
பறம்பு மலை வள்ளல்
கி.வா. ஜகந்நாதன்
வஞ்சச் செயல்
பறம்பு மலையை முற்றுகையிட்டுப் பயனின்றி மீண்டு சென்றாலும், சேர சோழ பாண்டியர்களுக்குப் பகையுணர்ச்சி மாறவே இல்லை. அடியுண்ட வேங்கை மீட்டும் கறுவுவது போல் அவர்கள் சினம் பின்னும் மிகுதியாயிற்று. நேர்மையான வழியில் பாரியை வெல்ல முடியாதென்பதை நன்கு உணர்ந்த அவர்கள், வஞ்சகமான முறையிலாவது அவனை மடக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். ‘எவ்வாறு பிறர் அறியாமல் அவனை வெல்வது?’ என்ற சூழ்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுடைய உடம்பு பாரி எய்த அம்பினால் புண்படவில்லை; ஆனாலும் அவர்களுடைய உள்ளங்கள் கபிலர் எய்த பாடல்களால் புண்பட்டிருந்தன. அந்தப் பாட்டுக்கள் அவர்களை எள்ளி நகையாடின. பாடல்களின் ஒவ்வொரு சொல்லும் மன்னர்களின் மானத்தைக் குலைத்தது; வீரத்தை இழிவு செய்தது; உள்ளத்தைத் தொளைத்தது. அவற்றை எண்ண எண்ண அவர்களுடைய கோபக் கனவில் நெய் வார்த்தது போலாயிற்று.
பாடல் ஒவ்வொன்றும் பெரும் படையைப் போல அவர்கள் உள்ளத்திலே விரிந்து உருவெடுத்து நின்றது; மீட்டும் மீட்டும், ‘பாணர்களுக்கும், விறலியர்களுக்கும் எளிய இந்த மலை உங்களுக்கு அரிது’ என்று கூறியது அவர்கள் உள்ளத்தை உறுத்தியது. ஆனால் அந்த உறுத்தலிலே அவர்கள் நாடிய வஞ்சக வழியும் புலப்பட்டது.
மூன்று மன்னர்களும் ஒரு நாள் ஒன்றுகூடி, பாரியை வெல்ல வழி என்ன என்று ஆராய்ந்தார்கள். “இனிப் போர் செய்து வெல்வது என்பது நடவாத காரியம். வஞ்சகமாக அவனை வெல்லவோ கொல்லவோ வழி இருந்தால் மேற்கொள்ளலாம். நாமே செய்யாமல் மறைவாக நின்று, கொல்லக்கூடிய யாரையாவது ஏவி நம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று பேசினார்கள்.
“அந்தப் பாடல்களிலே ஒரு வழி குறிப்பாகத் தெரிகிறதே!” என்றான் சோழன்.
“என்ன தெரிகிறது?” என்று மற்ற இருவரும் கேட்டனர்.
”பாணரும் விறலியரும் யாதொரு தடையும் இன்றிப் பாரியை அணுகலாம் என்பதைத்தானே அந்தப் பாடல்கள் தெரிவிக்கின்றன? அவனை அணுக முடியாமல் தவிக்கும் நமக்கு ஒரு வழியைச் சொல்லித் தருவதாக இல்லையா அது?” என்று கேட்டான் சோழன்.
“அஃது எப்படி? ‘வீரக் கோலம் வேண்டாம்; பாணராக வாருங்கள்; பாரியின் புகழைப் பாடுங்கள்’ என்றல்லவா நம்மைப் பரிகாசம் பண்ணுகின்றன அந்தப் பாடல்கள்? அவை நமக்குத் திரும்பி வருகிற வழியைக் காட்டினவே யொழிய அவனை வெல்லவா வழி காட்டின?” என்று வினவினான் சேரன்.
“உண்மைதான். ஆனாலும் வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல, அந்தப் பாட்டின் பொருளைத் துணைக்கொண்டே வெல்ல வழி இருக்கிறது.
பாணராக நாமே போகவேண்டும் என்பது என்ன? வஞ்சம் புரியும் முரட்டு ஆள் ஒருவனைப் பாணனாக்கி அவன் கையில் யாழைக் கொடுத்து, அவன் பின்னே நன்றாகப் பாடும் பெண் ஒருத்தியை விறலியாக அனுப் பினால் நம் காரியம் எளிதிலே கைகூடும்.”
சேரனுக்கும் பாண்டியனுக்கும் இப்போதுதான் சோழனுடைய கருத்து விளங்கியது.
“யாழ் மீட்டும் கையாலே பாரியைக் கொன்று விடலாம் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டான் சேரன்.
”ஆம், ஆம்” என்றான் சோழன்.
“பாரியைக் கொல்வதா?” என்று திடுக்கிட்டான் பாண்டியன்.
“கொல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து செய்விப்பதா? பாம்பு எவ்வளவு அழகுள்ளதாக இருந் தாலும் நஞ்சுடையதுதானே?”என்று சோழன் பாண்டியனை நோக்கிக் கூறினான்.
“வஞ்சனையால் பாரியைக் கொன்றால் உலகம் உள்ளளவும் பழி நம்மை விடாதே. இந்தப் பாடல்களைக் கண்டு அஞ்சி வந்தோம் நாம். இப்போது கொலை செய்யும் பழிக்கு ஆளாக முற்படுகிறோமே! அது தக்கது தானா? யோசித்துப் பாருங்கள்” என்று வழுதி மெலிந்த குரலில் கூறினான். தமிழ்ப் புலவர்களுக்குக் கற்பகம் போல விளங்கும் பாரியைக் கொல்ல அவன் மனம் இணங்கவில்லை. அப்படிச் செய்துவிட்டால் உலகம் முழுவதும் ஒரே குரலாக எங்கே சென்றாலும், ‘நீ பழிகாரன்; நீ கொலைகாரன்!’ என்று பழி கூறுமே என்றெண்ணி அஞ்சினான்.
பாண்டியனுடைய இரக்கத்தையும் அச்சத்தையும் கண்டு சோழன் நகைத்தான். “அரசியலில் இத்தகைய செயல்களைச் செய்வது முறைதான். எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்துகொண்டிருந்தால் நாம் அரசாள முடியாது. பகைவரை வேரோடு களைந்து எறியாவிட்டால் நமக்கு அமைதியே இராது. எந்த வழியிலாவது பகையை அழித்தல் அரசர் களின் முதற்கடமை. பாரியை ஒழிக்க வழி கண்டுவிட்டோம் என்று மகிழ்வதற்கு மாறாக நீங்கள் அஞ்சுகிறீர்கள். அவனுடைய காலடியில் விழுந்து கிடப்பதைப் போல அவன் மலையடியில் எத்தனை காலம் நம் படைகள் கிடந்தன! அதை நினைத்துப் பார்த்தீர்களா? நாம் பறம்பு மலையை முற்றுகையிட்டும் பாரியை வெல்ல முடியவில்லை என்ற பழி இப்பொழுதே நம்மைச் சூழ்ந்து தான் இருக்கிறது. இனி நமக்குப் புதியதாகப் பழி வரவேண்டுமா? பழி வராமல் செய்ய வழி உண்டு. நாம் அனுப்பிய ஆள்தான் பாரியைக் கொன்றான் என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? சிறிதும் உண்மையை வெளியிடாமல், உயிர் போனாலும் நம்மைக் காட்டிக் கொடுக்காத ஒற்றர்கள் நம்மிடம் இல்லையா? அவர்கள் மூலமாக நம் காரியத்தைச் சாதித்துக்கொள்வோம்” என்று தன் திட்டத்தை விளக்கினான் சோழன். சேரனும் அவனுடன் சேர்ந்து பாண்டியனுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசினான். இறுதியில் பாண்டியன் அந்தப் பாதகச் செயலுக்கு அரை மனத்தோடு இணங்கினான்.
கபிலர் ஊரில் இல்லை. தம்முடைய நண்பர்களைப் பார்க்கச் சென்றிருந்தார். ‘இனிமேல் பாரியை யாரும் எதிர்த்துப் போரிட வரமாட்டார்கள்’ என்ற எண்ணத்தினால் அவர் பாரியைப் பிரிந்து சில நாள் சென்றிருந்தார்.சில காலமாக மலையின்மேல் அடைத்துக் கிடந்தமையால் வீரர்களும் தம் மனம் போன போக்காக, விரும்பின இடங்களுக்கெல்லாம் போய் வந்தார்கள்; உண்பன உண்டு, பூசுவன பூசி, உடுப்பன உடுத்து இன்புற்றார்கள்.
இப்படி இருந்த காலத்தில்தான் மன்னர்கள் ஏவிவிட்ட வஞ்சப் பாணர் பாரியை நாடி வந்தனர். யாழிசையாலும் வாய்ப்பாட்டாலும் பாரியை மயக்கினர். சில நாள் அவன் இட்ட விருந்தை அருந்திப் பறம்பு மலையின்மேல் தங்கினர்; மலைவளம் காண வேண்டுமென்று அவனையும் அழைத்துக்கொண்டு சென்றனர். அவனுடன் வந்த மெய்காவலரை ஏதோ ஏவல் சொல்லி அனுப்பிவிட்டனர். பறம்பு மலையின்மேல் மரங்கள் அடர்ந்த சூழலில் தன்னைச் சேர்ந்தவர் யாரும் இல்லாத போது பாரி, வஞ்சகப் பாண வேடம் புனைந்த பாதகன் ஒருவனது வாளுக்கு இரையானான். புலவர்களுக்கு வற்றாது மல்கிய ஊற்று வற்றியது. பொய்யாது பெய்த மேகம் வறண்டது. கற்பக மரத்தை அருமை யறியாத பாவி வெட்டிவிட்டான்! காமதேனுவைக் கொன்று விட்டான்!
இந்தச் செய்தி பிறருக்குத் தெரிவதற்கு முன்னே அந்த வஞ்சகக் கூட்டத்தார் தம் வேடத்தை மாற்றிக் கொண்டு பறம்பு மலையை விட்டுப் போய்விட்டனர்.
குத்துண்ட பாரி குருதி வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டவர்கள் அலறினார்கள். பறம்பு நாடே திரண்டு வந்தது. புலவர்கள் கூடினார்கள். கபிலர் இந்தச் செய்தியைக் கேட்டு ஓடி வந்தார். “இந்த நிலையில் உன்னைக் காண்பதற்கா நான் பிரிந்து சென்றேன்!” என்று புலம்பினார். “எந்தப் பாதகனுக்கு உன்னைக் கொல்ல மனம் வந்தது? பறம்பு நாட்டையும் மலையையும் கேட்டாலும் கொடுத்திருப்பாயே! உன் உயிரை வாங்கி விட்டானே, பாவி! அதனால் அவன் பெற்ற பயன் என்ன?” என்று அரற்றினார்.
“மதுரையும் சங்கமும் எனக்குக் கசந்து போகும் படியாகச் செய்த உன் அன்பு என்னை இந்த மலைக்கு ‘இழுத்துக்கொண்டு வந்ததே! என் உயிராகவே உன்னை நேசித்தேனே! நான் இறக்க, அப்போது என்னினும் இளையனாகிய நீ புலம்பும் புலம்பலை உலகம் கேட்பது முறையாக இருக்க, நான் உன்னை இழந்து புலம்புவதைக் கேட்க நேர்ந்தது விதி செய்த கொடுமையன்றோ?” என்று அழுதார். கபிலர் தேம்பித் தேம்பி அழுவது கண்டு அவருக்கும் பாரிக்கும் உள்ள அன்புத் தொடர்பை மக்கள் நன்கு உணர்ந்துகொண்டனர்.
பறம்பு மலை உயிரை இழந்தது; பறம்பு நாடு தலைவனை இழந்தது; புலவர்கள் தங்கள் அரும் பெரும் புரவலனை இழந்து வாடினார்கள். தமிழுலகமே பாரியின் மறைவுக்கு வருந்தியது. “இப்படிக் கரவாக அவ் வள்ளலைக் கொல்லவும் ஒருவனுக்கு மனம் வந்ததே! முல்லைக் கொடியின் தளர்ச்சி கண்டு அதைப் போக்கத் தன் தேரையே நிறுத்தி வைத்த கருணையாளனைச் சிறிதும் இரக்கமின்றி வஞ்சகமாகக் கொல்ல எப்படித் தான் மனித உள்ளம் துணிந்ததோ! அத்தகைய வலிய உள்ளம் படைத்தவர்களும் இந்த உலகில் இருக்கிறார்களே! பாரியைக் கொல்லும் கொடுமையுடைய அவர்களால் உலகத்துக்கு இன்னும் என்ன என்ன தீங்கு நேருமோ!” என்று சான்றோர்கள் மனம் கரைந்து உருகிப் போனார்கள்.
மக்களுடைய உள்ளப் போக்கை நன்றாக உணர்ந்தவர் கபிலர். பாணராக வந்தவர்களே இந்தப் பழிச் செயலைச் செய்திருக்க வேண்டும் என்று தெளிந்தார். அந்தப் பாணர்களை ஏவி விட்டவர்கள் பகை மன்னர்களாகவே இருக்கவேண்டும் என்று அவர் ஊகித்தார். தாம் அனுப்பிய பாடல்களிலே, பாணருக்கும் விறலிக்கும் பாரி எளியன் என்பதைப் பல முறை சொல்லியிருந்தது அவர் நினைவுக்கு வந்தது. அவர் இதயம் சுரீரென்றது. ”ஐயோ! நானே உன்னைக் கொன்றுவிட்டேனே! என் பாட்டு உன்னைக் கொல்ல வழி காட்டிவிட்டதே! நீ விரும்பிப் பாதுகாத்த தமிழ் உன்னைக் கொன்று விட்டதே! என்னுடைய பாட்டால் நீ இன்புற்றதைக் கண்டு மகிழ்ந்தேனே! அதே பாட்டு உன் உயிரையும் வாங்க வழி காட்டிவிட்டதே! நீ இயலுக்கும் இசைக்கும் கூத்துக்கும் அடிமையாக நின்றது உன் உயிரை வழங்குவதற்கா? தமிழுக்காக, இசைக்காக, எதையும் நீ வழங்குவதைக் காட்டவோ உன் உயிரை அளித்தாய்?” என்று நொந்து நொந்து புலம்பினார். உலகம் முழுவதும் அவருக்குப் பாழாகத் தோன்றியது; வருங்காலம் முழுவதும் வெறுமையாகக் காட்சி அளித்தது. வாழ்க்கையிலே இனி என்ன பயன் என்று மறுகினார். அவருக்குச் சிந்தனையே ஓடவில்லை. துயரக் கடலில் அவர் ஆழ்ந்து கிடந்தார்.



