
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
6
இரவு 12 மணிக்குமேல், மெல்ல மெல்ல, நாலைந்து பேர், பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். அவர்களின் நடை உடை பாவனைகள் பரந்தாமனுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே ஒருவன், மெதுவாக பரந்தாமன் அருகே வந்து தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்த்தான். பரந்தாமன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தான்.
“எதுவோ, பரதேசி கட்டைபோலிருக்கு” என்று சோதித்த பேர்வழி மற்றவர்களுக்குக் கூற, வந்தவர்கள் மூலையில் உட்கார்ந்கொண்டு கஞ்சா பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நெடி தாங்கமாட்டாது பரந்தாமன் இருமினான். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசினார்.
அதே நேரத்தில், “டார்ச் லைட்” தெரிந்தது. “ஆஹா! மோசம் போனோமடா முத்தா. சின்ன மூட்டையை மடியிலே வைத்துக்கொள். பெரிசை அந்தப் பயல் பக்கத்திலே போட்டுடு, புறப்படு பின்பக்கமாக” என்று கூறிக்கொண்டே ஒருவன், மற்றவர்களை அழைத்துக்கொண்டு, இடித்திருந்த சுவரை ஏறிக்குதித்து ஓடினான். பரந்தாமன் பாடு பெருத்த பயமாகிவிட்டது. ஓடினவர்கள் கள்ளர்கள் என்பதும் சற்றுத் தொலைவிலே டார்ச் லைட் தெரிவதும் போலீசாரின் ஊதுகுழல் சத்தமும் கேட்டதும் ‘புலியிடமிருந்து தப்பிப் பூதத்திடம் சிக்கி விட்டோம்’ என்று பயந்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்தான். கள்ளர்களோ ஒரு மூட்டையைத் தன் பக்கத்திலே போட்டுவிட்டுப் போயினர். அது என்ன என்றுகூட பார்க்க நேரமில்லை. டார்ச் லைட் வர வர கிட்டே நெருங்கிக்கொண்டே வரவே வேறு மார்க்கமின்றித் திருடர்கள் சுவரேறிக் குதித்ததைப் போலவே தானும் குதித்து ஓடினான். கள்ளர்கள் தனக்கு முன்னால் ஓடுவதைக் கண்டான். அவர்கள் சொல்லும் பாதை வழியே சென்றான். அது ஓர் அடர்ந்த சவுக்கு மரத்தோப்பில் போய் முடிந்தது. கள்ளர்கள் எப்படியோ புகுந்து போய்விட்டனர். பரந்தாமன் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொண்டு விழித்தான். அதுவரையில் போலீசாரிடம் சிக்காது தப்பினதே போதுமென்று திருப்தி கொண்டான். தன் நிலைமையைப் பற்றிச் சிறிதளவு எண்ணினான். அவனையும் அறியாமல் அவனுக்குச் சிரிப்பு வந்தது. “என் பாட்டிக்கு ஜுரம். நான் அவளுக்கு மருந்து கொடுப்பதைவிட்டு முத்தம் கொடுப்பது. பாட்டன் என் மண்டையை உடைப்பது, அவருக்குப் பயந்து, பாழும் மண்டபத்துக்கு வந்தால் கள்ளர்கள் சேருவது, அவர்கள் கிடக்கட்டும் என்று இருந்தால் போலீசார் துரத்துவது, அதனைக் கண்டு அலறி ஓடிவந்தால் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொள்வது, நரி ஊளைவிடுவதைக் கேட்க நல்ல பிழைப்பு என் பிழைப்பு!” என்று எண்ணினான். சவுக்கு மரத்திலிருந்து ஒரு சிறு கிளையை எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டான் கையில். ஏனெனில், தூரத்தில் நரிகள் ஊளையிடுவது கேட்டது அவை வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான். சவுக்கு மலார் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி இருந்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவன் தூங்கிவிட்டான் அலுத்து.



