
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
9. ஊழ்வினை
ஆகூழாமல் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள்
போகூழாமல் தோன்றும் மடி. (371)
ஒருவனுக்குச் செல்வம் சேரக்கூடிய விதியிருந்தால் அவனிடம் முயற்சிதோன்றும்; செல்வம் அழியக்கூடிய விதி யிருந்தால் அவனிடம் சோம்பல் தோன்றும்.
ஒருவனுடைய முயற்சிக்கும் சோம்பலுக்கும் காரணம் தலைவிதிதான்.
பேதை படுக்கும் இழவூழ், அறிவு அகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை. (372)
ஒருவனைத் துன்பந் தரக்கூடிய தலைவிதி அறிவில்லாத வனாக்கிவிடும்; நன்மை தரக்கூடிய தலைவிதி வந்தால் அவனுடைய சுருங்கிய அறிவை விரிந்த அறிவாக்கும்.
ஒருவனுடைய அறிவுக்கும், அறிவில்லாமைக்கும் காரணம் தலைவிதிதான்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். (373)
ஒருவன் சிறந்த பல நூல்களைப் படித்திருந்தாலும், அவனுடைய வினைவசத்தால் ஏற்பட்டுள்ள உண்மையான அறிவுதான் அவனிடம் காணப்படும்.
ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் கல்வியல்ல; தலை விதியே.
பரியினும் ஆகாவாம் பால்அல்ல, உய்த்துச்
சொரியினும் போகா தம. (376)
செல்வம் தங்கக்கூடிய ஊழ்வினை யில்லாவிட்டால் எவ்வளவு காப்பாற்றினாலும் அச்செல்வம் நிலைக்காது; தம்முடையதாகவே இருக்கவேண்டும் என்ற விதியிருந்தால், அச்செல்வத்தை எங்கே கொண்டு போய்க் கொட்டினாலும் தம்மைவிட்டுப் போகாது.
வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377)
கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்து வைத்தவர்க்கும், தலைவிதி இவ்வளவுதான் அனுபவிக்கலாம் என்று வகுத்திருப் பதைத்தான் அனுபவிக்கலாமே தவிர அதிகமாக ஒன்றும் அனுபவிக்கமுடியாது.
ஒருவன் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்திருந்தாலும் தலைவிதியின்படி அவனுக்கு ஏற்பட்ட சுகத்தைத்தான் அனுபவிக்க முடியும்.
நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆம்கால்
அல்லல் படுது எவன். (379)
நன்மைகள் உண்டாகும்போது அவற்றைச் சுகங்களாக எண்ணி அனுவிப்பவர், தீமை வரும்போது துன்பப்படுவது ஏன்? எல்லாம் வினைப்பயன் என்று நினைக்கவேண்டும்.
ஊழில் பெருவலி யாவுள, மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும். (380)
விதியை விலக்கிக் கொள்ளுவதற்கு வேறொரு தந்திரத்தை ஆலோசித்தாலும், அத்தந்திரத்தையும் மீறிக் கொண்டு விதிதானே முன்வந்து நிற்கும்; ஆகையால் ஊழ் வினையைக் காட்டிலும் மிகவும் வலிமையுடையவை எவை? ஒன்றும் இல்லை.
ஊழ்வினை தான் ஒருவனுடைய முயற்சிக்குக் காரணம்; சோம்பலுக்கும் காரணம். ஊழ்வினையினாலேயே ஒருவன் அறிவுடையவனாயிருக்கிறான்; ஒருவன் முட்டாளாயிருக்கிறான். ஊழ்வினையே ஒருவனுக்குச் செல்வத்தைக் கொடுக்கின்றது; ஒருவனைத் தரித்திரனாக வைத்திருக்கின்றது. ஊழ்வினையினாலேயே ஒருவன் சுகம் அனுபவிக்கிறான்; ஒருவன் துக்கம் அனுபவிக்கிறான். யாரும் கர்மத்தின் பலனாகிய ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இக்கொள்கைகளை மேலே காட்டிய பாடல்களில் காணலாம்.
நல்வினை தீவினை இவ்விரண்டினாலும் வரும் பலனை அனுபவித்தற்கே கர்ம பலன், ஊழ்வினை, தலைவிதி என்று பெயர். நியதி, பால், முறை, உண்மை, தெய்வம் இவைகளும் ஊழ்வினையைக் குறிக்கும் சொற்கள்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை. (594)
செல்வமானது சோர்வில்லாத உற்சாகத்தை உடையவன் வசிக்கும் இடத்திற்குத் தானே வழிகேட்டுக் கொண்டு போகும்.
முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)
முயற்சியானது செல்வத்தை உண்டாக்கும்; முயற்சி யில்லாமை வறுமையை உண்டாக்கிவிடும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித்
தாழாது உஞற்று பவர். (620)
சோர்வின்றி இடைவிடாமல் முயற்சி செய்பவர் தலை விதியின் வலிமையைக்கூடத் தோற்கடித்து விடுவார்கள்.
திருவள்ளுவர் தலைவிதியில் நம்பிக்கையில்லாதவர்; முயற்சியையே முதன்மையாகக் கருதுகிறவர்; ஊழ்வினையை முயற்சியினால் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறவர்; என இப்பாடல்களைக் கொண்டு கூறுகின்றனர்.
ஒருவனுக்கு ஊக்கம் உண்டாவதற்கும் ஊழ்வினையே காரணம்; முயற்சி தோன்றுவதற்கும் ஊழ்வினையே காரணம்; முயற்சியில்லாமை தோன்றுவதற்கும் ஊழ்வினைதான் காரணம் என்பதைத் தெளிவாக ஊழ் என்ற அதிகாரத்தில் கூறியிருக்கிறார்; அதற்கு மாறாக கருத்தில் இப்பாடல்களைக் கூறியிருக்க முடியாது. ஆதலால் இந்த ஊக்கத்திற்கும், இந்த முயற்சிக்கும் ஊழ்வினைதான் காரணம் என்பதைத் திருவள்ளுவர் மறுக்க வில்லை.
‘ஊழையும் உப்பக்கம்’ என்னும் குறளில் ‘ஊழையும்’ என்று உம் விகுதி கொடுத்துக் கூறியிருப்பதிலிருந்தே அதைத் தோற் கடிக்க முடியாது என்ற பொருள் தொனிப்பதைக் காணலாம். ஊழில் பெருவலியாவுள? என்று கேள்வி கேட்டவர், முயற்சி அதைவிட வலிமையுடையது என்று எப்படிக் கூறுவார்?



