
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
13. பெண்கள்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித், தற்கொண்டான்
வளம் தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
குடும்ப வாழ்க்கைக்கு உரிய நல்ல குணங்களை உடையவளாய், தன் கணவனுடைய செல்வத்திற்குத் தகுந்தவாறு நடந்து கொள்ளுகின்றவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள்.
தற்கொண்டான் வளம் என்பதனால் ஆண்களுக்குத் தான் சொத்துரிமை உண்டு; பெண்களுக்குச் சொத்துரிமை யில்லை; என்பதைத் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல். (52)
மனைவியிடம் குடும்பவாழ்க்கைக்குரிய நல்ல குணம் செயல்கள் இல்லாவிட்டால், அக்குடும்பம் செல்வத்தால் எவ்வளவு பெருமையுடைய தாயிருந்தாலும் பயனில்லை.
இல்லது என் இல்லவள் மாண்புஆனால், உள்ளது என்
இல்லவள் மாணாக் கடை. (53)
ஒருவனுடைய மனைவி நல்லகுணம், நல்ல செயல்களை உடையவளாயிருந்தால் அவனுக்கு இல்லாத செல்வம் ஒன்றுமே இல்லை. எல்லாச் செல்வங்களும் உண்டு. மனைவி கெட்டவளா யிருந்தால் அவனுக்கு என்ன செல்வம் உண்டு? ஒரு செல்வமும் இல்லை.
பெண்ணில் பெருந்தக்க யாஉள கற்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின். (54)
கற்பு என்னும் வலிமையைப் பெற்றிருப்பாளாயின் அந்த மனைவியைக் காட்டிலும் ஒருவனுக்குச் சிறந்த பொருள் எவை? ஒன்றும் இல்லை.
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும், மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை. (57)
ஆண்கள் பெண்களைச் சோரம் போகாமல் சிறைக்குள் வைத்துக் காப்பாற்றும் காவல் என்ன பயனைத் தரும் பெண்கள் தங்கள் கற்பினால் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளுவது தான் சிறந்ததாகும்.
இப்பாடல்கள் வாழ்க்கைத்துணை நலம் என்னும் அதிகாரத்தில் உள்ளவை. இப்பாடலின் மூலம் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்று திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார். பெண் கல்வியை அவர் மறுக்கவில்லை. கல்வியறிவுடைய பெண்களே இல்லற தர்மங்களை அறிந்து அவற்றைச் சரிவர நடத்தமுடியும். இது முன்னோர் நூல்களுக்கும் கொள்கைகளுக்கும் முரண்பட்ட தன்று.
மனைத்தக்க மாண்புடையள் ஆகி என்ற முதல் பாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை யென்று கூறுகின்றார்; பிதிர்க்கடன் செய்யும் உரிமையுடையவர்களுக்கே முன்னோர் சொத்தில் உரிமையுண்டு; இவ்வுரிமை ஆண்களுக்குத்தான். பெண்களுக்குப் பிதிர்க்கடன் செய்யும் உரிமையில்லை. ஆகையால் அவர்களுக்குப் பிறந்த இடத்துச் சொத்தில் பங்கில்லை. இதுவே நீதிசாதிரக் கொள்கை. இக்கொள்கையை மேலே காட்டிய பாடல் ஆதரிக்கின்றது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை. (55)
ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும்போது, வேறு தெய்வத்தை வணங்காமல், கணவனையே வணங்கி எழுந்திருக்கின்ற ஒரு பெண் வானத்தைப் பார்த்து மழை பெய் என்றால் மழை பெய்யும்.
இப்பாடலும் வாழ்க்கைத்துணை நலம் என்னும் அதிகாரத்திலே உள்ளது. பெண்களுக்குக் கணவனே தெய்வம்; கணவனுக்கு அடங்கி வாழ்வதே அவர்கள் கடமை; பெண் களுக்குத் தனிச்சுதந்தரம் இல்லை; என்ற கருத்து இப்பாடலில் இருக்கிறது.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார், வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. (901)
தன் மனைவியின் மீது அன்பு கொண்டு அவள் சொல்லைக் கேட்பவர்கள் சிறந்த பயனை அடைய மாட்டார்கள்; சிறந்த காரியத்தைச் செய்ய விரும்புகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கவேண்டிய விஷயமும் மனைவியின் சொல்லைக்கேட்கும் அந்த ஒரு விஷயந்தான்.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905)
மனைவிக்குப் பயப்படுகின்றவன் எப்பொழுதும் நல்வர் களுக்கும் நன்மை செய்யப் பயப்படுவான்.
பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின், நாண்உடைப்
பெண்ணே பெருமை உடைத்து. (907)
மனைவியின் கட்டளைப்படி காரியங்களைச் செய்து வாழ்கின்ற ஆண் தன்மையைவிட நாணத்தையுடைய பெண் தன்மையே சிறந்ததாகும்.
நட்டார் குறைமுடியார், நன்று ஆற்றார், நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர். (908)
தன் மனைவியின் இஷ்டப்படி நடக்கின்றவர்கள் நண்பர் களின் குறைகளையும் தீர்க்க மாட்டார்கள்; நல்ல காரியங்களையும் செய்ய மாட்டார்கள்.
அறவினையும், ஆன்ற, பொருளும், பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். (909)
மனைவியின் சொல்லைக் கேட்டு நடப்பவர்களிடம் அறம் செய்தலும், சிறந்த செல்வம் சேர்த்தலும், மற்ற இன்பங்களை அனுபவித்தலும் இல்லை.
பெண்கள் சொல்லைக் கேட்பவர்கள் ஒரு காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். மனைவிக்குப் பயப்படுகின்றவனுக்கு இம்மை மறுமைப் பயன்கள் இல்லை.
மனைவிக்குப் பயப்படுகின்றவன் நல்லவர்களுக்குக் கூட நன்மை செய்யமாட்டான்.
பெண் வார்த்தையைக் கேட்கும் ஆணை விடப் பெண்ணே சிறந்தவள்.
மனைவி சொல்லைக் கேட்பவன் நண்பர்களுக்கும் உதவ மாட்டான்; நன்மையும் செய்ய மாட்டான்.
மனைவி சொல்லைக் கேட்டவர்கள் அறம், பொருள், இன்பங்களை அடைய மாட்டார்கள்.
மேலே காட்டிய ஐந்து பாடல்களிலும் இந்தக் கருத்துக்கள் அடங்கி யிருக்கின்றன. இப்பாடல்கள் ‘பெண்வழிச் சேறல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளவை. அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற நான்கு பாடல்களும் பெண்கள் சொல்லை ஆண்கள் கேட்கக்கூடாது என்றே கூறுகின்றன.
பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்; பெண்கள் இழி பிறப்புடையவர்கள்; அவர்கள் சுயேச்சையாக வாழ்வதற்கும், பிறர்க்குப் புத்தி சொல்வதற்கும் தகுதியில்லாதவர்கள்; ஆகையால் அவர்களை ஆண்கள் அடக்கியே ஆளவேண்டும். இது நமது நாட்டின் புராதனக் கொள்கை. இக்கொள்கை வேத புராணமருதிகளிலும் காணப்படுவன. இதனையே திருவள்ளுவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
திருவள்ளுவர் பெண்களைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் தமது மனைவியை நடத்திய விதத்தையும் கதையாக எழுதியிருக்கின்றனர். திருவள்ளுவர் மனைவியின் பெயர் வாசுகி. அவரை மணம் பேசும் பொழுதே திருவள்ளுவர் மணலை அவரிடம் கொடுத்துச் சமைக்கச் சொன்னார்; அவரும் மறுவார்த்தை பேசாமல் மணலைச் சமைத்தார்; அது சோறாயிற்று; அதன் பிறகே வாசுகியை மணந்தார். மணந்த பின்னும் வாசுகியைப் பல செயல்களின்மலம் கற்புடையவளா என்று சோதித்தார். ஒருநாள் பழைய சோறு சாப்பிடும் போது விசிறி கொண்டு வந்து விசிறச் சொன்னார். ஒருநாள் பகல் பொழுதில், நல்ல வெளிச்சத்தில், நெசவு நெய்து கொண்டிருக்கும் போது நாடா கை தவறிக் கீழே விழுந்துவிட்டது. அதைத் தேடுவதற்கு விளக்குக் கொண்டு வரச் சொன்னார். உடனே அவர் கொண்டுவந்தார். மற்றொரு நாள் கிணற்றில் தண்ணீர் முகந்து கொண்டிருக்கும் போது அவசரமாக அழைத்தார். வாசுகி இழுத்துக் கொண்டிருந்த கயிற்றை அப்படியே விட்டு விட்டு விரைந்து வந்தார். பாதிக் கிணற்றில் வந்து கொண்டிருந்த கயிறு குடத்துடன் அப்படியே நின்றுகொண்டிருந்தது.
அடிசிற்கு இனியாளே! அன்புடை யாளே!
படிசொல் தவறாத பாவாய்! – அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழுந்த பேதையே! போதியோ!
என்றூங்கும் என்கண் இரா.
“நல்ல உணவு கொடுத்தாய்! அன்புடையவளாக இருந்தாய்! என்சொல்லை ஒருநாளும் மீறி நடந்ததில்லை. நான் தூங்கியபின் நீ தூங்கினாய்! நான் விழிப்பதற்கு முன் நீ விழித்துக் கொண்டாய்! நீ இறந்துவிட்டாயே! இனி இரவில் என் கண்கள் எப்படித்தான் தூங்குமோ”
திருவள்ளுவரின் மனைவி வாசுகியார் இறந்தபின், திருவள்ளுவர் பாடியதாக வழங்கும் பாடல் இது. இதிலும் பெண்களைப் பற்றித் திருவள்ளுவர் கொண்ட கருத்து வலியுறுத்தப்படுகிறது.
வாசுகியைப் பற்றிக் கூறும் கதைகளும், இப்பாடலும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அவைகள் திருவள்ளுவர் பெண்களைப் பற்றித் திருக்குறளில் கூறியிருக்கும் கொள்கை களுக்கு முரணானவைகள் அல்ல என்பது மாத்திரம் உண்மை.



