
அமைதி
பாரதிதாசன்
ஏழு
நள்ளிருளில் தனித்திருக்கும் ஒரு வீட்டின் தெருப்புறத்து அறைச்சன்னலின் கம்பிகளை இருவர் விலக்குகிறார்கள். வீட்டின் தெருக்கதவு பூட்டப்பட்டிருக்கிறது. மண்ணாங்கட்டி எதிரிலுள்ள மரத்தில் மறைந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அறையின் உள்ளே ஒருவன் புகுகின்றான். பிறகு வெளிவருகிறான். இருவரும் தெருப் புறத்திலுள்ள மற்றோர் அறையின் சன்னற் கம்பிகளை விலக்கு கிறார்கள். ஒருவன் உள்ளே புகுந்து தவலை ஒன்றை எடுத்து வெளியிலிருந்தவனிடம் நீட்ட அவன் அதை வாங்கி வைக்கிறான். மற்றும் உள்ளே சென்றவன் வேறு பொருளை எடுக்குமுன் மண்ணாங்கட்டி, வெளியிலிருப்பவன் காணும்படி சற்றுத் தொலைவில் உலவுகிறான், வெளியிலிருப்பவன் மெல்ல நழுகுகிறான். சிறிது தொலைவில் நழுகிய பின், அவனை நோக்கி மண்ணாங்கட்டி, ஒரு கல்லை எறிகிறான். அவன் ஓடிமறைந்து விடுகிறான். மண்ணாங் கட்டி, சன்னலண்டை வந்து நின்று கொள்ளுகிறான். அறையின் உள்ளே சென்றவன் பெரியதும், சிறியது மாகிய பல பொருள்களை வெளியே நீட்டுகிறான். நீட்டுந்தோறும் மண்ணாங்கட்டி அவற்றை வாங்கி வாங்கி அடுத்த சன்னல் வழியாக அறைக்குள் செலுத்தி விடுகிறான். சோறு நிறைந்த ஓர் குண்டானை யும், குழம்பு நிறைந்த குவளையையும் கடைசியில் உள்ளேயிருந்தவன் கொடுக்கிறான். மண்ணாங்கட்டி அவ்விரண்டையும் சன்னலின் எதிரிலேயே வைத்து விடுகிறான். அவன் அறையை விட்டு வெளிவருகிறான். மண்ணாங்கட்டி நழுகி எதிரில் மரத்தில் மறைந்து கொள்கிறான். வந்தவன் சோற்றுக் குண்டானையும், குழம்புக் குவளையையும் தூக்கிக்கொண்டு தன் துணைவனைத் தேடிச் சிறிது நகருகின்றான். அவன் இல்லாததால் இன்னும் சிறிது நகருகிறான். உடனே அவனை நோக்கி ஒரு கல் சீறி வந்து எதிரில் விழுகிறது. மற்றொன்று, இன் னொன்று குண்டானோடும் குவளையோடும் அவன் கம்பி நீட்டுகிறான். மண்ணாங்கட்டி வேறுபுறமாகச் செல்லுகிறான்.
