
ஆரியராவது, திராவிடராவது! வெ. இராமலிங்கம் பிள்ளை
திசைச் சொல் இலக்கணம்
தமிழ் நாட்டில் சங்கீதக் கச்சேர்களில் தமிழ்ப் பாட்டுகளுக்கே அதிக இடம் கொடுக்க வேண்டும் என்பதும் மிகவும் சரியான கோரிக்கை.
ஆனால் பிறமொழிப் பதங்கள் என்பதற்காக மட்டும் எதையும் வெறுத்து விலக்க வேண்டும் என்னும் பிரசாரத்தையும் விலக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரசாரங்களில் கலந்திருக்கிற அன்பற்ற வம்பு நிறைந்த வார்த்தைகளை எண்ணித் தான் சொல்லுகிறேன். இவற்றை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். தனித் தமிழ் என்று ஒரு தமிழ் இல்லையானாலும் தமிழுக்குத் தனித் தன்மையான சிறப்புண்டு. அது ஏனைய மொழி எதற்கும் இல்லாத சிறப்பு. தமிழின் தனிமை அதிலேதான் இருக்கிறது. அது என்னவென்றால், எந்த திசைச் சொல்லையும் தன் இனத்தோடு சேர்த்து வாழ வைத்தல். பிறமொழிப் பதங்கள் கலக்கத்தான் நேரும். பிறமொழியிலுள்ள நல்ல கருத்துக்களையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். அப்படிச் சேர்த்துக் கொண்டால்தான் மொழி செழித்து வளர்ந்து இறவாமல் இருக்குமென்று எண்ணியே நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் ‘திசைச் சொல் இலக்கணம்’ என்ற பகுதியைச் சேர்த் தார்கள்.
இந்த இலக்கண வசதியால் பிற்காலத்திய புலவர்கள் தமிழுக்கே தனிச் சிறப்பான பலவித சந்தங்கள் உள்ள புதுப்புதுப் பிரபந்தங்களை உண்டாக்கினார்கள். அந்தப் பிரபந்தங்களின் வகைகள் கோவை, உலா, அந்தாதி, கலம் பகம், மும்மணிக்கோவை, நான்மணிக் கோவை, இரட்டை மணிமாலை, நான் மணிமாலை பிள்ளைத்தமிழ், தூது என 96 வகைப்படும். இந்தப் பிற்கால இலக்கியங்களில் அடங்கியுள்ள சந்தங்கள் தமிழுக்கே சொந்தம். வேறு மொழிகளும் அதற்கு இடந்தரக் கூடிய இலக் கணமுள்ளவை அல்ல. பிற்காலப் பிரபந்தங்களில் பொதிந்து கிடக்கும் இலக்கியச் சுவைகள் எண்ண முடியாதவை. இக்காலத்தில் தமிழ் படித்து விட்டதாகத் தருக்குகின்றவர்களுக்குள் பெரும்பாலோரும் இவற்றைப் பார்த் திருக்கவே மாட்டார்கள்.பிற்காலத்திய இலக்கியங்களை இகழ்ந்து பேசுகிறவர்களுக்கு இப்படி தொண் ணூற்றாறு வகைப் பிரபந்த தினுசுகள் தமிழில் இருப்பது கூடத் தெரியாது. தெரிந்திருந்தாலும் படித்திருக்க மாட் டார்கள். படித்திருந்தால் வெறும் கட்சிச் சண்டையைக் கருதி மனச் சாட்சியை மறுப்பதேயாகும்.



