
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
5. ஆஸ்ரமம்
இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)
கிரகஸ்தாரமத்தில் வாழ்கின்றவன் தமக்குரிய தர்மத்தைப் பின்பற்றி நடக்கின்ற பிரம்மச்சாரி வானப் பிரஸ்தன் சந்நியாசி ஆகிய மூன்று ஆஸ்ரமத்தாருக்கும் அவர்கள் நடக்கும் நல்வழிக்கு நிலையாகத் துணை செய்பவன் ஆவான்.
கிரகஸ்தாரமத்தில் இருப்பவன், மற்ற மூன்று ஆஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கும் துணைபுரிய வேண்டும்.
இக்குறளில் நால்வகை ஆஸ்ரமம் குறிப்பிடப்படுகிறது. ஆஸ்ரமத்திற்கும் வருணத்திற்கும் சம்பந்தம் உண்டு. பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய முதல் மூன்று வருணத்தாருக்குத் தான் ஆஸ்ரம தர்மம் விதிக்கப் பட்டிருக்கிறது.
தர்ம சாஸ்திரங்களில் பிர்மச்சாரிக்குரிய ஒழுக்கம், கிரகஸ்தனுக்குரிய ஒழுக்கம். வானப் பிரஸ்தனுக்குரிய ஒழுக்கம், சந்நியாசிக்குரிய ஒழுக்கம் இவை இவையென்று தனித் தனியாகப் பிரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் திருவள்ளுவர் இல்லறம் துறவறம் என்ற இருபிரிவில் நால்வகை ஆஸ்ரம தர்மங்களையும் அடக்கிக் கூறிவிட்டார்.
பெறும்அவற்றுள் யாம் அறிவது இல்லை, அறிவறிந்த
மக்கள்பேறு அல்ல பிற. (61)
ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுக்குள் சிறந்தது அறியவேண்டிய எல்லா விஷயங்களையும் படித்தறிந்த மக்களைப் பெறுவதுதான். இதைத் தவிர வேறு உண்டு என்று நாம் தெரிந்து சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். (62)
ஒருவன் பிறரால் பழிக்கப்படாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றிருப்பானாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் துன்பம் உண்டாகாது.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)
தந்தை மகனுக்குச செய்யவேண்டிய கடமை, அவனைப் படித்தவர்களின் கூட்டத்தில், சிறந்தவனாகக் கொண்டாடும் படி செய்வதுதான்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய். (69)
தாயானவள், தன் மகனைப் பற்றிக் கல்வியில் சிறந்தவன் ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்டால், அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை அடைவாள்.
கல்வி கற்று ஒழுக்கமுடையவனாக நடந்துகொள்ளுதல் மகனுடைய கடமை.
மேலே காட்டிய பாடல்கள் புதல்வரைப் பெறுதல் அல்லது மக்கட்பேறு என்னும் அதிகாரத்தில் உள்ளவை. மகனுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்; மகனை நல்லொழுக்க முடையவனாக்க வேண்டும்; மகனும் கல்வி கற்க வேண்டும்; நல்லொழுக்கங்களைப் பின்பற்றி நடக்கவேண்டும். இவை பிரம்மச்சரிய ஆரமத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை. குருகுலத்திலிருந்து கல்வி கற்றலும், குருவின் கட்டளைப் படி நடத்தலுந்தான் பிரம்மச்சாரியின் கடமை.
திருவள்ளுவர் காலத்தில் இப்பொழுதிருப்பது போன்ற பள்ளிக்கூடங்கள் இல்லை. அக்காலத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டு மானால் ஆசிரியர்களின் வீடுகளில் வைத்துத்தான் படிக்க வைக்க வேண்டும். இதுதான் குருகுலவாசம். குருவின் வீட்டிலேயே இருந்து கொண்டு கல்வி கற்பதுதான் ஒருவன் பிரம்மச்சரிய நிலையில் இருக்கும் காலமும்.
பிரம்மச்சரிய ஆஸ்ரம தர்மம், கிரகஸ்த ஆஸ்ரம தருமம், இரண்டும் இல்லறவியலில் அடங்கிக் கிடக்கின்றன. இல்லற வியலில் உள்ள புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் பிரமச்சரிய தருமம் அடங்கி விட்டது.
வானப்பிரஸ்த ஆஸ்ரமமும், சந்நியாச ஆஸ்ரமமும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆதலால் இவ்விரண்டைப் பற்றியும் விரிவாகத் துறவறவியலில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப் பவைகளில் உள்ள முக்கிய விஷயங்களைக் கவனிப்போம்.
வானப்பிரஸ்த, சந்நியாச ஆஸ்ரமங்களில் செல்லுகிறவர்கள் பின்பற்ற வேண்டிய விரதங்களைப் பற்றியும், அவர்கள் பெற வேண்டிய அறிவைப் பற்றியும் திருவள்ளுவர் துறவறவியலில் கூறுகிறார்.
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள் செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241)
செல்வத்தில் சிறந்த செல்வம் கருணையாகிய செல்வமேயாகும். பொருளால் வரும் செல்வம் அற்பர்களிடமும் உண்டு.
வானப்பிரதர்களும், துறவிகளும் எல்லா வுயிர் களிடமும் கருணை காட்ட வேண்டும்.
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்குஇல்லை ஊன் தின்பவர்க்கு. (252)
செல்வத்தைக் காப்பாற்றாதவர்களுக்கு, அச்செல்வத்தால் உண்டாகும் பயன் கிடைக்காது. அதைப்போல மாமிசம் சாப்பிடு கிறவர்களுக்கு அருளால் உண்டாகும் பயன் கிடைக்காது.
மாமிசம் உண்ணாதவர்களே அருளுடையவர்களா யிருப்பார்கள்.
உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (261)
தவத்திற்கு உருவம் என்னவென்றால், தனக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்; மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமலிருத்தல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண
நன்னயம் செய்துவிடல். (314)
தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர் வெட்கமடையும்படி அவருக்கு நன்மை செய்து, அவர் செய்த துன்பத்தையும் மறந்து விடுதலாகும்.
மேற்கூறியவைகள் வானப்பிரஸ்தர்களும், துறவிகளும் பின்பற்ற வேண்டிய விரதங்கள். எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம், காட்டுதல், மாமிசம் உண்ணா திருத்தல், தவஞ் செய்தல், கோபங் கொள்ளாதிருத்தல், பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமை, உயிர்களைக் கொல்லாமை போன்ற விரதங்களை வானப் பிரஸ்தர் களும், துறவிகளும் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும் என வற்புறுத்திக் கூறுகிறார்.
இவ்விரதங்கள் பெரும்பாலும் சமண சந்நியாசிகள் பின்பற்றும் விரதங்களைப் போல இருப்பதனால் திருவள்ளுவரைச் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம்,
போக்கும் அது விளிந்து அற்று. (332)
ஒருவனிடம் பெரிய செல்வம் வந்து சேர்வது நாடகக் கொட்டகைக்கு, நாடகம் பார்ப்பதற்காக ஜனக்கூட்டம் வந்து கூடுவது போன்றதாகும். அச்செல்வம் அழிந்து விடுவது, நாடகம் முடிந்தவுடன் ஜனக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றதாகும்.
ஆதலால் செல்வம் நிலையற்றதென்று அறிந்துகொள்ள வேண்டும்.
பிறப்புஎன்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)
பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்க வேண்டுமானால் மோட்சத்திற்குக் காரணமாக இருக்கின்ற உண்மைப் பொருளாகிய கடவுளை உணர்வதே அறிவாகும்.
ஆராவியற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா வியற்கை தரும். (370)
திருப்தி யடையும் தன்மையற்ற ஆசையை, ஒருவன் விட்டு விட்டானாயின், அப்பொழுதே அந்த ஆசையின்மை அவனுக்கு மோட்சத்தைக் கொடுக்கும்.
ஆசை யின்மையே முக்தி பெறுவதற்கு வழியாகும்.
ஊழ் என்னும் அதிகாரமும் துறவறத்திலேயே கூறப்பட்டுள்ளது. இல்லறத்தைத் துறந்த வானப்பிரஸ்தர்களும், சந்நியாசிகளும், உலகச் செல்வங்கள் எல்லாம் நிலையற்றவை என்று உணரவேண்டும்; கடவுளை நம்பித் துதிக்க வேண்டும்; எப்பொருளிலும் ஆசையில்லாமைதான் முத்திக்கு வழியென்று காணவேண்டும்; தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு ஊழ்வினைதான் காரணம் என்று நம்பவேண்டும்; இவைகள் துறவிகளுக்கு வேண்டிய ஞானமாகும்.
துறவற இயலில் வானப்பிரஸ்தர்களும், சந்நியாசிகளும், அனுஷ்டிக்க வேண்டியன என்று கூறப்படுபவைகளும், அறிய வேண்டும் என்று கூறப்படுபவைகளும் புதியவைகள் அல்ல; முன்னோர் நூல்களில் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தர்மத்தையே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
துறவறவியலில் 13 அதிகாரங்கள் உள்ளன. இவற்றுள் முதல் 10 அதிகாரங்கள் சிறப்பாக வானப் பிரஸ்தர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்களைக் கூறுகின்றன; மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்னும் மூன்று அதிகாரங்கள் துறவிகளின் தர்மங்களைக் கூறுகின்றன; என்பது சில அறிஞர்களின் கொள்கை.
ஆகவே, இல்லறவியல், துறவற இயல் இரண்டிலும், பிரமச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆஸ்ரம தர்மங்களையும் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் காணலாம்.



