

வள்ளுவர் காட்டிய வைதீகம் சாமி சிதம்பரனார்
ஒரு நூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமையளிப்பதல்ல. இதுவே எனது கருத்து.
இந்த முறையில் பழய நூல்களை ஆராய்ச்சி செய்வது தான் பழங்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளுவதற்கு இடந்தரும்; சரித்திர ஆராய்ச்சிக்கும் துணை செய்யும்.
இன்று சிலர் திருக்குறளுக்குத் தங்கள் மனம்போனவாறு பொருள் கூறுகின்றனர். அவர் கருத்தை மாற்றிக் கூற முன் வருகின்றனர். அவ்வாசிரியர் காலத்தில் வழங்காத கொள்கை களை வழங்கிற்று என்று காட்ட முன்வருகின்றனர். இச்செயல் நடுநிலைமையான ஆராய்ச்சி முறைக்கு ஏற்றதன்று என்பதை அறிஞர்கள் உணரவேண்டும். இந்நோக்கத்துடனேயே இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன். இந்நோக்கத்தை அறிஞர்கள் வரவேற்பார்கள் என்பதே எனது நம்பிக்கை.
இந்நூலுக்கு அரிய முன்னுரை ஒன்றை அன்பர் S. ராமநாதன் அவர்கள் அளித்துள்ளார். சிந்தனைக்குரிய விஷயங்கள் பல அதில் உள்ளன. படித்து உண்மை யுணர வேண்டுகின்றேன்.
சாமி. சிதம்பரன்



