கடவுளும் பிரபஞ்சமும்
ம. சிங்காரவேலு

இரண்டாம் அத்தியாயம்: கடவுளைப்பற்றிக் கூறும் பொருத்தமற்ற கூற்றுகள்

முதல் அத்தியாயத்தில் முகவுரையாக கடவுள் ஒருவர் இருப்பாராயின், அவருக்குப் பிரபஞ்சத்தில் தங்குமிடமெது? என்ற விஷயத்தைக் குறித்துக் குறிப்பாக எழுதினோம். இது முதல் இனி எழுதப்படும் அத்தியாயங்களில் கடவுள், பிரபஞ்சம், சீவர் இவர்களைப் பற்றிய சம்பந்தங்களைக் குறித்து, தத்துவ ஞானிகளும், மதஸ் தரும், பக்தரும் கூறும் பலவித கூற்றினை, விஞ்ஞான முகமாக நின்று விசாரிக்கப் புகுவோம்.

“கடவுள்” என்ற பதத்திற்குக் கொடுத்து வரும் பொருள்களுக்குக் கணக்கே இல்லை. வேதத்தில் கூறுவது ஒன்று, உபநிஷத்துக்களில் கூறுவது வேறொன்று. புராண சமயங்களில் கூறும் பொருள் மற்றொன்று. கிருஸ்தவர், மகமதியர், புத்தர்கள் கூறுவதும் வெவ்வேறு. ஒரு பதத்தை பல்வேறு பொருள்பட எழுதியும், சொல்லியும் வருவதி னாலேயே, அந்த வார்த்தை எதார்த்தத்தில் எதையும் குறிப்ப தாகச் சொல்ல முடியவில்லை.
திருஷ்டாந்தமாக, இரண்டு பிரபல நூல்களில் சொல்லியுள்ள விவரங்களைச் சோதிப்போம். உபநிஷத்துக்களின் பிரகாரம் கடவுளை ஸ்பரிசிக்கவாவது, நுகரவாவது, பார்க்க வாவது, கேட்கவாவது, ருசிக்கவாவது முடியாவாம். ஆனால், அது சிறிய தற்கும் சிறியதாம்; பெரியதற்கும் பெரிய தாம்;

எங்கும் வியாபகமாம்; காற்றாலும் அசைக்கப்படாதாம்; நெருப்பாலும் தகிக்கப்படாதாம்; தண்ணீராலும் குளிர் அடையப் பெறதாம். இத்தகைய பொருளை என்ன வென்று தெரிந்து கொள்வது? நிதயம், நிர்மயம், நிர்ச்சூன்யம் முதலிய எல்லாம் எதிர் மறையான பதங்களாக இருக்கின்றன. இவைகளிலிருந்து என்ன பொருள் கொள்ள முடிகிறது? இப்பதங் களுக்கு வியாக்கியான மிடுவோருக்காகினும் தெரிந்த தென்னை? மற்றும் கடவுளைப் பற்றி உபயோகிக்கும் பதங்கள் யாவும் அகண்டம், பரிபூரணம், மறைபொருள் என்பவைகளும் நமது எண்ணத்திற்கு எட்டாதவை. இவ்வித மாக மனத்திற்கும், எண்ணத்திற்கும், எட்டாத வார்த்தை களால் கடவுளைத் தெரிந்து கொண்டமாதிரி உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ளது. இது, இவ்விதம் இருக்க, கிருஸ்து மதஸ்தராகிலும் தெளிவுபடச் சொல்லுகின்றார்களாவெனப் பார்த்தால், அதுவும் காணோம் ; சகலத்தையும் படைத்தவரென்றும், பிதாவென்றும் கூறுகிறார்களே ஒழிய மற்ற படி தெளிவு அடையச் செய்வதாக இல்லை. குயவன் பானை யைச் செய்த மாதிரியாக உலகைச் செய்தானா? அல்லது, நம்மைப் பெற்ற தாய் தகப்பன் மார்களைப் போன்று உலகைப் பெற்றானா? என்று கேட்டால், அது தெரியாதாம்! இவ் விதமாக இவ்விரண்டு பிரபல மதஸ்தர்கள் தாங்கள் வாழ்த்தி வணங்கி வரும் தெய்வமென்பதைக் குறித்துச் சொல்லுகின்றார்கள். இந்தக் கஷ்ட நிலைமைக்கு அவர்கள் வந்தவுடன் இதற்காக எழுதியுள்ள சுருதியைப் பிரமாணமாகக் காட்டுகின்றார்கள், தங்கள் தங்கள் வேதமென்று கூறப்படும் கை ஏட்டுச்சொற்களை ஆதாரமாகக் காட்டுகின்றார் கள். வாயால் கூறும் வார்த்தைகளுக்கும், ஏட்டில் எழுதி யுள்ள சொற்களுக்கும், என்ன வித்தியாசமோ அதையாகிலும் தெரிவிப்பதாகக் காணோம். ஏட்டிலிருந்து வாய் வார்த்தைக்கும், வாய் வார்த்தையிலிருந்து எட்டிற்கும் மாறி மாறிக் காட்டுகின்ற வழிகள் அன்றி வேறு யாதும் விளக்கிய பாடில்லை. கை ஏட்டுப் புத்தகங்களிலாகிலும் அல்லது அச்சிட்ட புத்தகங்களிலாகிலும் எழுதியாகிலும், அச்சிட்டாகிலும், இருக்கும் சொற்களைத்தான் நாமும் சொல்லுகின்றோம்; நாம் சொல்லும் வார்த்தைகளையே எழுதுகின்றோம்; அல்லது அச்சிடுகின்றோம். எழுதி இருப்பதனாலேயே எழுதியுள்ள வார்த்தைகளுக்கு சிறப்பு அதிகம் வரப் போவதில்லை. ஆதலின் சுருதிகளெனக்கூறும் மத புஸ்தகங்களில் எழுதியுள்ள வார்த்தைகளுக்கு வந்த சிறப்பும், நிவேதனமும் என்னை? ஞாயம் இவ்விதமிருக்க, சுருதிகளில் சொல்லியுள்ளதை விசேஷமாகக் கருதவேண்டுமென்பது தெரியாமைக்கு ஓர் பாசாங்கே அல்லது வேறொன்றில்லை. மதஸ்தர்களுடைய தெரியாமையைக் குறிக்க சுருதிகள் ஏற்பட்டுள்ளனவாகத் தெரிகின்றது. சொல்லும் வார்த்தைகளில் உள்ள ஆபாசங்களைக் காட்டினால், சுருதியைக் காட்டுகின்றார்கள். சுருதிகளிலுள்ள ஆபாசங்களைக் காட்டினால் தாங்கள் சொல்லும் சொற் களைக் காட்டுகின்றார்கள். இதே குறை வழக்கையே, எல்லா மதஸ்தர்களும் ஞாயமாக எண்ணுகிறார்கள்.

தத்துவ ஞானிகளிலும் மதஸ்தர்களுடைய ஞாயத்திற்கு மேல் கொண்டு போவதில்லை. மதஸ்தர் கடவுளைப்பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராய பேதங்களைப் போல், தத்துவ ஞானிகளும் கொண்டுள்ளார்கள். ஒரு தத்துவஞானி கடவுளைப்பற்றி தெரிவிக்கும் ஞாயங்களை, மற்றொரு தத்துவ ஞானி கூறுவதில்லை. ஒருவர் போன போக்கை மற்றொருவர் பின்பற்றுவதில்லை. இருந்தாலும், சகல தத்துவஞானிகளும், மதஸ்தர்கள் போலவே சொல்லோடு நிற்க வேண்டியவர்களேயன்றி, பொருளைக் குறிக்கும் தத்துவ ஞானி ஒருவருமில்லை. இந்திய தத்துவஞானிகள், ஒரு பிரபல வேத வாக்கியத்தை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவருகின்றார்கள். அதாவது, ‘ஏகம்ஸத் விபராபகுதாவ தந்தி’ இதன் பொருள் என்னவெனில் இருப்பது ஒன்று (அதனை) ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். திருஷ்டாந்தமாக இருப்பது கடவுள் ஒன்றே. ஆனால் அதையே சிவனென்றும், பிரமம் என்றும், விஷ்ணுவென்றும், பிதாவென்றும், அல்லாவென் றும், உண்மையென்றும், சத் என்றும், சித்தென்றும், ஆனந்தமென்றும், அப்ஸலூட் (Absolute) என்றும், அன்னோவபில் (Unknowable) என்றும், இன்னும் பற்பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். ஆனால் இந்த ஸகஸ்தர நாமங்களை (ஆயிரம் பெயர் பரிசீலனை செய்தால், எல்லாம் வார்த்தை வித்தியாசமேயொழிய, எந்தப் பொருளையாகிலும் தெளிவு அடையத் தெரிவிப்பதாக இல்லை என்று அறியலாம். தெரியாத ஒன்றைக்குறித்துப் பதினாயிரம் பெயரிட்டழைப் பதால் தெளிவு பெற்றது என்னை? எல்லாவித மதநூல்களி லும், தத்துவ நூல்களிலும் உள்ள கஷ்டம் இதுவே. பிராட்லே (Bradley) என்ற தத்துவஞானி “தோற்றமும் உண்மையும்” (Appearance and Reality) என்ற ஒரு தத்துவ நூலை இயற்றியுள்ளார். அதிலுள்ள சொல் அடுக்கு கள் போன்ற நூல் நான் பார்த்ததேயில்லை.
ஆனால் இவ்வளவும் சொல்லோடு நிற்பதேயொழிய விஷய ஞானம் அடையச் செய்த பாடில்லை! பிரபல வேதாந்த நூல்களாகிய சங்கர பாஷ்யங்களை எடுத்துக்கொண்டாலும், அல்லது, நமது தமிழ் நாட்டில் ஒருகாலத்தில் பிரக்கியாதி பெற்றிருந்த பிரபல வேதாந்தியாகிய ஈசூர், கணக்கு சச்சிதானந்த ஸ்வாமிகள் இழைத்துள்ள பல நூல்களையாகிலும் பார்த்தாலும் எல்லாச் சொற்களும் வெகு அழகாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாம் வார்த்தை மாலைகளே! சொற்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அழகாக கோக்கப்பட்டிருப்பதே யொழிய ஆரம்பத்திலிருந்து விஷய ஞானத்திற்குக் கிஞ்சிற்று அருகேயாகிலும் கொண்டு போவதாக இல்லை. எல்லாம் சொல் மயமே! அத்வைத வேதாந்தியாகிய சங்கராச்சாரியார் மற்ற மதங்களைக் கண்டிப்பதில் வெகு சாமர்த்தியத்தைக் காட்டுகின்றவர். ஏனைய மதங்களைக் கண்டிக்கும் ஞாயங் களைக்கொண்டு தான் ஸ்தாபிக்கும் தத்துவத்தைக் கண்டிக்க முயன்றாரில்லை. ஏனைய மதங்களைக் கண்டிப்பதில் தன்னுடைய பகுத்தறிவைப் பல இடங்களில் உபயோகிக்கின்றார். ஆனால் தன்னுடைய மதத்திற்கு வரும்போது, தன்னுடைய பகுத்தறிவை ஓர் பக்கத்தில் கட்டிவைத்து விட்டு, வேத வாக் கியமே தனக்கு மேற்கோள் என்கின்றார். இவருடைய ஞாய முழுமைக்கும், ” தனக்குண்டு பிறருக்கில்லை ” என் னும் சட்ட வாதமே பொருந்தும். இவர் ஸ்தாபிக்கும் மதத்திற்கு சுருதியே ஆதாரமென்றால், மற்றவர்களுக்கும் அவரவர்கள் சுருதியே அவரவர் மதங்களுக்குப் பிரமாண மென்று என் விட்டுவிடலாகாது?

ஒவ்வொரு மதஸ் தரும் தங்கள் தங்கள் மதப்பொருளுக்கு அதிகாரி தங்கள் தங்கள் சுருதிகளென்றால், எந்தச் சுருதியை உண்மை எனக்கொள் வது? இந்த வழக்கு எந்த மதஸ்தருக்கு முண்டு. விவரித்துச் சொல்லவேண்டில், கிறிஸ்துவர்களுக்கு (பைபில்) விவில்ய நூலும், இந்துக்களுக்கு வேதங்களும், மகமதியர்களுக்கு குர்ஆனும், புத்தர்களுக்கு திரிபிடகங்களும், பிரமாண நூல்களாகும். பைபிலில் “கர்மம்” என்ற தத்துவமில்லை. ஆனால் பிடக நூல்களிலுண்டு, மறு பிறப்பு இந்துக்கள் நூலில் சொல்லப்பட்டுள்ளது. மகமதியர் இதை நம்புவதில்லை. ஒரு மதத்திலுள்ள கோட்பாடுகள் மற்றொரு மதத்தில் இல்லை; அல்லது, அவை மறுக்கப்படுகின்றன. இவ்விதமாக ஒவ் வொரு மதமும், தத்தம் கோட்பாடுளில் ஒன்றுக்கொன்று முரணடைந்திருப்பதால் எந்த மதச்சுருதி சொல்லுவது உண்மை?

இன்னொரு திருஷ்டாந்தத்தை எடுத்துக்கொள்ள லாம். மதங்களில் முக்கியமான சித்தாந்தம் உலக சிருஷ்டி யைப்பற்றிய விஷயமாகும். இந்த சிருஷ்டிபைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயங்களுக்குக் கணக்கு வழக்கில்லை. ஒவ்வொரு பக்தனும் தன் மனம் போனவாறு, கடவுள் உலகைச் சிருஷ்டித்தார் என்று எண்ணின தாக அவனவன் சுருதிகள் மூலமாகத் தெரிந்து கொள்கின்றான். கிறிஸ்தவன், ” குயவன் மட்பாண்டத்தைச் செய்தது போல் உலகையும், உயிர்களையும் கடவுள் சிருஷ்டித்தார் ” என்று சொல்லுகின் முன். இந்து, “பிரமா தலையிலிருந்தும், முகத்திலிருந்தும், வயிற்றிலிருந்தும், கால்களிலிருந்தும் மனிதன் உற்பத்தி யானான்” என்கின்றான். மகமதியன் கடவுள் உலகைச் சிருஷ்டித்தார் ” என்று பொதுவாகச் சொல்கின்றான். புத்தன் “சிருஷ்டியைப்பற்றி விசாரிப்பதே பயனில்லை” என்று சொல்கின்றான். இவற்றையெல்லாம் ஆராயும் பொழுது ஒவ்வொருவரும் தமதிஷ்டம்போல் தமது சுருதியை எழுதிக் கொண்டதாகத் தெரிகிறது. அவர்களுக்கு விஷய ஆதா ரம் ஏதாகிலும் இருக்கு மேயாகில், ஒவ்வொருவரும் சிருஷ்டி சித்தாந்தத்தை ஒரு விதமாகவே வளர்த்து வந்திருப்பார் கள். யாருக்கும் எந்த விதமாக உலகம் வந்திருக்குமென்று உண்மையாகத் தெரியா தபடியால், மனம்போனவாறு உத்தே சித்துவந்தார்கள். இதனால் தான், ஒரு சுருதி மற்றொரு சுருதிக்கு மாறுபட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சுருதிகள் ஒருகாலத்தில் ஒருவரால் எழுதப்பட்டவைகளல்ல; அந்தந்த காலங்களில் யார் யார் சிருஷ்டியைப்பற்றி யோசிக்கத் தொடங்கினார்களோ அவரவர்கள் மனம் போனபடி உத்தே சித்து எழுதிவைத்தார்கள். அவரவர்களுக்கு ஆதரவு அவரவர்களுடைய மனமே. ” மனத்தினால் எண்ணித் தானே வந்தது இவ்வுலகம்” என்றார் ஒருவர். “வெளிச்சம் உண் டாகுக” என்றபோது உலகம் உண்டாயது” என்றார் மற் றொருவர். ‘சில தெய்வ கணங்கள் ஆகாயமார்க்கமாக விதை விதைத்துக்கொண்டு போகையில் அவ்விதைகள் உலகங்க ளாகவும், நட்சத்திரங்களாகவும் முளைத்தன’ வென்று சிந்தித்தார் இன்னொருவர். இவ்விதமாக சிருஷ்டிக் கதைகளைக் கட்டி, அதற்கு வேண்டிய சொற்பொழிவுகளை அமைத்து வேதங்களெனவும், சுருதிகளெனவும், புராணங்களெனவும் பெயரிட்டு, பாமர உலகம் அவைகளை நம்பி நடக்கும்படி சூழ்ச்சிகள் செய்துள்ளனர்.
ஒவ்வொரு புராணக் கதையும் இவ்வாறே கற்பிக்கப் பட்டன. சிற்சில கிராமாந்தரங்களில் ஆதிகாலங்களில் வழங்கி வந்திருந்த ஊர்க் கதைகளையும், ஜாதிக் கதைகளையும் (Folk Tales) கூட்டி, புராணமெனப் பெயரிட்டு, பார்வதிக்குப் பரமசிவன் சொன்னார், அதைக் கேட்டிருந்த ஜனந்தனர் ஜனார்த்தனருக்குச் சொன்னார்” என்று மழலைக் கதைகளைக் கட்டி, பொது ஜனங்களின் மூடபக்தியை வளர்க்கச் செய்து, அதன் பயனாகக் கோயில்களையும், குளங்களையும், கோபுரங்களையும் கோடான கோடி மக்களைக் கொண்டு கட்டு வித்து, நாளைக்கும் நமது நாட்டு ஜனசமுகங்கள், இக்கட்டுக் கதைகளை உண்மையென நம்பும்படி செய்து வாழ்க்கை முழு மையும் பயம் நிறைபச் செய்துள்ளார்கள்.

இந்த பயம் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதாவது “பூதமிருக்கின்றது, பேயிருக்கின்றது” என்று பயத்தை குழந்தைகளுக்கு முதல் முதல் ஆரம்பிக்கின்றார்கள். அதன் பிறகு ஐந்து கண்ணனை சிருஷ்டித்து, குழந்தைகளை மிரட்டி வருகின்றார்கள். பிறகு புலி, கரடி, சிங்கம் விழுங்கி விடுமென்று குழந்தைகளை அதட்டுகிறார்கள். “கடவுளைத்தொழு இல்லாவிடில் அவர் தண்டிப்பார்” என்றும், ”நரகமென்று ஒன்றுளது அதில் கொண்டுபோய் போடுவார்க” ளென்றும், கட்டுக்கதைகள் மூலமாகவே மனித குலத்தை பயப்பட செய்து வருகின்றனர். இவ்வித பயத்தில் வளர்ந்து வந்த சிறுவன், சிறுமிகள் வாழ்வு முழுமையும் பயந்தே எதையும் விசாரித்துணராமல் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து, சஞ்சலத்திலேயே காலம் கழித்து வருகின்றனர். கடவுள் பயமும், நாக பயமும், காட்டேரி முனீஸ்வரன் பயமும், மாரியம்மன் பயமும், இன் னும் பற்பல பயங்களும் நமது தொட்டில் பழக்கங்களென அறிக. மதங்களின் ஆபாசங்களையும், புராணப் பித்தலாட் டங்களையும் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டி வந்தும், உலகம் பொய் நம்பிக்கைகளிலும், மூடபக்திகளிலும் ஆழ்ந் திருப்பதற்கு நமது தொட்டில் பழக்கங்களே காரணமென் பதில் சிறிதும் ஐயம் இல்லையென்று அறிக.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *