
அமைதி
பாரதிதாசன்
எட்டு
வெயிலில் தங்கம் போர்த்ததுபோல் ஒரு மலை தோற்றம் அளிக்கிறது. அதன் சரிவில் ஒரு பெருமாள் கோவில் தோன்றுகிறது. கோவில் சூழ ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம்.
அங்குள்ள ஒரு தோப்பில் ஒரு புறமாக உட்காருகிறான் மண்ணாங்கட்டி.
தோப்பில் பல புறங்களிலும், வியர்வை ஒழுகும் மேனியும் கண் குழிவுபட்ட முகமுமாகப் பலர் காணப்படுகிறார்கள். சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். சோர்ந்து! சிலர் படுத்தும் புறள்கிறார்கள் வயிற்றைப் பிசைந்தபடி! அவர்கள் முகங்கள் ஒவ்வொன்றும் பசித் துன்பத்தால் கருகியிருக்கின்றன.
ஒரு மூலையில் வேறொரு காட்சியை மண்ணாங்கட்டி காணுகிறான்.
புன்னைமரத்தின் நன்னிழலில் பொன்னிழை கலந்து நெய்த துகில் விரித்து அதன் மேல் மணியிழை மின்னும் ஒருத்தியும், தங்கத் துகில் சரிந்து வீழ வெயில் வீசும் மார்பணி துலங்க, அருகமர்ந்த ஒருவனும் மகிழ்ந்திருக்கின்றனர். அவள் பாலில் துவைத்த ஒப்பிட்டை அவன் வாயில் அப்பிக் கொண்டிருக்கிறாள். அவர்கள் எறிந்த நெய்யொழுகும் பண்ணியமும் அப்பமும் எதிரில் நாய்கள் தின்று தெவிட்டுதல் அடைகின்றன.
மிகுபலர் துன்பமுறுகின்றனர். மிகச் சிலர் இன்பமுறுகின்றனர். மண்ணாங்கட்டி காணுகின்றான். புன்னை மரத்தடியை விட்டு மண்ணாங்கட்டியின் உள்ளம் இப்பெரு வையத்தை நோக்குகின்றது:
அங்கு மிகுபலர் துன்புறுகின்றனர், மிகச் சிலர் இன்புறு கின்றனர். சிறிது நேரம் சென்றது. மண்ணாங்கட்டி மரத்து நிழலில் தூங்குகிறான்.
