
அமைதி
பாரதிதாசன்
அமைதி
ஏழெட்டுக் கூரை வீடுகள்! புல்லடர்ந்த தரையில் சில தேய்ந்த வழிகள்! இடையிடையே மரங்கள், செடிகள், கொடிகள்! கூரைகளைச் சுற்றி வளைந்தோடும் வாய்க்கால்! அங்கும் இங்கும் திரியும் ஆடுகள், கோழிகள், நாய்கள்.
ஒரு கூரை வீட்டின் எதிரில் பிணப்பாடை கட்டுகிறார்கள். ஒருவன் துன்பமுகத்துடன் உள்ளே போவதும் வெளியில் வருவதுமாக இருக்கிறான். வீட்டின் வெளிப்புறம் பத்துபேர் குந்தியிருக்கிறார்கள்.
இறந்த கிழவியை வீட்டினுள்ளிருந்து சிலர் தூக்கி வருகிறார் கள். சில பெண்டிர்கள் உடன் வருகிறார்கள். பிணம் தூக்கப்படுகிறது. அந்தத் துன்ப முகத்தினன் தன் இடையில் செருகி வைத்திருந்த சாவியை எடுக்கிறான். வீட்டிலிருந்த பெண்டிர்கள் வெளிச் செல்கிறார்கள். வீட்டை இழுத்துப் பூட்டிவிட்டுப் பிணத்தோடு நட்ட தலையினனாய் நீர் ஒழுகும் கண்ணினனாய் நடந்து செல்லுகிறான். அவன் பெயர் மண்ணாங்கட்டி.
