

இந்த எழுத்துக் குவியலில் இடம்பெறும் அத்தனை தோழர்களையும் பற்றி விவரிப்பதென்றால் ஏடு கொள்ளாது. ஆயினும் அது தேவையான பயன்படத்தக்க ஒரு முயற்சியென்று கருதி – ஆங்காங்கே அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படும்போது அவர்களின் தூய தொண்டு பற்றிய பெருமைமிகு புகழ்க் கவிதைகளின் முதல் அடியையாவது தொட்டு விட்டுப்போக விரும்புகிறேன்.

குட்டையான உருவமும் குறுஞ்சிரிப்பால் மற்றவரைக் கவரும் தன்மையும் – கண்டிப்பாக எதையும் பேசிடும் நாவும், எதிரி கொஞ்சம் சிரித்துப் பேசினால் இளகிவிடும் உள்ளமும் கொண்டவர் திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன். அவ்வளவு இளகிய மனம் படைத்தவர். அழகான முறையில் புத்தகங்களை வெளியிட அக்கிரகாரத்தினருக்குத்தான் தெரியும் என்ற நிலைமையைத் தனது பண்ணை மூலம் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தவர். அண்ணாவின் எழிற் காவியங்களுக்கு மெருகூட்டித் தந்தவர், பதிப்பகம் வாயிலாக! அத்தகையவர் தனது வியாபாரத்திலேயே கவனம் செலுத்தியிருந்த காலம் ஒன்றிருந்தது. மிக விரைவில் கழகத் தொண்டராகி மேதாப் என்ற வடநாட்டு மந்திரி வந்தபோது கருப்புக்கொடி காட்டி, சிறைப்பட்டு, போலிசாரால் தாக்கப்பட்டு, பின்னர் திருச்சியிலே கழக முதல்வர்களிலே ஒருவராக ஆகிவிடக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டார் – இல்லை கழகத்தின் கண்ணியமான கொள்கைகள் அவரை இழுத்து வந்துவிட்டன. முக்கியமான பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், திருச்சி கழகத்திற்கு முடிந்த அளவு தொண்டும், சிறு சிறு பண உதவிகளும் கழக வளர்ச்சி பற்றிய ஆக்கவேலைக் குழுவின் ஆலோசகராக யிருந்து காரியமாற்றும் உதவியும், அவரால் தவறாது கிடைத்து வருகிறது.

அழைக்க வந்தவரில் இன்னொருவர் எம். எஸ். மணி. அவரை முன்பெல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக் காது. காரணம்; நான் எப்போது திருச்சி சென்றாலும், திராவிடப் பண்ணையின் மாடியிலிருந்த கழக அலுவலகத்தில் அமர்ந்து கணக்குப் பார்ப்பதும், கடிதங்கள் எழுதுவதும், ஆகிய இந்த வேலைகளை அவருக்கே உரித்தான சுறுசுறுப்போடு செய்துகொண்டிருப்பாரே தவிர என்னோடு சரியாகக்கூடப் பேசமாட்டார். பிறகு திருச்சி கழகத்திலே எனக்குத் தொடர்பு வலுப்பட, வலுப்பட, தோழர் மணி எனக்கு மிகவும் பிடித்தமானவராகிவிட்டார். கடமையிலே அவருக்கிருந்து கருத்தும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமங்களும், என் அனுதாபத்தை என்னை அறியாமலே பெற்றுக்கொண்டுபோய் மணியின் கழுத்தில் மாலையாக்கிப் போட்டன. பத்துநாளோ – இருபது நாளோ – குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சிப் பணிகள் புரிந்தபடியிருப்பார். திராவிடப் பண்ணையின் மாடியிலே தலையணைகூட இல்லாத நிலையில் சுருண்டு படுத்திருப்பார். அவரது மகன் பெயர் மறந்து விட்டேன் – நான் “மங்கிணி” என்று கூப்பிடுவேன்; அவன் வந்து நிற்பான்; “அம்மா கூப்பிட்டார்கள்” என்று கூறியபடி! மாலையில் வருகிறேன் என்று கூறி அனுப்புவார். மாலை வரும். ஆனால் அவர் கழகப்பணி புரிய கிளம்பி விடுவார் வேறு ஊருக்கு ! இப்படி ஒரு இளம் இயந்திரம் திருச்சி கழகத்திற்கு கிடைத்திருக்கிறது. கண்ணாடி அணிந்த கண்கள்! கறுத்த மேனி! கவர்ச்சியான உருவம் ! அவர் தான் மணி! கூட்டத்தில் பேசிடும் ஆசையும் ஆர்வமும் அதிகம் – அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று வருகிறார்.

முத்துவும் மணியும் வரவேற்றிட நாங்கள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். கார் போய்க் கொண்டிருந்தது. வழியிலே பராங்குசத்தை சந்தித்துப்போக முடிவு செய்தோம். பராங்குசத்தை சந்திப்பதா? அவர் என்ன; விமான நிலையத்துக்கு வரவில்லையா? ” என்று திடீரெனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா அவருடன் பழகிய தோழர்களுக்கு! ஆமாம்; எங்கள் விமானம் இறங்குவதற்குள்ளாகவே; வானத்தில் கொஞ்சதூரம் பறந்து வந்து, கொஞ்சும் குரலில் “வாங்கே! வாங்கே என்று ஏகாரத்தை இழுத்தாற்போல கூவியழைத்திடும், ஆர்வமும், அன்பும் பெற்ற அந்த நண்பரை நாங்கள் சந்திக்கப் போனதற்குக் காரணமில்லாமலில்லை. மாவட்ட மாநாட்டின் ஓயா உழைப்பின் காரணமாக உடற்கூறுகள் நலிவடைந்து, கடுமையான நோய் பிடிக்கப்பட்டு, “பிழைப்பாரா?” என்ற சந்தேகத்திற்கிடையே வைத்திய சாலையில் படுத்திருந்தார் பராங்குசம். “பரா” என்று எண்ணினாலே எனக்கு ஒரு உற்சாகம் இறக்கிறது. ஒரு கள்ளம் கபடமற்ற வாலிபத் தென்றல் என் எதிரே நின்று இதழோரத்தால் சிரிப்பு காட்டி, சிந்தையைத் தடவி ஜீவ காவியம் பாடுகிறது. குறைந்த ஊதியம் பெற்று, குழந்தைகள் நிறைந்த குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சுமையும், கொள்கை வெறியைத் தணித்திட முடியாமல், ஓயாமல் பணியாற்றிட வேண்டு மென்ற ஆலையும், இந்த இரண்டிற்குமிடையே தன்னுடைய இளமையை அர்ப்பணித்து எடுத்துக்கொண்ட சிரமங்களும் அவரை ஆம், ‘பரா’வை பத்தரை மாற்றுப் பசும் பொன்னாக்கிவிட்டது.

மருத்துவ மனையில் என்னைக் கண்டதும் கண்ணீர் வடித்தார். தன் உடல்கிலை பற்றிய கவலையால் அல்ல! தானும் போர்முரசு தட்ட வரமுடியவில்லையே என்று! “வாளில்லாமல் போரா? ‘பரா’ இல்லாமல் களமா? என்று நானுந்தான் எனக்குள்ளாகக் கேட்டுக்கொண்டேன். ஆறுதல் படலம் முடிந்தது. பிறகு விடைபெற்று எங்கள் பிரயாணத் திட்டத்தை நிறைவேற்றத் துவங்கினோம்.

முதல் நாள்:

ஜூலை 15-ம் நாள் கழகத்தின் நாள் ஏடு ‘நம்நாடு’ நேர்மையின் திரு உரு பொன்னம்பலனார் அவர்கள் நிர்வாகத்தின் கீழ் துவக்கப்பட்டது. அந்நாள் முதலேதான். “டால்மியாபுரம்” பெயர் அகற்றும் போராட்ட விளக்கக் கூட்டங்கள், நடைபெறத் துவங்கின. முதல் நாள் முரசம், மணல்மேட்டில் அதிர்ந்தது. மணல்மேடு, அழகான சிறு கிராமம். கண்கவரும் தோப்புகள். அங்கே பண்பாடும் சிறுவர்கள். அரசியல் கொந்தளிப்புகளைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புள்ளவாறு, சேலம் திருச்சி சாலையோரத்திலே அந்த சிற்றூர் அமைந்திருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் – நான், மணி, முத்து, சத்தி, சிவப்பிரகாசம் எல்லோரும் அந்த ஊருக்குச் சென்றுவிட்டோம். இங்கே உங்களுக்கு அறிமுகமாகும் சிவப்பிரகாசம் இளமை முதல் எனக்குத் தெரிந்தவர். இவரும் இப்படி வருவாரா!” என்று நான் எண்ணும் விதத்தில், இயக்கத்தில் தீவிரப் பங்கு பெற்றவர். “தீப்பொறி” ஏட்டின் இணையாசிரியர், நல்ல இளைஞர். சேலம் கல்லூரி மாணவர். B. A., பட்டதாரி. அவரும் அன்று பேசினார். கூட்டம் நல்ல வெற்றி. மணல்மேடு கழகத் தோழர்களிருக்கிறார்களே: அப்பப்பா எத்துணை சக்தி வாய்ந்த இளைஞர்கள்! ஆர்வத்தின் சின்னங்கள் இயக்கத்தின் பொன் கதிர்கள். அவர்கள் ஓடியாடியதும் உற்சாகப் பண் பாடியதும் நெஞ்சை விட்டகலா நிகழ்ச்சிகள்! அறப்போர் அறிவிப்பின் முதற்கூட்டம் முழு வெற்றியுடன் முடிவுற்றது. அந்த வெற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, மணல்மேட்டிற்கு சுற்று வட்டாரத்திலேயுள்ள சித்தூர் முதலிய ஊர்களின் திராவிடக் கழகத் தோழர்கள் நம் நிழலிலும் அவர்கள் நிற்பதாகாது என்ற தலைவரின் கட்டளையை நிந்தாஸ்துதியாக நினைத்து, எமக்கு மாலை சூட்டி மகிழ்ந்தனர் கழகத்தின் சார்பாக!

அந்த சிறிய ஊராம் மணல்மேடு சரிந்துவிடுமோ என்கிற அளவுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குழுமினர். கண்டனர் கேட்டனர் பயன் பெற்றனர். பலமும் தந்தனர் இரவு உணவை முடித்துவிட்டு, – முசிறி வழியே வந்து, ஆங்கு தோழர்களை சந்தித்துப் பேசிவிட்டு சரியாக 1-30 மணிக்கு திருச்சி மீண்டோம்.

அடுத்த நாள்:

மணப்பாறையிலே கூட்டம். அதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மாவட்டத்தின் செயலாளர் அம்பில் தர்மலிங்கம் வந்து சேர்ந்தார். அம்பில் என்பது திருச்சி மாவட்டத்திலே உள்ள ஒரு சிற்றூர். மைலூர் பஞ்சாயத்து, அங்கே ஒரு உயர்நிலைப் பள்ளியும் உண்டு. அம்பில் என்று சொன்னால் நமது இயக்கத்தினருக்கு அந்த ஊரின் பெயர் ஞாபகம் வராது. தர்மலிங்கத்தின் பெயர்தான் எதிர் வந்து நிற்கும். அம்பில் வந்தார் போனார் என்றே எல்லோரும் பேசுவார்கள். வந்தார் போனார் என்கிறேனே; அதிலேகூட அர்த்தம் இருக்கிறது. ஒரு இடத்தில் சில மணி நேசங்கள் அவர் இருப்பது கஷ்டமான காரியம். அவ்வளவு வேலை அவருக்கு, வந்தார் போனார் என்றே எல்லோரும் பேசுவர், நான் அவரைத் தேடிக்கொண்டிருப்பேன்; என்னிடத்தில் வந்தே அவரைக் கண்டீர்களா எனக்கேட்பார்கள். இயக்கக் காரியங்கள் மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் நலம்பயக்கும் ஒத்தாசைகள் புரியவேண்டுமென்பதிலும் அதற்காக அலைவதிலும் முயற்சி எடுப்பதிலும் அலாதியான சுவை அவருக்கு! யாராவது தேர்தலிலே ஜெயிக்க வேண்டுமா? அங்கே அம்பில் இருப்பார் – ஊதியமில்லாமல், கொள்கைக்கு முரண் ஏற்படாமல் ! யாரையும் எளிதில் நம்பிவிடுவார்- அதன் காரணமாக நம்பிக்கை மோசத்திற்கு ஆளாகி பிறகு தன்னையே நொந்துகொள்கிற காட்சி நமக்கே பரிதாபமாயிருக்கும். லால்குடி மாநாட்டிலே ஏறத்தாழ ஏழாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி அந்த மாநாடு ஒரு எழுச்சி ஏடு – என்ற மதிப்புரையை மாவட்டத்திற்குத் தந்த பெருமை தோழர் அம்பிலை தலைவராகப் பெற்ற வரவேற்புக் குழுவிற்குத்தான் சாரும். என்னைப் பொருத்த வரையிலே அம்பில் எனக்கு ஒரு விளையாட்டுக் கருவி – விபரீதம் புரிவோரை வீழ்த்தும் வேல் கழகத்துக் கோர் படை! திருச்சி மாவட்டத்திற்கோர் பாசறை! குள்ளமான உருவம் குமிழ்க் கண்கள் கள்ளமில்லா நெஞ்சம் அவர் தான் அன்பின் – இல் – அம்பில் !

அவர், நான், மணி, சத்தி, முத்து, சிவப்பிரகாசம், மாணிக்கம், ஆகியோர் மணப்பாறை கூட்டத்திற்குப் புறப்பட்டோம்.

மணப்பாறைக்குள் நுழைந்தோம். செங்கொடித் தோழர்கள் (ஜிந்தாபாத்) என்னும் முழக்கத்துடன் சிறு ஊர்வலமாகச் சென்றார்கள், அன்றையதினம் மணப்பாறையில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட் தோழரை அவர்கள் வாழ்த்திக்கொண்டு சேன்றனர். ஊருக்குள்ளே சென்றோம். நமது கழகம் ஆதரவு தந்த தனபால் என்பவரும் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. மணப்பாறை பஞ்சாயத்து போர்டில் மட்டுமல்ல; சென்னை மாநில முழுமையுமே அதிகப்படியான இடங்களிலே கழகத்தின் முன்னணித் தோழர்களும், கழக அனுதாபிகளும், கழகச் செயலாளர்களும், பஞ்சாயத்து போர்டுகளில் அங்கம் வகிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர், பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பொல்லாதவர்களுக்கு நாடு வழங்கிய நல்ல தீர்ப்பு அது.

வெற்றிச் சேதியுடனே சென்ற எங்களை – இளமுருகனாரும், பொற்செல்லி அம்மையாரும், கழகத் தோழர்களும் வரவேற்றனர்.

பொறசெல்வியும் இளமுருகும் காதற் கலப்பு மணம் புரிந்தவர் என்பதும், “காதலிலே கவிதையிலே களம்போகும் பேச்சு, கணவனுக்கும் மனைவிக்கும் திராவிடமே மூச்சு” என்ற கவிதைக்கு இலக்கண மாணவர்கள் என்பதும் நாடறிந்த ஒன்று. ஊரிலே பல இடங்களில் கொடியேற்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மாடி வீட்டிலே மாடியின் உச்சியிலே கழகக் கொடியை ஏற்றிவைக்க என்னை அழைத்தர்கள், கொஞ்சம் ஆச்சரியத்தோடு நான் தோழர் இளமுருகுவைப் பார்த்தேன் அவர் சொன்னார் இந்த விட்டுக்காரர் புதிதாகக் கட்சிக்கு வந்துள்ள வாலிபர் – பிரபல காங்கிரஸ் வாதியான பொன்னம்பலக் கவுண்டர் இவருக்கு சித்தப்பா லால்குடி மாநாட்டிற்குப் பிறகுதான் இவருக்குக் கட்சிப் பற்றே ஆரம்பம் என்றெல்லாம்.

பிறகு கொடியேற்று விழாக்கள் ஊர்வலம் முஸ்லிம் நண்பர் தலைமையிலே மாபெரும் பொதுக்கூட்டம் எல்லாம் இனிது நடைபெற்றன. பின்னர் அந்தக் கட்சிக்குப் புதியவர் வீட்டிலே சாப்பாடு. கட்சிக்குப் புதியவர் எங்களோடு பேசவே நாணமடைந்தார். நானும் நண்பர் சத்தியும் அவரைப் பார்த்தபோது ஒருவருக்கொருவர் ஆச்சரியப்பட்டுக் கொண்டோம் – அதைவிட ஒரு பெரிய ஆச்சரியத்தை அவர் எங்களுக்கு உண்டாக்கி விட்டார் – லால்குடி. மாநாட்டுக்குப் பிறகு கட்சிக்கு வந்த அந்த இளந்தோழர் – கல்லக்குடி போராட்டத்துக்கு முதல் நாள் இரவு இரண்டரை மணிக்கு தொண்டர் முகாமில் என்னையும் படைவரிசையில் – அதுவும் முதல் படையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று துடியாய்த் துடித்தார்! வயதான தாய் – இளம் மனைவி தன்னைத் தவிர வேறு யாரும் துணையில்லாத வீடு எதையும் பற்றிக் கவலைப்படாமல் “எழுதிக்கொள்க என் பெயரையும் அணி வகுப்பில் ” எனக் கர்ச்சித்திடுகின்றார் அந்தக் கட்சிக்குப் புதியவர் – கறுத்த மேனியும், சிரித்த முகமும் படைத்தவர் – கழகத்தின் கண்களான கண்ணியம் – கட்டுப்பாடு இரண்டையும் பெற்றவர். படையில் இடம் பெற்றார் சிறையில் ஆறுமாதப் பரிசும் பெற்றார் எங்கள் ஐவரில் ஒருவர்- கஸ்தூரி ராஜ் என்னும் கட்சிக்குப் புதிய காளை! அவருடைய விருந்துபசாரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இரவு திருச்சிக்கு இரண்டு மணிக்கு வந்தோம், தூக்கத்தையும் வருந்தி அழைத்தோம்.

மூன்றாம் நாள் :

அம்பிலில் ஒரு நாடகம் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்றதோடு கல்லக்குடி போர் பற்றிய விளக்கவுரையுமாற்றி போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்று வாக்களித்த பொதுமக்களைப் பாராட்டி இரவே திருச்சி திரும்பினோம். மறுநாள் ஜூன் மாதம் 18-ம் நாள் குளித்தலையிலே கூட்டம். கூட்டம் மாத்திரமல்ல டால்மியாபுரம் போராட்ட செயற்குழுவும் அங்கு கூடுவதாயிருந்தது. அந்த செயற்குழுவின் முடிவை திருச்சி மாவட்டம் மட்டுமல்ல; திராவிடமே எதிர்பார்த்த படியிருந்தது. அதிலேதான் போராட்ட தேதி குறிக்கப்படும் என்ற செய்தி பரவிற்று, மாலை 4 மணிக்கு செயற்குழு உறுப்பினர்கள் நான், அம்பில், மணி, இளமுருகு, தம்புசாமி, மாணிக்கம், குளித்தலை சாசா-ஆகிய ஏழுபேர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்ட சூழ்நிலைகளைப் பற்றி யோசித்தோம். வெளியிலே ஏராளமான தோழர்கள் குழுவின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். பொதுக்கூட்டத்தில் வெள்ளமெனத் திரண்டிருந்த பல்லாயிரவரும் குழுவின் முடிவைச் சொல்ல எப்போது வருவார்கள் என்று வழிமேல் விழிவைத்துக் கிடந்தனர். நம் கோரிக்கை கவனிக்கப்படாவிட்டால் ஜூலை மாதம் 15-ம் நாள் போரட்டத்தைத் துவங்குவதாகவும், அதற்குப் பொதுச் செயலாளர் அண்ணுவின் அனுமதியைக் கோருவதாகவும், தீர்மானிக்கப்பட்டது செயற் குழுவில் என்ற செய்தியைச் சொன்னதும் கூடியிருந்தோர் ஆடியதும் பாடியதும் அடடா நேரில் தான் – காணவேண்டும் வார்த்தையேது வர்ணிக்க! “போர்” என்றேன் – புறப்பட்டோம் என்றார்கள் விழியால்!

“ஜூலை 15” என்றேன் அவ்வளவு நாளா என்றார்கள் பெருமூச்சால்!

திராவிடர் இன எழுச்சிப் பெரும்படையின் முதற்களம் அமையும் வாய்ப்பை ‘கல்லக்குடி’ பெற்றது என்றாலும் நாள் குறித்த இடம் என்ற பெருமையை குளித்தலை பெற்றுவிட்டது. குளித்தலை இன்பம் கொஞ்சும் பேரூர்.

சிந்துபாடும் காவிரியின் ஓரத்திலே செழிப்பை சுமக்க முடியாமல் சேரன் ஏற்றிய கல்லைத் தூக்க முடியாமல் தலைகுனிந்த கனகவிசயர்களைப் போல வளைந்து நிற்கும் வாழைமரச் சோலைகள். வளம் நிறைந்த பூமிகள் வாட் கண்ணும் வற்றாத வீரமும் படைத்த மறவர்கள் உலவும் வீதிகள்.

குளிரை இன்பமென்றும் கூறுவர். குளிர்தழைத்த இடந்தான் குளிர்த் தழையாகி குளித்தலையாகி விட்டதோ என்னவோ என்று ஐயுறும் வகையில் அமைந்த நல்லூர். திராவிடத்தில் எத்தனையோ குளித்தலைகள் இருக்கின்றன ஆனால் அதை உணர முடியாமல் குருவித்தலை படைத்தவர்களும் சிலர் இருக்கிறார்களே என்பதை எண்ணும் போது, குளித்தலைகளிலே கொள்கை உரம் பெற்ற ராஜா “சோழகர்களும்” முத்துகிருஷ்ணர்களும் இருக்கிறார்கள் என்ற நினைப்பும் வருகிறது. இனிப்பும் தருகிறது. எதையும் முடியாது என்று சொல்லமாட்டார். அப்படிச் சொல்வது மற்றவரைப் புண்படுத்தும் என்று கருதுவார். எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி தூசியாக உதறிவிட்டுப் போகும் துணிவு கொண்டவர். சோழகர் குடும்பம் என்று சிறப்புப் பெற்ற சூரர்கள் குடும்பத்துச் செல்வர் தோழர் ராஜா.

இயக்கத்தின் வளர்ச்சிக்காக தக்கது ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் – எந்நேரமும் எண்ணிடும் சீலங்கொண்டவர் தோழர் முத்துகிருஷ்ணன். இந்த இருவரை மட்டுமின்றி எண்ணிறந்த தோழர்களை வீரர்களாகப் பெற்றிருக்கிறது குளித்தலை. குளித்தலை போன்ற பல ஊர்கள் இருக்கின்றன. உழைத்திடும் உத்தமர்களும் உரம் வாய்ந்த உள்ளங்கொண்டோரும் நிறைந்து கிடக்கும் பட்டி தொட்டிகள் பல உண்டு. அவைகள் எல்லாம் நமது பாசறை ஆகவேண்டும். சில பாசறைகளில் போர்க்கருவி அதிகமிருக்கும். அதைக் கையாள வீரர்கள் குறைவாயிருப்பார்கள். வீரர்கள் அதிகமாகவும் போர்க்கருவி குறைவாகவும் உள்ள பாசறைகளும் உண்டு. கருவிகளை அதிகமாக்கவும். கருவிக்கேற்றபடி வீரர்கள் தொகையைப் பெருக்கவும் அந்தந்த ஊர் முன்னணி வீரர்கள் முன்வரவேண்டும். போர்க்கருவி யென்றதும் இந்த அசகாய சூரத்தனம் வாய்ந்த அரசாங்கம் பயந்துவிடப்போகிறது – அது பயப்படா விட்டாலும், “பலாத்காரவாதி” என்ற பட்டத்தை நமக்கு சூட்ட, பகிரங்கப் பலாத்காரக் கட்சிகள் பறை சாற்றிவிடப் போகின்றன! போர்க் கருவிகள் என்று கழக உறுப்பினர்களையும், வீரர்கள் என்று செயற்குழு உறுப்பினக்களையுந்தான் குறிப்பிடுகிறேன். அச்சத்தால் அல்ல! அரசியலில் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தால்!

வெஞ்சமர் வராத நேரத்திலும் வீரர்களுக்கு பாசறைகளில் வேலையுண்டு! வேலின் கூர்மையை மழுங்காமல் பார்ப்பதும் – வாளின் வலிமையை சோதித்துப் பார்ப்பதும்- பயிற்சி பெறுவதும் படையைப் பெருக்குவதும்- இன்னோரன்ன பல! இதே போன்ற கடமைகளில் கழகம் பாசறைகளும் ஈடுபட வேண்டும்,

அறப்போர்களில் கலந்துகொள்ள மட்டுமே வீரர்களின் பட்டியல் பெருகவேண்டு மென்பதல்ல, ஆக வேலைகள் பல இருக்கின்றன அவர்களுக்கு, கழகத்தின் பெயரால் நடத்தப்படும் அல்லது கழகத்தின் தலைமையிலிருந்து அறிவிக்கப்படும் ஆக்க வேலைகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்பதுமல்ல; நகரத்து மக்களுக்கு ஏற்படும் அரசியல் கலவாத இடையூறுகளில் கூட பொதுநலத் தொண்டு புரியும் பண்பு, கழக வீரர்களுக்கு ஏற்பட வேண்டும். அத்தகைய படைகளை பட்டினங்களிலும், குக்கிராமங்களிலும் பெருகிடவேண்டும். கழகக் கொள்கைகட்கு குந்தகம் விளையாத முறையிலே- கழக வீரர்களிடத்திலும் கழகத்திடத்திலும் மக்கட்கு அன்பு வளர்கின்ற அளவிலே அந்தந் தொண்டு செய்யும் தன்மை தொடர்ந்திட வேண்டும்.

“மக்களைக் கவர்ந்திட” என்கிற வலை வீச்சாக அத்தகைய தொண்டு இருத்தலாகாது என்பதையும் மறந்திடக்கூடாது. அது போன்ற கண் துடைப்புகள் ஹரிஜன இயக்கம் போன்ற பெயர்களால் கதர்சட்டைக் காரர்கள் நடத்தும் நாடகங்கள். திராவிடநாடு பெற உழைக்கிறோம். திராவிட மக்களுக்காக திராவிட நாடு கேட்கிறோம். திராவிட மக்களின் தினசரி வாழ்விலும் இயன்ற அளவு அக்கரை காட்டிட வேண்டும். தினசரி வாழ்விலே ஏற்படும் அல்லல்களையெல்லாம் தவிர்த்திடத் தான் திராவிடம் பிரிய வேண்டும் என்று சொல்கிறோ மென்றாலும் – உதாரணமாக, ஒரு வீட்டிலே நெருப்பு பிடித்துக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம், இதுபோன்ற தினசரி வாழ்வுப் போராட்டங்கள் திராவிடம் பிரிந்தால் வராது என்று கூறிக் கொண்டு சும்மாயிருக்க முடியுமா? தீயை அணைக்க ஓடிடத்தான் வேண்டும். அப்படி ஓடிட ஒவ்வொரு ஊரிலும் ஒரு படையிருக்கவேண்டும். தீ அணைக்கும் படையையும் மிஞ்சிடும் தீரர் படையாக அது இருக்க வேண்டும்.

அநாதையாக ஒருவன் இறந்துகிடக்கிறான் – ஒருவன் என்ன – இந்த உத்தமர்கள் (?) ஆட்சியிலே தான் ஓராயிரம் பேர் அப்படி சாவார்களே பஞ்சாயத்து போர்டோ, நகரசபையோ அந்தப் பிணத்தை தூக்கலாமா கூடாதா என்று தீர்மானத்தை ஓட்டுக்கு விடுவதற்குள்ளாக. ஆகவேண்டிய காரியங்களை அமைதியாகவும் சட்ட வரம்பிற் குட்பட்டும் கவனித்திடும் நமது படை உடனே புறப்பட வேண்டும்.

ஊரிலே காலரா வரும்! எப்போதாவது, காங்கிரஸ் மந்திரிகள் வருவர்! காலரா வந்தால் தடுத்திடவும் காங்கிரஸ் மந்திரிகளுக்கு கருப்புக்கொடி காட்ட கழக உத்திரவு இல்லாவிட்டால் அவர்களைக் கண்டு கிராம நிலைமைகளை உரைத்திடவும் நமது படை தயாராயிருக்க வேண்டும்.

தொத்து நோய்களை விரட்ட, துஷ்ட தேவதைகளுக்குப் பூஜைபோட சிலர் கிளம்புவர் அவர்களைப் பழிப்பதுடன் அமர்ந்துவிடக்கூடாது! சுகாதார உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் கிராமங்களை சுற்றிச் சுற்றி அலைந்து – சூறை நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற நமது படை புறப்பட வேண்டும்.

கழகத் தோழர்கள் முயற்சியால் சுகாதார இலாகாவின் வேலைகளால் நோய் ஓடிவிடும். காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்ற கதைபோல – காளிக்கு பூஜை செய்தோம் காலரா ஒழிந்தது என்பார்கள் அவர்கள் நீங்கள் சீறி விழவேண்டாம் – சிரித்தால் போதும் – நீங்கள் பேச வேண்டியதில்லை. உயிருக்கு மன்றாடி ஊசி போட்டுக் கொண்டபின் பிழைத்துக் கொண்டவன் இருக்கிறானே; அவன் அவர்களிடம் பேசிக்கொள்வான் – கையில் கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றை அவிழ்த்து எறிந்துவிட்டு!

இப்படிப் பல முனையிலும் பணிபுரியும் படைவீரர்கள் கிராமாந்திரத் தெருக்களிலே நடைபோட வேண்டும். அப்போதுதான் சுதந்திர திராவிடம் தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் வலிமை பெறும்.

எங்கேயோ என்னையும் உங்களையும் அழைத்துக் கொண்டு போய்விட்டது குளித்தலை. சரி சாப்பிடுவோம் சாப்பாடு முடிந்தது. திருச்சிக்குப் புறப்பட்டோம். வழக்கம்போல இரண்டு மணியாயிற்று படுக்கையில் விழுவதற்கு!

ஜூன் 19

1946ம் ஆண்டில் பெரியதோர் சதிவழக்கில் நமது இயக்க நண்பர்கள் சிக்கவைக்கப்பட்டு சிறையிலே கிடத்தப்பட்டனர். அவர்களை மீட்டிட வழக்கு நடத்துவதற்காக அறிஞர் அண்ணா அவர்கள் பெருமுயற்சி எடுத்தும் கொண்டார்கள். அப்போதெல்லாம் நாம் திராவிடர் கழகமாக இருந்தோம். அந்த வழக்கிற்கு துணை புரிய திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லாவிட்டாலும்கூட அண்ணாவும் மற்றும் சிலரும் தனியாக முயற்சியெடுத்து திருச்சியிலே நீதிதேவன் மயக்கம் நாடகத்தை நடத்தி தானே நடித்து ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் அந்த வழக்கின் நிதிக்காக அளித்தார். அய்யா அண்ணா தகராறு என்று அப்போது பேசுவார்களே அந்த தகராறுக்கு இந்த வழக்கு ஒரு காரணம், இத்தகைய பிரசித்தி பெற்ற வழக்கிற்குத்தான் கரூர் கலவர வழக்கு என்று பெயர்.

அந்தக் கரூரிலே ஜூன் 19ல் “டால்மியாபுர விளக்கக் கூட்டம்” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் குழுவும் கரூர் வந்து சேர்ந்தது. அன்றைய தினம் எங்களுடன் இன்னொருவர் வந்து சேர்ந்து கொண்டார் நமது மாநாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் இருவர் பெயர் அடிபடுமல்லவா – இசை முரசு அனிபா – இன்னிசைச் செல்வர் செல்லமுத்து. இருவரில் ஒருவரான செல்லமுத்து அன்று முதல் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கூட்டத் துவக்கத்திலும் சரி – எங்கள் பிரயாணத்தின்போதும் சரி – சங்கீதத் தென்றல் வீசி வந்தார். சுறறுபபயணங்களின் போது செல்ல முத்து கூட இருந்தால் சுவைக்கும் குறைவில்லை – சுறுசுறுப்புக்கும் குறைவில்லை. அவ்வளவு பொறுப்புடன் காரியங்களை கவனித்துக்கொண்டு நம்மையும் களிப்புக் கடலில் ஆழ்த்திடும் கருவியாகவும் அமைவார். அவர் கரூர் கூட்டத்திலே இசை மழை பொழிந்தார். பின்னர் நாங்கள் பேசினோம். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களுக்கு மேற்பட்ட பெருங்கூட்டம். கரூர் என்றால் கலவர வழக்கு நினைவுக்கு வருவது போலவே – நண்பர் கரிகாலனும் எதிர் வந்து நிற்பார். செயல்வீரர் முருகேசனும் கண்ணில் தோற்றமாவார் பெரியார் உணவு விடுதி நண்பர்களும் பிரியமுடன் எதிர்வருவர்.

இவ்வளவு மெலிந்த நிலையில் துரும்பான உடம்பை வைத்துக்கொண்டு இந்தக் கரிகாலன் இப்படிப் பம்பரம் போல் சுற்றி பகுத்தறிவுப் பணி புரிகிறாரே: என்று எண்ணந்தான் தோன்றும்.

அடக்கம் தன்னல மறுப்பு – அளவுகடந்த ஆர்வம். அனைத்திற்கும் எடுத்துக்காட்டு போல அன்பர் முருகேசனார்.

அவரும் எம்முடன் திருச்சி சிறையில் இருந்தார். ஒரு நாள் மாலை ஒருவர் என்னிடம் அவசரமாக வந்து “சார், காமராஜ நாடார் வருகிறார் சார்” என்றார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது, ஒருவேளை ஜெயில் விசிட்டராக வருகிறாரோ என எண்ணினேன். அவ்வளவு அக்கரை அவர் போன்ற பெரிய மனிதர்களுக்கு எப்படி ஏற்படும் என்ற பதிலும் உடனடியாக மனதில் உதயமாயிற்று. எதற்கும் பார்ப்போம் என்று அறையை விட்டு வெளிவந்து பார்த்தேன். காமராஜரைக் காணோம், கரூர் முருகேசனார் வந்து கொண்டிருந்தார். திடீரெனப் பார்க்கும்போது முருகேசன் காமராஜரைப் போன்றவர் தோற்றத்தில்! தோழர்களே “தோற்றத்தில்’ என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வயதில் கூட ஒற்றுமை இருக்கலாம். இருவருக்குமிடையே பெரிய வேற்றுமை வளர்ந்து கிடக்கிறதே. கரூர் முருகேசன் இன உணர்ச்சி பெற்றவர் திராவிட தேசத்தின் விடுதலைப் போரின் படைவீரர் அந்நிய ஏகாதிபத்தியத்தின் எடுபிடி அல்ல அவர்! சரிதான் நண்பர் கிண்டல் செய்திருக்கிறார் என்று சிரித்துக்கொண்டேன், கரூர் முருகேசனை ஓரளவுக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டதாக அறிகிறேன். அவரையும் கரிகாலன் போன்றவர்களையும் கரூர் வட்டாரம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இரவு பத்து மணிக்கு கரூரில் கூட்டம் முடிவுற்றது. நாங்கள் காரில் வந்து ஏற வேண்டுமே! மேடையை விட்டு இறங்கிய நான் எப்படித்தான் காரிடம் போனேன் என்று எனக்கே தெரியாது. கார் நிற்பது தெரிகிறது. அதைச் சுற்றிக் கூட்டம். துணைக்குவந்த தோழர்கள் எல்லாம் தொலைவில் தூக்கி எறியப்பட்டார்கள். நான் காரிடம் கஷ்டப்பட்டு கொண்டுவந்து சேர்க்கப்பட்டேன். காருக்குள் இருக்கும் கருணாநிதியைப் பார்ப்பதற்காக அவசரப்பட்ட தோழர்கள் என்னைப் பிடித்து இழுத்துவிட்டு காருக்குள் தலையை நீட்டி ‘கருணாநிதி வாழ்க’ என்று முழக்கம் போட்டார்கள். சுருணாநிதி காரைப் பிடிக்க முடியாமல் ஜன சமுத்திரத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு எப்படித் தெரியும், இந்த நிலை கரூரில் மாத்திரமல்ல; எந்த ஊரிலும் இப்படித்தான்! எனக்கு மட்டுமல்ல; நமது முன்னணி வீரர்கள் அனைவருக்கும்!

இந்த இன்ப வேதனையிலிருந்து சொற்பொழிவாளரை மீட்டிடும் பணியை ஆர்வமுள்ள தோழர்கள் அவர்களாகவே உணர்ந்து செய்திடுதல் சாலச் சிறந்ததாகும். கடைசியில் காருக்குள் நுழைக்கப்பட்டேன். கார் பெருஞ் சப்தமுடன் மக்களைப் பயமுறுத்தி பிறகு நகர்ந்தது. கரூரில் சாப்பிடுவதற்கு நேரமில்லாமல் யாரையும் சந்திக்காமலே திருச்சி நோக்கிப் புறப்பட்டோம்.

ஒரு அரைமைல் வந்திருப்போம். ஒரு மதில்புறத்தில் இறங்கி இளைப்பாற அமர்ந்தோம். மணி “ஒரு சிகரெட்டா வது பிடிப்போம்” என்று சொல்லியபடி சட்டைப் பையில் கையை விட்டார். “சார் பர்ஸ் காணம் சார்” என்றார். வாழ்க்கையில் வறுமைத் தேவியை மணந்துகொண்ட யாரோ ஒரு இந்நாட்டு மன்னன், மணியிடமிருந்த முப்பது ரூபாயைக் கொண்டு ஒருமாத ஜீவியத்தை நடத்தி விடுவான் என்று பேசிக்கொண்டோம். தோழர் முத்து சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லாமலிருந்ததையும் சொல்லிவிட்டார். அவருடைய கால் ஒரு செருப்பை இழந்துவிட்டதாம். அதைச் சொல்லி முடிவதற்குள் அம்பில் அலறினார்; “சார் பேனாவையும் காணும் சார்!” என்று! எனக்கு சிரிப்பே வந்துவிட்டது. அவர் அடிக்கடி சொல்வார்; “நான் கள்ளன் என்னிடம் யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று ! சாதிப் பெருமையால் அல்ல – தமாசுக்காக! ‘கள்ளரிடமே ஒரு கள்ளர் கைவரிசையைக் காட்டி விட்டார்’ என்று கூறி எல்லோரும் சிரித்தோம். சிரித்துக்கொண்டிருக்க நேரமில்லை. அன்றிரவு திருக்காட்டுப்பள்ளியில் ஒரு நாடகத்திற்கு தலைமை வகிக்க வேண்டும். அது கரூரிலிருந்து சுமார் அறுபது மைல் தூரத்தில் இருக்கிறது. ஆகவே நேராக அங்கு புறப்பட்டோம். இன்னும் சாப்பிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இரவு 1 மணிக்கு திருக்காட்டுப்பள்ளி போய்ச் சேர்ந்தோம். புலவர் முருகையா குழுவினர் நடித்த நாடகத்திற்கு தலைமை யேற்றுப் பேசிவிட்டு, பழம்பெரு நண்பர் தோழர் புலவர் குழந்தையா அவர்களுடன் அளவளாவிவிட்டு இரவு மூன்று மணிக்கு ஆளுக்கு இரண்டு இட்லிகளைப் புட்டுப் போட்டுக்கொண்டு நேராகத் தஞ்சைமாநகரம் சென்று விட்டோம் தூங்குவதற்காக!

விடிந்தது:

சில மணி நேரங்களில் பொழுது விடிந்துவிட்டது. நாங்களும் புறப்பட்டோம். காலை பத்துமணி சுமாருக்கு சேலம் போய்ச் சேர்ந்தோம். சேலத்தில் சில வேலைகளை முடித்துக்கொண்டு பிற்பகல் இரண்டு மணிக்குப் புறப்பட்டு கரூருக்குப் பக்கமுள்ள வேலாயுதம் பாளையம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். புகளூர் பாலத்திலிருந்து பெரியதோர் ஊர்வலம் புறப்பட்டது, அந்த ஊர்வலத்தின் சிறப்பைக் காணச் சகிக்காத ஒரு இளைஞர் கையிலே – ஒரு செங்கொடியை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜே” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவரே தன்னைத்தானே அப்புறப்படுத்திக் கொண்டார். மாநாடு நடத்தும் விதத்திலே வேலாயுதம் பாளையம் கூட்டம் நடைபெற்றது. சோஷலிஸ்டு கட்சியிலேயிருந்த ஒரு தோழரும் அன்றைய தினம் தி.மு.கழகத்தில் சேர்ந்து திராவிடப் பிரிவினைக் கொள்கையை வலியுறுத்திப் பேசினார். நான் முன்பொரு முறை அந்த வட்டாரத்திற்குப் போயிருந்த சமயம் “கொலைஞரே வருக என்று துண்டு அறிக்கை வெளியிட்டிருந்த ஒரு கல்லூரி மாணவத் தோழரும் அன்றைய தினம் மேடையிலேறி திராவிட முரசு கொட்டினார். மாநாடுகளிலே ஒழுங்குமுறைகள் எப்படி கடைப்பிடிக்கப்படுமோ அந்த வகையிலே கூட்டத்தை நடத்திச் சிறப்பித்தார்கள், வேலாயுதம் பாளையம் வீரர்கள், நான் பேச ஆரம்பிப்பதற்கு முன் கூட்டத் தலைவரால் ஒரு விதவைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது பல்லாயிரவர் முன்னிலையில்! அன்றைய தினம் என் பேச்சும் அதை யொட்டியே அமைந்தது.

“இங்கே இந்த மேடையிலே ஒரு விதவைக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கிறோம், வாழ்விழந்த ஒரு வனிதாமணிக்கு மீண்டும் வாழ்வளிக்கும் விழா நடத்தியிருக்கிறோம். நம்முடைய திராவிடமும் விதவைதான்! வாழ்விழந்த மங்கைதான்! அந்த மறுமணத்தை நடத்த மறுமலர்ச்சி வழங்க திராவிட விதவைக்குத் திருமணம் செய்து வைக்க வாழப் போனவளுக்கு வாழ்வுதர – செயல் முறைகள் வகுக்கத் தான் இங்கு கூடியிருக்கிறோம். நம்முடைய முயற்சி கைகூடும் என்பதிலே நமக்கு நம்பிக்கை வளர்கிறது.” நாசமாய்ப் போக’ என்று சபித்தவர்கள் எல்லாம் நாட்டைக் காக்கும் நல்ல தம்பிகள் வாழ்க என வாழ்த்துகின்றனர். ‘கொலைஞரே’ என்று போன கூட்டத்தில் அழைத்தவர் இந்தக் கூட்டத்திலே ‘கலைஞரே எனக் கனிவுடன் அழைக்கிறார். கடந்து போன செயலை எண்ணி கண்ணீரும் வடிக்கிறார். வேறு அணியில் இருந்தவர்கள் நமது அணியிலே காணப்படுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் திராவிடத்தின் மறுமணத்திற்கு மாலைகட்ட – மலர் பறிக்க மாற்று முகாமில் இருந்தவர்களெல்லாம் மனந்தெளிந்து ஓடி வருகிறார்கள்.”

பேச்சின் பீடிகையாக இதை வைத்துப் பின்னர் கழகத் திட்டங்களையும் – கல்லக்குடி போர்க்களத்தையும் பற்றி விளக்கவுரை யாற்றினேன். மாவட்ட சுற்றுப் பயணத்திலே ஒவ்வொரு ஊர் கூட்டத்திற்கும் ஒரு சிறப்பு இருந்தது போலவே வேலாயுதம் பாளையத்திற்கும் தனிச் சிறப்பு இருந்தது. அந்தச் சிறப்புக்குக் காரணம் செயல் வீரர்கள் பலர் என்றாலும், அவர்களைச் செம்மைப் படுத்தி சிங்க ஏறுகளாக்கிய பெருமையும், அந்த வட்டாரத்திலே நல்லதோர் மலர்ச்சி ஏற்படச் செய்த புகழும் தோழர்கள் ரத்தின வேலு, மூர்த்தி இருவருக்கும் உரியதாகும். ரத்தின வேலு கல்லூரி மாணவராய் இருக்கும்போதே கழகக் காளை – அறிவுப் பாசறையில் பெற்ற அனுபவங்களையும், ஆர்வத்தால் எழுந்த எண்ணங்களையும் ஒன்றாக்கி கழகப் பணியைத் தீவிரமாகச் செய்து வருகிறார். தோழர் மூர்த்தி அமைப்புடன் காரியமாற்றுபவர் என்ற கீர்த்திக்கு உரியவர். புகளூர் வட்டாரம் அவர்களின் பணியினால் கழகக் கோட்டையாக வேண்டும். காவேரியின் கரைகளை இணைக்கும் அந்தப் பெரிய பாலம், புகளூர் பகுதிக்கு எப்படிப் புகழ்தேடித் தந்திருக்கிறதோ – அதுபோல மூர்த்தியும் ரத்தினவேலும் அந்தப் பகுதியிலே கழகத்தின் புகழ் விளக்குகளாவார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

கூட்டம் முடிந்த பிறகு வட்டாரத்துத் தோழர்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டனர். தோழர் ரத்தினவேலு, கழகக் கட்டிடம் கட்டுவதற்காக ஒரு இடத்தை நன் கொடையாகத் தருவதாகவும் கட்டிட நிதிக்கு நான் ஒரு நாடகம் நடத்தித் தரவேண்டுமென்றும் கேட்டார்கள். போராட்டம் முடியட்டுமென்று கூறினேன். நடத்தித் தரவும் இருக்கிறேன்.

கழகக் கட்டிடங்கள் எழுப்பிட வேண்டுமென்று தோழர்கட்கு ஆசையிருக்கிறது. ஆனால் நாம் பிர்லாக்களின் சொந்தக்காரர்களாக இல்லையே என் செய்வது! குடிசை உருவத்திலாவது நமக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு இடம் தேவை. சிறுகக் கட்டியாவது பெருக வாழ்ந்திடவேண்டும். மாயவரம் மாநாட்டிலே சொன்னாராம் அப்போது நான் மரணப் படுக்கையில் இருந்தேன்.

“என் கையிலே ஆயிரம் கட்டிடங்களின் சாவிகள் இருக்க வேண்டும். அந்த சாவிக் கொத்துடன் தான் சுற்றுப்பயணம் செய்யவேண்டும். கிளைக்கழகம் உள்ள ஊர்களுக்குச் சென்றால் இரவு எந்நேரமாயினும், செயலாளர் முதலியவர்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல், நமது கட்டிடத்தை நானே இருந்து இளைப்பாறுவதற்கு என் கையிலே அந்த சாவிக்கொத்து இருக்க வேண்டும்.”

இந்த ஆசையை மாயூரத்திலே நமது அண்ணா வெளியிட்டார். ஆசைகளைத்தான் வெளியிட முடியும். அதற்கு ஆலோசனைகளையுமா வெளியிட வேண்டும். பிறகு ரத்தினவேலுக்கள் மனைகளை நன்கொடையாகத் தரவேண்டும். செயல்வீரர்கள் புறப்பட வேண்டும். நான் முன்பு குறிப்பிட்டேனே; அது போல வீடுகட்டும் படை கிளம்ப வேண்டும். கழக மாளிகை அமைய வேண்டும். மாளிகையா? என்கிறீர்களா? ஆமாம் மாளிகைதான்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு! நாமே சேறு குழைத்து – நாமே கீற்று வேய்ந்து நாமே கட்டி முடித்த சிறு குடிசை நமக்கு மாளிகை தான்!

நாடகம் ஆடுவதும் அதிலே நஷ்டம் வந்துவிடுமோ என்று நடுக்கம் ஏற்படுவதும் மழை வந்து விடாதே என்று வானத்தைப் பார்த்து பெருமூச் செறிவதும் எதற்காக!

ஊருக்கொரு ரத்தினவேலு இடம் வழங்க! ஆளுக் கொரு வேலை அமைந்துவிடும் மாளிகை ! தேனீக்களிலும், திருத்தணிகளிலும், நம் கூட்டங்களில் வீசி எறியும் கற்களைக்கூட கழக மாளிகையின் ஒரு பக்கத்துச் சுவருக்கு உபயோகப்படுத்தலாம். தேனியிலே நெடுஞ்செழியன் மீது போடுவதற்கு தூக்கிய பெரிய பாரங்கல்லை கழக மாளிகையின் வாயிற்படிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் தான் உலகம் வியக்கும் கட்டிடத்தைக் கட்டியிருக்கிறோமே – தாலமுத்து நடராசன்களின் எலும்புகளால் வேலாயுதம், பாண்டியன்களின் – நரம்புகளால் – லால்குடி நடராசன், நெல்லிக்குப்பம் மஜீதுகளின் பிணங்களால் கையிழந்தோர் காலிழந்தோர் தந்த ரத்தச்சேற்றால் பெரியதோர் தியாக மாளிகை, வானத்தை முட்டும் உயரமுடையதாய் – தமிழர் மானத்தைத் தரணிக்கு அறிவிக்கும் தகைமை உடைய தாய் -தி.மு.க. என்ற பொன்னெழுத்துக்களை பொறித்து திசையெட்டும் ஒளிபரப்பி தியாகர், நாயர், பனகல், செல்வம், அழகிரி ஆகியோர் திருப் பெயர்களை தென்றலிலே மிதக்க விட்டு ஒலி யெழுப்பும் ஒப்பற்ற மாளிகை – உணர்ச்சி மாளிகை திருமலை நாயக்கன் மஹாலை தாஜ் மஹாலின் பெருமையை – மிஞ்சும் விதத்திலே அமைந்த மாளிகை கொஞ்சு தமிழக் குடும்பத்தாரின் கொலுமண்டபம் – கொள்கையை விளக்கிடும் மணி மண்டபம்.

அந்த மகத்தான தியாக மன்றத்தை எழுப்பியிருக்கிற நாம், உட்கார, உரையாட, படிக்க, தலைவர்கள் வந்தால் படுக்க ஒரு சாதாரணக் குடிசையை எழுப்பிக் கொண்டாலே போதுமானது. ஊருக்கோர் கழகம் கழகத்திற்கோர் இடம் அவசியம் தேவை அதை அமைக்க முன் சொன்னபடி ஆற்றலும் முறையும் நிச்சயம் தேவை.

உம்; சரி – அந்த வேலையைப் பார்க்க உடனே கிளம்புங்கள் நாங்கள் தூங்கவேண்டும்; திருச்சிக்குப் போகிறோம். இப்போது புறப்பட்டால்தான் வழக்கம்போல் இரண்டு மணிக்காவது தூங்கமுடியும்.

வழியனுப்பினார்கள் புறப்பட்டோம்.

திருச்சியிலே :

ஜூலை 21 திராவிட மெங்கும் கண்டன நாள். திராவிட மக்களின் அறிவை அழித்திட ஆச்சாரியார் சர்க்கார் எடுத்த முயற்சியை எதிர்த்து நின்றோரின் எச்சரிக்கை முழக்கம் தரணியெங்கும் கேட்ட நாள். ஏற்கனவேயிருக்கும் கல்வித்திட்டம் கவைக்குதவாது என்று கூறி புதியதோர் திட்டத்தை சென்னையின் பிரதமர், மன்னிக்க வேண்டும் கவர்னர் பிரகாசாவால் பிரதமராக்கப்பட்டவர் கொண்டுவந்தார். பெருமான் பெரிய பெருமான் ஆன கதையாகத்தான் அந்தத் திட்டம் இருந்ததே தவிர சிறுவர்களை சீரான வழியில் இழுத்துச் செல்லும் திட்டமாக இல்லை. மூன்று மணி நேரம் சிறுவர்கள் படித்தால் போதும். மீதி நேரத்தில் அவரவர்களின் தகப்பனார் தொழில்களைக் கற்றுக்கொண்டால் போதுமானது என்பதே ஆச்சாரியர் அவர்களின் அவதார மூளையிலே உதித்த அற்புதமான
திட்டம், சிறுவர்கள் தொழில் முறையில் முன்னேற வேண்டு மென்பதை யாரும் மறுக்கவில்லை. எந்த வயதுச் சிறுவர்கள்? எப்படித் தொழில் கற்றுக் கொள்வது? என்ற கேள்விகளுக்கு கிடைத்த பதில்தான் விநோதமானது. பதினோரு வயதுக்கு உட்பட்டவர்கள் . பள்ளியில் மூன்று மணி நேரம் கழித்தது போக மீதி கெரத்தில் வீட்டுக்குச் சென்று தந்தையின் தொழிலைப் பயிலவேண்டும். மூன்று மணி நேரப் படிப்பு உத்திரவு தொழில் கற்றுக்கொள் என்பது உபதேசம் இந்த உபதேசத்தை வாழ்க்கைப் பிரச்சினை தீராமல் வயிற்றுத் தீயை அடக்கமுடியாமல் தவித்து நிற்கும் தரித்திர காராயணர்களாம் தந்தைகள் எந்த அளவுக்குக் கடைப்பிடிப்பார்கள் என்பதை அனுபவ சாத்தியமாக உணர்ந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

காலையிலே விடிவதற்கு முன் கலப்பை எடுத்துச் சென்று இரவு 12 மணிக்கு வீடு திரும்பி தூங்கிய குழந்தை தகப்பன் முகத்தைப் பார்க்காமல் சில மாதங்கள் கழித்து தந்தையை மாமா என்று கூப்பிடும் நிலையுள்ள குடும்பங்கள் எத்தனை இந் நாட்டில்!

பள்ளியிலே தொழிற் கல்வி போதிக்கப்படுகிறது என்று சொன்னாலும் அதிலே அர்த்த மிருக்கிறது. தொழில் கல்வி கூட மேல் நாடுகளில் எப்படி போதிக்கப் படுகிறது? சிறுவர்களுக்கு எந்த வேலையின் மீது ஆசை விழுகிறது. என்பதை ஆராய்ந் தறிந்து அந்தத் துறையிலே அவர்களைப் பழக்கிடும் தொழிற் கல்வி முறைதான் சிறந்தது எனக் கொள்ளப்பட்டு அவ்வழியிலே மேல் நாடுகள் சென்று மேன்மையுறுகின்றன!

ஆளும் வர்க்கம் பாதுகாக்கும் வர்க்கம் தொழில் வாணிபம் முதலிய வர்க்கம் என்று அரசியலிலே மூன்று முக்கியமான உன்னதமான பிரிவுகளைப் பிரித்துக் காட்டி, பிறப்பின் காரணமாக இல்லாமல் சிறப்பின் காரணமாக அந்தந்த வர்க்கத்தில் இடம்பெற எந்த மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதையும் எடுத்துக் காட்டி அத்தகைய மூன்று பிரிவிற்கும் தேவையான கல்வியை அவர்களுக்கு இளமையில் போதிக்க வேண்டுமென்றும், யார் எந்தப் பிரிவு கல்வியை விரும்புகிறார்கள் என்று பார்த்து அந்தத் துறைக் கல்வியை அவர்கட்கு வழங்க வேண்டுமென்றும் உலகக் கல்வித் திட்டத்திற்குக் கைகாட்டியாக இருந்த பேரறிஞன் பிளேட்டோ எழுதி வைத்திருக்கிறான். ஆனால் ஆச்சாரியாரின் மூளையிலே ஐம்பது வருட காலமாக ஊறிவந்த திட்டத்தை நிறைவேற்ற இப்போதுதான் சமயம் வாய்த்தது என சந்தோஷப்படுகிறார். அவனவன் குலத்தொழிலை அவனவன் செய்யவேண்டுமென்று திராவிட காட்டிலே ஒரு கல்வித் திட்டத்தின் மூலம் சொன்னால் அந்தத் திட்டத்திற்கு வர்ணாஸ்ரமத் திட்டம் என்ற பெயரைத் தவிர வேறு பெயர் அளிக்க முடியாது. ஏனெனில் பிராமண சத்ரிய வைஸ்ய – சூத்ர என்ற பிறப்பின் காரணமாக எழுந்த பிரிவுகள் ஒரு பெரிய சமுதாயத்தின் நடுவிலே எழுந்த வெடிமருந்துச் சாலையாகி விட்டன. அந்த வெடிமருந்துச் சாலைக்கு தீ வைத்தால் பெரியதோர் பயங்கர விபத்து ஏற்படும் என எண்ணித்தான் – வெள்ளத்தால் வெடி மருந்தை ஈரமாக்கிக் கரைத்துவிட நாட்டிலே நல்லோர்களால் முயற்சி எடுக்கப்பட்டது. அமைதி நிறைந்த எதிர்ப்பைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறேன். ஆனால் ஆச்சாரியாருக்கு அது பிடிக்கவில்லை. வெடி மருந்துச் சாலையில் நெருப்பு வைக்கும் போக்கிற்கே மற்றவர்களைத் தள்ளி விடுகிறார். ஆபிரகாம் லிங்கன் படித்தானா? கிருஷ்ண பரமாத்மா பள்ளிக்குச் சென்றாரா? என்ற கேள்விகள் ஆச்சாரியார் திட்டத்துக்கு அனுசரணையாக எழுகின்றன. எங்கும் எதிலும் விதிவிலக்கு உணடு. விதிவிலக்கிற்கு உட்பட்டவர்கள் லிங்கன் போன்றவர்கள்.

பள்ளிக்குச் செல்லாமலே கிருஷ்ணன் பரமாத்மா ஆனான் என்ற வாதத்தை பாலர்களிடம் கூறினால் அவர்களும் பரமாத்மாவாகத்தான் ஆசைப்படுவார்கள். பரமாத்மா ஆக என்னென்ன செய்யவேண்டும் யோசிப்பார்கள். பள்ளிக்குச் செல்லாதிருக்க வேண்டும். பகலிலே பக்கத்து வீட்டிலே வெண்ணெய் திருட வேண்டும். குளத்திலே நீராடும் பெண்களின் சேலைகளைத் திருடவேண்டும். மாற்றான் மனைவி ராதாவைக் கொஞ்ச வேண்டும். இந்த வழிகளையெல்லாம் கடைப்பிடித்து அவர்கள் பரமாத்மா ஆகிவிட்டால் என்ன செய்வது? கிருஷ்ணனை பரமாத்மா என்று சொல்லுகிற பாட திட்டங்கள் கூட பள்ளியிலே இருக்கக்கூடாது என்கிறோம் நாம். ஆனால் ஆச்சாரியார் பக்தர்கள் அவனை ஆபிரகாம் லிங்கனுடன் சேர்த்து எழுதிடுகின்றார்கள்.

“கடவுள் உண்மையானவர் – அவர் சாபங்கொடுத்தார் கோபங் கொண்டார் பொய் சொன்னார் என்பது போன்ற கதைகளையெல்லாம் பிள்ளைகளுக்குப் பாடமாக்காதீர்கள்” என்ற கருத்தை பிளேட்டோ வலியுறுத்திச் சொல்கிறான். ஆனால் இங்கிருப்பவர்களோ மூன்று மணி நேரமும் மும்மூர்த்தி லீலைகளைப்பற்றி சிறுவர்களுக்குப் போதித்துவிட்டு கற்ற பாடங்களை கண்ணன் காட்டிய வழியில் செய்து காட்டிட சிறுவர்களுக்கு மீதி நேரத்தையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

3 மணி நேரப் படிப்பை குழந்தைகள் கொண்டாட்டமுடன் வரவேற்கிறார்கள் என்று ஆதாரம் தேடுகிறார்கள் ஆச்சாரியார் பக்தர்கள், இரண்டுதார திருமணம் வேண்டுமா என்று ஸ்திரிலோலனைக் கேட்டால் என்ன சொல்லுவான்? குடிகாரனிடம் மதுவிலக்குபற்றி அபிப்பிராயம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

குழந்தைகட்கு என்ன தெரியும் எதிர்காலம்? கவலைப் படவேண்டியவர்கள் நாமல்லவா? இப்புதிய திட்டத்தால் பூத்துவரும் புதிய சமுதாயம் பொட்டல் காடாகிவிடும் என்று நாடு எச்சரித்தது நல்லோர் எச்சரித்தனர் – திட்டம் தருவோரின் கட்சித் தலைவர்களே எதிர்த்தனர் ஏன்; பின்னர், “நிறுத்தி வைத்திடுக” என்று சட்ட சபையே தீர்ப்புக் கூறியது – எதையும் கேட்கும் எண்ணம் வர்ணாஸ்ரமத்தின் வாரிசுக்கு இல்லை.

ஆகவே ஜூன் மாதம் 21ம் நாள், நாடு முழுதும் தி.மு.கழகத்தினரால் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது; காட்டுமிராண்டிக் கல்வித் திட்டத்தை எதிர்த்து!

அந்த நாளிலே நான் திருச்சியிலேயுள்ள மதுரை ரோடு தி.மு.கழகத்தின் திறப்பு விழாவை நடத்தி வைக்கச் சென்றிருந்தோம். அன்று காலை தோழர் கண்ணதாசனும் வந்திருந்தார். தஞ்சையிலேயிருந்து நண்பர் சண்முக வடிவேலும் வந்திருந்தார், அந்தத் தி.மு. கழகத்தின் திறப்புவிழாவிற்கு மூலவர்கள் முஸ்லிம் இளைஞர்கள், பீடி சுற்றும் தொழிலாளிகள். அந்தத் தொழில் நண்பர்களுக்கிடையே தூண் போன்றவரும் நுணிவுடை நெஞ்சு பெற்றவருமான தோழர் ஐ. எம். ஷரீப் என்பாரின் சிறப்பான முயற்சியால் அக் கழகத் துவக்க விழா நடைபெற்றது. கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பீடித் தொழிலாளர்கள் அதுவும் முஸ்லீம் இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்களே என்று ஆத்திரமடைந்த ஒரு பீடி முதலாளி – அவரும் முஸ்லீம் தான் நல்ல பணபலமுடையவர். ஆளும் கட்சியின் ஆசி தேவையென்பதற்காக அடிமை பேரிகை கொட்டும் ஒரு சில முஸ்லீம் பெரியவர்களைப் போன்ற பண்பு பெற்றவர் அவர், தானே முன்வந்து நின்று கூட்டத்திலே சோடா புட்டிகளை விசி, கம்பு கொண்டு மக்களைத் தாக்க முற்பட்டார். அவர் முயற்சியால் விழாவின் பெருமை வீழ்ந்துவிடவில்லை. அந்த வட்டாரத்து மக்களின் பலமான ஆதரவு மதுரை ரோடு தி.மு.கழகத்திற்கு கிடைக்க அது ஒரு நல் வாய்ப்பாயிற்று!

ஏனோ தெரியவில்லை ஒரு சில முஸ்லிம் பெரியவர்களும் வாலிபர்களும் நமது திராவிட இயக்கத்தை எதிர்த்திடவும் அவதூறாகப் பேசவும் எழுதவும் முற்பட்டிருக்கின்றனர். நபிகள் நாயகம் விழாக்களுக்கு நமது அண்ணாவும், பெரியாரும் போகாமல் நடந்தது கிடையாதே பாகிஸ்தான் பிரிவினைக்கான ஆதாரம் நம்மைப் போல யாரும் தந்தது கிடையாதே -அவர்களும் திராவிட முஸ்லீம்கள்தான் என்ற எண்ணத்தை நாம் மாற்றியது மில்லையே – அப்படியிருக்க அவர்களில் சிலர் நம்மீது காய்வானேன் – பாய்வானேன்?”

என்ற கேள்விகள் நம் தோழர்களிடமிருந்து கிளம்புகின்றன. இதற்கெல்லாம் ஒரே பதில் “எல்லா முஸ்லிம்களும் நம்மை எதிர்ப்பதில்லை எதிர்ப்பவர் ஒரு சிலர் – அதற்கும் காரணம்; ஆளுங் கட்சியின் அபிமானத்தைப் பெற!” என்பதைத் தவிர வேறில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான் அந்தப் பீடி முதலாளியும்.

இந்த எதிர்ப்புகளால் நாம் குறைந்து விட்டோமா? இல்லை! இல்லை!! அதே நான் மாலையில் திருச்சியில் நடை பெற்ற ஊர்வலமிருக்கிறதே: அது சொல்லுகிறது “ஊதாரிகளின் உறுமல்களால் உயர்த்த லட்சியத்தை அழிக்க முடியாது” என்ற உறுதிமொழியை!

மாலையிலே உறையூரில் பொதுக்கூட்டம். கல்வித் திட்டத்தை எதிர்த்து மக்கள் குரலெழுப்பினர். கண்ணதாசன் எங்களிடம் விடைபெற்று அன்று மாலை கும்பகோணம் சென்றுவிட்டார். இரவு பத்து மணிக்கு சென்னையிலேயிருந்து “டிரங்க்கால் ” வந்தது,

“திரும்பிப்பார்” படம் (சென்சார்) தணிக்கை போர்டில் தகராறு என்றும், என்னை உடனே வரும்படியும் மாடர்ன் தியேட்டர்சார் கூப்பிட்டார்கள். மறுநாள் அரியலூரிலே 22ந் தேதி கூட்டம். 21ந் தேதி இரவு ‘டிரன்க் கால்’ வருகிறது. அரியலூர் கூட்டத்திற்கு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டேன்.

திரைப்படங்கள் வெளியிடப் படுவதற்கு முன் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. தக்கோர் சிலர் கொண்ட ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு, வெளியிடப்பட இருக்கும் படத்தைப் பார்த்து படத்திலேயுள்ள ஆபாசமான காட்சிகளை – மக்களைத் தீய வழிக்கு இழுத்துச் செல்லும் கருத்துக்களை – இன்னோரன்ன பலவற்றை விலக்கிவிட்டு மீண்டும் வெளியிடலாமென உத்திரவு தரும் உரிமை வாய்ந்ததாகும். அந்தத் தணிக்கை நிலையம் இப்போது மத்திய சர்க்காரின் கைக்கு மாறி – அவர்கள் நியமிக்கும் அதிகாரியின் தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது, மாகாணங்களில்! மத்திய சர்க்கார் எத்தகைய அதிகாரிகளை நியமிப்பார்கள் என்பதும், அந்த அதிகாரிகள் யார் யாரைத் தம்முடன் சேர்த்துக்கொண்டு தணிக்கைக்குழுவை நிறுவுவார்கள் என்பதும் விளக்கத் தேவையில்லாத ஒன்று. சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையில் தணிக்கைக்குழு ஆரியக் கொள்கையினரின் ஆதிக்கத்திற்குட்பட்டது. ஆரியம் உயர சனாதனக் கொடி பறக்க – கடவுள் பெயரால் மக்களை அடிமைப் படுத்திவைக்க – வகுத்துக்கொண்ட சாதனங்களில் ஒன்றாக திரை உலகத்தையும் கருதிவந்தனர் அவர்கள். அந்த இறுமாப்பிலே இடி விழுந்தது போல நம்முடைய தோழர்கள் திரை உலகில் புகுந்தனர். “அம்மாமி அத்திம்பேர் தமிழ்தான் மிச்சம் ” என்ற அவல நிலையைத் திரை உலகிலிருந்து விரட்டி அழகு தமிழ்ச் சோலையாக ஆக்கினர் அண்ணாவின் தலைமையிலே! “பரமசிவன் வந்து வந்து போவார்” என்ற பித்தலாட்டங்களைப் பிளந்தெறிந்து பசியால் துடிக்கும் ஏழையிடம் பரமசிவன் வராத நிலையை நாட்டுக்கு எடுக்துக்காட்டினர். திரை உலகிலே ஏற்பட்ட புரட்சி – எதிரிகள் பால் எரிச்சலை பொறாமையை எதையும் செய்து இவர்களை அழித்திட வேண்டும் என்ற எண்ணத்தைத் தூவியது. அதன் காரணமாகவே ஆரிய மதப்பாதுகாவலர் – ஆச்சாரியார் “சினிமா ஒழிக” என்று கர்ஜித்தார். ஆத்திரப்பட்டோர் – ஆயாசமடைந்தோர் – தோல்வி கண்டோர் ஆகிய சிலர் அவர் பக்கம் சேர்ந்து கொண்டனர். நல்லதங்காளும் நள தமயந்தியும் படமாக்கப்பட்ட நாட்கள் ஒழிந்து வேலைக்காரி – மந்திரி குமாரி – சர்வாதிகாரி ஓர் இரவு – மணமகள் சொர்க்கவாசல் – பராசக்தி நாம் இப்படிப் படங்கள் வருவதைக் கண்டால் – பட உலகத்தை ஏகபோக சொத்தாக வைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படத்தானே செய்யும்? அதன் காரணமாக தணிக்கை நிலையத்தின் கத்தரிக் கோல் வேகமாக வேலைசெய்ய ஆரம்பித்து விட்டது. தாறுமாறான சுத்தரிக்கோல் பிரயோகத்துக்கும் அது தயாராகிவிட்டது.

நமது படங்கள் – இல்லை இல்லை … நம் தோழர்கள் எழுதும் படங்கள் என்றாலே காதையும் கண்ணையும் தீட்டிக்கொண்டு கருத்தை மட்டும் மழுங்க வைத்துக்கொண்டு கத்தரிக்கோல் கைபிடித்தபடி விஜயம் செய்கிறது தணிக்கைக் குழு.

பட முதலாளிகள் – அநேகமாக தாங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுக்கவேண்டும் என்ற ஆசையுடையவர்களாய் இருப்பார்களே தவிர தணிக்கை நிலையத்தை எதிர்த்து வழக்காடும் துணிவு பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள், அவர்களாகவே இருப்பார்கள். இந்தக் காரணத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு பட முதலாளிகளை பயமுறுத்தி “அதை வெட்டு இதை வெட்டு -” என்று அலைக்கழித்து – “எதையாவது வெட்டிக்கொள்! என்னை விட்டால் போதும்” என்று பட முதலாளி சொல்லிவிட்டு ஓடுகிற வரையிலே தங்கள் சாமர்த்தியத்தைப் பிரயோகிப்பார்கள்.

“கடவுள் ஒரு கற்பனை” இந்த வசனம் கூடாது – என்று சொல்வார்களானால் அதையாவது மன்னித்துவிடலாம். ஆஸ்திக சர்க்காரில் நாஸ்திகப் பிரச்சாரம் – கூடாது (!) என்பதற்காக! “இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்” என்று இருந்தால் நீக்கச் சொல்லலாம் – அதையும் நாம் மன்னிக்கலாம். கழகத்துக்காரன் எழுதுகிற படத்தில் “கடவுள் துணை” என்று வந்தால் கூட சந்தேகப்பட்டு கத்தரிக்கோலைப் பாய்ச்சுகிற அளவுக்கு நடுங்கிச் சாகிறார்களென்றால் எப்படித்தான் வர்ணிப்பது அந்த நிலையை! “சகோதரியால் திருத்தப்பட்ட அருணகிரிநாதன் பக்தனானான், நான் பகுத்தறிவாளனாகி விட்டேன்.” இந்த வசனம் கூடாதாம்!

“கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரம் ஏறி நிற்கும் தலைவர்களே! அந்தக் கொள்கையிலிருந்து எத்தனை முறை வழுக்கி விழுந்திருக்கிறீர்கள் – திரும்பிப் பாருங்கள்!”

இந்த வசனம் கூடாதாம்! ஏன் தெரியுமா? திருக்கோஷ்டியூரிலே ராமானுஜர் என்ற வைணவ பக்தர் கோபுரமேறிக் குதித்தாராம் – அதைக் கிண்டல் செய்வதாக இருக்கிறதாம் இது! எவ்வளவு அபாரமான ஆராய்ச்சி பாருங்கள் தோழர்களே!

“செல்வங் கொழிக்கும் சீமானே! அந்த செல்வத்தை சேர்க்க – சேமிக்க பாடுபட்ட தொழிலாளிகளை திரும்பிப் பார்!”

இந்த உரையாடலும் உதவாதாம்!

“மாளிகையிலிருந்த படியே மண் குடிசைகளைத் திரும்பிப் பார்த்தான் சித்தார்த்தன்; மக்களைத் திருத்தும் புத்தனானான் – கலிங்கத்துப் போர்முனையைத் திருப்பிப் பார்த்தான் அசோகன் – கௌதமர் வழிசேர்ந்தான்”

இதையும் படத்திலே பரந்தாமன் பேசக்கூடாதாம்!

இந்த உதாரணங்களிலிருந்து என்ன தெரிகிறது?

கழகக்காரன் எழுதினால் – ஆட்சேபகரமான கருத்துக்களை மட்டுமல்ல; அழகான எழுத்துக்களையும் வெட்டி எறிய வேண்டும் என்ற முன்னேற்பாடான சதித்திட்டம் சனாதனிகளின் மனதிலே ஊறிவிட்டிருக்கிறது.

நாட்டிலே நடமாடும் படங்களையும் நமது தோழர்கள் எழுதும் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தணிக்கை போர்டாரின் தன்மை நன்கு புரிந்திடும்.

அந்தத் தன்மையால் ‘திரும்பிப்பார்’ படம் மூவாயிரம் அடிக்குமேல் கத்தரிக்கோலுக்கு இறையாக்கப்பட்டது. பட முதலாளிகள் வழக்கு போடும் சூழ்நிலையில் இல்லை. எழுத்தாளர்களுக்கோ வழக்குபோட வசதியில்லை. மக்கள் மன்றத்திலேதான் வழக்கு போடவேண்டும். அங்கே கிடைக்கும் நீதிதான் நிரந்தரமானதாக சக்தி வாய்ந்ததாக இருந்திடவும் முடியும். அந்த நினைவோடு – 22ந் தேதி, திரு டி. ஆர். சுந்தரம் அவர்களை சந்தித்த பிறகு – பிற்பகல் 2 மணிக்கு சென்னையை விட்டு அரியலூர் கூட்டத்திற்குப் புறப்பட்டோம். உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து, விருத்தாசலம் சென்று – பாதை தவறியதின் காரணமாக பல மைல்கள் சுற்றியலைந்து கடைசியில் திருச்சி சாலையைப் பிடித்து இரவு 8 மணிக்கு அரியலூர் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அரியலூர்:

என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு ஊர். அங்கேதான் நான், நாட்டுப்பணி ஆற்றியது குற்றமென்று தீர்ப்பு கூறப்பட்டு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

22ந் தேதி 8 மணிக்கு அரியலூரிலே இருபதாயிரம் மக்களுக்கெதிரே மேடையிலே நிற்கும்போது நான் சொன்னேன்; விரைவிலே நான் கூண்டில் நிற்க வேண்டியிருக்கும்’ என்று! ஆனால் அரியலூர் நீதிமன்றத்துக் கூண்டிலே நிற்கப்போகிறேன் என்பது அப்போது தெரியாது.

அரியலூரிலே பல தோழர்கள் இருக்கிறார்கள், நமது பாசறையில்! அவர்களின் முகம் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. சிலரின் பெயர் மறந்துவிட்டது. திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் என்ற அந்த சிறப்புப் பெயரை நான் மறந்துவிடவில்லை. என்னுடன் மூன்றுமாத தண்டனை பெற்று சிறையில் எனக்கு உறுதுணையாக இருந்த தோழர் எத்திராஜு அந்த ஊரின் செயலாளர்.

பண்பு நிறைந்தவர். எந்தக் காரியத்தையும் நிதானமாகவும் – நேர்த்தியாகவும் செய்யவேண்டுமென்ற உறுதி படைத்தவர். அரியலூர் செயலாளராக இந்த இளைஞர் கிடைத்திருப்பது அந்த ஊர்த் தோழர்கட்கு ஒரு நல்வாய்ப்புத்தான். கூட்டம் முடிந்து கழகத்தில் அமர்ந்து தோழர்களுடன் உரையாடி – பின்னர் திருச்சிக்குப் புறப்பட்டோம்- இரவு ஒரு மணி சுமாருக்கு திருச்சியை அடைந்தோம்.

நான் திருவாரூர்க்காரன் என்றாலும் பிறந்து வளர்ந்த இடம் திருவாரூருக்குப் பக்கமுள்ள ‘திருக்குவளை’ என்னும் கிராமம். ஆரம்பப் பள்ளிக்கூடத்திலே படித்துக் கொண்டிருக்கிறேன். 1934 – 35ம் ஆண்டு என்று நினைக்கிறேன்; எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; ஒரு நடுத்தர வயதுள்ளவர் கையிலே காங்கிரஸ் மூவர்ணக் கொடியுடன் தன்னந்தனியாக வருவார். தெருவின் ஒரு மூலையிலே நின்றுகொண்டு “வந்தேமாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! – போலோ பாரத் மாதாகி – ஜே!” என்ற ஒலிகளை எழுப்புவார். சிறிது சிறிதாகக் கூட்டம் சேர்ந்துவிடும். பிறகு அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விடுவார். ஊர் மக்கள் எல்லாம் ஆச்சரியப்படுவார்கள். இவ்வளவு அரிய கருத்துக்களைச் சொல்கிறாரே; என்றல்ல! தடங்கல் இல்லாமல், கட கட வென இப்படிப் பேசுகிறாரே என்றுதான் அனைவரும் அதிசயிப்பார்கள். ஒரு அரைமணி நேரம் பேசுவார். பிறகு வேறு தெருவுக்குப் போவார். உணவு நேரத்தில் யாருடைய வீட்டிலாவது கிடைத்த ஆகாரத்தை சாப்பிட்டு விட்டு அடுத்த ஊர் போய்விடுவார். அவரை இப்போது மனக்கண்ணால் நினைத்துப் பார்த்தால் ஏறத்தாழ காந்தியாரின் சாயல் உள்ளவராகத் தெரியும். இப்போது அவர் இருக்கிறாரோ இறந்துவிட்டாரோ தெரியாது. அப்போதே எங்களூரில் பேசிக் கொள்வார்கள்- “சுயராஜ்யம் கிடைத்து விட்டால் இவரைப் போன்றவர்களுக்கு பிரமாதமான புகழும் பெருமையும் கிடைக்கும்” என்று! அப்படி யொன்றும் புகழோ பெருமையோ அவருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. கிடைத்திருந்தால் தேசீயப் பத்திரிகைகளில் அவர் படமாவது வந்திருக்குமே! பத்திரிகைகளில் அவர் படம் வெளிவருகிற அளவுக்குக்கூட ‘சுயராஜ்யம்’ அவருக்கு பெருமை தரவில்லை. அப்படிப் புகழ் வராததற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அவர் ஒரு திராவிடர். அவர் மார்பிலே பூணூலும், மனதிலே ஆரியமும் இருந்திருந்தால் – தென்னாட்டு விநோபாபாவே ஆகியிருப்பார்.

அடிமை மண்ணின் தெருக்களிலே கத்திக் கத்தி, ஊர்களைச் சுற்றிச் சுற்றி வந்த அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஆனாலும் அவர் செய்து காட்டிய தொண்டு என் மனதை விட்டு நீங்க வில்லை. கொள்கை பேதமிருக்கட்டும் ஒருபுறம்; கொண்ட கொள்கையில் அவருக்கிருந்த வெறியை என்னால் மறந்திடவே முடியாது. தலையிலே ஒரு காந்திக் குல்லாய் – ஒரு வெள்ளை சட்டை – பழுப்புப் பூக்களை ஓரத்திலே பெற்றிருக்கும் ஒரு சால்வை – கையிலே மூன்று நிறக் கொடி.

மறக்க முடியாத அந்த அவர் – உழைக்கும் தோழர்களுக்கு ஒரு வழிகாட்டி. எந்த இயக்கத்திலுமுள்ள தொண்டர்கள் – தோழர்கள் – அவர் போன்ற கடமையுணர்ச்சி பெறவேண்டும். கையிலே கொடிதூக்கி தன்னந்தனியாகச் சென்று ஊர் ஊருக்கும் பிரச்சாரம் செய்வது ஒன்றுதான் சிறந்தது என நான் குறிப்பிடவில்லை.

முறை அதுவாக இல்லாவிட்டாலும் உள்ளம் அவர் போன்றதாய் அமையவேண்டும் உழைத்திடும் உத்தமர்களுக்கு!

பயன் கருதி அத்தகு பணியில் இறங்கக்கூடாது. பிற்காலத்தில் பெருமையும் புகழும் வருமென்றா அவர் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்? இல்லை! சொந்தக்கட்சி மறந்தாலும் கூட, அவரது மாற்றுக்கட்சியாளரின் மனதிலே இடம் பெறுகிறவராக ஆகிவிட்டாரா இல்லையா? தொண்டுக்கு சூட்டப்படுகிற உண்மையான புகழ்மாலை இது தான் !

அவர் போன்றவர்கள் கிராமங்களிலே தோன்றவேண்டும். நமது கழகம் சில ஆண்டுகளாக கிராமாந்திர மக்களின் மனதில் குடி புகுந்திருக்கிறது- பிரச்சாரப் படையும், தலைவர்களும் செல்லமுடியாத பட்டி தொட்டிகள் நிறைய இருக்கின்றன. அங்கெல்லாம் என் நெஞ்சை விட்டகலாத தெருப் பிரசங்கிகள் கிளம்பவேண்டும், ஏதென்ஸ் நகரத் திலே சாக்ரடீஸ் எழுந்தது போல!

கடைத்தெருவிலே – சந்து முனையிலே – நடைபாதை களிலே – குளக்கரையிலே சிற்றாறுகளின் ஓரத்தில் – சிங்காரக் கொல்லைகளின் அருகாமையிலே – போவோர் வருவாரை நிறுத்திவைத்து நீண்ட பிரசங்கம் செய்வானாம் ஏதென்சுப் பெரியோன் சாக்ரடீஸ்!

கற்ற பெரியோர் இளைஞர் மாணவர் எத்தனைபேர் வேலைகள் வேண்டாமென பட்டி தொட்டிகளிலே பயிர் பச்சையைக் கவனித்தபடியும் ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பது என்று தெரியாதபடியும் இருக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் – தெருப் பிரசங்கிகளாக ஆகலாம். திராவிடத்து மண்ணை தீராத அடிமையிலிருந்து மீட்டிட தீரர் படையைத் திரட்டலாம்.

குக்கிராமத்து இளைஞர்களே! கோழி கூவுகிறது – ”விடிந்தது விடிந்தது” என்று! நீங்களும் கூவுங்களேன் விடுதலை! விடுதலை!” என்று!

அப்படிக் கூவிடும் கிராமங்கள் இரண்டை எங்கள் சுற்றுப்பயணத்தில சந்தித்தோம். நெரூர் என்று ஒரு கிராமம். இங்கே கூட்டம் கூடுமா என்று காத்துக்கிடந்தோம். “இந்தக் காரை பார்க்கவாவது பத்து பையன்கள் வருவார்கள் சார்!” என்றார் தோழர் சத்தி. இந்தக் கிராமத்தை எப்படி அய்யா கண்டுபிடித்தீர்கள் என்று அம்பிலையும், மணியையும் நான் கேட்டேன். கூட்டம் வரட்டும் என்று சொல்லிவிட்டு நாங்கள் கொஞ்சதூரம் உலாவப் போனோம். திரும்பி வந்தோம். திடுக்கிட்டோம். ஐயாயிரம் மக்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை; எங்களால்! கரூர் நண்பர் கரிகாலனின் முயற்சிகளிலே ஒரு நல்ல அறுவடை நெரூரில் கழகம்.

நெரூர் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே போல எசனை என்று ஒரு ஊர் – அங்கேயும் கூட்டம். நெரூர் நிகழ்ச்சிக்கு முதல்நாள் சின்னதாராபுரம் கூட்டம் நடைபெற்றது. சின்னதாராபுரத்திலே கழகத்தை வளர்க்க உணர்ச்சிமிக்க காளையர் மிகப்பலர் இருக்கிறார்கள். கூட்டத்திற்கு முன்பு ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அடடா! அதிலே ஒலியெழுப்பும்போது அந்த இளைஞரேறுகள் கொண்ட ஆர்வமிருக்கிறதே; அது கொந்தளிக்கும் கடலையும் வெல்லும்! குமுறிவரும் படையையும் கொல்லும்! சின்னதாராபுரம் கூட்டத்திற்கு மறுநாள் தான் எசனையிலே கூட்டம். பழைய பட்டிக்காடு அது!

அங்கே பத்தாயிரம் பேரா?

“ஏ! பழமையே! பல் இளிக்கும் பகையே! அடக்கு முறைகளே! அதிர் வேட்டுக்களே! அடிமைப்படுத்தும் ஆணவமே! அதிகாரத்தின் போதையே! வளர்ந்துவரும் எம்மைப் பார்! இன உணர்ச்சியை உற்று நோக்கு! அடங்கு! ஆமையாகு ! முடங்கு! ஓடிவிடு! கண்ணை மூடிவிடு!”

என்ற எச்சரிக்கை முரசத்தை காது செவிடுபடும் படியாக எசனை என்ற அந்தப் பட்டிக்காடு கொட்டிக் காட்டிற்று; கோணல் புத்திக்காரர்களுக்கு!

முகிலைத் தொடும் கொடியை உயர்த்தினர்! முரசுகள் முழங்கினர்! நல்லதோர் நாடகமும் நடத்திக்காட்டினர்.

எசனை நிகழ்ச்சி முடிந்து நான் சத்தி – செல்லமுத்து மூவரும் சென்னைக்குப் புறப்பட்டோம். அம்பிலையும், மணியையும் திருச்சிக்கு அனுப்பவேண்டும். வழியிலே ஏதாவது லாரிகள் திருச்சி சென்றால் அதில் ஏற்றிவிடுகிறோம் என்று சொல்லிக்கொண்டே ஐம்பது மைல்கள் கடந்து வந்து அவர்களை உளுந்தூர்ப்பேட்டை புகைவண்டி நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு விடியற்காலை ஐந்து மணிக்கு சென்னை வந்தடைந்தோம்.

சுற்றுப்பயணத்தின் போது தோழர்கள் உடனிருந்தால் அலுப்பே தெரிவதில்லை. திடீரென வெடிக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள் – அதன் விளைவாக எழும் கிண்டல்கள் கேலிகள் – வயிறு வலிக்க சிரிக்கவும் வாய் வலிக்கப் பேசவும் பயன்பட்டு பயணம் உற்சாகம் குறையாமல் அமைந்திட வழியும் ஏற்படும்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வட ஆற்காடு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. மாவட்ட சார்பில் அமைக்கப்பட்ட வாடகைக் கார் ஒன்றில், நான்
– சத்தி – கண்ணதாசன் – செல்லமுத்து – திராவிடன் பதிப்பகம் கிருஷ்ணன் – ஆகியோர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். எங்களுக்காக அமர்த்தப்பட்ட கார் மிகவும் பழமையானது. “டடடட” என்ற ஒலியுடன் புறப்பட்டதேயானால் மாதம் போம் காத வழி ! அதுவும் ‘டயர்’ பொத்துக் கொள்ளாமல் – எண்ணை அடைத்துக் கொள்ளாமல் என்ஜினுக்கு வலிப்பு நோய் வராமல் இருந்தால்! “இந்தக்கார் எத்தனை ஹார்ஸ் பவர்?” என்று கேட்டார் கண்ணதாசன், ” ஒரே ஹார்ஸ் பவர் தான் – அதுவும் தென்னாலிராமன் ஹார்ஸ் பவர்” என்றேன் நான்!

வயதான காலத்திலும் இப்படித் துன்பப்படுத்துகிறார்களே, என்று பெருமூச்சு விட்டபடி புகைச்சலைக் கக்கிக்கொண்டு கார் போய்க்கொண்டிருந்தது.

வழியிலே ஒரு திருப்பம். எதிர் எதிரே வரும் வண்டிகள் தவறாமல் ஒலி முழங்கினால்தான் பத்திரமாக அந்தத் திருப்பத்தைக் கடந்து செல்லமுடியும். எதிரே ஒரு பஸ் வந்தது. எங்கள் காரும் சென்றது. இரண்டும் பெரிய விபத்துக்குள்ளாகி நொறுங்கிப் போக வேண்டிய பெரிய ஆபத்திலிருந்து ஒரு நூலிழையில் நாங்கள் தப்பித்துக் கொண்டோம். காரணம் எதிரே வந்த பஸ்டிரைவர் “ஹாரன்” செய்யாமல் வந்துவிட்டார் – அதனால் வந்த பயங்கரம்.

அக்த பஸ்ஸில் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் சில போலீசாரும் இருக்கிறார்கள். எங்கள் கார் டிரைவர் கோபமாக கீழே இறங்கினார். பஸ் டிரைவரைப் பார்த்தார்.

“ஏனய்யா ஹாரன் பண்ணாம வர்ரே ?

“நான் வேற பிரேக் இல்லாம வர்ரேன் !”

என்று கத்தினார் ஆத்திரமாக! பஸ் போய்விட்டது. எங்களுக்கு சிரிப்பால் ஏற்பட்ட வயிற்றுவலி போகவில்லை.

இம்மாதிரி டிரைவர் ‘தமாஷ்’ நிறைய நடப்பதுண்டு. திடீரென திருச்சி மாவட்டத்திலிருந்து வட ஆற்காடு மாவட்டத்திற்கு போய்விட்டோமே என்று எண்ணுகிறீர்களா! இரண்டு மாவட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதால் தான் உங்களை அங்கே அழைத்துச் சென்றேன்.

வட ஆற்காடு மாவட்டத்திலே வாணியம்பாடிக்கு அருகிலேயுள்ள முல்லைக்கொம்பையெனும் தமிழூர் தந்த செல்வம் தோழர் சத்தி, கல்லக்குடி போராட்டத்து முதல் வரிசைப் படைவீரரானார். திருச்சி சுற்றுப்பயணம் முழுதும் என்னுடன் இருந்தார். அவருக்கும், செல்ல முத்துக்கும், சிவப்பிரகாசத்திற்கும், பயணத் திட்டத்தை வகுத்தளித்த மணிக்கும், சிறப்பாக நடந்திட செயலாற்றிய அம்பிலுக்கும், துணைபுரிந்த தோழர் முத்துகிருஷ்ணனுக்கும் டால்மியாபுர போராட்ட செயற்குழுவின் சார்பாக எசனை கூட்டத்திலே நன்றி தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் நடந்த வெற்றிகரமான பொதுக்கூட்டங்களையும், மக்கள் காட்டிய ஆதரவையும் பொதுச்செய்லாளர் அவர்களிடத்திலே தெரிவித்தேன். ஜூலை 15ல் போராட்டத்தைத் துவக்கலாம் என்ற அனுமதியைத் தந்துவிட்டு அண்ணா அவர்கள் விருதுநகர் மாநாட்டிற்கு சென்று விட்டார்கள்.

தஞ்சை மாவட்டத்திலே வெங்கிடங்கால் என்ற சிறு கிராமம் ஒன்றிருக்கிறது. ஆர்வத்தின் ஊற்று இவர் என்று சுட்டிக் காட்டக்கூடிய ஒரு இளைஞர் ஆற்றல் மிக்கவர் – கழகத்திற்குக் கிடைத்த சந்தானம் ஒருவர் இருக்கிறார் அங்கே. ஜூன் 30ல் அங்கே கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நானும், தோழர் S. K. சாமியும் மற்றவர்களும் பேசினோம். நாகை வட்டாரக் கழகத்தின் துவக்கவிழாவும் அங்கு நடைபெற்றது. திருவாரூர்த் தோழர்கள் கருணை ஜமால் உட்பட பலர் வந்திருந்தனர். அந்தக் கூட்டம் அங்கே நடைபெறப் பெருமுயற்சி எடுத்துப் பணியாற்றிய தோழர்களில் ஜமாலும் ஒருவர். புதிதாக கழகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தொண்டாற்றிடும் நண்பர் ஜமாலைக் காண்போர் அதிசயிப்பர்- “இவருமா இப்படிப் பணிபுரிகிறார்? ” என்று கேட்டு! “வாழ்க்கை வாழ்வதற்கே!” என்ற வரட்டு தத்துவத்தின் மேல் வசீகரத்திலே மயங்கி – எப்படிப்பட்ட வாழ்க்கையை எப்படி நடத்துவது என்ற அடிப்படையை ஆராயாத “மைனர்” களின் கூட்டம் செல்வக் குடும்பங்களிலேயிருந்து புறப்படுகிற காலம் இது! இந்தக் காலத்தில ஜமால் போன்றவர்கள் கழகப்பணி ஆற்ற முன்வருவது பாராட்டத்தக்கது! – ஏனையோருக்கும் வழிகாட்டக் கூடியது.

வெங்கிடங்கால் கூட்டம் முடிந்து சென்னைக்கு சென்றோம்.

சிதம்பரத்திலே மாநாடு – ஜூலை 4, 5, இருநாட்களிலே !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *