ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி

களம்

சிதம்பரம் மாநாடு போராட்டப் பொன்னேடாக மாறியது கண்டு திராவிடத் தரணி பூரிப்பில் ஆழ்ந்தது. நானும், சத்தியும், முத்துவும், திருவாரூர் நண்பர்கள் விசயராகவன், தென்னன், தியாகராசன் ஆகியோரும் தஞ்சைக்கு வந்து சேர்ந்தோம். கல்லக்குடி போராட்ட நிதிக்காக தஞ்சையிலே ‘பரப்பிரம்மம்’ நாடகம் ஜூலை 7ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்டத்திலே நடைபெறும் போராட்டம் – திருச்சி மாவட்டக் கழகம் பொறுப்பேற்று நடத்தும் போராட்டம் – அதற்கு தஞ்சை மாவட்டத்திலா நிதிவசூல் என்கிறீர்களா! – அப்படிப் பார்த்தால் திருச்சி போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்துபவனே தஞ்சை மாவட்டத்துக்காரன் தானே!

தஞ்சைத் தரணியும் திருச்சி பூமியும் காதலன் – காதலி போல! தஞ்சையிலே வீசிய புயல்கூட திருச்சியையும் எட்டிவிட்டுத்தானே சென்றது! அவ்வளவு தொடர்புடைய தஞ்சையிலே நாடகத்தை நடத்தும் பொறுப்பை தோழர் N.S.சண்முகவடிவேலும் தஞ்சை தி.மு.கழகத் தோழர்களும் – ராசகோபால் போன்ற நண்பர்களும் ஏற்றுக்கொண்டனர்.

தோழர் சண்முகவடிவேல் – எடுத்த காரியத்தை இனிது முடிக்கும் இயல்புடையவர் எதையும் முடியாது என்று என்னிடம் கூறமாட்டார் சந்திரனுக்குத் தாவ வேண்டுமா – சூரியனைப் பிடிக்கவேண்டுமா – இதுபோன்ற கடினமான காரியங்கள் கூட அவருக்குச் சிறு கடுகு! நான் சொன்னால்!! பொன் குணமும், புன்னகையும், தோழமையில் களங்கமற்ற தன்மையும் கொண்ட சண்முகவடிவேலை என்னால் மறக்கவே முடியாது.

மறைந்த வீரர் டி. என் இராமனின் குடும்ப நிதிக்காக தஞ்சையிலே ‘பரப்பிரம்மம்’ நாடகம் நடத்தினோம். அங்குள்ள அந்த சிறிய தியேட்டரிலே இரண்டாயிரம் ரூபாய் மீதப்படுத்தி இராமன் குடும்ப நிதிக்குத் தந்திடும் வாய்ப்பை, வெகு பொறுப்புடன் உண்டாக்கித் தந்தார். முன்போல – அவர் முழுநேரம் கட்சிப் பணிக்கு செலவிட்டால் இன்னும் மகிழ்வேன் நான்.

தஞ்சையிலே ‘தூக்குமேடை’ நாடகம் நடத்தப்பட்ட காலத்திலே எனக்கு அறிமுகமானவர் தோழர் இராசகோபால். இயக்க ஆர்வத்தின் காரணமாக சில இடையூறுகளுக்காளாகி ஆனால் எந்த நேரத்திலும் என்பால் கொண்ட அன்புக்கு குறைவு வராமலும், இயக்க வளர்ச்சிக்கு உழைத்திடும் நெஞ்சுடனும், உலவுகிறவர் அவர்.

தஞ்சையிலே, பதி, பட்டு, பெத்தண்ணன், சோமு, பஞ்சாபிகேசன், நடராசன் முதலிய இயக்கத் தோழர்கள் கழகத்தின் தூண்களாக அமைந்திருக்கின்றனர்.

நாடகத்திற்கு மறுநாள் ஜூலை 8ல் தஞ்சை பொதுக் கூட்டம். மக்கள் வெள்ளத்திடையே – தில்லையிலே அண்ணா கொட்டிய முரசின் எதிரொலியாக இருந்தது. நானும், மணி, அம்பில் முதலிய தோழர்களும் பேசினோம்.

ஜூலை 8 – ஒரு சிறப்பான நாள். புதிய கல்வித் திட்டத்தைக் கண்டித்து சட்டசபையிலே குரலெழுப்ப வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்ற சட்டசபை உறுப்பினர்களிடம் கழகத்தின் சார்பாக ஊர்வலம் நடத்தி ‘மகஜர்’, சமர்ப்பிக்கப்பட்டது. அந்த நாளில் தான்.

அந்த முறைகூட தவறு என்று கூறிடும் விதத்தில் இந்த நீதிவாய்ந்த அரசாங்கம் சென்னையிலே மகஜர் அளிப்பதற்காக ஊர்வலம் நடத்திய விருதுநகர் வீரர் தோழர் ஆசைத்தம்பி சென்னை மாவட்ட செயலாளர் கண்ணபிரான் – அலமேலு அம்மையார் ஆகியோர் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களை கைது செய்து தண்டித்தது.

கருணைமிக்க ஆட்சியின் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டு ஒத்திகை பார்த்த நாள் ஜூலை 8 என்று கூறலாம்.

தஞ்சைக் கூட்டத்தை முடித்துவிட்டு கல்லக்குடிக்குச் சென்றோம் களத்தை முன்கூட்டியே பார்வையிடுவதற்காக!

கல்லக்குடி கழகத்தின் செயலாளரும், போராட்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒருவருமான தோழர் தம்பு சாமி எங்களை வரவேற்றார். தொண்டர்கள் தங்குவதற்கான பாசறை அமைக்க கல்லக்குடியிலே ஒரு இடம் தேடினோம்.

நாலைந்து பேர்கூட தங்குவதற்கு முடியாத சிறுசிறு குடிசை வீடுகள் தான் எங்களுக்குக் காட்டப்பட்டன.

புதிதாகவே ஒரு இடம் அமைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். தோழர் தம்புசாமி தந்த ஒரு இடத்திலே போராட்டம் முடியும் வரையில் தற்காலிகமாக ஒரு கொட்டகை போடுவதற்குத் திட்டமிட்டோம். ஒரு கொட்டகை போடும் நண்பரை அழைத்து எவ்வளவு பணம் தேவையென்று கேட்டோம். அவர் எங்களைப் பார்த்தோ – அல்லது கொட்டகை போட ஏற்படும் உழைப்பிற்கான சம்பளத்தைக் கணக்குப் பார்த்தோ தொகை கேட்க வில்லை; எங்களின் மோட்டார் காரைப் பார்த்து தொகை கேட்டார். அவருக்குத் தெரியாது; அது ஊர் சுற்றுவதற்காக உள்ள சாதனம் என்று ! மிதமிஞ்சிய பணத்தின் உருவம் என்று எண்ணிக்கொண்டார் ‘பாபம்’!

பின்னர் லால்குடி வந்து ஒரு தோழரை ஏற்பாடு செய்து கூடுமானவரையில் குறைந்த செலவில் கொட்டகை அமைக்கச் சொன்னோம். ஏறத்தாழ நூறு பேர் தங்குவதற்கு வசதியான நல்ல கொட்டகை “தொண்டர் முகாம்” என்ற பெயரில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மற்றும் ஆகவேண்டிய காரியங்களை தோழர் தம்புசாமி அவர்களின் பொறுப்பிலே ஒப்படைத்தோம்.

தம்புசாமி – இளைஞர், சூழ்ந்துள்ள பல தொல்லைகளுக்கிடையே நமது படைவரிசையில் பணிபுரியும் நண்பர்.

எல்லோரும் களத்தை சுற்றிப்பார்க்கச் சென்றோம்.

கல்லக்குடி ஒரு சிற்றூர். அங்கே நமது பூமியின் வயிறு அலங்கோலமாகக் கிழிக்கப்பட்டுக் கிடக்கிறது வடநாட்டு முதலாளியால்! சிமண்டு செய்வதற்கான மூலப் பொருளை எடுப்பதற்காக தாறுமாறாகப் பிளந்தெறியப் பட்டுள்ள கல்லக்குடி கிராமம் திராவிடர் உள்ளத்தையும் பிளந்திடத்தான் செய்கிறது, தன் நிலையைக் காட்டி!

மண்ணையும் மூலப் பொருள்களையும் தொழிற்சாலைக்கு அள்ளிக்கொண்டு செல்வதற்காக தண்டவாளம் போட்ட வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வண்டிகளுக்கு ஓய்வே இல்லை. அந்த கிராமத்தின் நடுவிலே – இருதயத்தைக் கீறிடும் விதத்தில இருப்புப்பாதை அமைத்து – அதிலே சிமண்டு செய்யும் பொருள்களை ஏற்றிச் செல்கிறார்கள் திராவிடத் தொழிலாளிகள் – வடநாட்டு முதலாளி கொழுப்பதற்காக!

கிணறு போலப் பல இடங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன. ஆழமான குளம்போல பல இடங்களில் பெருங் குழிகள் காணப்படுகின்றன. அந்தக் கிணறுகளிலும் – பெருங் குழிகளிலும் – பாளம் பாளமாக சுண்ணாம்புக் கற்கள் பலகை போல அமைந்திருக்கினறன. புத்தகம் அடுக்கப்பட்டிருப்பது போல காணப்படும் அந்த மூலப்பொருளை செந்தமிழ்த் தாயிடமிருந்து வட நாட்டான் அபகரித்துப் பெரியதோர் ஆலையை வானளாவக் கட்டியிருக்கிறான். அந்த ஆலையின் புகைக்கூண்டிலிருந்து கிளம்புகிற புகை மேகம் போல விண்ணில் பரவி கனத்தின் காரணமாக காற்றோடு கலக்க முடியாமல் சிறிது தூரத்தில் உள்ள ஏழை விவசாயிகளின் வயல்களிலே இறங்கிப் படிந்து அவர்களுடைய பயிர் வளத்தையும் நாசமாக்குகிறதாம்.

இரண்டாயிரம் திராவிடத் தொழிலாளர்களின் வியர்வை சிந்தப்பட்டு – அந்த வியர்வையிலே கல்லக்குடியின் மண் கலக்கப்பட்டு அந்த ரத்தச் சேற்றை அந்தப் பாட்டாளிகளின் சூடான பெருமூச்சாலேயே உலரவைத்து – சிமண்டு செய்து அதை திராவிடத்தின் வாணிபத் தெருவிலேயே வெள்ளிப் பணமாக்கி அந்த வெள்ளிப் பணத்தைக் கொண்டே ஒரு ஏகாதி பத்தியத்தை ஏற்பாடு செய்து கொண்டு எகத்தாளம் போடுகிறான் இருதயமிழந்த வட நாட்டான்.

கல்லக்குடி, தொழில் வளம் தரும் செழிப்பான நிலம். அந்த நிலத்துக்குடையோர் நித்திய தரித்திரர். குனிந்து செல்லவும் முடியாத குடிசைகள் அவர்களின் மாளிகை. அவர்கள் அண்ணாந்து பார்த்து பெருமூச்செறியும் அவ்வளவு உயரமான வடநாட்டு ஆலை!

ஆலையிலே புகை அதிலே தமிழர் மானம் போகும் !

1938ல் அந்த மண்ணிலே காலெடுத்து வைத்த வடநாட்டு முதலாளிதான் டால்மியா, தனக்குச் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதிலே டால்மியா தொழிற்சாலையை அமைத்தார். தனக்குச் சொந்தமில்லாத ஒரு இடத்திலே அமைந்த புகைவண்டி நிலையத்திற்கும் தன் பெயரை சூட்டிட ஏற்பாடு செய்தார். வெள்ளைக்காரனுக்கும் வடநாட்டு முதலாளிக்கும் ஏகபோக சுரண்டல் கூடமாக இருந்த திராவிடநாடு வெள்ளைக்காரன் அந்த உறிஞ்சும் கூட்டுறவிலிருந்து விலகி தன் நாட்டிற்கு சென்றுவிட்ட பிறகு – வட நாட்டானின் நிரந்தரமான சுரண்டல் பூமியாக ஆக்கப்படுவதற்கான சூழ்நிலை தினம் தினம் பலமடைந்து வருகின்றது. அதற்கு ஒரு உதாரணம் டால்மியாபுரம்!

வீட்டிலே நுழைந்த திருடன் தூங்கும்போது கொள்ளையடித்தது மில்லாமல் பொருள்களை மூட்டைகட்ட – தூங்கியவன் தொடையிலேயே கயிறு திரிப்பது போல நமது மண்ணைச் சுரண்டிக் கொழுக்கும் வட நாட்டினர் – இந்த மண்ணிலே தங்கள் பெயரையும் பொறித்திடத் துணிந்துவிட்டனர்.

பொருளைத் தான் கொடுத்தோம் போற்றி வளர்க்கும் மானத்தையும் கொடுத்துவிட வேண்டுமாம் ”ஆமாம், கொடுக்கத்தான் வேண்டும்” என்று அகங்காரமாக நின்றுகொண்டிருக்கிறது கல்லக்குடியிலே – “டால்மியாபுரம் ஸ்டேஷன்.”

புகைவண்டி நிலையத்தை சுற்றிப்பார்த்தோம். ஏராளமான தொழிலாள நண்பர்களும் கல்லக்குடி பெரியவர்களும் – இளைஞர்களும் – மாணவர்களும் எங்களை வந்து சந்தித்து, போராட்டத்தைப் பற்றிய செய்திகளை ஆவலோடு விசாரித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு கல்லக்குடியில் ஏற்பட்ட தீ விபத்தால் சில குடிசைகள் நாசமாகி மக்கள் அவதிக்குள்ளாயினர். அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நானும், புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களும் தலைமை வகித்து நாடகம் ஒன்று நடத்தப்பட்டு நிதியொன்று அளிக்கப்பட்டது.

நாடகத்தன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு டால்மியா தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் உபதலைவர் மைனுதீன் அவர்கள் தலைமையேற்று நமது போராட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு தொழிலாளர் உதவியையும் தருவதற்கு தடையில்லை என்று குறிப்பிட்டார்.

களம் பார்வையிடல் முடிந்ததும் நான் – சத்தி – அம்பில் முதலியோர் சென்னைக்குப் புறப்பட்டோம். சென்னை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ! – சென்னையில் ஜூலை 11-12 தேதிகளில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டிலே ஒரு பெருஞ் சிறப்பு என்ன வென்றால் கழகத்தின் வைரம் பாய்ந்த கிழவர் – அனுபவப் பெரியார் – S. V. லிங்கம் அண்ணா அவர்கள் தலைமையேற்று கருத்தும் – அழகும் நிறைந்த பேருரை ஆற்றியது தான்!

“ஆச்சாரியார் கூறுகிறார் தன்னுடைய கல்வித் திட்டம் சரியில்லை என்றால் – தன் கல்லறை மீது மண்ணை வாரி இறையுங்கள் என்று! பாவம் ! அவர் நீடூழி வாழட்டும் – நாங்கள் அவருடைய கல்வித் திட்டத்தின் மீது மண்ணை வாரிப்போட்டு மூடுகிறோம்” என்று லிங்கம் அண்ணா கூறியதும் எங்களை அறியாமலே எழுந்து குதித்துவிட்டோம் கடினமான அரசியல் கருத்துக்கள் – அவருடைய கொச்சைத் தமிழால் எளிய உருவம் பெற்று – எவருக்கும் விளங்கும் விதத்திலே வெளிவந்தன.

எளிமையான வாழ்க்கை முறையும் – யாதும் ஊரே என்ற வாழ்க்கைத் தத்துவமும் சிறியோரானாலும் சிறப்புடையோரை பெரிதும் மதித்திடும் சீரிய பண்பாடும் – பெரியோராயினும் பிழை புரிந்தோரை தூசெனக் கருதும் உள்ளமும் – இயக்கத்திற்காக ஓடி ஓடி, கோடி கோடி செயல்கள் புரியவேண்டுமென்ற ஆசையும் ஆனால் அதற்குத் தடையாக எதிர் நிற்கும் தள்ளாத கிழப் பருவமும் – கொண்ட லிங்கம் அண்ணா தன்னுடைய பல ஆண்டு காலப் பொதுவாழ்வில் அன்றுதான் ஒரு மாநாட்டிற்குத் தலைமையேற்கும் வாய்ப்பு பெற்றார்.

அந்த மகிழ்ச்சியான செய்திகேட்டு சென்னை பூரிப்படைந்தது. அவரை இருட்டுக்குள் தள்ளி வைத்திருந்த பெரிய மனிதர்கள் இப்போது வயிறு எரிந்திருப்பார்கள்.

லிங்கம் – ஒளிப்புறத்திற்கு வந்தார். இளைஞர்கட்கும். ஒளிப்பாதையைக் காட்டினார்.

11ம் தேதி இரவு மாநாட்டில் ‘பரப்பிரம்மம்’ நாடகம். நாடகத்தை முடித்துவிட்டு நானும், நண்பர்களும் உடனே திருச்சிக்குப் புறப்பட்டோம், 12ந் தேதி திருச்சி மாவட்ட செயற்குழுவில் கலந்துகொள்வதற்காக!

12ந் தேதி காலை சென்னையிலே தாயிடமும் – சேய்களிடமும் – துணைவியிடமும் விடைபெற்று கல்லக்குடி களம் செல்கிறேன் ! நான் வந்து உங்களைப் பார்ப்பேனோ – அல்லது நீங்கள் வந்து என்னைப் பார்ப்பீர்களோ -தெரியாது” என்று கூறிவிட்டு திருச்சியை நோக்கினேன். பிற்பகல் இரண்டு மணிக்கு திருச்சி வந்தடைந்தோம். மாவட்ட செயல்வீரர்கள் அனைவரும் வந்திருந்தனர், அவர்களிடத்திலே போராட்டம்பற்றி கலந்து பேசியபிறகு – இப்போதுள்ள செயற்குழு, அடக்குமுறைக்கு ஆளானால் அடுத்து வேலை செய்ய ஒரு செயற்குழுவைத் தேர்ந்தெடுத்தோம். அது, மற்றொரு செயற்குழுவை அமைத்துக் கொள்ளலாம் என்கிற அதிகாரமும் அந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்டது. இப்படி அமைப்பு முறையோடு போராட்ட திட்டங்களும், செயற்குழுக்களும் தோற்றுவிக்கப்பட்டன.

14ம் நாள் காலையில் திருவாரூர் சென்றேன்; அங்கிருந்து விடைபெற்று லால்குடி பொதுக்கூட்டத்திற்குப் புறப்பட்டேன். 13ம் நாள் எங்கிருந்தேன் என்று சொல்ல முடியாது. போர்முனையிலே தான் போலீசாரிடம் சிக்க வேண்டும் என்ற ஆசையினால் தூண்டிவிடப்பட்டேன் அதனால் தான் ! போலீசார் என்னைத் தேடி நான் ஒடிவிடவில்லை. அதுபோன்ற இயக்கமுமல்ல நாம் சார்ந்திருப்பது! நாமே சென்று அடைபடுவானேன் – களத்திலே நம் கடமையை நாம் செய்வோம் போலீசார் கடமையை அவர்கள் செய்யட்டும் என்ற கருத்துடனே மருத்துவ மனையில் நண்பர் பராவிடம் அன்பு விடை பெற்றுக்கொண்டு, நேராக லால்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு சென்றேன். செல்லும் பாதையிலேயே பொதுச்செயலாளர் அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன் ஆகிய செயற்குழுவினரை செயற்குழு கூட்டத்தில் போலீசார் கைது செய்துவிட்டனர் என்ற செய்தி கிடைத்தது.

கல்லக்குடி எனக்குக் களமாகத் தெரியவில்லை. திராவிடமே ஒரு போர்க்களமாகக் காட்சியளிப்பது போல் தெரிந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றசட்டசபை உறுப்பினர்களும் மற்றவர்களும் சுமார் நூறுபேர் அண்ணா முதலியோரை கைது செய்ததைக் கண்டித்து சட்டசபையிலிருந்து வெளியேறினார்கள் என்ற செய்தியும் திராவிடத்தை உற்சாகப்படுத்திற்று.

லால்குடியை அடைந்தோம் ஜூலை 14-ம் நாள்! மறுநாள் காலையிலே ஜூலை 15! ஆம் சூளுரைக்கும் ஜூலை 15! “முரசொலி கேட்குது; முன்னணி அமையுது ! என்று மூவேந்தர் பரம்பரையை அழைத்த ஜூலை 15! இழிவு துடைக்க வாரீர் ! இன உணர்ச்சி கொள்வீர்! வஞ்சக வடநாட்டிற்குத் தென்னாட்டில் ஆதிக்கமாம்; நெஞ்சழுத்தம் பாரீர் ! நேற்று மூவேந்தர் – இன்று டில்லி நாளை நாம் – என்ற உறுதிப் படையெடுப்போம் – இறுதி வரை எதிர்ப்போம் – கல்லக்குடியில் முதல் களம் அமைப்போம் – உயிர் வெல்லமென்போர் விபீஷணர் – அவர் விலகட்டும்! புறப்படுவோம் போர்முனைக்கு ! புறநானூறு நமது கையில்! பழந்தமிழர் வரலாறு நமது நெஞ்சில்! எதிரே பகைவர் ! இளித்து நிற்கும் ‘டால்மியாபுரம்’ என்ற பெயர்! திராவிடமே உனது தீர்ப்பை வழங்கு! என்று பரணி பாடியபடி படை கிளம்பிய ஜூலை 15. பகை தகர்ப்போம் – நகை உதிர்ப்போம், வென்றோ மென்று! என வீர முரசு கொட்டிய ஜூலை 15!

திராவிடா ! வடநாட்டில் உன் நாட்டுக்குப் பெருமை கிடையாது. உனது தலைவர்களுக்கு ஞாபக மண்டபம் கிடையாது.

ஆனால்; இழிவு நிரைந்தவனே ! இந்த நாட்டில் வட நாட்டானுக்குப் பூரணகும்பம், பூரிப்பான வாழ்வு, உல்லாசம், உற்சாகம். அய்யகோ! அவமானம்! அவமானம்! எனக் கதறியழுத ஜுலை 15! உடனே புறப்படு – உறைவிட்டடெழும் வாளெனவே புறப்படு – புலியே! புயலே! எழுந்திரு நிலவு சிரிக்கிறது நினது நிலைகண்டு – விண்மீன் கண் சிமிட்டிப் பரிகசிக்கிறது; சிங்கத் திருவிடத்தில் சிமண்டு முதலாளியின் பெயரா என்று கேட்டு! ஆனால்- இதோ – கடல் குமுறுகிறது – உனக்கும் அழைப்பு மடல் விடுகிறது – புறப்படு – புறப்படு என்று ஒலி கிளப்பிய ஜூலை 15!

அந்த ஜூலை 15 பற்றிய கடைசிக்கூட்டம் ஜூலை 14ல் லால்குடியில் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன் லால்குடியிலே தான் டால்மியாபுரம் பற்றிய தீர்மானம் நிறைவேறியது அதற்குப் பிறகு நடந்தவை என்ன என்பதை விவரித்து போர்முரசு கொட்டிய கூட்டமும் அதே லால்குடியிலே தான் நடத்தப்பட்டது. அந்த லால் குடிதான் கல்லக்குடி களத்திலே பிணமாகப் போன நடராசனைப் பெற்றெடுத்து பெருமையடைந்த பூமி. பொதுக் கூட்டத்திற்கு தோழர் பழனியாண்டி M. L. A., அவர்கள் தலைமை தாங்கினார். அவர் டால்மியா தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் அன்பு கொண்டவர். டால்மியாபுரப் போராட்டம் எவ்வளவு அவசியமானது என்பதை அவர் விளக்கினார்.

கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே நண்பார் கண்ணதாசனும் – காரைக்குடி தோழர் ராமசுப்பையாவும் மேடைக்கு வந்தார்கள். கண்ண தாசனும் கூட்டத்தில் பேசினார். போரில் கலந்துகொள்வதற்காகவே தானும் ராமசுப்பையாவும் வந்திருப்பதாகக் கூறினார்.

கூட்டம் சிறப்புடன் முடிவுற்றது. அன்றிரவே எல்லோரும் கல்லக்குடிக்குப் புறப்பட்டோம்.

பொதுச்செயலாளர் அண்ணாவைப் பூட்டிவிட்ட காரணத்தால் போராட்டம் புகைந்து போய்விடும் என்று ஆட்சியாளர் கருதினர். புகைவண்டிகள் நிற்காமல் ஓடும் என்று உறுதியாக நம்பினர். ஆச்சாரியார் வீட்டு மறியலுக்கு யாரும் வரவே மாட்டார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டனர். கல்லக்குடியிலே எட்டிப் பார்ப்பதற்குக் கூட ஆள் இருக்கமாட்டார்கள் என்று கனவு கண்டு களிப்படைந்தனர்.

“அமைதி அமைதி!” என்று முழங்கிக்கொண்டிருந்த அண்ணாவை சிறையில் பிடித்துப்போடுவதற்கு இவர்களுக்கு எந்த நியாயம் இடம் கொடுத்ததோ தெரியவில்லை. அவரைப் பிடித்து அடைத்துவிட்டால் அறப்போர் அடங்கிவிடும் என்று எந்த ஆரூடக்காரன் சொன்னானோ தெரியவில்லை! அண்ணா சிறையில் ! ஆனால் அவர் தந்த உரைகள் போராட்ட முறைகள் பொன்னிகர் மொழிகள் – வெளியில் – ஆயிரமாயிரம் உள்ளத்திலே குடியேற்றிவிட்டவை என்பதை உணரவில்லை – ஊராள வந்தவர் அதை உணரச்செய்கிறோம் என்று குருதி கொதித்தவர்கள் காத்துக் கிடந்தார்கள்.

கல்லக்குடியிலே இரவு இரண்டு மணிக்கு தொண்டர் களப்பாசறையிலே அறப்போர் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டு முதல் இரண்டு நாள் போரிலே கலந்துகொள்ளவேண்டியவர்கள் 14ம் தேதி இரவே வரவேண்டுமென்று அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் – அந்த அழைப்புச் சீட்டை அடையாளமாகக்கொண்டு பாசறையில் இடம் பெற்றார்கள்.

15ம் தேதி போருக்கான வீரர்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

முதல்படை – இரண்டாம்படை – மூன்றாம்படை. ஒவ்வொரு படைக்கும் இருபத்தைந்து வீரர்கள். முதல் படைக்கு நான் தலைவன். இரண்டாம் படைக்கும் மூன்றாம் படைக்கும் முறையே காரைக்குடி தோழர் ராம சுப்பையா- தோழர் கண்ணதாசன் ஆகியோர் தலைவர்கள்.

போராட்டத்தில் எப்படியெப்படி அமைதியோடும் – கண்ணியத்தோடும் – கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ள வேண்டுமென்று தொண்டர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நல்ல இரவு. திராவிடத்தை இருள் கவ்விக் கொண்டது போலவே வையகத்தையும் இருள் கப்பிக்கொண்டிருந்தது. அந்த இரவில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் நடைபெறப்போகும் போராட்டத்தைப் பற்றிக் கற்பனைகள் செய்துகொண்டிருந்தோம்.

போர் நிகழ்ச்சிகளில் உடனிருந்து உதவுவதற்காக தஞ்சையிலிருந்து தாமரைச்செல்வன் வந்திருந்தார்.

தாமரைச்செல்வன் என்ற தமிழ்ப் பெயரிலே – புனைப் பெயரிலே – உலவும் தோழரை நீங்கள் அறிவீர்கள். பேச்சிலே தென்றலும், எழுத்திலே அருவியோட்டமும் கொண்ட நண்பர் தாமரைச்செல்வன், நெருக்கடியான நிலைமை களுக்கிடையிலும் சுற்றிச் சுற்றி பிரசாரப் பணி புரியும் சுழல் விளக்கு. இளைத்த உடல் வலுத்த உள்ளம் – அந்த இளைஞரேறு அறப்போர் முனையிலேயிருந்து ஆவன செய்தார். வீரர்களுக்கு ஆர்வமூட்டினார். இலட்சியக் கதைகளைப் பேசிப்பேசி அந்த இரவை ஓட்டினோம். அவர், நான், மணி, அம்பில், சத்தி, முத்து, கண்ணதாசன், ராமசுப்பையா, C. D. மூர்த்தி ஆகியோர்!

ஜூலை 15! விடிவெள்ளி முளைத்தது வீழ்ந்த திராவிடத்திற்கும் விடுதலை உதயமாகப் போகிறது என்பதை அறிவிப்பதுபோல!

சேவல், “கொக்கரக்கோ” எனக் கூவிற்று; அது எல்லோரும் “புறப்படுங்கோ!” என்பதுபோல் இருந்தது.

செங்கதிரோன் எழுந்தான் வெங்கு நதி தனிற் – அமழ்ந்து வீரஞ் செய்கின்ற மூச்சோடு தமிழகமே எழுந்தது.

தமிழர் மீது தருக்கு மொழி வீசுவது வடவர்க்கு வாடிக்கை – ஆனால் வரலாறு சொல்கிறது; தருக்குமொழி பேசியோர் தலையொடியக் கல் சுமந்தனர் என்று! வரலாற்றை மறந்தனர் வாடிக்கையை மறக்கவில்லை! அந்த வடநாட்டார்க்கு எச்சரிக்கை செய்வோம்.

ஏ! தமிழ் நிலமே! எழுந்திரு! என முழங்கியது கடல்!

கடலின் கொந்தளிப்பு உள்ளத்திலே! காலைக் கதிரவனின் நிறம் கண்களிலே ! சேவலின் மிடுக்கு நடையிலே!

தமிழர் பட்டாளம் எழுந்தது! எழுந்தது! எவரும் எமக்கு இணையில்லை – எனக் கூறி எழுந்தது !

மகதமும், அவந்தியும் மணி மண்டபங்களை – தோரண வாயில்களை – முத்துப்பந்தர்களை எங்கள் கரிகாலன் – எனும் திருமாவளவன் காலிலே வைத்து காணிக்கை செலுத்தி கைகட்டி நின்ற காலமொன்றிருந்தது ! அந்த வடநாடு இன்று கரிகாலன் பரம்பரையை இகழ்ந்து பேசுகிறது! இமயத்தின் நெற்றியிலே புலிக்கொடி! இது தமிழர் ஏடு! அதிலே மண்மேடு குவிய மதோன்மத்தர்கள் முயல்வது நாமும் பழைய பண்பாடு மறப்பது ! நியாயமா மாநிலமே! மறவர் மண்ணே! மாசற்ற பூமியே!

கண்ணீரும் – கனலும் சேர்ந்து கிளம்பும் விழியுடை வீரர்கள் எழுந்தனர் ! எழுந்தனர்! பறந்தனர் பறந்தனர். படை முகாம்களுக்கு!

வீரர்களின் அடிச்சுவடுகளை சூழ்ச்சிக்காரர்கள் அழித்துவிட்டிருக்கலாம்; ஆனால் காலம் – கூடியவரையில் அவைகளைக் காப்பாற்றித்தான் வைத்திருக்கிறது. அதையும் ஒழித்துக்கட்ட முயலும், ஒண்டவந்த பிடாரிகள் – அவர்களுக்கு சாமரம் வீசும் தமிழ்நாட்டு ஒதிய மிலார்கள் -ஒழிந்திடுக ! ஒழிந்திடுக! என உயர்ந்திட்டது போராட்டக் கொடி.!

சிவப்பும் கருப்பும் கலந்த கொடி – இழிவுதனைக் காட்டிக் கொண்டோம், இருள் நிறைந்த திராவிடமே! பழி தீர்த்துக் கொள்ளத்தானே பச்சை ரத்தம் பாய்ச்சிடுவோம் – என்று பறைசாற்றிடும் கொடி! உயர்ந்தது! உயர்ந்தது! தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் நிறைந்தது! – கல்லக்குடியிலே – டால்மியா தொழிற்சாலையிலே புகை கிளம்பிற்று. புரட்சி எரிமலையிலும் புகை எழும்பிற்று!

அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஆணவத்தை – அதிகாரக் கொழுப்பை எதிர்த்திட திராவிடம் கொடி தூக்கிய நாள் – கொடுமையைக் களைந்திட வரிந்துகட்டிய நாள் குள்ளநரிக்குணம் படைத்தோர் கொட்டம் அடங்கிடக் கொக்கரித்த நாள் மூவேந்தர் மரபு மீண்டும் முரசு கொட்டிய முதல் நாள் – ஜூலை 15ம் நாள் – மலர்ந்தது! – மலர்ந்தது! ஆட்சிக்காரர் நெஞ்சிலே எஞ்சியிருந்த இரக்கமும் உலர்ந்தது ! உலர்ந்தது! – ஆனாலும் அவர்கள் பிடி தளர்ந்தது! ஆணவத்தின் தலையிலே இடி விழுந்தது!-

ஆயிரக்கணக்கான மக்கள், களங் காண வந்துவிட்டனர், கல்லக்குடிக்கு! தொண்டர் பாசறையிலே முதல் முரசு ஒலித்தது! முதல் படை கிளம்பியது!

நான் முன்னே – என் பின்னே இருபத்திநாலு வீரர்கள் – எம்மைச் சுற்றி ஆயிரமாயிரம் தோழர்கள் – திராவிடத் தாயின் தலையிலே வடநாட்டான் சூட்டிய அவமானக் கிரீடம். அதைக் கழற்றி குப்பைமேட்டில் எறிய முடியாதபடி தாயின் கரங்களில் விலங்கு. அந்த விலங்கொடிக்கும் விடுதலைப் பட்டாளம் முதல் படை – கல்லக்குடியிலே நடைபோட்டது. ‘கிளம்பிற்றுக்காண் தமிழர் சிங்கக் கூட்டம் கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை’ என்றிடும் விதத்திலே – இந்நாட்டான் இங்கு வாழ்வான் தமிழ்நாட்டான் தலை குனிந்தான் இதோ நிமிர்ந்தான்! விழித்துவிட்ட காட்சியைப் பார் – இனிக் கொழித்துவிட்ட உமிகள் தான் கொடுங் கோன்மைக் கூட்டத்தார்! என்றிடும் விதத்திலே – புழுதி யெழுப்பியவாறு போர்ப்படை களம் நோக்கி விரைந்தது! – நடந்தனர் வீரர்கள்! பல தெருக்களைக் கடந்தனர் தீரர்கள் ! குருடர்களும் பார்த்தனர் கூனர்களும் நிமிர்ந்தனர்!

“அடைந்தே தீருவோம் அருமை மிகு திராவிடத்தை!”

“புலிவாழ் நாட்டில் எலிபுகு காவியமா?”

“தமிழர் வீட்டில் வடவர் மொழியா?”

“எங்கள் மண்ணில் அயலான் பெயரா?”

முழங்கினர்! முரசு கொட்டினர்! முன்னேறினர்!

செவிடர்களும் கேட்டனர்! ஊமைகளும் வாழ்த்தினர்!

களம் வந்தது செந்தமிழன்னையின் கண்களைக் குத்தியிருக்கும் இடம் வந்தது பெருமைக்குரிய தாய் – புலம்பிக்கொண்டிருந்த இடம் வந்தது – வடநாட்டு ஆதிக்கம் திராவிடர் நெஞ்சிலே ஈட்டியால் குத்திக்கொண்டிருக்கும் இழிவுநிறை இடம் வந்தது – தமிழரின் சொத்து சுருட்டப்படும் இடம் வந்தது – தமிழரின் வீரம் புதைக்கப்பட்ட சுடுகாடு வந்தது.

“டால்மியாபுரம்” அந்த அவமானச் சின்னம், பல்லை இளித்தபடி நின்றுகொண்டிருந்தது! அன்னையின் தலையிலே அழுத்தப்பட்ட முள் கிரீடம் ! திராவிடர் மானத்தை சித்திரவதை செய்ய அமைக்கப்பட்ட சிலுவை ! அய்யோ! அந்தக் கிரீடத்தின் வழியாக எங்கள் பெற்ற தாயின் குருதி சொட்டிக்கொண்டிருந்தது! அய்யகோ! பிறந்த பொன்னாட்டின் உதிரம் வெள்ளம்போல் பெருக்கெடுத்தது அந்த சிலுவையின் வழியாக !

எங்களைச் சீராட்டிப் பாராட்டி செந்தமிழையும் ஊட்டிய சிலம்பணிந்த செல்வி மணிமேகலாதேவி – மாணிக்க குறள் ஒலிக்கும் மாதா – வளையாபதியுடைய குண்டலகேசி வஞ்சகர் பூட்டிய விலங்கால் வாட்டமுற்றுக் கிடந்தாள்!

அவள் வாட்டம் போக்க வந்துவிட்டோம் நாங்கள்! எங்கள் செல்வத் திருநாட்டை சித்திரவதை செய்யும் சிலுவையை போலீசார் புடைசூழ்ந்து காத்தனர்.

நாங்கள் விலக்கவந்த விலங்கிற்கு துப்பாக்கி வேலி போட்டனர்.

துடித்தழும் மாதாவை தூரத்திலேயிருந்து பார்! தொடாதே! அவள் தொல்லையுறுவதை ரசி ! என்றது அரசாங்கம்!

கோழைகள் கேட்பர் மோழைகள் பின்னடைவர் “நாங்கள் வாழைக்குக் கன்றல்ல – ஆலுக்கு விழுதுகள்”- அன்னை திராவிடத்திற்கு மக்கள் இப்படிப் பதில் தந்தோம்! ஓடினோம்; அன்னையிடம்! முள் கிரீடத்தைக் கழற்றி எறிந்தோம் ரத்தம் கசியும் நெற்றியிலே மருந்து வைத்தோம்.

“டால்மியாபுரம் ” என்ற பெயரை மறைத்தோம். “கல்லக்குடி” என்ற பெயரை அந்தப் பலகை மீது ஒட்டினோம்.

வடநாட்டான் வசமுள்ள புகைவண்டி வந்து நின்றது. ”அதிகாரபூர்வமாகப் பெயரை மாற்று! அதன் பிறகு ரயில் செல்லட்டும்” என்று முழங்கினோம். நாங்கள் இருபத்தைந்துபேர் – இலட்சிய பேரிகை ஒலித்தோம். புகைவண்டி புறப்பட ஆயத்தமானது.

முதலில் ஐவர்! புகைவண்டியின் முன்னே படுத்தோம். நான் – சத்தி, கஸ்தூரி, குமாரவேல், குழந்தைவேல் – தண்டவாளத்தைத் தலையணையாகக் கொண்டு இருப்புப் பாதையை பஞ்சுமெத்தையாக்கி – நிண்ட தூக்கத்தை அளிக்கக்கூடிய மாமருந்தாம் புகைவண்டிக்குப் பக்கத்திலே சாய்ந்தோம்.

கூடிநின்ற ஆயிரமாயிரம் உள்ளங்களும் துடித்தன. ஒரே அமைதி. என்ன நடக்கப்போகிறதோ. என்று மக்கள் வெள்ளம் அலையடங்கிக் கிடந்தது. துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் வளையம் வளர்ந்தது. கலெக்டர், ஏ. டி. எஸ்.பி., சர்க்கிள், சப் – இன்ஸ்பெக்டர், மாஜிஸ்டி ரேட், சார்ஜண்ட் எல்லோரும் எங்கள் பக்கம் வந்தனர்.

‘ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்?’ என்றனர்.

‘எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்வதற்காக’ என்றேன்.

“இது பொதுஜனங்களுக்கும் பிரயாணிகளுக்கும் இடையூறான காரியம் அல்லவா?”

“அப்படி நீங்கள் கருதினால் வருந்துகிறோம்; ஆனால் இந்தப் பொதுஜனங்களைக் கேளுங்கள் – அல்லது வண்டியிலுள்ள பிராயணிகளைக் கேளுங்கள் – அவர்கள் சொல்லட்டும் – “டால்மியாபுரமே இருக்கவேண்டும் இந்தப் போராட்டம் கூடாது’ என்று ! நாங்கள் உடனே எழுந்துவிடுகிறோம்.” படுத்துக்கொண்டே பதில் சொன்னோம். பக்கத்திலே ரயில் என்ஜின் கொதித்துக்கொண்டிருந்தது. நாங்களுந்தான்! எங்களைச் சுற்றி நின்ற மக்களுந்தான்!

“டால்மியாபுரம் வேண்டாமென்றால் அதற்கு, மேலிடத்துக்கு எழுதுங்களேன்”

“எல்லா முயற்சிகளும் முடிந்துவிட்டன. தீட்டிய கடிதங்கள் எவ்வளவு தீர்மானங்கள் எத்தனை – தில்லியின் திருநோக்கு படவில்லை எம்மீது! ஆகவே அவர்கள் கவனத்தை இழுக்க இம்முறையைக் கையாள்கிறோம்”

“இப்படிச் செய்வதால் வெற்றி கிடைத்துவிடுமா?”

“எங்களுக்கு முன்னே நிற்க வைக்கப்படும் இந்த ரயிலின் ‘கிரீச்’ என்ற சப்தமோ – அல்லது ரயில் எம் மீது ஏறி எமது எலும்புகள் ‘மறாக் மறாக்’ என்று முறியும் சப்தமோ – ஆட்சி பீடத்தின் காதில் எட்டுமோ எட்டாதோ – மக்கள் மன்றத்துக்கு எட்டும், நிச்சயமாக எட்டும். அது இந்த ஆதிபத்தியக்காரரை ஆயிரம் தேள் போலக் கொட்டும். அது போதும் எங்களுக்கு”

“சொல்கிறோம் – கேளுங்கள் உடனே எழுந்து விடுங்கள்”

“நிபந்தனை வேண்டும் – டால்மியாபுரத்தை மாற்றி விடுகிறோமென்று!”

“அதுதான் ‘கல்லக்குடி’ என்று ஒட்டிவிட்டீர்களே!”

“ஒட்டுவதென்ன – எங்கள் ஓவியர்களை விட்டு எழுதியே தருகிறோம் கல்லக்குடி என்ற பலகையை! ஆனால் ஆட்சி – அதிகாரபூர்வமாகச் சொல்ல வேண்டும்”

அதிகாரிகளின் கேள்விகளும் என் பதில்களும் அதோடு முடிந்தன. ‘All Right’ என்று கூறிவிட்டு அதிகாரிகள் அப்பால் நகர்ந்தார்கள்.

புகைவண்டி ‘கூ’ என்று ஊளையிட்டது. என்ஜினில் ஒலி கிளம்பியது. சக்கரங்கள் சுழன்றன. ஓரத்திலே நின்றிருந்த மக்கள் கண்ணை மூடிக்கொண்டனர். படுத்திருந்த நாங்கள் எங்களைத் தயார் படுத்திக்கொண்டோம். தேசத்தொண்டர்கள் நடத்தும் தியாக யாத்திரைக்கு தயாராகி விட்டோம்.

கடைசியாக ஒரு முறை கதிரவனைப்பார்த்தேன் – கல்லக்குடியைப் பார்த்துக்கொண்டேன் – என்னை சீராட்டிய திராவிட மாதாவை ஆசை தீரப் பார்த்துக்கொண்டேன். எதிரே நின்ற திராவிடர்களையும் பார்த்துக்கொண்டேன் – எல்லாம் நொடியில் முடிந்தது கண்ணை மூடிக்கொண்டேன். சாவின் இன்ப முத்தத்திற்கு கன்னத்தை தயார் படுத்திக்கொண்டோம் எல்லோரும்! ஆம் – ஐவரும்! கட கட வெனக் கிளம்பிய புகைவண்டி நகர்ந்ததை உணர்ந்தேன்! – ‘திராவிடம் வாழ்க’ என இருதயம் உச்சரித்தது ! ஒரு சப்தம் மீண்டும்! கண்ணைத் திறந்தேன் – உயிரோடிருந்தேன் ! அதை உணர்ந்தேன். சிறிது துரத்திலிருந்த புகைவண்டி என் உடலை ஒட்டினாற்போல் நின்று கொண்டிருந்தது.

மீண்டும் அதிகாரிகள் வந்தனர்.

“முடிவு என்ன” வென்றனர். “முடிவைத்தான் எதிர் பார்க்கிறோம்” என்றேன்.

“சரி எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றார்கள். எழுந்தோம். உடனே மிச்சமுள்ள நண்பர்கள் – என் படைவரிசையினர் படுத்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இருபத்தைந்து பேரும் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டோம். பொதுமக்கள் பொங்கும் எரிமலைபோல ஆயினர். அணையுடைத் தெழும் நித்தம் போலக் காட்சி தந்தனர் மாணவர் – தொழிலாளர் – இளைஞர் – பெரியோர் – மங்கை நல்லார் அனைவருமே கனலும் கண்ணீரும் சிந்தினர். ‘கண்ணியம் – கடமை கட்டுப்பாடு’ என்று உரக்கக் கூவினேன். – “காப்போம் அதை!” என்று மக்கள் சமுத்திரம் எதிரொலித்தது.

நகரும் கிளிக்கூண்டு நகர்ந்தது பொதுமக்களிடமிருந்து – அழகு நல் திராவிடத்து வீதிகளிலிருந்து – பிரிக்கப்பட்டோம் – பின்னர் கல்லக்குடி பாதுகாப்பு நிலையத்தில் அடைக்கப்பட்டோம்.

மணி பத்து அடித்தது! சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவசரமாக போலிஸ் ஸ்டேஷனுக்குள் வந்தார். எங்களில் பதினாலு பேரை எழுந்து நிற்கச் சொன்னார். எழுந்தனர். ” நீங்கள் கைது செய்யப்படவில்லை வெளியே போங்கள்” என்றார். போய்விட்டனர். என்ன சட்டமோ – என்ன திட்டமே – யார் கண்டது!

அடுத்த வண்டி வரும் நேரமாகிவிட்டது. இந்த முறை என்ன நடைபெறுமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இரண்டாவது படை புறப்பட்டு களத்தை நோக்கித் தெருவிலே செல்லும் பேரொலி எங்களுக்குக் கேட்டது. இனி வெளியுலகச் செய்திகளை எப்போதாவது கேட்கத்தானே முடியும் பார்க்கத்தான் முடியாதே!

இரண்டாம் படையின் தலைவர் இராமசுப்பையா – அவர் தலைமையிலே படை போகிறது!

உழைப்பு – ஒரு உருவம் பெற்று அது ஓடி ஆடி, வேலை செய்துகொண்டிருக்கும், அதிசயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ! – பார்க்கவில்லையானால் ராமசுப்பையாவைப் பாருங்கள் அந்த உழைப்பு பெற்ற உருவந்தான் அவர். தொண்டருக்குத் தொண்டர் என்று யார் யாரோ எவ்வப்போதோ வர்ணிக்கக் கேட்டிருக்கிறோம். யார் யாரையோ பற்றி! அது உண்மையோ பொய்யோ தெரியாது – இதோ உண்மையின் ஒளி காரைக்குடி ராமசுப்பையாவை நம்முன் காட்டுகிறது. அவர் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தரு – தருநிழல் – நிழல் தந்த சுகம்.

திருச்சி சிறைச்சாலையிலே நாங்கள் நானூறுக்கு மேற்பட்டோர் அமைத்த ராஜ்ஜியத்திற்கு அவர் தான் உணவு மந்திரி.

தாயுள்ளம் படைத்தவர் – பேயுள்ளமும் இரங்கும்படி பேசுபவர் இன்று நேற்றல்ல என்றைக்கோ – என்னை மட்டுமல்ல; இயக்கத்தின் முன்னனி வீரர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய தலைமையிலே சென்ற படை – களத்திலே எங்களைப் போலவே அறப்போர் புரிந்து அதிகார வர்க்கத்தினரால் பிடிக்கப்பட்டது.

அவர்கள் எங்களுடன் வந்து கலந்தனர். அந்த இருபத்தைந்து பேரிலே முதலில் எங்களிடமிருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டரால் பிரிக்கப்பட்ட பதினாலு தோழர்களும் இருந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் எங்கள் ஐவரை (கருணாநிதி – சத்தி – கஸ்தூரி – குமாரவேல் – குழந்தைவேல்) தனியாகப் பிரிக்கப்பட்டு, உட்கார வைக்கப்பட்டோம். மற்ற 31 பேர்களும் ராமசுப்பையா உட்பட தனியாகப் பிரிக்கப்பட்டனர்.

அவர்கள் வருமாறு; ராமசுப்பையா, ஜெயங்கொண்டம் வேணுகோபால், மலைக்கோட்டை செயல்வீரர் ரத்னம், அரியலூர் செயலாளர் எத்திராஜ், தமிழ் முத்து, முனுசாமி, மருதமுத்து, பாண்டியன், கலைமணி, முருகேசன், டி. ஏ. கமலன், பரமானந்தம், முருகேசன், ராமு, தங்கவேல், சின்னையா, சத்தி, அனீப், இராவணன், நல்லமணியன், காளிதாஸ், சக்கரபாணி, சோமசுந்தரம், மருதநாயகம், வளர்மதி, முகமதலி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு, ராமன், சின்ன துரை, நடராசன் ஆகியோர்.

போலீஸ் கூடத்திலே அனைவரும் அமர்ந்திருந்தோம். அந்த ஸ்டேஷன் சப் – இன்ஸ்பெக்டர் எங்களைப் பாதுகாத்தபடி எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார்.

முப்பத்தி ஒன்று என அவர்களை எண்ணி முடிப்பார் – பிறகு எங்களை எண்ணுவார்! – மீண்டும் சந்தேகம் வரும் – மீண்டும் எண்ணுவார் ஒன்-டூ-த்ரீ – சொல்லுங்கள் என்பார் – சொல்லுவோம் முப்பத்திஆறு முடியும் “யாராவது இரண்டு முறை சொல்லியிருந்தால் என்ன செய்வது!” என்பார்!- “சரி எல்லோரும் கைதூக்குங்கள்” என்று கூறி கைகளை எண்ணுவாார்.

“யாராவது இரண்டுகையும் தூக்கியிருந்தால் என்ன ஆவது?” என்பார் – மீண்டும் எண்ண ஆரம்பிப்பார் அவரும் இப்படி எண்ணிக்கொண்டேயிருந்தார் – நாங்களும் எண்ணிக்கொண்டேயிருந்தோம்; ஆட்களை அல்ல! ஆதிக்கக்காரர் அரசோச்சும் நாட்களை !

மூன்றாவது படை, நடுப்பகலில் – தோழர் கண்ணதாசன் தலைமையில் புறப்பட்டுச் செல்லும் ஒலி கேட்டது.

1949ம் ஆண்டு என்று நினைக்கிறேன்; சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு முதன் முதலாக சென்றிருக்கிறேன். இப்போது தமிழரசுக் கழகவாதியாக இருக்கிற தோழர் கா.மு.ஷெரீப் ஒரு நண்பரை எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார்.

அந்த நண்பர் நெற்றியிலே பட்டையாக திருநீறு பூசிக்கொண்டு என்னை அறிமுகப்படுத்தியதும் ‘நமஸ்காரம்’ என்று கைகூப்பினார். நான் கொஞ்சம் அழுத்தமாக ‘வணக்கம்’ என்று சொன்னேன். அந்த நண்பர் செட்டிநாட்டைச் சேர்ந்தவரென்றும் கவித்துவமும், சமய உணர்ச்சியிலே துடி துடிப்பும் வாய்ந்தவரென்று ஷெரீப் கூறினார். சேலத்தில் சில நாட்கள் நான் தங்கவேண்டியிருந்தமையால் அவரோடு பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. நல்ல இளமையும், தமிழறிவும் சமயமெனும் சூளையிலே நடப்படுகிறதே என எண்ணினேன். அவரோடு அதிகமாகப் பழகிய பிறகு என்னைப் பார்க்காமலே அவர் என்னிடத்திலே கொண்டிருந்த அன்பும், அவரைப் பார்த்த பிறகு அவரிடத்திலே எனக்கு ஏற்பட்ட அன்பும் பாச உணர்ச்சியுள்ள நட்புப் பயிருக்கு விதையாகிவிட்டன. பிரிந்தோம் பிறகு கூடினோம் – மீண்டும் பிரிந்தோம் கூடினோம் தகராறுகள் ஏற்பட்டு அல்ல! அவரவர்கட்கு இருந்த அலுவல்களால்!

பொள்ளாச்சியிலே பொதுக்கூட்டம் ஒன்றுக்காக போய்க் கொண்டிருக்கிறேன். வழியிலே கோவையிலே அந்த நண்பரைச் சந்தித்தேன். எப்போது சந்தித்தாலும் அவருக்கும் எனக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். அறிஞர் அண்ணாவின் ஆற்றலைப் பாராட்டுவார். அவர் போல் ஒரு அறிஞரைக் காண முடியாதென புகழுவார். ஆனால் கழகத்தின் கொள்கைகள் தான் கசக்கின்றன என்பார். கோவை சந்திப்பில் எங்கள் வாதம் ஒருவாறு முடிவுற்று – அவரும் என்னுடன் பொள்ளாச்சிக்கு வருவதாக ஒத்துக் கொண்டார். வழிநெடுக பஸ்ஸில் வாதம் நடத்தியபடி சென்றோம். கோவையிலே ஆரம்பகாலம் முதல் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான தோழர் ராசமாணிக்கமும் வாதங்களில் கலந்துகொண்டார்.

பொள்ளாச்சி சென்றோம். பொதுக்கூட்டம் ஆரம்பமானது. பொள்ளாச்சி வாசியும் – கஷ்ட நஷ்டங்களுக் கிடையே கட்சிப் பணியாற்றுபவருமான கழகக் காளை ராமானுசம், கடமையுணர்ச்சிமிக்க நண்பர் ஆனைமலை மயில்சாமி, இருவரும் பேசினார்கள். நான் பேசுவதற்கு முன்பாக செட்டிநாட்டு நண்பர், தானும் பேசுகிறேன் என்றார். நான் சரியென்றேன். ஆனால் எனக்குப் பயம் தான். என்ன பேசிவிடுவாரோ; அதற்கு வேறு பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறதோ என்னமோ; அப்படிப் பதில் சொல்லி – வீணான குழப்பம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது; ஏன் கோயமுத்தூரில் இருந்தவரை இங்கு அழைத்து வந்தோம் – என்றெல்லாம் எனக்குள்ளாகவே பேசிக்கொண்டேன். அவர் பேச எழுந்தார். உடனே அவர் நெற்றியை கவனித்தேன்! “அட பரமசிவம் ” அவர் நெற்றியிலே திடீரெனத் திருநீறைக் காணோம் ! பேசத்துவங்கினார்.

“தலைவர் அவர்களே! முட்டாள் தனத்துக்கு முதலிடம் கொடுத்து – மடிந்துபோகும் ஏழைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இடிந்துபோன கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யும் செட்டிமார் நாட்டிலே பிறந்தவன் நான்.” என்று பேச்சை ஆரம்பித்தார். குறைந்த நேரம் பேசினார். நமது கொள்கைகளையே பேசினார். அனைவரும் பூரித்தோம். அவர் நமது இயக்கத்துக்குவர பொள்ளாச்சி தான் நுழைவு வாயிலாக இருந்தது. பிறகு அவருக்கு காரைக் குடியிலே திருமணம், நானும் அன்புச் சகோதரர் அரங்கண்ணலும் அங்கு சென்றிருந்தோம். திருமண வீட்டுக்குச் செல்லும் வழியில் ராமசுப்பையாவைக் கண்டோம். தனக்கும் தெரியாமல் ஒரு தோழர் இயக்கத்துக்கு வந்திருப்பதும் – அவர் மணத்திற்கு நாங்கள் செல்வதும் – அவருக்கு மிக வியப்பாகவேயிருந்தது. எல்லோரும் சென்றோம்.

குதிரையென்று சொல்லப்படும் ஒரு பிராணியில் மணமகன் அமர்த்தப்பட்டு – கால்கள் தரையைத் தொடும்படியான நிலைமையில் பொய்க்கால் குதிரை மகா – ராஜாபோல வேஷம் போடப்பட்டு – எங்கள் நண்பர் ஊர் வலமாக வந்துகொண்டிருந்த அதியற்புதமான செட்டி நாட்டு திருமணங்களில் சிறப்புமிக்க வழக்கமான காட்சியைக் கண்டோம்.

சில இடங்களில் மாப்பிள்ளைக்கு சாமியார் வேஷம் போட்டு வாழ்வு நிலையாமையையும் ‘கூசாமல் சந்யாசங் கொள்’ என்ற உபதேசத்தையும் நிகழ்ச்சியாக்குவார்கள்.

செட்டிநாட்டிலோ; வாழ்வு ராஜபோகமானது என்பதை வலியுறுத்துகிறார்கள் மாப்பிள்ளைமார்களுக்கு வேஷம் போட்டு!

மாலையில் திருமணப் பாராட்டுக் கூட்டம் – நாரண துரைக்கண்ணன் தலைமையில் நாங்கள் பேசினோம்.

செட்டிநாட்டு நண்பரும் நாங்களும் – பிறகு – மிகவும் நெருங்கிவிட்டோம். கழகக் காரியங்கள் – சொந்த அலுவல்கள் – எல்லாவற்றிலும் அவரும் துணைபுரிபவரானார்.

அவர் மிகவும் நல்லவர். திருநீறு பூசியிருந்தாரே – அப்போதுங்கூட! அதனால் தான் அவர் அவ்வளவு சீக்கிரம் நம் பாசறையை உணர முடிந்தது உழைப்பார் – உணர்ச்சியோடு செயலாற்றுவார் – ஒரே குறை – எனக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு உண்டாக்கும் குறை – உணவு விஷயத்தில் அவருக்கு அவரே நிகர்! சிறைச் சாலைக்குப் போனால் என்னய்யா செய்வீர்; என்று கோபமாகக் கேட்பேன். அதற்குத்தான் தயார் படுத்துகிறேன்” என்பார்! “

“ஒட்டகம்போல தயார்படுத்த முடியாது தோழரே! ஒத்திகை பார்த்துக்கொள்ள வேண்டும் பட்டினி கிடந்து!? என்பேன்! ஆத்திரம் தாங்கமுடியாமல் இலையைத் தூக்கி விட்டெறிவார் எச்சில் தொட்டியில் – எல்லாம் சுத்தமாக சாப்பிட்டான பிறகு!

உணவு விஷயத்தில் நல்ல பாடங்கற்பிக்க சமயம் பார்த்திருந்தேன். கிடைத்துவிட்டது சந்தர்ப்பம். ஆனால் அது நழுவிவிட்டது. ( இருந்தாலும் மீண்டும் கிடைக்கும்)

கல்லக்குடி போராடத்தில் மூன்றாம் படை வரிசைக்கு தளபதியாகச் சென்று – போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதலுக்கு ஆளான கண்ணதாசனைப் பற்றித்தான் இவ்வளவு தூரம் கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும். ஜூலை 14ல் லால்குடி வந்தார்! மேடையில் பேசினார். ‘குருவுக்கு வரும் துன்பம் சிஷ்யனையும் தாக்கட்டும்’ என்று உரத்த குரலில் மொழிந்தார். பாசமிக்க அந்த நண்பனை படைவரிசைக்கு தளபதியாக்கினேன்!

திருநீறு நெற்றியிலே ஒரு காலம்! செந்நீரைக் கொட்டவும் தயாரென செருமுனைக்குக் கிளம்பியது ஒரு காலம்! பின்னது பகுத்தறிவுக்காலம்.

கவிஞர் கண்ணதாசன் தலைமையிலே படை போகிற ஒலி காதிலே விழுந்தது. போலீசாரின் பாதுகாப்பில் (காவலில்) தான் இருந்தோமென்றாலுங்கூட பிற்பகல் உணவை தோழர் தருமுவும் மற்ற தோழர்களும் கொண்டு வந்துதான் எங்களுக்கு அளித்தார்கள். உணவருந்திக் கொண்டிருந்தோம். சப் இன்ஸ்பெக்டர் நின்றுகொண்டு எங்களை சரிபார்த்தபடி இருந்தார். பக்தியில் உட்கார்ந்திருந்தபோதும் எங்களை ஒருமுறை எண்ணிட அவர் தவறவில்லை. அரசாங்கக் கடமையை அவர் அவ்வளவு ஒழுங்காகவும் ஜாக்ரதையாகவும் செய்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே யாரோ ஒருவர் ஓடிவந்து சப் இன்ஸ்பெக்டரிடம் ஏதோ மெலிந்த குரலில் சொன்னார்.

எங்களுக்குப் புரிந்துவிட்டது அடுத்த விநாடியே! களத்திலே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறுகிறது என்று! உணவு பரிமாறிக்கொண்டிருந்த தருமு முதலியோரை உடனே போகும்படி அனுப்பினேன். பிறகு சாப்பிட முடியுமா எங்களால்! ஆச்சாரியார் சர்க்காரின் துப்பாக்கி ரவைகளுக்கு திராவிடத் தோழர்களின் சதைகளை ரத்தத்தை எலும்பை இருதயத்தை – மண்டையோடுகளை தீனியாகத் தருகிறது “டால்மியாபுரம் ” என்று கேள்விப்பட்ட பிறகு சாப்பாடென்ன – சாப்பாடு!

கேசவன்


அடுத்த மாதம் திருமணம். பெண்ணெல்லாம் பார்த்து வைத்துவிட்டாள் பெற்றவள். வருங்காலத்தை – எண்ணியபடி வாலிபன். பிரயாணம் செய்துகொண்டிருக்கிறான்.

“வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் வனிதாமணி எப்படிப்பட்டவளோ நான் கனவு காணும் கட்டழகி – யாகவே வாய்த்து விடுவாளா? – அம்மா போய் பெண் பார்த்தால் மகனுக்குப் பிடிக்காத பெண்ணாகவா பார்ப்பார்கள்.

திருமணம் ஆகா, எவ்வளவு இன்பமான சொல்! எத்துணை தித்திப்பு அந்த வார்த்தையிலே ! வாழ்விலோர் திருநாள் வாழ்வுக்குத் துணை அமையும் நாள் தான்! திரு மணத்தன்று என் சுந்தராங்கியின் சுண்டுவிரலைத்தான் தொடமுடியும் பிறகு…. – நினைக்கவே இனிக்கிறதே!

முதல் இரவு வரும் – வாழ்வில் என்றைக்கும் திரும்பப் பெறமுடியாத இரவு காராக்கிரகத்துக் கைதிக்கு கடைசி இரவும் – கல்யாணமான ஜோடிக்கு முதல் இரவும் ஆகா- அனுபவிக்காமலே அதைப்பற்றி எவ்வளவு கற்பனையூறுகிறது எனக்கு! “வருவார் வருவார் என்று பஞ்சணை தேடும்! வந்து வரைவார் – இன்ப இலக்கிய ஏடும்!” என்ற புரட்சிக் கவிஞரின் பொன்னெழுத்துக்களை நினைப்பேனோ- “கலவி நடுப்பாதையிலே காதல் பேசி ” என்று வர்ணித்த பாரதியைப் பாராட்டுவேனோ”

அடுத்த மாதம் நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றி இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டு ரயில் வண்டியினுள் மேல் பலகையில் படுத்திருக்கிறான் கேசவன்.

அடுத்த நாள் திரும்பி வந்துவிடுகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போனவன். அம்மா விட்டிலே காத்திருக்கிறார்கள்; வியாபாரத்துக்குப் போன மகனை இன்னும் காணோமே என்று!

ஆளொருவன் ஓடிவருகிறான் தாயிடம்! கேசவன் இறந்துவிட்டான் என்று சொல்லுகிறான். எந்தக் கேசவன்? அடுத்த மாதம் திருமணம் என்பதைப்பற்றி எண்ணியெண்ணி கோட்டைகள் பல கட்டிக்கொண்டு போனானே ; அந்தக் கேசவன்.

தாய் அழுதாள் துடித்தாள் – அய்யோ மகனே என அலறி விழுந்தாள். இதையெல்லாம் சொல்லவும் வேண்டுமா?

“என் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண்ணெல்லாம் பார்த்தேனய்யா – அதற்குள் இப்படி ‘போக்காளி’ போய்விட்டானய்யா!” என்று ஒரு தாய் பெற்ற தாய் – அடிவயிறு எரிய எரிய இருதயம் குமுறக் குமுற – தலை சுழல சுழல – கண்ணீர் வழிய வழிய வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாளென்றால் யாரால்தான் அதை சகிக்கமுடியும் இருதயத்தை எடுத்து வைத்துவிட்டு ஆட்சி நடத்துகிற அக்கிரமக்காரர்களைத் தவிர!

எதிர்காலத்தை எண்ணியபடி படுத்திருந்தான். அவன் மண்டையிலே ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது; புகைவண்டியைப் பொத்துக்கொண்டு!

பஞ்சணையிலே வாலிபன் படுத்திருப்பான். தலையிலே விரலால் ஒரு ‘தட்டு’ விழும். திரும்பினால் காதலி நிற்பாள். இப்படி வாழ்வின் ருசியைப் பற்றி எண்ணிக் கொண்டு படுத்திருந்த இளைஞன் தலையிலே மென்மையான ஒரு ‘தட்டு’ விழவில்லை. துப்பாக்கிக் குண்டு விழுந்தது! மண்டையைப் பிளந்து தலை சிதறிப்போய்விட்டது. “வரப்போகும் இல்லாள் மெல்லிய விரல்களால் வருடுவாள் இந்தத் தலையை ” என்று நினைத்துக்கிடந்தானே; அந்தத் தலையை துப்பாக்கிக் குண்டு சுக்கு சுக்காக்கிவிட்டது. அவனால் இனி நினைக்கமுடியாது! மூளை சக்கை சக்கையாகிவிட்டது! வாயை மாத்திரம் ” ஆவ் ஆவ்” என்று பிளந்தானாம் – ஆயிரம் முறை! என்ன சொல்வதற்காகப் பிளந்தானோ?

எப்படி வேதனையிருந்ததோ! அம்மாவுக்குக் கடைசிச் சேதி சொன்னானோ – அல்லது – அட பாவிகளே! என்னையேன் என் தாயிடமிருந்து பிரித்தீர்கள் என்று கதறுவதற்காக வாயைப் பிளந்தானோ தெரியவில்லை. சாவைத் தழுவிவிட்டான்; கோமளவல்லியைத் தழுவப் போவதை நினைத்து மகிழ்ந்தவன் – கொடியோர் வீசியெறிந்த சாவைத் தழுவிவிட்டான். கல்லக்குடி கனத்திலே – பிணக்கோலம் பூண்டான், மணக்கோலம் பூண வேண்டியவன்!

ஒரு பிணம் விழுந்தது! – ஆனால் பிணவரிசை முடியவில்லை ! யானைத்தீப் பசி கொண்ட ஆட்சிக்கு ஒரு பிணம் போதுமா? போதாது!

நடராசன்

இந்தி எதிர்ப்புப் போராடத்திலே இதே ஆச்சாரியார் ஆட்சியிலே தாளமுத்துவுடன் நடராசன் என்ற ஒரு தோழனை பலி கொடுத்தோம் சிறைச்சாலையிலே ! இதோ இன்னொரு நடராசன் – லால்குடி வீரன் – கழகத்து தீரன் – களப்பலியானான் கல்லக்குடி அறப்போர் முனையிலே! போராட்டத்திலே படை வரிசையிலே கலந்துகொள்ள ஓடோடி வந்தானாம். ஐநூறுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டு களத்திற்கு வரவேண்டிய நாளும் குறிக்கப்பட்டுவிட்டதால் – அந்தப் பட்டியல் முடிந்த பிறகே நடராசனுக்கு இடம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதாம். மனம் நொந்து திரும்பியிருக்கிறான் ஊருக்கு! போகும் வழியிலே புகைவண்டியிலே பிணமானான். கையிலே ‘நம் நாடு’ இதழ்! படித்தானோ படிக்க வில்லையோ – இதழிலே நம் நாடு என உச்சரித்தபடியே இறந்துபட்டான்! அய்யோ – இல்லை இல்லை சாகடிக்கப் பட்டான்!

தையல் தொழிலாளி – தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு விட்டது அவன் கழுத்து ! பாய்ந்துவந்த குண்டு அந்தப் பருவ இளைஞனின் கழுத்துச் சதையை கொத்திக் கொண்டே போய்விட்டதாம்.

”யார் பெற்ற பிள்ளையோ” என்று ரயிலில் இருந்தவர்கள் கதறியிருப்பார்கள். அந்தப் பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் – துப்பாக்கிக் குண்டுக்குத் தெரியாது! துரைத்தனம் புரிவோருக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு இது பொழுதுபோக்கு!”

அம்மா! திராவிடத் தாயே! இதோ நீ பெற்றெடுத்த நடராசன்! பொன்னையும் – மணியையும் – வாரி வழங்கும் அன்னை திராவிடமே ! நீ- சாவின் கோரக் கரங்களிலே நடராசன் போன்ற தியாகச் செல்வர்களையும் வாரி வழங்குகிறாயே; நியாயந்தானா? உன் மடியை ரத்தத்தால் நனைத்திருக்கும் இந்தப் பிணத்தைப் பாரம்மா! தொண்டன் நடராசனைப் பாரம்மா – குண்டர் ஆட்சியின் கோர விளையாட்டைப் பாரம்மா – கோடிக் கணக்கிலே பிள்ளைகளைப் பெற்றாய் – அவர்களுக்கு அரைகுறை வயதிலே கொள்ளிவைக்க – ஏனம்மா விட்டாய்! ஓடியாடி உழைத்த உத்தமன் – திராவிடத்தரணி செழிக்கப் பரணி பாடிய வாலிபன் – சாய்ந்து கிடக்கிறான் பார், தாயே ! அழு! அழு! நன்றாக அழு! நீ அழுதால்தான் – கண்ணீர் விட்டால்தான் – கயவர் ஆட்சியை ஒழித்துக்கட்ட படை தயாராகும் – அம்மா – உன் மடியிலே கிடக்கும் நடராசனைப் பார்! அவன் ஒளி தங்கிய விழி எங்கே? உணர்ச்சி தங்கிய மொழி எங்கே? அசையாதம்மா உன் மைந்தனின் கரம் ஆடாதம்மா அவன் ஆணிப் பொன்மேனி – புது மழலை பேசிய உன் புத்திரனுக்குப் புதைகுழி தயாராகிவிட்டது!

யாரால் ? யாரால்? யாரால் தாயே யாரால்?

பிணவரிசை முடியவில்லை கொடும்பசி கொண்ட குண்டோதர ஆட்சிக்கு இரண்டு பிணம் போதுமா? போதாது! போதாது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *