வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்

முன்னோர் கருத்து

திருக்குறள் ஒரு நீதிநூல். இதை இயற்றியவர் திருவள்ளுவர். அவர் வாழ்ந்த காலத்தில் எவை எவை மக்கள் அநுசரிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்று கருதப் பட்டனவோ அவைகளை, அவர் தமது நூலில் திரட்டிக் கூறியிருக்கிறார்:

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்

வேதம், உபநிஷதம், புராணம், மிருதி ஆகியவைகளில் சொல்லப்படும் எல்லா தர்மங்களும் திருக்குறளில் இருக்கின்றன. திருக்குறளில் இல்லாத விஷயங்கள் ஒன்றும் அந்த வேத உபநிஷத புராண மிருதிகளில் இல்லை.

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள்எல்லாம் – தேற்றவே
முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார்
எப்பாவலரினும் இல்.

பல சாதிரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை யெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி மூன்று பகுதியாக வகுத்துக் கூறிய திருவள்ளுவரைப் போன்ற புலவர்கள் யாருமே இல்லை.

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும்பொருள் ஒன்றே.

வேதத்திற்கும், திருவள்ளுவர் கூறிய திருக்குறளுக்கும் அர்த்தம் ஒன்றுதான்.

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்
பாரதம் சீராமகதை மனுப் பண்டைமறை
நேர்வன; மற்றில்லை நிகர்.

எல்லா விஷயங்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும் படி சொல்லியிருக்கின்ற திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு பாரதம், ராமாயணம், மனுதர்ம சாதிரம், வேதங்கள் இவைகளையே ஒத்த நூல்களாகக் கூறலாம். இவைகளைத் தவிர வேறு ஒன்றையும் திருக்குறளுக்குச் சமமாகக் கூற முடியாது.

இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவை வள்ளுவர் உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்.

முற்காலத்திலே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு விஷயங்களைப் பற்றியும் விளக்கமாகக் கூறியிருக்கின்ற சமகிருத வேதத்தைப் பொது ஜனங்கள் படித்துத் தெரிந்து கொள்ள முடியாதென்பதைத் திருவள்ளுவர் உணர்ந்து, அவ்வேதத்தில் உள்ள விஷயங்களை எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி திருக்குறளாக எழுதினார்.

வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓத வழுக்கற்றது உலகு.

வேதத்தில் கூறப்பட்ட சிறந்த விஷயங்களைத் திருவள்ளுவர் திருக்குறள் மூலம் சொல்லி யிருப்பதனால் உலகத்தாரின் ஒழுக்கம் கெடாமல் காப்பாற்றப்பட்டது.

வேதப் பெருளை விரகால் விரித்து உலகோர்
ஓதத் தமிழால் உரை செய்தார்.

வேதத்தில் உள்ள விஷயங்களை உலகத்தார் படித்துத் தெரிந்து கொள்ளும்படி, திறமையுடன் விரிவாகத் தமிழில் எழுதினார் திருவள்ளுவர்.

மேலே காட்டிய பாடல்கள் எல்லாம் பழந்தமிழ்ப் பாடல்கள். திருக்குறளையும் திருவள்ளுவரையும் பாராட்டிக் கூறப்பட்டவை. இவை திருவள்ளுவமாலை என்னும் நூலில் காணப்படுபவை.

தேவர் குறளும் திருநான் மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், வேதங்களின் முடிவுகளைக் கூறும் உபநிஷதங்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய தேவாரங்கள் வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும் வியாச சூத்திரம், திருக்கோவையார், திருவாசகம், திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகிய இவைகள் எல்லாம் ஒரே விஷயத்தைக் கூறும் நூல்கள் என்று தெரிந்து கொள்ளுக.

இப்பாட்டு அவ்வையார் பாடியதாக வழங்குகிறது. இன்றும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் இப்பாட்டைப் படித்து வருகின்றனர்.

இப்பாடல்களிலிருந்து திருவள்ளுவர் வேத சாதிரங்களை நன்றாகக் கற்றறிந்தவர், வடமொழியிலிருந்த வேதானுஷ்டானங் களைத் தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என்னும் ஆவலுடனேயே திருக்குறளை இயற்றினார் என்னும் உண்மையை உணரலாம்.

திருவள்ளுவர் முன்னோர்களின் கொள்கைக்கு மாறாக எதுவும் சொல்லவில்லை, பல நூல்களில் உள்ள விஷயங்களைப் பலருக்கும் புரியும்படி திரட்டித் தெளிவாகக் கூறியிருக்கிறார். இக்காரணத்தாலேயே இவரை இவர் காலத்துப் புலவர்கள் ‘தெய்வப் புலவர்’ என்று புகழ்ந்தனர்.

திருவள்ளுவர் திருக்குறளை எழுதிய காலத்தில் வடமொழியிலே யிருப்பது போன்ற மிருதிகளும் நீதிநூல்களும் தமிழிலே இல்லை. மக்கள் இம்மாதிரிதான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று கட்டளையிடும் நூல்களுக்கு மிருதிகள் என்று பெயர். மிருதிகள் வடமொழியில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகைய மிருதிகள் தமிழிலே இல்லை.

இத்தகைய காலத்தில்தான் திருக்குறள் எழுதப்பட்டது. இது மக்களுக்கு நீதி புகட்டும் முறையில் புதிதாகத் தமிழில் எழுதப்பட்டமையால் அக்காலப் புலவர்கள் திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடினர். திருவள்ளுவரைப் பிரம்ம தேவன் அவதாரம் என்றும் கூறினர்.

இக்காலத்தில் திராவிடர் கலாச்சாரம் வேறு ஆரியர் கலாச்சாரம் வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற சிலர் திருக்குறளில் திராவிடர் கலாச்சாரத்தைக் காணலாம்; திருக்குறள் திராவிடர் கலாசாரத்தை விளக்கும் நூல்; திருக்குறள் திராவிடர் கலாச்சாரத்தை வளர்க்க வழிகாட்டும் என்று கூறுகின்றனர். இந்தக் கூற்றுக்குத் திருக்குறளில் ஆதாரமேயில்லை.

ஆரியர் என்று சொல்லப்படுகிறவர்கள், வேதம், அதை யொட்டிய புராண மிருதிகளில் எந்த ஆச்சார அனுஷ்டானங்களை விளக்கி யிருக்கிறார்களோ, அவற்றையே தமிழில் திருக்குறள் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். திருக்குறளில் காணப்படும் எல்லா விஷயங்களையும் சமகிருத நூல்களாகிய வேத புராண மிருதிகளிலும் காணலாம்.

சிலர் தமிழிலிருந்துதான் பல விஷயங்களை வடநூலார் கடன் வாங்கினர் என்கின்றனர்; சிலர் வடமொழியிலிருந்து தான் பல விஷயங்களைத் தமிழ் நூலார் கடன் வாங்கினர் என்கின்றனர். இவர்கள் கூறுவதன் உண்மை எப்படி யிருந்தாலும், இரண்டு மொழி நூல்களிலும் சொல்லப்படும் ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் ஒன்றேதான். இதற்குத் திருக்குறளே தகுந்த அத்தாட்சி.

திருக்குறளில் உள்ள மொத்த பாடல்கள் 1330. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம். மொத்தம் 133 அதிகாரம். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தனித் தனித் தலைப்பெயர் உண்டு.

திருக்குறள் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதி அறத்துப் பால், இரண்டாவது பகுதி பொருட் பால், மூன்றாவது பகுதி காமத்துப்பால்.

அறத்துப் பாலில் இல்லறவியல் துறவறவியல் என்று இரண்டு பிரிவுண்டு.இல்லறவியலில் கிரகதாரமத்தில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமைகள் சொல்லப்படுகின்றன. துறவியலில் சந்நியாச ஆரமத்தில் இருப்பவன் செய்யவேண்டிய கடமைகள் கூறப்படுகின்றன.

பொருட்பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று மூன்று பிரிவுகள் உண்டு. அரசனுடைய கடமைகளைப் பற்றியும், அரசாட்சி செய்யவேண்டிய முறைகளைப் பற்றியும் கூறுவது அரசியல், அரசாட்சிக்கு வேண்டிய அங்கங்களைப் பற்றியும், அந்த அங்கங்களின் ஒழுங்கு பற்றியும் கூறப்படுவது அங்கவியல், இவைகளில் விட்டுப்போன விஷயங்களைப் பற்றிக் கூறுவது ஒழிபியல்.

காமத்துப்பாலில் களவியல், கற்பியல் என்று இரண்டு பிரிவு. களவியலில் வயது வந்த ஒரு ஆடவனும், வயது வந்த ஒரு பெண்ணும் இரகசியமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழும் நடப்பு முறை கூறப்படுகிறது. கற்பியலில் அவர்கள் வெளிப்படை யாக மணம் செய்துகொண்டு வாழும் முறை சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு இயலிலும் பல அதிகாரங்கள் உண்டு.

கிரகதன், சந்நியாசி, அரசன்,அரசனுடைய பரிவாரங்கள் இவர்களுக்கு ஆரிய சாதிரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளையே திருவள்ளுவரும் கூறியிருக்கிறார்.

திருவள்ளுவர் பல பாடல்களில் என்ப என்ற சொல்லை உயர்திணைப் பன்மையில் உபயோகித்திருக்கிறார். என்ப என்றால், என்பார்கள், என்று சொல்லுவார்கள் என்று பொருள். முந்திய நூலோர்கள் இவ்வாறு சொல்லுவார்கள் பெரியோர்கள் இவ்வாறு சொல்லுவார்கள் என்ற கருத்திலேயே பழய தமிழ் நூல்களில் என்ப என்னும் சொல் வழங்கப்பட்டு வருகின்றது. திருக்குறளில் என்ப என்னும் சொல் வந்திருப்பதிலிருந்தே அவர் முன்னோர் நூல்களின் கொள்கைகளைத் திரட்டிக் கூறுகிறார் என்பதில் ஐயமில்லை.

திருவள்ளுவர்க்குள்ள சிறப்பெல்லாம் தமிழில் பல நூல்களின் சாரங்களையும் திரட்டி ஒழுங்குபடுத்தித் தெளிவாகக் கூறியிருப்பது ஒன்றுதான். இதேபோன்ற நூல் வேறு ஒன்றும் இவ்வளவு அழகாக சுருக்கமாகத் தமிழில் எழுதப்படவில்லை என்பது உண்மை.

திருவள்ளுவர் கூறியிருப்பவைகள் வேத புராண மிருதிகளின் சாரங்கள்தாம் என்பதை விளக்குவதற்குத் திருக்குறளி லிருந்தே சில பாகங்களை எடுத்துக் காட்டுகிறோம். அவற்றைப் படித்தாலே திருவள்ளுவரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *