
அமைதி
பாரதிதாசன்
நான்கு
அடுத்த சிற்றூரில் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் விழுகிறான். பறவைகள் தழைகிளைகளில் அடங்குகின்றன. குடிசைகளில் விளக்கேற்றப்படுகின்றது. பனி புகைகின்றது. ஊரின் பொதுச் சாவடியில் ஒரு கிழவி மேலாடையின்றித் தன் கையால் மெய்போர்த்துக் குளிரால் நடுங்கியபடி மூலையில் ஒண்டியிருக் கிறாள். மண்ணாங்கட்டி காணுகிறான். அவன் முகம் துன்பத்தை யளாவுகின்றது.
கிழவியின் எதிரில் ஒரு பழம்புடவை வந்து வீழ்கிறது. அவள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள். புடவையை மகிழ்ச்சியுடன் எடுத்து விரித்துப் போர்த்திக் கொள்ளுகிறாள். அவளின் இருண்ட விழிகளை ஒளி தழுவுகின்றது. புடவை போர்த்த தன் அழகைத் தானே பலமுற குனிந்து குனிந்து பார்த்து மகிழ்கிறாள். பற்கள் இல்லாவிடினும் உதடுகளால் சிரிக்கிறாள்.
மண்ணாங்கட்டிக்கு இஃதோர் இன்பக் காட்சி! சிரித்த முகத்தோடு அவன் மேலும் நடக்கிறான்.
