
ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை
தமிழின் வளர்ச்சி
தமிழ்மொழி என்பது மாங்காய் தேங்காய் போல மரத்தில் காய்த்து நம் கையில் விழுந்துவிடவில்லை. கற்பனைக்கும் எட்டாத காலத்திலிருந்து அநேக ஆயிரம் ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் இறுகிய வயிரம். பின் வந்த தமிழர்கள் அதை இப்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவை பிரதிபிம்பிக்கும் பல முகமுள்ள பட்டை போட்ட வயிரமணியாகத் திகழச் செய்திருக் கின்றார்கள். எழுத்தாளர்கள் இப்போது அதற்கு இன்னும் மெருகேற்றி வருகிறார்கள். இப்போது இருந்து வருகிற தமிழ் பழைய நிலைக்கே போக வேண்டுமென்று விரும்பினால், அது வயிரம் தன்னுடைய பழைய நிலைக்கே போய் கரியாகப் போவதைத்தான் காணும்.
அகத்தியத்துக்கு முன்னால் இப்போது ‘தமிழ் நாடு’ என்று குறிக்கப்படுகிற நிலப்பகுதியில் வெவ்வேறு உருப்படி இல்லாத சில்லறை பாஷைகள் இருந்ததாகத்தான் அறிவறிந்த ஆராய்சிக்காரர்கள் அனைவரும் சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பாரதியார்,
கன்னிப் பருவத்தில் அந்நாள் – என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு – பின்னர்
யாவும் அறிவுற்றிறந்தன கண்டீர்!
என்ற பாட்டில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.



