
அமைதி
பாரதிதாசன்
இரண்டு
பிணத்தோடு சென்றவர்கள், மண்ணாங்கட்டியுள்ள வீடு நோக்கி வருகிறார்கள். மண்ணாங்கட்டி வீட்டுக் குறட்டில் நின்று கை கூப்ப, பிணத்தோடு சென்று மீண்ட அனைவரும் கைகூப்பிச் செல்லுகிறார்கள்.
மண்ணாங்கட்டி, வீட்டைத் திறக்கிறான். வீட்டின் உட்புறம் பல பொருள்களையும் பார்க்கிறான். கண்ணீர் சொரிகிறான். ஒருபுறமிருந்த பெட்டியைத் திறக்கிறான். அதிலிருந்து காசுகள் அனைத்தையும் தன் மடியில் வைத்துக் கொள்ளுகிறான். ஓர் எழுதுகோல் சிறிது தாள் எடுக்கிறான். ஒரு புறம் உட்கார்ந்து சிறு தாள் கிழித்து அதில் ஏதோ எழுதுகிறான். எழுதுகோலையும் மற்றும் சிறிது தாளையும் மடியில் வைத்துக் கொள்ளுகிறான்.
அவன் கண்ணெதிரில் கொடியில், ஒரு பழம் புடவையும், ஒரு வேட்டி ஒரு துண்டும் காட்சியளிக்கின்றன. அவற்றை மடித்துக் கைப் புறம் வைத்து வெளிவருகிறான். வீட்டைப் பூட்டிக் கொள்ளுகிறான். தலையில் முக்காடிட்டு நடக்கிறான்.
