அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

4. ஆந்தைக்கு மண்டையில் அடி


    அங்கே அன்னக்கிளி நின்றாள். வேடிக்கை பார்க்கும் வெறும் பெண்ணாக அல்ல. வீரமறக் குலத்தில் வந்தவள் என்பதை நிரூபிக்க முயலும் மங்கையாகத்தான்.

    அவள் கண்களில் சினம் கொழுந்துவிட்டு எரிந்தது. அவள் கையில் வாள் ஒன்று மின்னியது. ஆந்தையைத் தன்னால் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடையாது. ஆயினும் அவனைக் காயப்படுத்தி, தனது தலைவிக்கு உதவி புரியலாமே என்ற நல்லெண்ணம் அவளுக்கு இருந்தது.

    ‘யார் வரினும் கதவைத் திறந்துவிடு. கேள்விகள் கேட்கவேண்டாம்’ என்று அமுதவல்லி அவளுக்கு உத்திர விட்டது உணர்ச்சி மிகுதியினால்தான்; அது முன்யோசனை உடையது ஆகாது என்று அன்னம் முதலிலேயே உணர்ந்தாள். எனினும், அமுதவல்லியின் கட்டளையை மறுத்துப் பேசுவதற்கு அவள் யார்? எதை எப்படிச் செய்யவேண்டும் என்று தலைவிக்குத் தெரியாதா என்ன? ஆகவே அன்னக்கிளி தன் கருத்தை வெளியிடவில்லை.

    அவளும் அன்றிரவில் உறக்கம் கொள்ளாமல் உருண்டு புரண்டு பொழுதைக் கொலை செய்துகொண் டிருந்தாள். திருமாறன் வருவானா மாட்டானா என்பது அவள் கவலை இல்லை. அவள் நினைவுப் பரப்பிலே ஒரு தோற்றம் மின்னிக் கொண்டிருந்தது; மறையாமலே அழுத்தம் பெற்று நின்றது.

    தகத் தகாயப் பொன்னொளியின் கூரிய கதிர்கள் பட்டுத் தெறிக்க, மிடுக்கான குதிரை மீது எடுப்பான சிலையைப் போல வீற்றிருந்து மாலை வேளையில் வீதி வழியே உலா வந்தானே ஒருவன் வீரத் திருப்பார்வையை வழங்கும் இரண்டு அழகிய விழிகளின் சொந்தக்காரன் அவன் யாரோ? பலகணியின் பின்னே நின்ற அவளது கண்களை மட்டுமா தொட்டது அவன் விட்டெறிந்த நோக்கு? அவள் உள்ளத்தையே பாடாய்ப் படுத்திவிட்டதே…! அன்னக்கிளி பெருமூச் செறிந்தாள்.

    அவன் ஓர் அரசிளங் குமரனாகத்தான் இருக்க வேண்டும். எவ்வளவு கம்பீரம்! என்ன வீரம்! அவர் குதிரைதான் எப்படி இருந்தது!’ என்றெல்லாம் துதிபாடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அவனை மறுபடியும் பார்க்கமாட்டோமா என்று ஏங்கியது. பார்க்க முடியாமலே போய்விடுமோ என அஞ்சியது ஒரு மனம். அந்த ஆண் அழகனை எவ்வளவு நேரம் வேண்டுமாயினும் கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற ஆசை நினைப்பு அலையிட்டது. உடனேயே, அவளுக்கு இயல்பான நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது.

    அந்த இருட்டிலும்,தனிமையிலும் கூட அவள் முகம் தானாகவே குவிந்து தாழ்ந்தது. ஆயினும், உள்ளத்தின் குதூகலத்தை ஒடுக்க முடியவில்லை அவளால்.

    கண்களை மூடினாலும், தூங்கியும் தூங்காத நிலையிலே கூட, குதிரைமீது வந்த சிங்காரரூபன் தான் கனவில் வந்து, கிறக்கும் பார்வை தந்தது; காந்தப் புன்னகை பூத்து நின்றான். அன்னக்கிளி அப்படி ஒரு கனவு நிலையில் பறந்து கொண்டிருந்தபோதுதான், வெளிப்புறக் கதவு தட்டப்படும் ஓசை எழுந்தது. தனது அன்பனின் குதிரை வரும் குளம்பொலியே அது என்ற பிரமை அவளுக்கு ஏற்பட்டது. கதவு பலமாக இடிக்கப்படவும் அவள் வேக மாக எழுந்து திறந்தாள். அப்பொழுதுதான் அமுதவல்லி யின் கட்டளை அவளுக்கு நன்றாக நினைவு வந்தது.

    அடடா? விழிப்புடன் காத்திராமல் தூங்கிவிட்டேனே! பிராட்டி கோபித்துக்கொண்டால் என்ன செய்வது?’ என்று பதறி எழுந்து, அன்னம் கதவை வேகமாகத் திறந்தாள். அவளும் திருமாறனே வருகிறான் என்றுதான் எண்ணினாள்.

    அந்த இடத்தின் இருளில் தனது ஆற்றலைக் காட்ட முயன்று கொண்டிருந்த ஒரு சிறு விளக்கொளி உண்மையை உணர்த்தியதும் அவள் திடுக்கிட்டாள். ஆனால் நிலைமை முற்றிவிட்டதே? இனிக் கதவை அடைத்துத் தாள்போட முடியுமா அந்த இளம் கொடியால்? இருளுருவம்போல் உள்ளே புகுந்த தடியனை நோக்கிக் கத்தத்தான் முடிந்தது அவளால்.

    “என் அருமை நாய்க் குட்டியே! ஏன் இப்படித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைக்கிறாய்?” என்று கூத்து வேட்டக்காரன்போல் பேசினான் ஆந்தை. செல்லமாக அவள் தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு முன்னேறினான்.

    அன்னக்கிளியின் போராட்டம் பயனற்றுப்போனதால், அவள் ஒடுங்கிக் கிடந்தாளில்லை. எயில் ஊர் ஆந்தை அவளை முரட்டுத்தனமாக ஒதுக்கித் தள்ளியதால் அவளுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. நிதானம் அடைகிறவரை அவள் படிக்கட்டில் அமைதியாக உட்கார்ந்திருந் தாள். தலைவியைக் காப்பாற்றவேண்டும்; தன்னை – தனது சொல்லை – மதிக்காத முரடனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தவித்தது அவள் உள்ளம்;

    படபடத்தன அவள் கைவிரல்கள். அதனால் அவள் ஒரு வாளை எடுத்துக்கொண்டு மேலே சென்று மறைவில் பதுங்கி நின்று அங்கு நிகழ்ந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    நெருக்கடியான தருணம் வந்துவிட்டதை உணர்ந்ததும் அன்னக்கிளி ஓங்கிய வாளுடன் வாசல்படிமீது தோற்றம் தந்தாள். அவளை அமுதம் தான் முதலில் பார்த்தாள். சரியான தருணத்தில் உதவி புரிய வந்து விட்டாள்’ என்று மகிழ்வுற்றது அவள் மனம்.

    திரும்பி நோக்கிய ஆந்தை வேடிக்கையுறக் கண்டு நகைப்பவன் போல் கெக்கலித்து ‘வாளை எவ்வாறு பிடிக்க வேண்டுமென்றுகூடத் தெரியாத நீயா இந்த மலையை வெட்டி வீழ்த்தப் போகிறாய்! பளாபளா!’ என்று கூவினான்.

    அதனால் ஆத்திரம் கொண்ட அன்னக்கிளி வெகுண்டு முன் பாய்ந்தாள். ‘கிளி அமைதியோடு இருந்தாலும் அழகுதான்! பறந்து பாய்ந்தாலும் அழகுதான்!” என்று உவகையோடு மொழிந்தான் ஆந்தை. அது அவள் கோபத்தை நெருப்பெனத் தூண்டிவிட்டது. அவள் வாளைச் சுழற்றிக்கொண்டு அவனை நோக்கி ஓடிவந்தாள்.

    உன்மீது எனக்குக் கொள்ளை ஆசை அன்னக்கிளி, கொள்ளை ஆசை! உன் அழகும் பார்வையும் எப்போதும் பழங்களைப்போல் எனக்குக் கிறக்கம் தருகின்றன. அதிலும் இப்போது உன் வீரத்தையும் உணர்ந்த பிறகு……… பேச்சை அவன் அறை குறையாக விட்டுவிட்டு, அதிக உயரத்திலிருந்து பாறைகளை உருட்டித் தள்ளுவது போன்ற ஒலி எழும்படி,பெருஞ் சிரிப்பு சிரித்தான் அவன்.

    அன்னம் அருகே நெருங்கவும் ஆந்தை தனது முரட்டுக் கையை வீசி, அவளது வாள் பிடித்த கையை ஒரு தட்டுத் தட்டினான். பார்வைக்கு அது இலேசான அடி போலவே தோன்றியது. ஆனால் அன்னத்தின் முகம் வேதனையால் கோணிக் குறுகியது.

    கண்கள் நீரைக் கொட்டின. ‘ஸ்ஸ், அம்மா?’ என்று வலி தாங்கமாட்டாதவளாய் புலம்பிய அவளது இடக்கரம் வலக் கையை வேகமாகப் பற்றியது. முதலிலேயே வாளை நழுவவிட்டுத் துடிதுடித்தக் கைக்குப் பரிவு காட்டுவது போல.

    தரைமீது விழுந்த வாளின் உலோக ஒலியை எதிரொலிப்பதுபோல், ஆந்தையின் சிரிப்பு அதிர்ந்தது அந்த அறையில்.

    இதுவரை வேடிக்கை பார்த்து ஒதுங்கி நின்ற அமுத வல்லியின் உள்ளத்தில் சிறிது சிறிதாக ஒரு நெருப்பு மூண்டு வந்தது. அன்னக்கிளியின் மீது ஒருவகை ஆத்திரமும் பொறாமையின் முளை போன்றதொரு மெல்லுணர்வும் அங்கு அனல் நாக்குகள் நீட்டலாயின.

    ‘அவளைப் பிறகு கவனிப்போம். முதலில் இந்தத் தடியனை அடித்து விரட்டுவோம்’ என்று தேர்ந்து அமுதம் கைக்குள் சிக்கிய கனமான பொருள் எதையோ எடுத்து வீசி அடித்தாள்.

    பிராட்டியாரின் கைகள்தான் வீணாக நோவெடுக்கும். எனக்கு எவ்விதத் தீமையும் ஏற்படாது. மேலும் அமுத வல்லி என்னைக்கண்டு அஞ்சவேண்டியதில்லை. கொய்யாக் கனி மினுமினுப்போடு காத்திருக்கையில், சுவைத்து எச்சில் செய்யப்பட்ட கனியையா நான் விரும்பப் போகிறேன்!’ என்று குத்தலாகச் சொன்னான் ஆந்தை.

    அது அவளை மிகுதியும் அவமானப்படுத்தியது போன்றிருந்தது. அவளோ செய்யும் வகை அறியாது, கூண்டி னுள் ஒடுங்கிக்கிடந்து மிரள மிரள விழிக்கும் புலி போல் தான் தோன்ற முடிந்தது.

    அன்னக்கிளியின் உடல் நடுங்கியது. தென்றலில் துடிக்கும் இளந் துளிர்போல. எயில் ஊர் ஆந்தை, எலியை அள்ளி எடுக்கத் தனது கொடிய பாதத்தை நீட்டும் பூனை மாதிரி, கோரமான தன் கைகளை அவள் பால் நீட்டியவாறு முன்னே முன்னே நகர்ந்தான்.

    அமுதவல்லி கண்களில் அச்சம் படர, வாய் பிளந்து நின்றாள். எங்கோ வீதியின் ஒரு முனையில் இரவுக் காவலாட்கள் எழுப்பிய கூவல் ஒலி காற்றில் மிதந்து வந்தது. வைகறையின் வெள்ளொளி பரவி விட்டதாக பால் மய நிலவின் நரை ஒளியைக் கண்டு மயங்கிய, காகம் ஒன்று தோட்டத்தின் ஒரு பக்கம் தனிக் குரல் கூவி ஒடுங்கியது. வழி தவறிய கொக்கோ, இரவு நேரப் பறவை எதுவோ, வான வெளியிலே திரியும் போது ‘க்ராங்’ எனும் கரகரத்த ஒலியை நழுவ விட்டுச் சென்றது. இவற்றோடு கலந்து வந்தது குதிரைகளின் காலடி ஓசை.

    தனது இரை நிச்சயம் தன் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்ற திடசித்தத்தோடு, விழிகளில் குறும்பு நோக்கும், உதடுகளில் பசிச் சுழிப்பும், பற்களில் வெறித்தனமும் மிளிர அடி எடுத்து வைக்கின்ற மிருகம்போல, ஆந்தையும் நகர்ந்தான்.

    அவன் எதிர்பாராத வேகம் பெற்றாள். அன்னம் சுழற்காற்றுப் போல் வேகமிட்டுச் சுற்றி கதவு வழிப் பாய்ந்து படிக் கட்டுகளின் வழியே தடதடவென விழுந் தெடுத்து ஓடினாள் அபலை.

    ஆந்தை அவளைத் தொடர்ந்து செல்ல வேகமாக அடி பெயர்த்தான். அவ்வேளையில் அமுதவல்லி, குறி பார்த்து எறிந்த வெண்கல விளக்கு ஒன்று அவன் கணுக்காலில் வசமாகத் தாக்கவும், அவனது உயிரைச் சுண்டி இழுத்தது போன்ற வேதனை ஏற்பட்டது. அவன் அடிபட்ட இடத்தை விரலால் நீவி விடும்போது, அமுதவல்லி ஒரு விளக்குத் தண்டினால் அவன் மண்டையில் ஓங்கி அறைந்தாள்.

    அதே கணத்தில் –

    கீழே அன்னக்கிளியின் பயக் குரல் நீண்டு ஒலித்து, அச்சம் உண்டாக்கியது. யாரோ ஓடியது போல் ஒரு ஒலி கேட்டது. குதிரை ஒன்று விரட்டி ஓட்டப்படும் ஓசையும் சேர்ந்து கேட்டது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *