கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

2


தூக்கம் தெளியாத நேரம்! முகூர்த்தம் அந்த வேளையில்தான் வைக்கப்பட்டிருந்தது! கோழி கூவிற்று. கூடவே வாத்தியம் முழங்கிற்று! சாரதா கண்களிலே வந்த நீரை அடக்கிக் கொண்டு “கலியாண சேடிகளிடம் தலையைக் கொடுத்தாள்! அவர்கள் தைலம் பூசினார்கள்! சீவி முடித்தார்கள்! ரோஜாவும் மல்லியும் சூட்டினார்கள்! புத்தாடை தந்தார்கள்! பொன் ஆபரணம் பூட்டினார்கள்! முகத்தை அலம்பச் செய்தார்கள். பொட்டு இட்டார்கள்! புறப்படு என்றார்கள்! மாரியப்பபிள்ளைக்கு மாப்பிள்ளை வேடத்தைக் காரியஸ்தர் கருப்பையா செய்து முடித்தார்!

மேளம் கொட்டினார்கள், மணப்பந்தலுக்கு சாரதா வந்தாள். பரந்தாமன் அங்கொரு பக்கம் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள் அவள் கால்கள் பின்னிக்கொண்டன. கண் மங்கிவிட்டது. எல்லோரும் என்ன? என்ன? என்று கேட்டுக்கொண்டு ஓடினார்கள் சாரதா அருகில். பரந்தாமன் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான் அவனால் அசையக்கூட முடியவில்லை. அவ்வளவு திகைப்பு! என் சாரதா மணப்பெண்! என் காதலியா, இந்தக் கிழவனுக்கு! பாட்டியாகிறாளே என் பாவை! இந்தக் கோலத்தையா நான் காணவேண்டும் என்று எண்ணினான். அவனால் ஏதும் செய்ய முடியாது தவித்தான். யாரிடம் பேசுவான்! என்ன பேசுவது; யார் இவன் பேச்சைக் கேட்பார்கள்! எப்படி இவனால் தடுக்க முடியும்; மெல்ல எழுந்து சாரதா படுத்திருந்த பக்கமாகச் சென்றான். வேதவல்லி கண்களை பிசைந்துகொண்டே, “தம்பி, போய் ஒரு விசிறி கொண்டுவா!” என்றாள், விசிறி எடுத்துக் கொண்டுவந்தான். “வீசு” என்றாள் வேதவல்லி. வீசினான். சில நிமிடங்களில் சாரதா கண்களைத் திறந்தாள். வீசுவதை நிறுத்திவிட்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பேசவேண்டியவை யாவும் தீர்ந்துவிட்டன! மெல்ல எழுந்தாள் மங்கை. தூர நின்றான் பரந்தாமன். வாத்தியங்கள் மறுபடி கோஷித்தன. புரோகிதர், கதறலானார்; கருப்பையா வந்தவர்களை உபசரித்தபடி இருந்தார். “பலபலமாக மேளம்” என்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த பதுமை போன்ற சாரதாவுக்கு, பரந்தாமனின் பாட்டன், அவன் கண் முன்பாகவே, தாலி கட்டினான்.

எல்லோரும் ‘அட்சதை’ மணமக்கள்மீது போட்டனர்! பரந்தாமனும் போட்டான். போடும்போது பார்த்தான் சாரதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது. “புரோகிதர் போட்ட ‘புகை’ கண்களைக் கலக்கிவிட்டது” என்றாள் வேதவல்லி. “அல்ல! அல்ல! பாழும் சமூகக் கொடுமை, அந்தக் கோமளத்தின் கண்களைக் கலக்கிவிட்டது” என்று எண்ணினான் பரந்தாமன்.

ஆம்! சாரதாவை அவன் காதலித்தான். அவளும் விரும்பினாள். அவளே, அவன் பாட்டியுமானாள். என் செய்வான், ஏங்கும் இளைஞன்?

சாரதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறியது. வேதவல்லியின் வாட்டம், இவற்றைப்பற்றி மாரியப்பபிள்ளைக்குக் கவலை ஏன் இருக்கப் போகிறது.

வீட்டிலுள்ள கஷ்டத்தினால் கழுத்தில் அணியும் நகையை விற்றுவிட்டால், வாங்குகிறவர்கள், விற்றவர்களின் வாட்டத்தை எதற்காகக் கவனிக்கப் போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானோ இருக்கும். அதைப்போலவே மங்கை மனமாவட்டம்கொண்டாலும் தனக்கு மனைவியானாளல்லவா அதுதான் மாரியப்பபிள்ளைக்கு வந்த எண்ணம். தன் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும்போது, “எல்லாம் நல்லதுக்குத்தான் வருத்தப்படாதீர்கள்” என்று கூறினான்.

அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய சாரதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்பபிள்ளை. கலியாணம் முடிந்து, விருந்து முடிந்து, மாலையில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிந்து ஒருநாள் ‘இன்பம்’ பூர்த்தியாயிற்று. அன்றிரவு வேதவல்லி, விம்மிவிம்மி அழும் சாரதாவுக்கு, என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள். பரந்தாமன் பதைபதைத்த உள்ளத்தினானனாய் படுத்துப் புரண்டான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *