
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
6. யாகம்
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (259)
நெருப்பில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து, ஆயிரம் யாகம் செய்வதைக் காட்டிலும், ஒரு பிராணியின் உயிரைக் கொன்று தின்னாமலிருத்தல் சிறந்தது.
ஆயிரம் யாகம் செய்வதால் வரும் புண்ணியத்தைவிட ஒரு உயிரைக் கொன்று தின்னாமலிருப்பதால் வரும் புண்ணியமே சிறந்தது; இதுவே இந்தப் பாடலின் கருத்து.
இக்குறளில் யாகம் செய்வதால் புண்ணியம் உண்டு என்பதை மறுக்கவில்லை. யாகம் புண்ணிய காரியம் என்பதை ஒப்புக் கொள்ளுகிறார். யாகத்தைக் காட்டிலும் ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைப் புசியாமலிருப்பதில் அதிக புண்ணியம் உண்டு என்றுதான் கூறுகிறார்.
ஜாதி என்னும் பகுதியில் எடுத்துக்காட்டிய
அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாம்
நின்றது மன்னவன் கோல்.
ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர்,
காவலன் காவான் எனின்.
என்ற இரு பாடல்களிலும் திருவள்ளுவர் வேதங்களில் கூறப்படும் வேள்விகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
‘அந்தணர் நூற்கும்’ என்ற பாடலில் பிராமணர்களின் வேதத்தையும், அந்த வேத சம்பந்தமான ஒழுக்கங்களையும் காப்பாற்ற வேண்டியது அரசன் கடமை என்று கூறப்படுகின்றது.
‘ஆபயன் குன்றும்’ என்ற பாடலில், அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யா விட்டால் பிராமணர்கள் தங்கள் வேதத்தையும், வேதசம்பந்தமான ஒழுக்கங்களையும் மறந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகின்றது.
வேதங்களில் யாகம் செய்யவேண்டும் என்று கூறப்படுகின்றது. யாகங்களின் மூலம் தேவர்களைத் திருப்தி செய்தால் தான் இவ்வுலகில் மழைபெய்யும்; பயிர்கள் வளரும்; உணவுப் பொருள்கள் கிடைக்கும்; மக்கள் பசி பட்டினியின்றி வாழ்வார்கள். இவை வேத சாதிரங்களின் கருத்து.
பிராமணர்களுக்குரிய ஒழுக்கங்களில் யாகம் செய்தல் ஒன்று; யாகம் செய்து வைத்தல் ஒன்று. இவ்விரண்டு தொழில் களையும் அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும். இன்றேல் அவர்கள் பிறப்பொழுக்கம் குன்றியவர்கள் ஆவார்கள். இவைகளைச் செய்வதற்கு அரசன் உதவி செய்யவேண்டும்.
மேலே காட்டிய பாடல்களைக் கொண்டு திருவள்ளுவர் வேத வேள்வியை நிந்தனை செய்யவில்லை; வந்தனை செய்கிறார் என்றே கொள்ளவேண்டும்.



