

மனிதர்கள் – வல்லிக்கண்ணன்
உலகம் ஒரு பல்கலைக் கழகம். வாழ்க்கை, அனுபவங்கள் மூலம் கற்றுத்தருகிற, ஆசான். மனிதர்களே விதம் விதமான புத்தகங்கள்.
மனிதர்களை, அவர்களுடைய விந்தைக் குணங்களையும் விநோதமான போக்குகளையும், கண்டு ரசிப்பது இனிய விஷயமாகும். அவை கதைகள், நாவல்கள் முதலியவற்றுக்கு ஆதாரமான பொருள்களாகவும் அமைகின்றன.
அப்படி வாழ்க்கையும் மனிதர்களும் என் உள்ளத்தில் ஏற்படுத்திய பதிவுகளும், மனச் சலனங்கள் பிறப்பித்த எண்ணங்களும் கனவுகளும் சுவையான கதைகளாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன.
வெவ்வேறு காலங்களில் அவ்விதம் உருவாக்கப்பட்ட கதைகளில் பதின்மூன்று இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பத்திரிக களில் பிரசுரம் பெற்ற கதைகள் ஆகும். இவற்றை வெளியிட்ட பத்திரிகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் நன்றி உரியது.
இக்கதைகள் இப்போது பூங்கொடி பதிப்பகம் வெளியீடாகப் பிரசுரம் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவற்றை தொகுத்து அழகிய முறையில் புத்தகமாக வெளியிட முன்வந்த பதிப்பகத்துக்கும், என் இனிய நண்பர் வே. சுப்பையா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வல்லிக்கண்ணன்



