அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

சில வார்த்தைகள்

‘ராஜா ராணி கதை’களுக்கு மக்களிடம் என்றுமே அதிகமான செல்வாக்கு உண்டு. குழந்தைப் பிராயத்தில் பாட்டி, தாத்தா, அம்மா, மற்றும் சுவையாகக் கதை சொல்லத் தெரிந்தவர்கள் வாய் மூலம் இத்தகைய கதைகளைக் கேட்டுக் கேட்டு உள்ளுற வளர்ந்து வருகிற ஒரு விருப்பம், பெரியவர்களான பிறகு சரித்திரக் கதைகளிடம் விசேஷமான மோகமாகப் பரிணமித்து விடுகிறது போலும். அதனால்தான், பெரும்பாலோருக்கு ‘சரித்திரக் கதைகள், நாவல்கள்’ என்று சொல்லப்படுகிற கற்பனைகள் மீது அதிகமான ஈடுபாடும் ரசனையும் ஏற்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.

அன்றாட வாழ்க்கையின் வறட்சி கனவு உலகத்தின் குளுமையான பசுமையில் இனிமை காணத் தூண்டுகிறது. நிகழ்கால வாழ்வின் வெறுமையும், சாரமற்ற போக்கும், சாதாரணமான நிகழ்ச்சிகளும் சரித்திர நாயகர்களின் கற்பனை வீரர்களின் அசாதாரண மனிதர்களின் வீர தீர சாகசச் செயல்களில் ஒரு வியப்பையும் நிறைவையும் கண்டு மகிழும்படி மனித உள்ளத்தைத் தயார்படுத்தி விடுகின்றன.

சாதாரண மனிதர்கள் கூட அசகாய சூரத்தனங்கள் செய்து பிறர் கவனத்தைக் கவரவேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். செயல் திறம் இல்லாதவர்கள் கனவுகளில் லயித்து இன்பம் அடைய முயல்கிறார்கள். அல்லது, பிறரது கற்பனை படைக்கும் சுவையான அளப்புகளில் மகிழ்வு காண்கிறார்கள். இந்த மனோபாவமே ‘ஸ்டன்ட்’, “ஸஸ்பென்ஸ்’, கத்திச் சண்டை, மர்மச் செயல்கள், துப்பறியும் நிகழ்ச்சிகள் போன்ற சாகசங்கள் நிறைந்த நாவல்கள், தொடர் கதைகள், சினிமாப் படங்கள் முதலய வற்றில் மக்களுக்கு அதிக ஆர்வத்தை ஊட்டி வருகிறது.

வாசக உலகத்தின் பெரும் பகுதியினரது ஆசையை நிறைவேற்றுவதற்காகவே சரித்திர நாவல்களும்(வரலாற்று ஆதாரங்கள்,பெயர்கள் முதலியவற்றை ஓரளவுக்கு அடிப் படையாகக் கொண்டவை), சரித்திரக் கதை என்ற மேல் பூச்சு பெற்ற சுவையான கற்பனைக் கதைகளும் பிறக்க னாயின். இவ்விரண்டு ரகப் படைப்புகளும் தமிழ் மொழியில் மிகுதியாகவே தோன்றியுள்ளன. கதைச் சுவை, விறுவிறுப்பு, வளமான கற்பனை, மிடுக்கான நடை முதலியன இந்த ரக சிருஷ்டிகளுக்கு அதிகமான நயம் சேர்க்கும்.

‘அன்னக்கிளி’ எனும் ‘சரித்திரக் கற்பனையும் இப்படி ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பிறந்ததேயாகும். படிப்பதற்குச் சுவையான இந்த நவீனம் சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று. இவ்வாறு ஒரு சரித்திரக் கற்பனையை சிருஷ்டித்துத் தரும்படி தூண்டி, அதைத் தமது பத்திரிகையில் வெளியிட்டு எனக்கு உற்சாகம் அளித்த தமிழ் முரசு ஆசிரியருக்கு எனது நன்றி உரியது.

தனது லட்சியப் பாதையில் எதிர்ப்படும் சிரமங்களை எல்லாம் சகித்துக்கொண்டு, ‘வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையோடு தமிழுக்குத் தொண்டாற்றி வருகிற நண்பர் தோ. ந. வீரராகவன் அவர்கள் எனது முதல் சரித்திர நாவலாகிய “விடிவெள்ளி”யைப் பிரசுரித்த தோடு, ‘அன்னக்கிளி’யையும் புத்தகமாக வெளியிட முன்வந்தது அவரது துணிச்சலையும், ஆர்வத்தையும், என்னிடம் அவர் கொண்ட அன்பின் உயர்வையும் காட்டுகிறது என்றே நான் கருதுகிறேன். அவருக்கு எனது அன்பும் நன்றியும் என்றும் உரியன்.

வல்லிக்கண்ணன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *