
நன்றியுரை
இந்தக் கதைத் தொகுதியில் பத்துக் கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அது எழுதப் பட்ட வருடம் குறிக்கப்பட்டுள்ளது. இது அந்தந்தக் கதை பிறந்த காலத்தையும், கதையை எழுதத் தூண்டிய சமுதாய அரசியல் சூழ்நிலைகளையும் உணர்ந்தறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இந்தக் கதைகளிற் சில சக்தி, ஜனசக்தி, காண்டிபம், கலைக்கதிர், தினமணி முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தவை. சில இந்தத் தொகுதியிலேயே முதன்முதலாக அச்சேறியவை. இவற்றில் ‘இழி தொழில்’ என்ற கதை, ‘காந்தி வழிக் கதைகள்’ என்னும் தலைப்பில் காந்தீயக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதிய கதைத் தொகுதியிலும் வெளிவந்தது. ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்ற தலைப்புக் கதை அகில இந்தியச் சிறுகதைத் தொகுதி ஒன்றில் இடம் பெற்றது. இவற்றிற் சில சோவியத் நாட்டில் வெளியான ‘ஆசிய இலக்கியம்’ என்ற தொகுதியிலும் ரஷ்யனில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்தன. மேலும் பல கதைகள் ஹிந்தி மொழியிலும் மற்றும் செக், ரஷ்யன், ஹங்கேரியன், போலிஷ் முதலிய அயல் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பத்திரிகைகளிலும் கதைத் தொகுதிகளிலும் வெளியிடப் பெற்றுள்ளன. இந்தக் கதைகளை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆசிரியர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
நவம்பர், 1980
ரகுநாதன்



